
சுத்த சரீரங்களை
சுரமாகக் கொண்ட
வாசகன் விரும்பும்
மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...!
அவை கர்ண கொடூரமான
கரடு முரடுகளைச் சுமந்த
கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா
முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்!
நளினங்களை கூட்டிக் கழித்து
விழிகளுக்கு விருந்து கொடுக்கும்
ஓவியங்களை எப்போதும்
நாம் சமைப்பதில்லை....,
மாறாக...
புலன்களைக் கடந்த
புத்திகளுக்குள் ஜனிக்கும்
கோணல் மாணல் கோடுகளை
கோரமாய் வெகுண்டெழச் செய்து
விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே
முயன்று கொண்டிருக்கிறோம்..!
அழகியலைப் பட்டியலிடும்
கூட்டத்தில் யாம் எப்போதும்
வரிசையில் நிற்பதும் கிடையாது
உயரங்களில் இருப்பதாலேயே
எல்லோரையும் அண்ணாந்து
பார்ப்பதும் கிடையாது...!
வாழ்க்கையை எழுத்தாக்கையில்
வசீகரம் எதற்கு...
வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால்
வாழ்க்கைதான் எதற்கு...?
ஆமாம்...
இது கரடு முரடான பாதைதான்
காட்டருவி கொட்டும்
கடக்க முடியா வழிமுறைதான்
ஆனால் மறுத்து நகர்ந்தாலும்
இயற்கை என்பது இயல்புதானே?
இல்லை என்றாலும்
இருப்பு என்பது நிஜம்தானே...?
அதனால்....
அக்னியில் கோடுகள் கிழித்து
முற்கள் தைத்த வார்த்தைகளால்
எமது முதுகெலும்பின் நீட்சிகளை
உடைத்து எப்போதும்
இராட்சச வடிவங்களில்
வார்த்தைகளை கோர்க்கிறோம்...
காட்டுப்பூக்கள் எல்லாம்
என்ன கடவுளுக்காகவா பிறக்கின்றன...?
அவை பூக்கின்றன.... மடிகின்றன...
அவ்வளவே...!
தேவா. S
Comments
அக்னிகுஞ்சு தம்பி நீங்க :)
கிருஷ்ணா @ உங்க கூட சேர்ந்துதான் அண்ணே!
:))