Skip to main content

Posts

Showing posts with the label கவிதை சமூகம்

வெற்றுக் காகிதங்கள்...!

எல்லாவற்றையும் ஒரு கவிதையால்... எப்போதும் சொல்லிவிட முடிவதில்லை... வெயில் சூட்டில் கால் கடுக்க வெகு தூரம் நடந்து பின் இளைப்பாறும் ஒரு மர நிழல் கொடுக்கும் நிறைவினை... கனவுகளில் துரத்தித் திரிந்த காதலியொருத்தியை ஒத்தவள் சட்டென்று நம்மை யாரோவாய் கடந்து செல்லும் அவஸ்தை மிகு படபடப்புக்களை.... கடைசியாய் முகம் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற கூச்சலில் கூட்டத்துக்கு நடுவே நின்று நம் ப்ரிய உறவுகளின் முகங்களை சிதைக்கு நடுவில் காணும் பேரவலத்தை.... பிரிந்து விட்ட காதலியை யாரோ ஒருத்தி போல எங்கோ சந்தித்து விட்டு.... பேச ஒன்றுமில்லாமல் தவித்து நிற்கும் அந்த பேரவஸ்தைக் கணங்களை... அறுந்து போன பட்டத்தின் நூல் பிடிக்க பின் ஓடி எட்டிப் பிடிக்க முயலுகையில் அது கைவிட்டுப் போகும்... கலக்க நிமிடங்களை... என்று.... எல்லாவற்றையும் ஒரு கவிதையால்.... எப்போதும்... சொல்லிவிட முடிவதில்லை....! தேவா சுப்பையா...

டிசம்பர் 6....!

மதமேறிப் போன மிருகங்கள் வடித்து வைத்த இரணத்தைக் வருடந்தோறும் கிளறிச் செல்கிறது இந்த டிசம்பர் 6...! நம்பிக்கை என்ற பெயரில் மிருகங்களின் வெறியாட்டத்தை பொறுத்துக் கொண்ட தியாக நாளாய் எப்போதும் இரணங்களை மறைத்துக் கொண்ட புனிதனாய் புன்னகை செய்கிறது இந்த டிசம்பர் 6! கடவுளைத் தேடி பயணிக்கையில் இடையில் மனிதன் மிருகமாய் மாறி சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின் கறையை அழிக்கவே முடியாமல் இன்னமும் இடிந்தே கிடக்கிறது என் சகோதரர்களின் நம்பிக்கை! கடவுளை மனதுக்குள் வைக்கத் தெரியாதவர்கள் அரசியலுக்குள் அழைத்தின் கோரமா? இல்லை... கடவுளென்றால் யாரென்று அறியாத விலங்கு மனத்தின் அகோரமா? விடை தெரியா கேள்வியோடு விடியலைத் தேடும் மனிதனாய் மனதுக்குள்ளேயே பிரார்த்திக்கிறேன்... இறைவா...என்றாவது ஒரு நாள் மனிதர்களின் மனதில் பூ பூக்கச் செய்து... அன்பால் உயிர்த்தெழச் செய் மனித நேயத்தையும்... இடிந்து போன நம்பிக்கையையும்....! தேவா. S

அரிதாரம்...!

யாரோ பேசியதை திரும்ப நான் யாரிடமோ பேசுகிறேன்...! எல்லோருக்கும் பிடித்த ஒரு இசையை வலுக்கட்டாயமாய் எனக்குப் பிடித்ததாய் கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! மிகைப்பட்ட சரிகளின் பக்கம் தவறென்றாலும் சாய்ந்து, குறையாயிருக்கும் சரிகளை தவறென்கிறேன்! யார் யாரோ ஏதேதோ சொல்ல கேட்டு கேட்டு... என் சுயம் தொலைந்து அரிதாரப் பூச்சுக்களுக்குள் என் அடையாளம் அழிந்து... தொலைந்தே விட்டேன் நான்...!!! தேவா. S

பார் காலமே.. பார்...!

எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே... கால்கள் கொண்டு திக்குகளெட்டும் நடந்து காட்டினோம்...! பேச்சற இரு என்று எம் நாவினை நீ வெட்டி போட்டாய் காலமே... எம் மெளனத்தால் அன்பென்னும் பூக்களை எம்மைச் சுற்றி கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...! எம் விழிகளை குருடாக்கினாய் காலமே... இருளென்னும் கருமையில் கலங்காது நின்று வர்ணங்களை எம் புத்தியில் தேக்கி வைத்து எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்! சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில் மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்; பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்; சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட ஓடும் கால்களுக்கு எல்லாம் எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....! என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ? காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும் முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன் என்ற சத்தியம் உணர்..! பொய்களின் நகர்வுகளில் எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள் எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும் என்ற நிதர்சனம் அறி! கோபங்கள் கொள்ளும் மூளைகள் எல்லாம் சதைக் கோளங்களாகி புழுக்களைப் பிறப்பித்து மண்ணில் மட்கி மறையும் என்பதை தெளி..! எம்முள் படிந்து கிடப்பது ப...

மிருக ஆட்டம்...!

என்றேனும் ஒரு நாள் அச்சினை மாற்று ... ஏதேனும் கோள்களோடோ அல்லது சூரியனோடோ மோதிச் சாம்பலாய் உதிர்ந்தே போ பூமியே!!!!! எப்போதும் மெளனத்தை போதிக்காதீர்கள் மனிதர்களே சப்தங்களாய் திரிந்து செவிப்பறைகள் கிழிம் வரை கூச்சலிட்டு எமது குரல்வளைகள் கிழிந்தே போகட்டும் ஒரு நாள்...! உணர்வாய் நின்று ரெளத்ரத்தில் குளித்து இயல்பாய் எம்மை கோபங்கள் கொண்டு சீறிப்பாய எம்மை பணித்துப் போங்கள் கடவுளரே...! பூக்களை யாம் பூஜித்து வர்ணித்தெழுதிய வார்த்தைகளே... சற்றே எம்மை விட்டு... கலைந்தே போங்கள்..., கடும் பாறைகளை நான் தீரத் தீர காதலித்து... எம் கண்ணீராலவாது ஒரு கவிதை செய்ய வேண்டும்..! புல்வெளிப் பயணங்களை ஒத்தி வையுங்கள் எமது கால்களே.. நாம் பாலை வெயிலில் பாதங்கள் சூடேற நடந்து பயில வேண்டும், குளிரினை ரசித்து சுகத்தில் லயித்துக் கிடக்கும் எமது தோற்களில் சூரிய சூட்டினால் நிறைய தழும்புகள் வேண்டும்...! மன்னிப்புக் கொடுத்து கொடுத்து மரத்து போயிருக்கும் எம்மை கடவுளாக்கும் நினைவுகளை செதுக்கி எறிந்து விட்டு ரெளத்ரத்தால் தவறுகளை கொன்றழிக்கும் மிருக குணம் கொண்டு... ஜகத்தினை மிரட்டிப் புரட்டிப் போடும் ஒரு மிருக ஆட்டம்... நான் ஆ...

மிச்சமென்ன....?

அலுத்துதான் போகிறது சராசரி அன்றாட.... அட்டவணைகளுக்குள் சுழலும்... இந்த இயந்திர வாழ்க்கை! நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணடித்து சிரிக்கும்.. வாழ்க்கையின் இதழோரங்களில் படிந்திருக்கும் சோகத்தில் தொலைந்து போய் கிடக்கிறது என் சுயம்....! யாருமற்ற வனமொன்றில் ஒரு பேடைக்குயிலாய் நான் கூவி கூவி காற்றோடு சல்லாபித்து தீரக்காதலோடு.. திக்குகளின்று பறக்க ஆசைகள் கொண்டிருந்தேன்..! ஆனால்.. அலார ஒலியோடு அலறலாய் விடியும் பொழுதுகள் சக்திகளை உறிஞ்சிக் கொன்டு கசங்கலாய் என்னை இரவுகளிடம் ஒப்படைக்கும் வழமையில் அது கரைந்தே போனது..! ஒரு மரத்தின் இலையாய்... ஜனித்து காற்றில் ஆடி அசைந்து விளையாடி மனமற்ற திசுவாய் மழையில் திளைத்து குதித்து, வெயிலைக் காய்ந்து அனுபவித்து தடமில்லாமல் மரமிலிருந்து ஒரு நாள் சருகாய் கழன்று மெளனமாய் மண்ணில் மட்கி மடியும் பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்... ஆனால்... இரைச்சலான மனிதர்களின் புத்திகளிடம் இருந்து என்னைக் காத்துக் கொள்ளும் முயற்சிகளில் விழிப்பான நிலையில்தான் ஏதேதோ எண்ணங்களோடு நகர்ந்து, அவசரம...

நிதர்சனத்தின் தீண்டல்!

கொழுந்து விட்டெரியும் ஆளவரமற்ற தார்சாலையின் அக்னிச் சூட்டில் பாதங்களின் பொறுக்க முடியா ஓட்டத்தில் எட்டிப் பிடிக்க முடியாத இலக்குகளின் கோரப்பற்கள் முன்னின்று பயமுறுத்தும் விழித்தெழுந்த ஒரு நள்ளிரவு கனவு விடியல் வரை துரத்தி கொண்டு வந்துவிடும் நிஜங்களோ கனவை விட கொடுமையாய்! யாதார்த்த போர்வையைச் சுற்றிக் கொண்டு எப்போதும் தினசரி நிகழ்வுகளுக்குள் அகப்படாத ஒரு குருட்டு காதலியின் கிழிந்துபோன உடைகளினூடே பரவிக் கிடக்கும் ஏழ்மையை பார்க்க சகிக்காது இறுக மூட நினைக்கும் கண்கள் மூடினாலும் காட்சிப் படுத்துகின்றன என் ஏழ்மைக் காதலை! விடம் ஏறிப்போன நாவுகளுக்கு அழுகிப் போன மூளைகள் பரவவிடும் கட்டளைகளில் இறுமாந்து கிடக்கும் திடப்பட்ட மனிதர்களின் கேலியும் பேச்சும் சீண்டலும் சீறலும் முற்றிலும் அன்னியப்பட்டதாய் பார்த்து சகித்து ஒதுங்குகையில் முகத்திற்கு முன் நடக்கும் அவலட்சண கூத்துக்களை காறி உமிழ்ந்து கலைக்க நினைக்கையில் பாவமாய் புத்திக்குள் எட்டும் இந்த... அவலங்களின் ஜனிப்பு மூலங்கள்! விட்டு விலகிடும் ஆசையில் கட்டி இழுத்துக் கொண்டிருக்கும்.. மூடனாய் அழுந்தி இறக்கும் அற்ப பதர்களின் ஆட்டத்துக்குள் ஒரு ஓட்டமாய் ...

பரமசிவம் தாத்தா....என் ஹீரோ!

கற்றை முடியை கையால்... கலைத்து சற்றே நிமிர்கையில்... கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து வெளுப்பாய் பார்த்து சிரித்தன சில வெள்ளை முடிகள்! கறுப்பு ராஜ்யத்துக்குள்... காலம் அனுப்பி வைத்த... பளீச்சிடும் படை வீரர்களாய் தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து சூட்சுமமாய் வாள் சுழற்றி சொல்லாமல் சொல்லின... காலத்தின் கணக்கினை.....! எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா.... என் அப்பா, என் மாமா என்று... வாங்கிய வெளுமையினை சாயங்களால் ஏமாற்றி கருப்பாய் வெளுப்பை அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும் முழுதும் வெளுத்த தலையுடன் எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு பரமசிவம் தாத்தாதான் என் ஆதர்சன ஹீரோ! சொடக்கு போட்டு.... காலம் அழைத்து கொடுக்கும் பரிசினை மறைத்து வைக்கும் மடைமையில் எப்படி விடியும் மீண்டும் இளமை? என் நரைத்த தலையை முழுதாய் காணும் ஏக்கத்தில் மீண்டும் மீண்டும் கனவுகளில் பறக்கிறேன்... கேசத்தினை....கலைத்து கலைத்து... கணக்குகள் கூட்டி காதலாய்... காத்திருக்கிறேன் கருப்பினை கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக! மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற என் கனவுகளின் பின்னால்... காலம் கடக்கும் ஆசையொன்றுளதை யார்தான் அறிவார்? தேவா. S

கத்திக் கப்பல்...!

ஒரு மழைக்காய் செய்த... காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...! ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும் பொழுதுகளில் கண்ணீரோடு சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல் ஏனோ இதயத்தை ரணமாக்கி சோகமாய் முடங்கியே கிடக்கிறது...! இன்றாவது மழை வருமா? ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ ஒரு கோபத்தோடு எப்போதும் நடக்கிறேன் நிலத்தில் தெரியும் என் நிழலை எரித்தபடி! பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்? ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் .. செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால் எங்கே இருந்து ஜனிக்கும் மழை? யார் கொடுப்பார் அதற்கு விலை? மரங்களில்லா பூமியில் மழை ஒரு கனவுதான்.... கரங்கள் இல்லா மனிதனைப் போல தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில் எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு இயற்கையை குறை சொல்லும் மனிதனை சுயநலவாதி என்பதா? இல்லை எப்போதும் பொய்க்கும்.. இயற்கையின் பெயரால் இதை... இறைவனின் பிழை என்பதா? காற்றோடு கூடி எப்போது... மேகமாய் சூல் கொண்டு மழைக் குழந்தைகளை பிரசவித்து மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்? கனவுகளோடு வழக்கம் போல... ஒரு கருவினைப் போல ...

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!

ஒரு ஆக்ரோஷ அரக்கனாய் கரையைச் சுவைக்க கால் பதித்தாயா கடலே? ஆடும் மனிதர்களுக்குப்... பாடம் புகட்ட ஆடிக்... களித்தாயா நிலமே...? என்ன செய்தோம் என்றுணரும் தருணம் முன்பே... நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு உயிர்களை பெயர்த்தெடுக்கும் உன் அவசரத்தின் மீதான என் கோபத்தை எங்கே அடுக்குவேன்? எத்தனை உயிர்கள் போனது...? கணக்கு வழக்காய் கழித்து அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும் காலத்திற்கு தெரியுமா எத்தனை கனவுகளை அழித்தோமென்று? தனிமையில் துளிர்க்கும்... என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின் மூலம் அறிந்த அண்டமே.... மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே எல்லாம் எடுத்துக் கொண்டு எம் பூமியில் உயிர்களுக்கான சந்தோசத்தையும் சாந்தியையும் இறைத்துப் போடு; இல்லையேல் மொத்தமாய் பூமிப் பந்தை அகண்டவெளியில் இருந்து.. அறுத்துப் போடு....! இன்னுமொரு முறை கொந்தளிக்காதே கடலே... ஆட எத்தனிக்காதே நிலமே... உன்னை கட்டுக்குள் கொண்டு வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்... கால்கள் இருந்தால் கொடு பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......! ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது...

கிறுக்கல்....!

சப்தம் விரிப்பில் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்த நாணயங்களின் சப்தங்களில் ஒளிந்திருந்தது..தெருவோர பிச்சைக்காரனின் வாழ்க்கை..! *** மாயை அடிக்கடி தலைவாரும் எதிர் வீட்டு இளைஞன்... அடிக்கடி தாவணி மாற்றும் பக்கத்து வீட்டுப் பெண் ஒளிந்து கொண்டு.... பல்லிளிக்கும் பதின்மம்....! *** கோபம் சாவு வீட்டில் வரும் ஞானம் சண்டைகளின் போது எங்கே போய் தொலைகிறது? *** யுத்தி ஒரு டீக்கடை பெஞ்சும் தினத்தந்தி பேப்பரும்.... துக்குணூண்டு அரசியலும் டீக்கடை கல்லாவில் சில்லறையாய்! *** வேசம் சேரிகளுக்குள் வெள்ளைச் சட்டைகளின் கும்பிடுகளும் பல்லிளிப்புகளும் சொல்லாமல் சொல்லின நெருங்கி வரும் தேர்தலை! *** பக்தி எப்பவோ நேந்துகிட்டது... அடுப்பில் கொதிக்கும் ஆடு... சலமின்றி அய்யனாரும்.. பசியோடு உறவுகளும்..! *** நிதர்சனம் ஒரு பேருந்து கிளப்பிச் சென்ற புழுதி மறைந்த பொழுதில் கடந்து சென்ற... ஒரு மரண ஊர்வலம்... கலைந்து கிடக்கும் வாழ்வுக்கு மெளனமாய் சொல்லாமல்.. சொல்லிச் சென்றது ... ஏதோ...ஒரு பதிலை...! தேவா. S

பசி...!

கலைந்து கிடக்கும்... மணல்வெளியில் பரவிக்கிடக்கும் மனிதர்கள் விட்டுச் சென்ற.... காலடிகளோடும் கதைகளோடும்.. மெளனமாய் ஓய்ந்து கிடக்கிறது நள்ளிரவு மெரீனா...! ஒற்றை உடைமையை... தலைக்கு கொடுத்துவிட்ட திருப்தியில் கடந்து போன நாளின் கஷ்டங்களை காற்றில்... பறக்கவிட்டு....தொடர்கிறது ஒரு தெருவோர பிச்சைக்காரனின் கனவுகள் நிறைந்த தூக்கம்....! சிலையான தலைவர்கள்... அமைதியாக நிற்கிறார்கள்... நெஞ்சு நிமித்தி வந்து அமரப்போகும் காக்கை குருவிகளுக்காக.....! காக்கிச்சட்டைகளின் கைகளில்... அவசரமாய் திணிக்கப்ப்டும் இந்திய ரூபாய்கள் அனுமதிக்கிறது... காமத்தை காசாக்கும் கவர்ச்சியான வாழ்வின் சோகங்களை....! அரவமற்ற நடு நிசியில்..... ஆனந்தமாய் சாலை கடக்கும் தெரு நாய் சுதந்திரத்தின் உச்சத்தில்... வெறித்துப் பார்க்கிறது அவ்வப்போது... சாலை கடக்கும் வாகனங்களை...! நகரம் காக்க நகரும் காவல்துறை வாகனங்கள்... எங்கேயாவது டீ குடிக்கவேண்டும்..... கொட்டாவியோடு வண்டியோட்டும். காவல்காரரின் கண்கள் ஏக்கமாய்... சு ழல விடுகிறது தூக்கத்தை..! எல்லா கடவுளர்களும்.... பூட்டுக்களோடு பாதுகாப்பாய்.. தத்தம் ஆலயங்களில்.... வீடுகளற்ற குடித்தனங்கள்....

மே தினம்......

மே தின... விழா கொண்டாட்டம்.... நள்ளிரவு தாண்டியும்... ஆட்டம் பாட்டத்துடன்! மைக் செட் மாரியும்.... மேடை பிரிக்க... மைக்கேலும்... தெருவொராம் பசியோடு....! உழைக்கும் வர்க்கதிற்கு.....வாழ்த்துக்கள்! தேவா. S

எச்சில் பொழுதுகள்...!

எச்சில் பொழுதுகளாய்... விடிகிறது...எமது இலவச வாழ்க்கை! வாக்களிக்கும்... பொழுதுகளிலாவது.. மூன்று வேளை உண்ண..எண்ணி.. கை நீட்டச்...சொல்கிறது மனம்! கும்பிட்டு...கும்பிட்டு... அழிந்து போனது.. எமது ரேகைகள்..... 'வாழ்க' விற்கும்... 'ஒழிக' விற்கும்... இடையில்...ஒளிந்து விளையாடிகொண்டிருக்கிறது... எமது வாழ்க்கை! கல்விக்காக...செல்லாமல்.. உணவிற்காக பள்ளி செல்லும்... எமது குழந்தைகள்! அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத... வீடுகளில் எல்லாம்... இலவச அரிசி... என்ன புரட்சி...செய்து விடமுடியும்! கருப்பு வெள்ளை... வாழ்க்கையின் பிரச்சினைகளை வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்படி தீர்க்கும்? கறை வேஷ்டிகளால்.... கரை தட்டி...நிற்கிறது... எம் வாழ்க்கை...! எங்கே இருக்கிறாய்? மகாத்மா.... மீண்டும் வா... தொடங்கி....வை... இரண்டாவது சுதந்திர போரை! எம்மக்கள் பிரச்சினைகள் எப்போதுமே வீரியம் கொண்டு வெளி வந்ததே இல்லை! கோடை ஆரம்பம் ஆகி விட்டது....மின்சாரம் இல்லாமல் எத்தனை வீடுகளில் கைக்குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு ஆளாகிப் போயிருக்கிறார்கள்! வெயிலின் உச்சத்தில் இருக்கும் வேலூர் போன்ற நகரங்களில் ...

சமத்துவ கனவு!

தொலைந்து போன நாட்களை... நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்.... மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ... வருகிறது மனிதாபிமானம்... இன்னும் ஒரு நாள் விடியட்டும்... அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்.... மதங்களின் போர்வை... சுற்றிய மனிதர்கள்....! சுய நலத்தை போர்வையாக்கிய அரசியல்வாதிகள்... காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்... கெளவரவத்திற்கா ஓட்டுபோடத... ஒரு படித்த கூட்டம்... புறக்கணிப்பதாய் சொல்லி... ஒதுங்கும் ஒரு கூட்டம்.... இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல் கடைசி வீட்டுத் தாத்தாவின் துருப்பிடித்த சைக்கிள்... அடுத்த மழைக்குள்ளாவது கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை.... இரண்டுமே... இந்திய வல்லரசு கனவு போல...! உச்சிவெயில்...குண்டும் குழியுமான என் கிராமத்து தார்ச் சாலை மந்திரி வருக்கைக்காக ஏழை வீட்டு மணபெண்ணாய்... அலங்கரித்துக் கொள்கிறது....! தெருவோர டீக்கடையில்... ஒரு குவளை டீ குடித்து உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...! பழைய துணிபோட்டு... பக்கெட் வாங்கும் அம்மணிகள்... அம்மணமான குழந்தைகள் துணி இல்லாமல்... குடிசைகளின் ஓரங்களில்! சீமான்களின் மீதமான உணவுகள்... குப்பைத்தொட்டிக்கு போகாமல்... என்று தான் நே...

பொன்னாத்தாவின் ...புலம்பல்!

கழனியில வேல பாக்க கலங்கி நின்னதில்ல... கட்டுக் கதிரு சுமந்தும் .... நடக்க சிரமப்பட்டதில்ல... கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு... வயித்தில் ஒண்ணு.... இருந்த போதும் கவலையில்ல... பத்துவீடு...சுத்திவந்து... பத்துபாத்திரம் தேய்ப்பதில.... கூட... குறையுமில்ல... மூலையில கிடந்தாலும்... மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....! இரவு பகல் பாராம... மிருகமா என்னை வேட்டையாடி... கொன்னாலும்...பரவாயில்லை... மொட்டையா போற...மகன்... குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு... அவன் குடல கருக்கி...எங்க உசிர.... எடுக்காம இருந்தா சரிதேன்...! கவுர்மெண்டே...கட துறந்து... கருமாதி நடத்துதே....! காந்தி போட்டோவ..... காகிதத்தில் போட்டு வச்சு.... கல்லாவுல சமாதியாக்கி.... கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே! கேக்க ஒரு நாதி இல்ல.... என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல... எல்லா சாமிய கும்பிட்டும்.... ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...! என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை. ...