Skip to main content

தேடல்...30.04.2011

















ஒரு மழை அடித்துப் பெய்து முடித்த பின் பளீச் சென்று கழுவி விட்ட தார்ச் சாலைகள் போலவும், கரும் மேகங்கள் கலைந்த வானம் போலவும் இருக்கிறது மனது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஒரு மனோநிலைக்கு நான் வரமுடியாமல் போனதற்கு காரணம் புறச்சூழல், உணவு மற்றும் ஒரு அலட்சியம்.

எப்போது எல்லாம் அகங்காரம் அற்றுப் போய் நான் நிற்கிறேனோ அப்போது எல்லாம் இப்படி ஒரு நிலை எய்துவதும் பல நாட்கள் இப்படியே நீடிப்பதும், எப்போது மாறியது என்று தெரியாமல் ஒரு வித இறுக்கம் உள்ளே பரவிப் போவதும், ஐந்து கால் (அது என்ன ஐந்து கால்? மனதுக்கு ஆயிரம் கால் கூட இருக்கும்) பாய்ச்சலில் மனம் புறம் நோக்கி ஓடுவதும் நடந்தேறிப் போகிறது.

மனித மூளை வற்றாத ஜீவ நதி, சரியான விகிதத்தில் ஆக்ஸிஜன் செல்லும் போது சரியான நினைவலைகளை அது கிளறி விடுகிறது. சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்ல சரியான அளவில் சுவாசிக்க வேண்டும். சரியான அளவில் சுவாசிக்க புறச்சூழலின் தாக்கம் சரியாக இருக்க வேண்டும். மனம் சம நிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் சுவாசிக்கும் வேகம் சீராயிருக்காது.

அகங்காரம் உள்ள மனம் கொண்டவர்களின் உடலில் எப்போதும் உஷ்ணம் கூடுதலாகவே இருக்கிறது. இந்த உஷ்ணத்தின் காரணமாக சுவாசிக்கும் வேகம் அதீத கதியில் நடக்கும் அப்போது சுவாசிக்கும் பிராணானும் உள்ளே இழுத்த வேகத்தில் சூடாக உள்ளே செல்கிறது. உஷ்ணமான பிராணன் எப்போதும் ஒருவித எரிச்சலுடன் எண்ணங்களை பரவ விடுகிறது.

இன்னும் சிலர் ஆழ சுவாசிப்பதே இல்லை மேலோட்டமாகவே சுவாசித்து குறைந்த அளவே ஆக்ஸிஜனை உள்ளே அனுப்பி நினைவுகளின் வலுவும் குறைந்தே இருக்கிறது. சுவாசம் சீராக இருக்க புத்தி குளுமையாய் இருக்கிறது. பதட்டமில்லாத மூளையில் இருந்து தெளிவான எண்ணங்கள் பிறக்கின்றன. ஒரு பிரச்சினையும், அதன் மூலமும் அதன் தீர்வுகளும் தெளிவாகவே தெரிகின்றன.

தற்போது நான் கண்டு உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமுதாய சீர்கேடு என்னவென்றால் இணைய உலகம் என்ற மாயாலோகத்தில் மனிதர்களைப் பற்றியும் சூழலைப் பற்றியும் கற்பனையிலேயே கணித்து, கற்பனையில் ஒரு உலகம் தோன்ற அதில் லயித்து அங்கே இருந்து முடிவுகளை மிகைப்பட்ட மனிதர்கள் எடுக்கிறார்கள்.

இந்த விர்ச்சுவல் நினைவுகள் அத்தனையும் பொய்யானது என்பதை என்னால் அறுதியிட்டு கூற முடியும். இப்படி கற்பனையில் ஒரு உலகம், அங்கே அரசன், அங்கே ஞானி, அங்கே ஒரு விகடகவி, அங்கே ஒரு அமைச்சர், அங்கே ஒரு இளவரசன், இளவரசி, கதாநாயகன், கதாநாயகி, காதலி, ரெளடி, வில்லன், பொறுக்கி என்று ஒரு பெரிய மாயா பஜாரே இங்கே நடக்கிறது.

எதிரில் இருக்கும் சகோதரனும், சகோதரியும் பிள்ளைகளும், கணவனும், மனைவியும் ஆபத்தான சூழ்நிலைகளும், சந்தோச சூழ்நிலைகளும் இந்த கனவு உலகத்தின் முன்னால் வெறும் புள்ளியாய் இரண்டாம் தர வாழ்க்கையாய் போய் விடுகிறது. பொய்யின் முன்னால் எதார்த்தம் மண்டியிட நமக்கே தெரியாத ஒரு புற்று நோய் நிஜ வாழ்க்கையை அரிக்கத் தொடங்கியிருப்பதை உடனடியாக உணர முடியாது. ஆனால் இதன் விளைவுகள் கடுமையானவை என்பதை என் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கற்பனையில் கவிதை படைக்கலாம், கதை எழுதலாம், கட்டுரை எழுதலாம் ஆனால் வாழ முடியாது என் சொந்தங்களே!!!! வாழ்க்கையின் எதார்த்த பக்கங்களில் கற்பனைக்கு வேலையே இல்லை. மன விவரித்தல்களில் அகப்பட்டு எங்கோ சென்று விடாதீர்கள்...இங்கே நாம் நம்பிக்க் கொண்டிருக்கும் சில அங்கீகாரங்கள் எல்லாமே வெற்று ஜோடனைகள்.....!

நமது நிகழ்காலம் மட்டுமே நிஜம். இங்கே நேரம் போக பொழுது போக்குவது தவறல்ல..ஆனால் இதை வாழ்க்கையாக பார்க்க ஒரு பக்குவமும் உயர்தர புரிதலும், அனுபவமும் தேவை. நாகரீக உலகின் ஒரு ஒப்பற்ற வெளியில் இருக்கும் ஒரு அபாய புள்ளியினை உற்று நோக்க மறவாதீர்கள்.

பாருங்களேன் நான் ஏதோ சொல்ல எங்கோ வந்து விட்டேன் எப்படியிருந்தாலும் ஏதோ ஒன்று மனதில் அழுந்திக் கிடந்தது அதை கூறிவிட்டேன்.

அதே போல ஒரு படைப்பாளியைப் பற்றியும் அதீத கற்பனையும் கொள்ளாதீர்கள் படைப்பினை ரசிக்கும் போது அதை படைப்பாளின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி விடாதீர்கள். குறிப்பாக ஒரு காதல் கவிதை எழுத வேன்டுமெனில் நான் அதற்குண்டான மனோநிலைக்குப் போனால் போதும், ஒரு பாடலோ, ஒரு படமோ, ஒரு கவிதையோ அல்லது கடந்த கால நிகழ்வோ இத்தைகைய சிந்தனைக்கு உரமாய் போய்விடுகிறது. இங்கேதான் கற்பனை சிறகை விரித்து ஏகாந்த வானில் பறக்க முடியும். ஒரு காதல் கவிதையை ஏக்கத்தில் எழுதி விடுவதாலேயே அவன் காதல் ஏக்கத்தில் இருக்கிறான் என்ற எண்ணமும் தவறே...

நீங்கள் என்னை சக்கரவர்த்தியாக பாவித்தீர்களேயானால் சீக்கிரமே என்னை பிச்சைக்காரன் என்று கூறப் போகிறீர்கள். என்னை பிச்சைக்காரன் என்று நினைத்தால் என்னை சக்கரவர்த்தியாக பார்க்கப் போகிறீர்கள். ஆகையால் எந்த அனுமானமும் கொள்ளாதீர்கள். கட்டுரைக்குள் ஏதேனும் கருத்து கிடைத்தால் அதில் ஏதேனும் அர்த்தம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நேரே குப்பைத் தொட்டிக்கு கட்டுரையை அனுப்பி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். படைப்பாளியோடு தொடர்பே படுத்தாதீர்கள்!

ஆன்மீகத் தேடலில், அந்த ஆசையில் எனக்கு கிடைக்க வேண்டிய நான் அடைய வேண்டி வழிமுறைகளை நான் எழுத்தாக்கி இருக்கலாம். நான் பயிற்சி எடுக்கும் களமாக வலைப்பூ இருக்கலாம். முழுமையை நோக்கிய எனது பயணத்தில் இவை எல்லாம் எனக்கு மைல் கற்கள். நான் முழுமையாயிருந்தால் ஏன் கணினையைத் தட்டிக் கொண்டு, கதையும், கவிதையும் எழுதிக் கொண்டு இருக்கப் போகிறேன்?

எவ்வளவு காலம் இவையெல்லாம் தொடருவேன் என்று எனக்குத் தெரியாது ஆனால் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் கொடுப்பதிலும், அதிக வாசிப்பாளனைப் பெறுவதிலும் இல்லை என் திருப்தி....! மொத்தமாய் எனக்கு போதும் என்று தோன்றும் அன்று திரும்பிக் கூடப் பார்க்காமல் இவை எல்லாம் விட்டு போகத்தான் போகிறேன்.

அதுவரையில் அது நிகழ காத்திருக்கிறேன்!

சீக்கிரம் வா மழையே
உப்புக் கல்லாய் இருக்கும்
என்னை கரைத்தே ...
போட்டு விடு!


தேவா. S

Comments

உண்மையான தேடல் அண்ணா! உண்மைலேயே இங்க இருக்கிற , கிடைக்கிற பாராட்டுக்களும் , புகழ்ச்சிகளும் மாயையே!
ஆனா இங்கயும் நான் பெரிசு , நீ பெரிசுனு சண்டை ! கொடுமை.

அதே மாதிரி ஒரு படைப்பாளிய அவரோட எழுத்த வச்சு , நீங்க சொன்னது மாதிரி காதல் கதை எழுதினா காதலிக்கிறான் அப்படின்னு நினைப்பதெல்லாம் சரியில்லைனுதான் நினைக்கிறேன்.. அப்படிப்பார்த்தா கிரைம் நாவல் எழுதுறவங்க தினமும் கொலை பண்ணிட்டா இருக்காங்க ?

மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கே இணையம்! அத சரியா புரிஞ்சிகிட்டா சண்டைகளும் , நீ பெரிசு நான் பெரிசுன்கிற விவாதங்களும் வராது :-))
//அதுவரையில் அது நிகழ காத்திருக்கிறேன்!//

இதே மனநிலையில் நானும்..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...