Skip to main content

இசையோடு இசையாக..தொகுப்பு 2 !




பிறப்பு மனித வாழ்வின் முதல் முடிச்சு. தாய் அந்த முதல் முடிச்சை சுமக்கும் ஜீவன். படைக்கும் சக்தியைக் கொண்டிருப்பவன் யாரென்ற விவாதத்தை தள்ளி வைத்து விட்டு படைப்புக்களை சுமக்கும் வரம் பெற்ற ஜீவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மேன்மையானது, உன்னதமானது, புனிதமானது, நிறைவானது, கருணை நிறைந்தது...இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்....

அம்மா...

எத்தனை இரும்பு மனம் படைத்தவர்களும் ஒரு முறை உதடு பிரித்து உச்சரித்துப் பார்க்கட்டும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையை அந்த வார்த்தைக்குப் பின் இருக்கும் கருணை என்னவென்று தெரியும், ப்ரியம் என்னவென்று புரியும், நேசம் என்னவென்று  விளங்கும். பிரதிபலன் பார்க்காமல் ஒவ்வொரு உயிரையும் சுமக்கத் தொடங்கும் தாய்மை எப்போதும் போற்றுதற்குரியது.

என் அம்மா எனக்காய் என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதை வார்த்தைகளாய் நான் அறிந்திருந்தாலும், என் பெரியம்மா மகளான என் அக்காவின் பேறு காலத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். 7 மாதத்தில் வளைகாப்பு முடிந்து வந்ததிலிருந்து அவளின் அன்றாடங்களை நான் கவனித்து இருந்திருக்கிறேன். நடக்க முடியாது, ஒருபக்கம் ஒருக்களித்துதான் படுக்க முடியும், சட்டென்று எழ முடியாது வலது கையை ஊன்றி மெல்ல தடுமாறி எழ வேண்டும், வெளியே சொல்ல முடியாத வலிகளோடு, இயற்கை உபாதைகளை கழிப்பதும் மிக மிகக் கடினம் என்று அவள் கூறுவதை வலியாய் எனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்....

குறு குறுப்பாய் வயிற்றுக்குள் ஒரு குட்டி உயிர் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் அசைவுகளைப் பார்த்து மிரண்டு போய் பெண்ணின் வலுவினையும், தைரியத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். ஒரு நடு இரவில் உண்ட உணவு செரிக்காமல் அவள் நெஞ்சை தடவிக் கொண்டிருக்கையில்,  மெல்ல எழுந்து போய் ஆச்சரியமாய் பார்த்திருக்கிறேன்..! அவள் யாரையும் எழுப்ப விரும்பவில்லை இது அவளின் வலி...அவளின் தேவை, அவளின் சுமை, அவளே சுமக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆரம்ப நிலைகளில் தாயே எப்போதும் உடனிருக்கிறாள்.

அவ்வப்போது அவளுக்கு விக்கல் கூட வரும் ஒவ்வொரு விக்கலிலும் வயிறு இழுத்துக் கொண்டு மேலெழும்பி கீழே வரும், உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று அவள் பயந்திருக்கிறாள்...

வலி, வலி, வலி....இந்த வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுள் ஒரு உயிரினைச் சுமந்து மெளனமாய் எல்லாம் தாங்கி ஒவ்வொரு பெண்ணும் இந்த இடத்தை கடக்கிறாள். பிரசவ வலி என்னவென்று ஒரு பெண்ணாய் உணராத வரைக்கும் ஒரு ஆணுக்கு அதைப் பற்றிய புரிதல் கண்டிப்பாய் வர முடியாது. 

இடுப்பு வலி எடுத்து, தண்ணீர் குடம் உடைந்து, இடுப்பெலும்புகள் மெல்ல விரிந்து கொடுக்க ஒரு பிரசவம் நிகழும் கணம் இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம்.....எத்தனை வலியோடு, எத்தனை சிரத்தையோடு ஒரு பிள்ளையை தவமிருந்து பெற்றெடுக்கிறாள் ஒரு தாய், அவளின் நிறைவுதான் என்ன? என்று ஒரு சிறு கேள்வியை ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

பிள்ளை பிறந்த நொடியில் மயக்கமாயிருந்தாலும், மயக்கம் தெளிந்து தன் மகனையோ அல்லது மகளையோ காணும் அந்த நொடியில் அவளின் வலிகள் எல்லாம் மறைந்து உலகத்தில் எந்த ஜீவராசிகளும் பெறமுடியாத ஒரு திருப்தியை முழுமையை ஒரு பெண் பெறுகிறாள். தாய்மை என்னும் உன்னத நிலையை அடைகிறாள்.

ஆன்மீக வரலாற்றில் கூட பெண்கள் தனியே தியானம் என்றோ, முக்தி என்றோ, முழுமை என்றோ, ஞானி என்றோ அதிகம் தனித்து விவரிக்கப்படுவது இல்லை. காரணம்....ஒரு ஆணுக்குத்தான் முழுமையடைய ஓராயிரம் வழிமுறைகளும், தேடல்களும் தேவைப்படுகின்றன ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடைந்து தன்பிள்ளையை பிரசவிக்கும் கணத்தில் பிரபஞ்சப் புரிதலை தன்னையறியாமலேயே புரிந்து அவள் தன்னிச்சையான முக்தி நிலையை,ஞான நிலையை எய்தி விடுகிறாள். 

தாய்மை என்பது உணர்வு நிலை. இளகு தன்மை. நேசிப்பின் உச்சம். வலிகளை தாங்கும் உத்வேகம். பிரபஞ்ச சுற்றினை முழுமையடைய வைக்க இந்த குணங்கள் உதவுகின்றன. ஒரு குழந்தையை சுமந்து வலிகளை தாங்கி அதைக் கடந்து வருகையில் ஒரு பெண் அதை எளிதில் எட்டி விடுகிறாள். இது இல்லாமலும் தாய்மை என்னும் உணர்வு நிலையை எல்லோராலும் அடைய முடியும்...ஆனால் அதற்கு உயரிய புரிதலும், அனுபவமும், தெளிவும் வேண்டும்.

மரணத்தின் உச்சம் தொட்டு ஒரு பிறப்பைக் கொடுக்கும் போது அது மிகப்பெரிய அனுபவமாகி அது தாயாகிறது. காலப்போக்கில் புறச்சூழல்கள் இவற்றை மறக்கடித்தாலும் இதன் மையத்தை எப்போதும் ஏந்திக் கொண்டுதான் ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள்.

ராஜா சாரின் இந்தப்பாடல் கூட தாய்மை நிரம்பியதுதான். புரிதலும் தெளிவும் கொண்ட அதிர்வுகளைப் நாதப் பெருவெளியில் இருந்து பிரித்து எடுத்து ஸ்வரங்களாக்கி, ஏற்ற இறங்களை கூட்டிக்குறைத்து அற்புதமான இசையைப் பிறப்பித்திருக்கும் ராஜாசார் தாய்மை நிரம்பியவர்தான். தாய்மை என்பது உருவமல்ல அது அனுபவங்களும் புரிதலும் கொண்ட உணர்வு நிலை என்று இந்தப்பாடல் தெளிவாகவே சொல்லும்..

வார்த்தைகளைக் கடந்து, ஜேசுதாஸின் தெய்வீகக் குரலோடு இந்த இசை கூட்டிச் செல்லும் தூரத்திற்கு கண்களை மூடிக் கொண்டு பயணித்துப் பாருங்கள்...நீங்களும் தாய்மை என்னும் உணர்வு நிலையை உணரக் கூடும்..!



தேவா. S


Comments

மனதை நெகிழ வைத்த அற்புதாமன பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு........அனுபவ வரிகள் .தொடருங்கள்.......
ta.ma.5
ஹேமா said…
ஒரு ஆணாலும் நிச்சயமாய் உணரமுடிகிறது தாய்மையின் உணர்வை வலியை.அற்புதம் தேவா !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...