Skip to main content

பார் காலமே.. பார்...!

















எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே...
கால்கள் கொண்டு திக்குகளெட்டும்
நடந்து காட்டினோம்...!
பேச்சற இரு என்று எம் நாவினை
நீ வெட்டி போட்டாய் காலமே...
எம் மெளனத்தால் அன்பென்னும்
பூக்களை எம்மைச் சுற்றி
கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...!

எம் விழிகளை குருடாக்கினாய் காலமே...
இருளென்னும் கருமையில்
கலங்காது நின்று வர்ணங்களை
எம் புத்தியில் தேக்கி வைத்து
எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்!

சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில்
மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்;
பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்;
சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட
ஓடும் கால்களுக்கு எல்லாம்
எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....!

என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ?
காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும்
முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன்
என்ற சத்தியம் உணர்..!

பொய்களின் நகர்வுகளில்
எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள்
எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும்
என்ற நிதர்சனம் அறி!

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!

எம்முள் படிந்து கிடப்பது
பரந்து கிடக்கும் சத்தியத்தின்
சப்தமிலா அணுத்துகள்கள் என்னும்
மூலம் உணர்; உணரலை அதிர்வுகளாக்கு;
அதிர்வுகளை எம்மைச் சூழ்ந்த
மானுட புத்திகளில் உணர்வுகளாக்கு...
நினைவு பக்கங்களை எல்லாம் திருத்தி எழுது;
சுவாசங்களாய் ஊடுருவி
எம்மின் செழுமையை மானுட
நாடிகளுக்கு நளினமாய் எடுத்துச் சொல்;
ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகளாய் போ
நிதர்சனத்தின் வடிவங்களை
செவுட்டில் அறைந்து பாடமாய்ச் சொல்!

ஐம்புலன் கொண்டு அகந்தை தேக்கி
வாழும் சக மானுடனல்ல...
நான் என்ற உண்மையை உரை;
பொருட்களின் கூட்டும், கூட்டுப் பொருட்களும்
ஜனித்ததின் மூலத்தை உணர்ந்தவெனென்று
மென்மையாய்ச் சொல்...!

மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....

இனி....

என் மெளனத்தை என்னதான் செய்கிறார்கள்
என்று நானும் பார்க்கிறேன்...,
நீயும் பார் காலமே...பார்!

தேவா. S

Comments

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!
வீரத்தை ஊட்டும் அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
//மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....
//

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
ADMIN said…
கவிதையில் உங்கள் எண்ண அதிர்வுகளுடன் நாமும் அதிர்ந்தோம்.. பகிர்வுக்கு நன்றி!!
ADMIN said…
எண்ணங்களுக்கு உரமேற்றுகிற வார்த்தைகளின் தொகுப்பாய் இந்தக் கவிதை..! மேலும் பல படைக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...