சாலையோர என்வீடு...
வீட்டோர...புங்கை மரம்...
மரமிருக்கும் கிளிக்கூட்டம்...
ஒவ்வொரு அதிகாலை...
விடியலும்...இசைக்கச்சேரிதான் எனக்கு!
பிரம்ம முகுர்த்தத்தில் எழுந்து கொள்ளும்...
என்பகுதி விழிப்பு நிலையில்....
அவற்றின் குடும்ப பேச்சுக்கள்...
விழுந்தும் விழாமல்....
என் காதோராம்....உரசிச் சொல்லும்.!
சில நாள்...அவை பேசி சிரிக்கும்...
சில நாள் சண்டையிடும்...
பல நாள் காதல்கொண்டு...
மெதுவாய்....
கிசு கிசுத்து....
மனித அரவத்திற்கு முன்னே....
இரை தேடி....புறம் பறந்து செல்லும்....!
என் விடுமுறை நாளின்
எல்லா பகல் நேரமும்....
புங்கை மரக் கிளிக் கூட்டத்தோடுதான்...
கரைந்து செல்கையில்...
கூட இரண்டு குயில் சேர்ந்து....
இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்...
இப்பூமியின் இடர்ப்ப்பாடுகள் பற்றிய...
கவலையின்றி அவை தினம் பறக்கும்!
அதுவும் ஒரு விடியல்தான்...
அதிகாலை நேரம்...தான்...ஆனாலும்....சப்தமில்லை.....!
ஏன் கடந்த இரவு இன்னும் ...
விடியவே இல்லையா...?
அனிச்சையாய் எழுந்த கேள்வியில்...
அர்த்தம் இருப்பதாய் தோணவில்லை...!
பாதி தூக்கத்தில்...
கலைந்தது என் கனவு.....
கிளி சப்தமில்லா காலையில்....
தகர்ந்தது...என் இரவு.....!
என்னாவாயிற்று...என் இசைக் கச்சேரிக்கு...
மனிதன் எழும் முன்னே எழும் ...
கிளிக் கூட்டம்..மறந்து போய் உறங்குகிறதோ?
காசு வாங்காமல்...கூவும் குயிலின்..
புத்தியை மாற்றிவிட்டது யார்?
காத்திருந்து....புரண்டு...புரண்டு....
சப்தம் இல்லா சூன்யத்தில்...
என் உறக்கம் ஓடி ஒளிந்தது.....
கதவு தாள் திறந்து...கண் மடல் விரித்து...
வாசலோராம் நான் பார்த்து திகைத்து...
வீட்டினுள்ளே திரும்பிப்பார்த்தேன்.....
என் வீடுதானே இது..?!
நேற்று வரை இங்கிருந்த
புங்கை மரம் ....எங்கே?
புங்கை மர கிளைகளுக்குள்....
குடியிருந்த கிளிகள் எங்கே?
சொல்லாமல் கொள்ளாமல் செல்ல...
மனிதரல்ல...மரமன்றோ....அது?!
உற்று நோக்கிய பின்....
சாலையோர சரிவில்....புங்கை மரம்...
பிணமாய் கிடந்தது.....!
கிளிகள் குடியிருந்த கிளைகள்...
குண்டடி பட்ட குழந்தைகளாய்....!!!
தொலைபேசி பணியின்....அகழ்வாராச்சிக்காக....
வேரோடு.... பெயர்க்கப்பட்டு....
அத்துனை இலைகளும் திறந்த விழிகளாய்...;
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!
வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனதது...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
முடிந்திருக்குமே....!
வெட்டவெளி வானத்தை
வெறித்து பார்தேன்...எட்டும் வரை தேடினேன் ...
கிளிக்கூட்டம் காணவில்லை...!
இரைச்சலில்லா...விடியல் சூன்யமாகிப்போனதெனக்கு...
உறக்கமில்லா இரவுகள்..தோறும்...
புங்கை மரம்...கிட்ட வந்து சலசலக்கும்
என் நினைவுகளிலது..பேசி சிரிக்கும்..
கிளிக் கூட்டம்...காதலாய் கிசுகிசுக்கும்....
வெறுமையாய் விடியும்...நிதர்சனக் காலையோ....
ஏனோ என்னை தனித்து நிறுத்தும்.....!
வெறுமையால் நிரம்பி நிரம்பி.....
வெறுத்துப் போனதென் வாழ்வு;
கிளிக் கூச்சல் கேட்காமல் செத்துப் போனது
என் உணர்வு....!
இதோ என் கால்கள்....வேறு வீடு தேடி.....
வாடகையினைப் பற்றி கவலையில்லை....
ஒரே ஒரு... நிபந்தனைதான்....
....
.......
........
......
"மரம் நிறைந்த வீடு
மனிதர்கள் குறைந்தாலும்
பறவைகள் அதிகமிருக்கவேண்டும் "
அவ்வளவுதான்...!
தேவா சுப்பையா...
Comments
Nice write -up!
அதுனை இலைகளும் திறந்த விழிகளாய்...
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!""
""வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனது புங்கை மரம்...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
பாதியிலேயே...முடிந்திருக்குமே....!""
இதை படித்துவிட்டு, எனது கண்ணே கலங்கிவிட்டதடா மாப்ஸ்...
எவ்வளவு கொடூரமான செயல்களை தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாததுபோல் காட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தால், வெட்கக்கேடாக இருக்கிறது...
விடாமல் துரத்தி கொண்டிருக்கிறது
மனிதனின் ஆசைகள் .
மனிதன் உயிர் வாழ மரம் முக்கியமாம் ?
ஆனால் மரம் வாழ மனிதன் என்ன செய்கிறான் ?
மரம் காடுகளை அழிக்கிறான் ??
நல்ல பதிவு நண்பா தொடர்ந்து எழுதுங்கள்
வீரா....