Skip to main content

காலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்!



தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. இவரா? அவரா என்ற கணிப்புக்களுடனும், கற்பனைகளுடனும் இருந்த எல்லோருக்கும் ஒரு விடை கிடைத்தாகி விட்டது. அ.தி.மு.க அட்டகாசமான ஒரு பெரும்பான்மையினைப் பெற்று ஆட்சிப் பொறுப்பிலேறி விட்டது. அ.தி.மு.க என்னும் ஒரு அரசியல் கட்சியின் சிறப்புக்களைக் கைக்கொண்டு அது மேலே வந்து விட்டது என்று கூறுவதை விட நடைமுறையில் இருந்த தி.மு.கழக அரசின் திருப்தியில்லாத செயல்பாடுகளாலும், கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்த முரண்பாடுகளாலும் வெறுப்புற்ற மக்கள் மாற்று அரசியலுக்கு வேறு ஆளின்றி, வேறு வழியின்றி இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

எதேச்சதிகாரமான மனப்போக்கும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்த சிரமங்களைப் பற்றிய சிரத்தையுமின்றி, இலவசங்களை கொடுத்ததாலேயே மக்களின் ஆதரவு தமக்குத்தான் என்று கணித்திருந்த தி.மு.கவின் எண்ணம் சுக்கு நூறாகிப் போனதின் பின் புலத்தில் மக்களின் தெளிந்த பார்வைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தான் மட்டும் கனவில் இல்லாது மீடியாக்களின் மூலம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கனவில் வாழ வைத்து, மனிதர்களின் மூளைகளை மைண்ட் இலுசன் என்னும் வித்தையை காட்டி மயக்க முயன்ற தி.மு.க.வின் பெருங்கனவு உடைந்து போய் விட்டது.

ஈழப்பிரச்சினையில் தி.மு.கவின் நிலைப்பாட்டினை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்ததும், குடும்ப அரசியலின் பெரும் ஆதிக்கமும் ஒன்று சேர்த்து கழகத்தை குப்புறக் கவிழ்த்தே விட்டது.

அறிஞர் அண்ணா என்ற பெருந்தகையால் தொடங்கப்பட்ட தி.மு.க என்னும் கட்சி கடந்து வந்த பாதைகளும் அவற்றின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட ஏராளமான நேர்மறையான மாற்றங்களும் தமிழனுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். கடுமையான போராட்டங்களை சந்தித்துள்ள ஒரு பெரும் இயக்கத்தில் சிந்தனாவாதிகள், அருமையான பேச்சாளர்கள், என்று ஆரம்பித்து போர்க்குணம் கொண்ட கடும் தொண்டர்கள் என்று மிகப்பெரிய கோட்டை அது. மிசா சட்டம் கொண்டு வரப்பட்டப் போது தி.மு.க என்னும் மிருக பலம் கொண்ட கட்சியினை எதிர்கொள்வது மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

தமிழ் மொழியின் வளமும், தமிழ் மொழியின் பெருமையும் இன்னமும் கொஞ்சமேனும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள்தான். அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த படியாக நாவலர் நெடுஞ்செழியன் கழகத்தில் இருந்த போதும் தம்முடைய அயராத கடும் உழைப்பால் எல்லோரையும் பின்னோக்கி தள்ளிவிட்டு மேலேறி வந்த திருக்குவளை தந்த திரு. தட்சிணாமூர்த்தி என்னும் சாமானியன் கலைஞர் கருணாநிதியாக தன்னை பரிணமித்துக் கொண்டு இன்று வரை தமிழக அரசியலின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கடும் போராட்டங்களையும், கற்களையும், முற்களையும் கடந்துதான் அவர் தி.மு.க என்னும் கட்சியின் தலைமைக்கு வந்தார் என்பதும் அவரது ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பச் சூழலும் வறுமை சூழ்ந்தது என்பதும் அனைவரும் அறிந்த விடயம். கட்டாந்தரையிலிருந்து உச்சி வானுக்கு அவர் ஏறிவர பட்ட சிரமங்களும் விடா முயற்சியும் பொது வாழ்க்கையில் தனக்கென்று ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொள்ள அவர் கொண்ட முயற்சிகளும் சந்தேகத்துக்கிடமின்றி பாராட்டுதலுக்குரியது.

காலங்கள் கடக்க கடக்க தி.மு.க என்ற பெருங்கடலை திசை திருப்பி தமது இல்லமிருக்கும் கோபாலபுரத்திற்கு கொண்டு வர அவர் பட்ட பெரும்பாட்டில் கடந்த காலப் பெருமைகள் எல்லாம் காற்றில் கரைந்த பெருங்காயமாய் பட்டுப் போக குடும்பத்திலுள்ளவர்கள் எல்லாம் வளர, வளர தன்னையறியாமலேயே இந்த தமிழினத்தலைவன் தமது குடும்பத்தின் கிடுக்குப் பிடிக்குள் போனதை இன்று வரை அந்த தலைவன் அறிந்திருப்பானா? என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு கட்சியும் குடும்பமும் பின்னிப் பிணைந்து போய் விட்டது.

அறிஞர் அண்ணா என்ற மிகப்பெரிய, மிக நீண்ட தொலை நோக்குப்பார்வைகள் கொண்ட மனிதரால் தொடங்கப்பட்ட கழகம் மொத்தமாக மறைந்து போய் கலைஞர் கருணாநிதியின் குடும்ப அரசியல் ஆரம்பித்த இடத்தில் தொடங்கியது ஒரு பெரும் சரிவு. மகன், மகள், மருமகன், மூத்த தாரம், இளையதாரம் என்று சுற்றிச் சுற்றி குடும்பத்தின் சூழலை சரிக்கட்டவே நேரம் சரியாக இருந்ததில் கட்சியும், அந்த மிகப்பெரிய கட்சியின் தலைவர்களும், பெரும் தொண்டர்களும் கேலிக்குரிய பொருட்களாக மாறிப் போனதையும் வரலாறு கவனமாகத்தான் தனது குறிப்பிலேற்றிக் கொண்டது.

தன்னின் தமிழார்வம், பழுத்த அரசியல் அறிவு, கடும் உழைப்பு இவையெல்லாவற்றையும் தன் குடும்பம் தின்று விட இன்று இழந்து விட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க முடியுமா என்று யோசிக்க இயற்கையே அவருக்கு நேரத்தினை இன்று வழங்கிவிட்டது. ஆழமான நீண்ட அமைதியினை அவரது இந்த தள்ளாத வயதில் கொடுத்திருக்கும் இயற்கை அவருக்கு இது எல்லாம் கடந்த காலச் செயல்களால் தமக்கு கிடைத்தது என்று எண்ண வைக்குமா? என்று தெரியவில்லை.

அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து இனியொரு தேர்தலை தான் சந்திக்க முடியுமா? சந்திக்கும் போது இதே திறனோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் காலம் சம்மட்டியால் அடிக்கும் கேள்விகளை மெளனமாய் அவரது காதுகளுக்குள் ஓதிக் கொண்டுதானிருக்கும். ஈழப்பிரச்சினையில் தான் திருப்திகரமாக மக்களுக்கு செய்யும் படியான நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்க வில்லையே....!!! குறைந்த பட்சம் தனது அமைச்சரவை ராஜினாமா செய்யும் என்ற பகிரங்க ஒரு மிரட்டலை கூட மத்திய அரசுக்கு நான் வைக்கவில்லையே....!!!! பிள்ளைகள் பிள்ளைகள் என்று மூத்தவனையும் இளையவனையும், சுற்றத்தையும் சூழலையுமே கருதி நான் செய்த பிழைகள் எனக்கு கொடுத்திருக்கும் பரிசு.. ஓய்வும், மெளனமும்...!!!!!

ஓய்வும், மெளனமும் வாழ்க்கையைச் சரியாக வாழ்ந்தவர்களுக்கும் நானென்ற தன் முனைப்பு அற்று வாழ்ந்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆனால் முன்னாள் முதல்வர். திரு. கலைஞர் கருணாநிதி போன்று நான், நான் என்று அதிகாரம் போகத்தில் வாழ்ந்தவர்களுக்கு அது ஒரு தண்டனை.

காலம் இப்போது அவருக்கு ஓய்வையும் மெளனத்தையும் கொடுத்திருக்கிறது. மீண்டும் உயிர்த்தெழுதல் ஒரு கோடி பேரை உறுப்பினராகக் கொண்ட ஒரு கட்சிக்கு பெரிய விசயமே இல்லை ஆனால் இது எல்லாமே குடும்பம் சாராத ஒர் அரசியலை தி.மு.க செய்யும் போதுதான் முழு வீரியத்தோடு சாத்தியமாகும்.

மறுபக்கத்தில்....

எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் புகழினைக் கொண்டு அரசியல் களத்திற்குள் நுழைந்த ஜெயலலிதாவிற்கு பாடமாக போதும் போதுமென்று அவர் செய்த கடந்த காலத் தவறுகளே இருக்கின்றன. மீண்டுமொரு முறை மக்கள் தன்னை ஏற்றி வைத்திருப்பது தன் மீது கொண்ட நம்பிக்கை என்று ஆணவம் கொள்ளாது, தானே சிறந்த அரசியல் தலைவர் என்ற மமதை கொள்ளாது, பழிவாங்கல், மற்றும் தனது சுயநல எதேச்சதிகார அரசியல் நகர்வுகளை விடுத்து...

மக்களின் தேவைகளை மனதில் கொண்டு, ஊழல் என்ற கரையான் தன்னை அரித்து விடாமல், இலவசங்கள் கொடுத்து விட்டால் மட்டும் மக்கள் மயங்கிவிடுவார்கள் என்று கருதாமல்....ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதை மறக்காமல் வரும் ஐந்தாண்டுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலிதா அவர்களே..இது வெற்றி என்னும் துப்பாக்கி முனையில் மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு...! நீங்களும் பிழை செய்தால்...தயவு தாட்சண்யம் இன்றி மக்களால் சுடப்படுவீர்கள் என்பதை கனவிலும் கூட மறக்காதீர்கள்...!!!

உண்மையில் சொல்லப் போனால் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம்.!!!!!

முதல்வர்.செல்வி. ஜெயலலிதா.. பாடம் விளங்கி பயணம் செய்வாரா? இல்லை அவரும் பாடம் ஆவாரா....? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!!!!


தேவா. S






Comments

சரியான கட்டுரை... இந்த தேர்தல் முடிவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை நம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான சிந்தனையுடனே இருந்தேன்.. ஆனால் தேர்தல் முடிவில் தெளிவாகிவிட்டேன்.. மவுனமாக இருந்து (துரோகிகளுக்கு) திமுகழகத்திற்கு சரியான பாடம் புகட்டிவிட்டார்கள். நமது ஆட்சியாளர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் படித்ததாக எனக்குத்தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை வைப்பதைத்தவிற வேறு ஏதுமில்லை. கருணாநிதியிடமிருந்து கட்சி வெகு தூரத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் அது நீரோட்டத்திற்கு வருவது கருணாநிதியின் கையில் இல்லை என்றே தோன்றுகின்றது. வெற்று வாய் சவடால்களுக்கு இனி வேலையில்லை.
நல்ல எழுத்து நடையோடு தேர்தல் முடிவுக்குப் பின் கருணாநிதி பற்றிய மதிப்பீடு நன்றாக உள்ளது.5 ஆங்கிலப் பத்திரிகைகள்,5 தமிழ் பத்திரிகைகள் சொல்லும் செய்திகளை வைத்தே கணிப்பீடு செய்பவர்களுக்கு இருக்கும் திறனை விட பத்திரிகை,தொலைக்காட்சி,பணம்,கட்சி,புலனாய்வுத் துறை,காவல்துறை,மத்திய அரசின் நேரடி நெருக்கம்,அனுபவம்,முதல்வர் பதவி என இருக்கும் ஒருவருக்கு ஒரு பிரச்சினையை துள்ளியமாக எடை போடும் வசதிகள் ஏராளம்.இதற்கென்று தனியாக ராஜதந்திரமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.ஆனால் அனைத்து வசதிகளும் இருந்தும் மனம் பிறழ்ந்த நிலைக்கு காரணமாக குடும்ப சுயநலம்,ஊழல் சகதிக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது காரணம்.

பாராளுமன்றத் தேர்தலின் போதே அனைத்து எம்.பிக்களின் ராஜினாமாக் கடிதங்கள் வாங்கியும்,உண்ணாவிரதக் குழப்பங்கள் செய்த நிலையில் துவங்குகிறது தி.மு.க வின் வீழ்ச்சி.
சொந்த மகளே பயப்படுமளவுக்கு (ராடியா தொலைபேசி)இடித்துரைக்க இயலா மன்னன் கருணாநிதி.
அருமையான....தெளிவான...பதிவு. மக்கள் கொடுத்த பதவி வாய்ப்பை, சுயநலமின்றி உபயோகித்து... எதாச்சும்.. நல்லது பண்ணினா சரி தான்..!!
இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலிதா அவர்களே..இது வெற்றி என்னும் துப்பாக்கி முனையில் மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு...! நீங்களும் பிழை செய்தால்...தயவு தாட்சண்யம் இன்றி மக்களால் சுடப்படுவீர்கள் என்பதை கனவிலும் கூட மறக்காதீர்கள்...!!

அருமையான பதிவு தேவா.
உங்களைத் தான் எதிர்பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.
kumar said…
அண்ணாவின் வாரிசுகளை தமிழகத்தில் யாருக்கேனும் தெரியுமா?
Anonymous said…
Really a thought provoking post. should be read by karuna and jaya

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...