Skip to main content

நம்மால் ஏன் முடியாது....?

























சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது ஜனித்த குழந்தைதான் கழுகு. வலைப்பூக்களில் கழுகின் மூலம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சந்தேகமோ கேள்வியோ நம்மிடம் எப்போதும் எழவில்லை என்றாலும் எழுதி என்ன செய்து விட முடியும் என்ற பிரமாண்ட கேள்வியை நம்மிடம் தொடுத்துப் பார்க்காத ஆட்களும் இல்லை...

வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் முதலில் ஜனித்த இடம் ஒரு தனி மனித மூளை. அவை எழுத்து வடிவமாகவோ அல்லது பேச்சு வடிவமாகத்தான் பரவி ஆக வேண்டும். மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் கருத்துக்கள் கேட்பாரற்றுக் கிடக்கலாம் அல்லது ஏளனப்படுத்தப்பட்டுப் பார்க்கலாம்? யார் நீங்கள் என்று ஓராயிரம் கேள்விகள் எம்மை துளைத்தே எடுக்கலாம்..? சலனங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சென்றடைய வேண்டிய இலக்கின் தூரங்கள்தான் அதிகப்பட்டுப் போகும்...

கடந்த 50 வருட சமூக அரசியலால் என்ன சாதிக்க முடிந்தது? ஜனநாயகப் போர்வையில் நாம் சுழன்று கொண்டிருந்தாலும் அதிகாரம் எல்லாம் ஒரு இடத்தில் குவிந்துதானே கிடந்து போகிறது. அதிகார வர்க்கம் எப்போதும் தனது ஆக்கிரமிப்பு கால்களை கொண்டு நம்மை நசுக்கி மிதிக்கத்தானே செய்கிறது.

மாறி மாறி வாக்களித்து வாழ்க்கையில் என்ன செழிப்பினை நாம் இதுவரையில் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா அவலத்திற்கும் ஏதோ ஒரு காரணத்தை கையில் பிடித்த படி நாளுக்கு நாள் இறுகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் அங்கத்தினன் என்பதை விட வேறு என்ன மிகப்பெரிய மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்.

மாற்றங்கள் என்று நாம் சுட்டிக் காட்டுவது எல்லாம் உலக வளர்ச்சியில் ஒரு சதவீதம் கூட கிடையாது என்பதை வசதியாய் மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையில் எப்போதும் நம்மை உயர்த்திக் கொள்ள நமக்கும் மேலே இருப்பவர்களை நாம் பார்த்து அந்த அளவிற்கு நம்மை உயர்த்திக் கொள்ள நாம் உழைக்க வேண்டும், கஷ்டங்கள் வரும் போது நமக்கு கீழே இருப்பவர்களைப் பார்த்து நாம் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் இருக்கும் டெக்னிகாலிட்டியையும், மனநலத்தையும், சுத்தத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிலைமைக்கு எம் மக்களைக் கொண்டு செல்ல வேண்டிய அரசாங்கம் நம்மை விட வளர்ச்சியில் குறைவாக இருக்கும் நாடுகளோடு ஒப்பிட்டு நம்மை திருப்திப் பட்டுக் கொள்ளச் சொல்கின்றன. ஆக்கப்பூர்வமனா திட்டமிடல்களை ஒருபோதும் செய்யாத மத்திய, மாநில அரசுகளுக்கு எல்லாம் தத்தம்கட்சிகளை எப்போதும் காட்சிப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியே ஒரு கவர்ச்சி அரசியலைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் இனியும் அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்பதும் அவர்கள் மாற வேண்டும் என்று தெருவில் இறங்கி கோசங்கள் போடுவதும், போராட்டங்கள் என்ற பெயரில் சாமனியர்களின் அன்றாட வேலைகளைத் தடைப்படுத்திக் கொண்டு தெருவில் நின்று வாழ்க, ஒழிக கோசம் போடுவதும் தோற்றுப் போன வழிமுறைகளாகும்.

உதவிகளைப் பொருளால் செய்து, செய்து ஒரு சோம்பேறித்தனமான சமுதாயத்தை உருவாக்கி விட்டது அரசியல்வாதிகளுக்கு வசதியானதாய் இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு? கடந்த தலைமுறையான நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் எல்லாம் ஏதோ ஒரு சமப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து சென்று விட்டனர். அப்படியான ஒரு சூழலை கடந்த தலைமுறை தலைவர்களும், வழிகாட்டிகளும், சூழல்களும் செய்துவிட்டிருந்தனர்.

சரியாய் நமது காலத்தில் புரையோடத் தொடங்கியிருக்கும் இந்த குருட்டு அரசியலையும், அதன் விளைவுகளையும், புறச்சூழல் பற்றிய தெளிவுகளையும் கைக்கொண்டு நாம் நகர வேண்டியது, அதுவும் போர்க்கால அடிப்படையில் நாம் இயங்க வேண்டியதின் அவசியத்தின் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

" நமது பிள்ளைகள்....."

நமது பிள்ளைகளுக்கு அரசியலும், அதன் சுயநல போக்குகளும், மக்களின் பொறுப்பில்லாத சுயநலங்களும் கூடி கொடுக்கப்போகும் பரிசு என்ன தெரியுமா?

தண்ணீர் பற்றாக்குறை
மின்சாரமின்மை
சாதி & மத அரசியல்
வறுமை
நெரிசல்
சுகாதாரமின்மை
பெயரிடப்படாத நோய்கள்
வறட்சி


இப்படியாக தொடர்ந்து கொண்டே போய் சுவாசிக்க நல்ல காற்று இல்லாமலும், மாரல் வேல்யூஸ் என்றால் என்ன என்று அறியாமலும், கடவுள், சாமியார், மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் தொடர்ந்து சின்னா பின்னப்பட்டு வறுமை சூழ அந்த வறுமையைப் போக்க, பணம் சேர்க்க பல வழிகளையும் கையாண்டு அப்படியான ஒரு ஓட்டத்தில் உறவுகள், பாசம், என்று எல்லாவற்றையும் தொலைத்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாய் தனிமைப் பட்டுப் போய்....

நினைத்துப் பார்க்கவே கொடூரமாய் இருக்கும் விளைவுகளை பற்றி நான் மேற்கொண்டு பேசபோவதில்லை...நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

இவற்றுக்கெல்லாம் எங்கே போய் போராடுவீர்கள்? யாரைக் குறை சொல்வீர்கள்? தெருவிலே குப்பையைக் கொட்டுவதும், அதை அள்ளிச் சென்று துப்புரவு செய்யமால் இருப்பதும் அரசாங்கத்தின் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டோமானால்.....விளைவுகள் எல்லாம் யாரின் பிரச்சினைகள்?

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதால் வரும் விளைவுகளைக் கொண்டு நொந்து கொள்கிறீர்களே அந்த பிரச்சினைகளின் மூலகர்த்தா நீங்கள்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? வாகனத்தினை பழுதுபார்க்காமல் காசு கொடுத்து தேர்ச்சி செய்து வாகனத்தினை ஆர்.டி.ஓ ஆபிசில் புதுப்பித்துக் கொள்கிறோமே....எவ்வளவு பெரிய தீமையினை சமுதாயத்தில் விதைக்கிறோம் என்று அறிந்துதானே செய்கிறோம்...?

சமூகம் என்பது மனிதர்களின் கூட்டம். மனிதர்கள் எல்லாம் நீங்களும் நானும்...நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....! நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மால் ஆன கருத்துக்களைப் பரப்புரை செய்வதும், ஏதோ ஒரு கட்சிக்கு விசுவாசமாய் இருக்கும் போக்கினை விட்டு சமுதாயத்திற்கு நல்லவை செய்யும் கட்சியையும், மனிதர்களையும் சூழலுக்கு ஏற்றார் போல ஆதரிக்கும் சுதந்திர மனப்பான்மையை விதைப்பதும்....

நம்மையும் நம்மைச் சுற்றியும் எப்போதும் சுகாதரத்தை பேணுவதின் அவசியத்தையும், பிள்ளைகள் பெற்றுக் கொள்வதிலும் அவர்களை வளர்ப்பதிலும் இருக்கும் மிகப்பெரிய கடமை உணர்ச்சியையும், பொருள் ஈட்டுவதில் காட்ட வேண்டிய நேர்மையினையும், தனக்கு வசதி என்று லஞ்சம் கொடுத்து வேலைகளை முடித்து விடுவதால் அதை வழமையாகக் கொள்ளும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உருவாகி விடுகிறார்கள் அதனால் அதனை முறித்துப் போடுங்கள் என்ற உண்மையினையும்,

சட்டத்தை மதிக்க வேண்டியது அரசு மட்டுமல்ல பொதுமக்களாகிய நாமும்தான் என்றும், மதங்கள் எல்லாம் மனிதனை வழிநடத்த மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள்தான், தனியே கடவுளர் என்று யாரும் கிடையாது உங்களின் மன வலிமையும், கருணையும்தான் கடவுளர்கள் என்ற கடவுள் தன்மைகள் பற்றிய உண்மையையும், சாமியார்கள் என்று பணம் கேட்பவர்கள் எல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களால் உங்கள் வாழ்க்கையை எள் அளவும் மாற்ற முடியாது என்றும்....

திரும்ப திரும்ப கூறுங்கள். இப்படியெல்லாம் கூற பணம் தேவையில்லையே...? பொருள் தேவையில்லையே....? கூட்டம் தேவையில்லையே....? இயக்கம் தேவையில்லையே....?இப்படியெல்லாம் நாம் நகர்கையில் பெரியவர்கள் சொல்லிச் சென்ற எல்லா நல்ல கருத்துக்களையும் நமக்குள் தேக்கி நகர்கையில் தனிப்பட்ட நமது சித்தாந்தம் இதுவென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதும் இல்லையே....

சித்தாந்தங்கள், சித்தங்களில் இருந்து பிறந்தது ஆனால் வாழ்க்கை எப்போதும் இருப்பது. வாழ்க்கையை மெருகூட்ட ஏன் ஒரு கட்டுக்குள் நாம் நிற்க வேண்டும். எங்கே எப்போது யார் நல்லது பகின்றாலும், எந்த புத்தகம் உண்மை சொன்னாலும் எந்த மதம் சத்தியம் பகின்றாலும் எடுத்துக் கொண்டு நகர்கையில் நாம் வலுவானவர்களாகத்தானே ஆவோம்...?

எந்த செயலையும் செய்யும் போது ஏன் செய்கிறோமென்ற உணர்வோடு உணர்ந்து செய்வதுதானே விழிப்புணர்வு....? ஆமாம் கழுகு இதைத்தான் இப்போது எழுத்து வடிவில் செய்து கொண்டிருக்கிறது. கழுகு என்பது ஏதோ பத்தோடு பதினொன்றாவது வலைப்பூ அல்ல, கழுகு குழுமமும் அப்படியே....

கழுகு என்பது ஒரு அமைப்பு அல்லது தனி நபர் வலைப்பூ என்பதெல்லாம் கிடையாது. கழுகு சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மேலும் அவற்றை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரையும் கழுகாகத்தான் பார்க்கிறது. சமுதாயத்திற்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதோ ஒன்றைப் பகிரவேண்டும் என்று எண்ணுபவர்களை எல்லாம் ஒருமித்து கருத்துக்களை பகிரும் ஒரு களமாகத்தான் அது இருக்கிறது.

கழுகு வலைத்தளத்தினை நீங்கள் வாசியுங்கள்.....! கழுகு பற்றி அறியுங்கள்....! கழுகோடு இணைந்திருங்கள்....! உங்களின் மனசாட்சிகள் சரி என்று சொன்னால்...கழுகு குழுமம் என்னும் விவாதக் களத்தில் இணையுங்கள்....!

சமுதாயத்திற்கான சேவை என்பது பொருள் கொடுப்பது மட்டுமல்ல.. தோழர்களே....! நமது அறிவைக் கொடுப்பதும், அனுபவத்தை பகிர்வதும் மிகப்பெரிய சேவைகளே....! கழுகிற்கான மீண்டும் ஒரு அறிமுகத்தினை இந்தக் கட்டுரை மூலம் உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன்...

ஒன்றிணைவோம்...செயல்படுவோம்....தெளிவான, செழுமையான சமுதாயத்தின் அங்கமாவோம்!!!!

கழுகு பற்றி அறிய - www.kazhuku.com

கழுகுடன் தொடர்பு கொள்ள - kazhuhu@gmail.com


தேவா. S

Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...