
நான் போதி தர்மன்....! உங்களோடு எதுவும் நான் பேசவில்லை...! என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாய் நான் பிறந்திருந்தேன். என்னை ஜனிப்பித்து வெளிக் கொணர்ந்த பூமியில் படர்ந்து கிடந்த போதி மரத்தின் நிழலிலும், பரவிக் கிடந்த காற்றிலுமிருந்து என்னுள் புகுந்து கொண்ட வழிமுறைதான் பெளத்தம். பெரும்பாலும் நான் பேசுவது இல்லை. இப்போது கூட என்னுள்ளேயே நான் ஸ்பூரித்துக் கிடக்கும் என் அந்திமத்தில் நானே நானாய் என் எண்ணங்களூடேதான் நகர்கிறேன்.
இல்லாமல் சுழலும், எல்லாமாயிருக்கும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பூமிப் பந்தின் மூலமும் சரி, அதைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் பேரண்டமும் சரி கருத்துக்கள் அற்றது. விளக்க வேண்டிய அவசியங்களுமற்றது. எல்லாம் இயல்பாயிருக்க மனிதன் மனத்தோடு பிறந்தான். மனம் மதத்தைப் படைத்தது. மதம் கடவுள்களைப் படைத்தது. கடவுளர் இல்லை என்று சொன்ன இடத்தில் புத்தன் பிறந்தான். புத்தனால் இயல்பு பிறந்தது. வாழ்க்கையின் இயங்கு தன்மை விளங்கியது.
இயல்பில் இரு. தேவையானதை அறி. அறிந்ததை தெளி. தெளிந்ததைப் புரி. நகர்ந்து கொண்டே இரு. நகர்கிறேன் என்று எண்ணாதே. வந்ததும், இருப்பதும், செல்வதும் இயக்கத்தின் நிகழ்வு. வார்த்தைகளுக்குள் உன் அனுபவங்களைக் கொண்டு வராதே. உன் அனுபவம் உன்னுடையது. அதை விவரித்து கூறுகையில் அது வேறு செய்தியைத்தான் எப்போதும் சொல்ளும்.
நான் புத்தம் என்ற மதத்தையோ கோட்பாட்டையோ வெறுமனே ஏற்றவன் அல்ல. புத்தரை விளங்கியவன். புத்தரின் அமைதியை என்னுள் கடந்து போக அனுமதித்தவன். வாழ்க்கையின் ஓட்டத்தில் தெளிவுகளைக் காலங்கள் தோறும் புத்தர்கள் உணர்த்திதான் சென்றிருக்கிறார்கள். யாரும் எதையும் நிறுவ இங்கு வரவில்லை. நிறுவியவர்கள் புத்தர்களும் அல்ல...
நான் அரசரின் புதல்வன். செல்வம் நிறைந்த சீமான் என்று என் தற்கால இருப்பு நிலை கொடுத்திருப்பது ஒரு போலி நிகழ்வு. நிஜ நிகழ்விற்காகத்தான் நான் மெளனித்து இருந்தேன். என் மெளனத்தை விளங்கிக் கொள்ள புத்தனை விளங்கினேன் என்று கூறியவர்களாலேயே இயலவில்லை.
எனக்குள் ஏதேதோ அற்புத நடனங்கள் நிகழ்ந்தன. என் ஜீவ இருப்பும், பிரபஞ்சத்தின் மூல இருப்பும் அசையாமல் எல்லாவற்றுள்ளும் விரிந்து கிடக்கையில் என்னை ஏதேனும் சொல்லச் சொல்லி என் கூட இருந்த கூட்டங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டே இருந்தன.
நான் பேசுவேன். உங்களால் கேட்க முடியாது. நான் பாடுவேன் என் பாடல் உங்களுக்குப் புரியாது. நான் உங்களிடம் ஏதேதோ கூறுவேன் ஆனால் அதனால் உங்களுக்கு எந்தப் பலனும் இராது என்பதால்தான், நான் எதுவுமே கூற விரும்பியது இல்லை.
என்னை காண வரும் அத்தனை பேரும் என்னை ஒரு பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாக காண வருவார்கள்..இல்லையேல்...ஒரு பெளத்த குருவாக காணவருவார்கள்....இல்லையேல் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்கும் குருவைக் காண வருவது போல வருவார்கள்...
நான் ஒரு வெற்றுப் பாத்திரம். என்னிடம் ஒன்றுமில்லை என்பதை உணர்தலே அவர்களின் தெளிவின் பிறப்பிடம். என் ஆழமான புரிதலை அவர்களுக்குள் நிறைக்க முடியாமல் பல நேரம் போராடி போராடி அந்த போரட்டத்தில் என் அறியாமையை விளங்கி மீண்டும் சலனமற்று போயிருந்திருக்கிறேன்.
காலி பாத்திரங்கள் நிரப்பப்படலாம், ஆனால் என்னைத் தேடி வருபவர்கள் எல்லோருமே நிரம்பிக் கிடக்கிறார்கள். வெள்ளைப் பக்கமாய் நான் வருகிறேன் என்று சிலர் வந்தார்கள். ஏதோ சொல்லி அவர்களுக்குள் நான் எழுதிவிடுவேன் என்றும்....மற்றவகளுக்கு ஏதேதோ கூறி நான் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணுவேன் என்றும் நம்புகிறார்கள்...
மாற்றங்களை மனிதர்கள் விரும்பும் வரை....எதையோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கும் வரை.... என்னிடம் இருந்து ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கப்போவது இல்லை. இந்தக் கணத்தில் எல்லாம் நிரம்பிக் கிடக்கிறது....இந்த தருணத்தில் சந்திரன் ஒளி வீசுகிறான்....இந்தக் கணத்தில் பூக்கள் அழகாய் மலர்ந்து இருக்கின்றன.....இந்தக் கணத்தில்....யாரோ எங்கோ ஒரு தாலட்டுப் பாடுகிறார்கள்.....இந்தக் கணத்தில் ஒரு மெல்லிய காற்று வீசுகிறது....
இந்தக் கணத்தின் சக்கரவர்த்தி நான்....என்னிடம் எதிர்காலத்திற்கு ஏதோ வேண்டும் என்று வரும் பைத்தியக்காரர்களை நான் என்ன சொல்லி மாற்ற முடியும்....?
நான் சலித்து எடுத்த தங்கம் அல்ல.... ! நான் தங்கத்தின் மூலமான இயல்புநிலையிருக்கும் ஒரு வஸ்து....என்னிடம் மிகுந்திருப்பது இயற்கையின் இயல்புகள்...! அவற்றை ரசிப்பது கடினமதான் ஆனால் அதுதான் மூல உண்மை என்று உணர்கையில் மட்டுமே புத்தன் உங்களுக்குள் பிறப்பான்....
நான் போதி தர்மன்.....! உங்களோடு நான் பேசவில்லை...என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....
(இன்னமும் பேசுவார்....)
தேவா. S
Comments
போதிதர்மர் 7ஆம் அறிவு படம் பார்த்து விட்டாரா இன்னமும் இல்லையா...??
தியேட்டரில் போய் பார்த்தாரா இல்லை net-ல் download செய்து பார்த்தாரா :))
நன்றிகள் அண்ணா...!!!!
அதை நான் அறிவேன் தம்பி :)
இந்த போதிதர்மர் அறிய விரும்பி கேள்வி கேட்டது .....தேவா தம்பியாக உள்ள போதிதர்மர் படம் பார்த்துவிட்டார என்பதை தான் ?? :))
படம் பார்த்துட்டேன் அண்ணா...நெட்லதான் பார்த்தேன்...!