Skip to main content

எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...!



ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த போது எனக்கு ஏற்பட்ட கூச்சத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியவில்லை.

எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு விட்டது.

இங்கே தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது.

அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி இல்லாத களமாய் இது ஆகிப் போனது வரலாற்றில் பெரும் பிழையை ஏற்படுத்தியே தீரும்.

எதை எழுதலாம், எதை எழுதினால் வியாபாரம் ஆகும் என்று யோசிப்பது தவறில்லை அதற்காக பத்திரிக்கை துறையினரும், தனியார் தொலைக்காட்சித் துறையினரும் செய்யும் அதே யுத்தியை தனி மனிதர்கள் எழுதும் வலைப்பூக்களில் அரங்கேற்றிக் கொள்வது அவமானத்தின் உச்சம்.

பெரும் புரட்சியாளராய் என்னைக் காட்டிக் கொண்டு, என்னை பின் தொடருங்கள் மக்களே என்று போர்க்கொடியை எழுத்துக்களால் நான் ஏற்றும் போதே என் அருகதையையும் உற்று நோக்க வேண்டும் என்ற ஒரு நியாயத்தை ஏன் என்னால் கடை பிடிக்க முடியவில்லை..? இப்படியாய் நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம் இதில் இருக்கும் சத்தியத்தை உணருங்கள் வாசிப்பாளர்களே.. என்று தொடை தட்டி நேர்மையான பகிர்தலைச் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எழுத்துக்கள் பயணிப்பது.....ஆரோக்கியமான விடயமா?

மனிதனின் புறத்தை மாற்ற முயல்வது ஒரு தோற்றுப் போன வழிமுறை.... அது எப்போதும் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்பவனைத் தலைவனாக்கி விட்டு மிச்சமுள்ளோரை தெருமுனையில் பிச்சைக்காரனாய், புத்தி கெட்டவனாய் எப்போதும் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் ஒரு கையாலாகாதவனாய் நிறுத்தி வைத்து விடுகிறது.

மனிதர்களின் அகமாற்றம் இதற்கு நேர்மாறானது. 

குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.

உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை. 

இதன் விளைவுதான் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்.

முழு விழிப்போடு ஒவ்வொரு குடிமகனும் இருந்த பொழுதில் இந்த தேசம் மிளிர்ந்தது. மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேரரசர்களும் அதிகாரத்தால் தங்கள் நிர்வாகத்தை நடத்தினாலும் தமது தேசத்தின் குடிமக்களை முழு விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். அந்த விழிப்பு நிலையால்தான் பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய வணிகப் பெருக்கம் இருந்தது, போர்களில் தமிழன் வெற்றி வாகைகள் சூடினான், பிரமாண்ட கற்கோயில்களை கற்பனைக்கும் எட்டமுடியாத வண்ணம் ஆக்கிக் கொடுத்தான்...

தொழில் நுட்பம் வளர்ச்சிகள் இல்லாமல், இயந்திரங்களின் பயன்பாடுகள் அறவே இல்லாமல், மனித வளத்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக இருக்க முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாய் நான் வழிகாட்ட என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல் அங்கே இருந்திருக்கவில்லை. மனிதவளம் மேம்படாத ஒரு சமூகம் தொழில் நுட்பத்தையும் அறிவியலையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்...? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்...?

இதற்கான பதிலாய்த்தான் சமகாலத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனத்தில் நமது பயன்பாடுகள் இருக்கின்றன. வலைப்பூக்கள் தனிமனிதர்களால் எழுதப்படும் ஒரு களம். இங்கே வியாபரம் செய்வது தவறில்லை. வணிகமும், பொருளாதாரமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எப்படி வணிகம் செய்கிறோம்...? எதை வணிகம் செய்கிறோம் என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாகிறது..!

மனதில் தோன்றுபவைகளை எல்லாம் எழுதிப் பார்க்கும் ஒரு சாரார், சமூக அக்கறைகளை எழுத்தில் கொண்டு வந்து ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்குச் சொல்லிச் சொல்ல விரும்பும் சிலர், இதை இதை எழுதினால் வசீகரப்படும், இதற்கு கூட்டம் நிறைய வரும் என்று எழுத்தில் விசத்தை கலக்கும் ஒரு கூட்டம், 

எது எப்படி இருந்தாலும் நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவினர், அற்புதமாய் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தங்களின் உணர்விலிருந்து பிரதிபலித்து உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு பக்கம், மனிதன் விரும்புவது கேளிக்கைகளையும், அடுத்தவர் வாழ்க்கை பற்றிய அந்தரங்க செய்திகளையும், எப்போதும் மறைக்கப்பட்ட காமத்தையும்தான் என்று அதை அரங்கேற்றிக் கொள்ளும் வேறு சிலர்...

என்று தனி மனிதனின் ஆக்கங்கள் ஒரு மிகப்பெரிய காட்டாறாய் இயங்கிக் கொண்டிருக்கையில் வாசிக்கும் வாசிப்பாளன் தனது வயது, அனுபவம், மற்றும் புரிதலுக்கு ஏற்ப தனக்கு தேவைபடும் விடயத்தை இங்கே தேர்ந்தெடுக்கிறான்..

என் அன்பின் உறவுகளே...

இணையத்தை இன்று மிகுதியாக பயன்படுத்துபவர்கள் இளையர்கள், 18ல் ஆரம்பித்து 30வயதுக்குள் இணையத்தை பயன்படுத்துபவர்களின் விகிதாச்சாரம் அதிகம். சரியான வழிகாட்டுதல் தேவையான இந்த பருவத்தில் தனக்கு அறிமுகமாகும் இணையத்தில், தற்போது தமிழில் மிகுதியானவர்கள் பார்க்கும் ஒரு ஊடகமாய் இந்த வலைப்பூக்கள் இருக்கின்றன...

வழிகாட்டுதல் தேவையான இந்த இளையர்களுக்கு எதை நாம் பகிரப் போகிறோம்...? நமது தலைக்கனத்தையா...? நாம் மிகைப்பட்டபேர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்முனைப்பையா? பரபரப்பு அரசியலையா? நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தையா?  காமக்கதைகளையா? இல்லை சமூகத்தால் எப்போதும் விலக்கப்பட்ட தவறான விடயங்களை நான் செய்தேன் என்ற திமிரையா? 

நாம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். நான் செய்கிறேன் நீயாரடா கேள்வி கேட்க என்று அத்து மீறுபவர்களின் குரல்வளைகளை முடக்கிப் போடவேண்டிய சமூகக் கடமை இன்றைய இணைய பயன்பாட்டாளர்களிடம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. இது பொதுவெளி..இங்கே உச்சபட்ச நாகரீகம் தேவைப்படுகிறது.

அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான எமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை உமக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!

எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!

மனிதர்களின் அகவிழிப்பும், புரிதலும் கூர்மையாக இருப்பின்....மோடி மஸ்தான்களின் மாயஜாலங்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும் என்பது  நிதர்சனம்....!


" உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்…..
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்...
தலை வணங்காமல் நீ வாழலாம்..! "


தேவா. S

Comments

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
Rathna said…
மெஜாரிட்டி பின்தொடர்பவர்களை கொண்டவர்கள் அவர்களை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்பது அவர்களது கவலை, சிலருக்கு கிளுகிளுப்பாக எழுதி சம்பாதித்த வாசகர்களை மீண்டும் மீண்டும் கிளுகிளுக்கச் செய்ய வேண்டும் என்கின்ற கவலை, இவ்வாறான அவர்களது 'சமூக அக்கறையை'யை அவர்கள் மறந்துவிட்டு முகம் தெரியாத இந்த சமூகத்தைப்பற்றி எதற்க்காக கவலைப்படவேண்டும் என்கின்ற பரந்த நோக்குதான் காரணம்.
அருமை......
குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.

உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...