Skip to main content

இது ஒரு ரகசிய நாடகமே...!


























கருப்பையில் ஜீவனாய் நான் நிறையும் முன்பு ஜடமாய், உயிராய் எங்கெங்கெல்லாம் விரவிக் கிடந்தது எனது பிண்டத்தின் மூலங்கள்? தாயின் கருமுட்டையோடு, தந்தையின் உயிரணு கலந்து ஒரு தசைக் கோளமாய் கிடந்த என் உடலுக்குள் உயிர் ஊற்றிய பிரமாண்டம் எது?

அங்கும் இங்கும் ஒரு சருகைப் போல நான் பறந்து பறந்து என்ன கொண்டு செல்லப் போகிறேன்? எல்லாம் நிறையும், எல்லாம் குறையும் என்றறிந்த மாத்திரத்தில் நான் எல்லாம் விட்டு போகாமல் உழல காரணமான உறவுகளும் என்னை இங்கு கொண்டு வந்த சூத்திரதாரியின் நிகழ்வுதானே?

எங்கே தொடங்கியது எனது பயணம்? எப்போது முடியும்? எனக்கு முன்னும் பின்னும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்.. சிற்றின்பத்தால் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையை ஒரு நாய்க்கு போடும் சிறு ரொட்டியைப் போல போட்டு விட்டு பேரின்பத்தை மறைத்து வைத்து அதை அடைய மனமற்று போகும் போது அடையும் சூத்திரத்தை சூசகமாய் பிரபஞ்சத்துக்குள் கரைத்துப் போட்டது யார்?

அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டிருக்கும் சக்தி துகள்களின் ஆட்டமே நடராஜ தத்துவமென்று முத்திரை பதித்து சூசக கருத்தை உட்பொருளாய் வைத்து சென்ற மானுடர்களின் மனக்கூட்டு பிரபஞ்சத்தோடு இயைந்தேதான் இருந்ததா?

உடையப் போகும் குமிழியைப் போல, சிதறப் போகும் கண்ணாடி போல தன்னின் இயல்பு கொண்ட மானுடக் கூட்டம் தொடை தட்டி கொக்கரிக்கும் அறியாமை நீங்க ஜென்மங்களாய் பிறந்து பிறந்துதான் பிணி தீர்க்க வேண்டுமா?

காதலையும் காமத்தையும் இன்ன பிற இன்ப துன்பங்களையும் தானே தன்னில் தோன்றவிட்டு மறைந்து கிடக்கும் சக்தியை கடவுளென்று சொல்லி ஒரு சிலைக்குள்ளோ அல்லது ஒரு கட்டிடத்துக்குள்ளோ அல்லது ஒரு வேதத்துக்குள்ளோ மட்டுப் படுத்தி விட முடியுமா?

சூட்சுமத்தில், எதுவுமற்ற சூன்யத்தில் இருந்து எல்லாம் ஜனித்தது என்றால் இன்றும் சூட்சுமத்திலிருந்து பொருள்களையும் பொருளற்ற விதிகளையும் மனமற்று பேரியக்கத்தோடு ஒன்றிய ஒரு நிகழ்வாய் நாம் சமைத்து விட முடியாதா?

கலைகளும் கலைகளின் மூலங்களும், படைப்புகளும் படைப்புகளின் மூலமும் மனித மூளையின் எந்த இடத்திலிருந்து ஜனித்தாலும் ஒரு படைப்பாளி வெறுமையிலிருந்துதானே எல்லாம் படைக்கிறான். வெறுமையிலிருந்து அவன் படைப்பதாலேயே அவன் சூன்யத்திலிருந்து எல்லாவற்றையும் ஜனிப்பித்த பெருங்கருணையின் செயலை ஒத்துதானே செயல் படுகிறான்?

ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு படைப்பாளியும் மனித மூளைகளில் கனவிலும் உதித்திராத ஒரு இசையையும், ஒரு கவிதையையும் ஒரு ஓவியத்தையும் ஒரு கதையையும் கட்டுரையையும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தி தீரும் போது அவனின் ஆழமும் மூலமும் இறையை ஒத்ததுதானே?

இந்த ரகசிய நாடகத்தினை உணர முடியாமல் இந்த கட்டுரையையும் உணர முடியாமல் மெல்ல விலகி சென்று உள்ளே எழும் நேர், எதிர் மறை எண்ணங்களின் சூத்திரதாரியும் நாம் தானே...!!!!

விளக்கம் கொடுத்தலும், கேட்டலும் தாண்டி ஆழமாய் தன்னை அறியும் பொழுதில் தோன்றும் கடவுளை யாருக்கு காட்ட? மெய்பித்தலுக்கு உட்படா ஒன்றை மெய்பிக்க சொல்லுவதும், மெய்பிப்பேன் என்பதும் சத்தியத்தில் பொய்தானே...!!!

அது இருக்கிறது...காலங்கள் கடந்தும் வெவ்வேறாய் ஜனிக்கிறது...நகர்கிறது...!


அவ்வளவே....!

தேவா. S

Comments

அருமையான பதிவு.
மனிதனது பிறப்புப் பற்றிய விபரணங்கள்,

கலைஞன், படைப்பாளி பற்றிய உளவியற் கருத்துக்கள், மெய் ஞானம் தேடும் மனிதனது உள்ளக்கருத்துக்கள் எனப் பல விடயங்களைத் தாங்கி வந்திருக்கிறது இந்தப் பதிவு.

அருமை சகோதரா.
வித்தியாசமான பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...