Skip to main content

பார் காலமே.. பார்...!

















எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே...
கால்கள் கொண்டு திக்குகளெட்டும்
நடந்து காட்டினோம்...!
பேச்சற இரு என்று எம் நாவினை
நீ வெட்டி போட்டாய் காலமே...
எம் மெளனத்தால் அன்பென்னும்
பூக்களை எம்மைச் சுற்றி
கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...!

எம் விழிகளை குருடாக்கினாய் காலமே...
இருளென்னும் கருமையில்
கலங்காது நின்று வர்ணங்களை
எம் புத்தியில் தேக்கி வைத்து
எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்!

சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில்
மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்;
பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்;
சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட
ஓடும் கால்களுக்கு எல்லாம்
எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....!

என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ?
காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும்
முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன்
என்ற சத்தியம் உணர்..!

பொய்களின் நகர்வுகளில்
எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள்
எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும்
என்ற நிதர்சனம் அறி!

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!

எம்முள் படிந்து கிடப்பது
பரந்து கிடக்கும் சத்தியத்தின்
சப்தமிலா அணுத்துகள்கள் என்னும்
மூலம் உணர்; உணரலை அதிர்வுகளாக்கு;
அதிர்வுகளை எம்மைச் சூழ்ந்த
மானுட புத்திகளில் உணர்வுகளாக்கு...
நினைவு பக்கங்களை எல்லாம் திருத்தி எழுது;
சுவாசங்களாய் ஊடுருவி
எம்மின் செழுமையை மானுட
நாடிகளுக்கு நளினமாய் எடுத்துச் சொல்;
ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகளாய் போ
நிதர்சனத்தின் வடிவங்களை
செவுட்டில் அறைந்து பாடமாய்ச் சொல்!

ஐம்புலன் கொண்டு அகந்தை தேக்கி
வாழும் சக மானுடனல்ல...
நான் என்ற உண்மையை உரை;
பொருட்களின் கூட்டும், கூட்டுப் பொருட்களும்
ஜனித்ததின் மூலத்தை உணர்ந்தவெனென்று
மென்மையாய்ச் சொல்...!

மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....

இனி....

என் மெளனத்தை என்னதான் செய்கிறார்கள்
என்று நானும் பார்க்கிறேன்...,
நீயும் பார் காலமே...பார்!

தேவா. S

Comments

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!
வீரத்தை ஊட்டும் அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
//மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....
//

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
ADMIN said…
கவிதையில் உங்கள் எண்ண அதிர்வுகளுடன் நாமும் அதிர்ந்தோம்.. பகிர்வுக்கு நன்றி!!
ADMIN said…
எண்ணங்களுக்கு உரமேற்றுகிற வார்த்தைகளின் தொகுப்பாய் இந்தக் கவிதை..! மேலும் பல படைக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...