Skip to main content

பகிர முடியாத வார்த்தைகள்....!



இயல்புகளை விவரிக்க முயலும் வார்த்தைகள் தோல்விகளையே எப்போதும் தழுவுகின்றன. கற்பனைக்கு நிறைய பொய் தேவைப்படுகிறது. நிஜமோ நேருக்கு நேராய் நம்மை எப்போதும் எதிர்கொள்கிறது. சிறகடிக்கும் மனம் இளைப்பாறுவது என்னவோ எதார்த்தத்தில் தான்...

என் கவிதை சாலைகளிலின் விளிம்புகளில்தான் அவள் எப்போதும் எனக்காக காத்திருப்பாள் நிஜமென்னும் உணர்வுகளை ஏந்திப் பிடித்தபடி. வர்ணிக்க கூடியது எல்லாம் விவரிக்க முடிந்தது. விவரிக்க முடியாதது வார்த்தைகளுக்குள் எப்போதும் வந்து விழுவதில்லை. காதலை விவரிக்கலாம்...கடவுளை...? பூமியை விவரிக்கலாம் அதன் மூலத்தை மொழி பெயர்க்கலாம்.. ஆனால் பிரபஞ்சத்தை அதன் ஆழத்தை எப்படி மொழியாக்கம் செய்வது..?

விரல் விட்டு எண்ணக் கூடியது எல்லாம் கடந்த பிரமாண்டத்தை உணர்தலே மிகப்பெரிய விடயம். அதை உணர்ந்தவன் அதில் லயித்துக் கிடப்பான் ஒரு நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல..., அவனில் இருந்து தெறித்து விழுவது  யாவுமே நிரம்பி பின் வழிவதுதான். 

எப்போது உள் நிறைந்து கிடப்பவது, எப்போதும் வெளியில் வர முடியாதது.  காந்தத்தின் அதிர்வுகளாய் உடலுக்குள் மையம் கொண்டிருப்பதை எப்போதும் காட்சிப்படுத்துவதிலும் கவிதைப் படுத்துவதிலும்..நாம் வெற்றி கொள்ள முடியாது.

வண்ணக் கலவைகளை எடுத்து விசிறும் தூரிகைகளுக்கு ஒவியத்தின் அழகைப் பற்றி என்ன கவலை? தூரிகையின் விசிறிலே அதன் விஸ்தாரமே ஓவியம். வர்ணங்களை கரைத்துக் கொடுத்து அதில் ஊறிக் கிடந்து ஒரு ஓவியத்தை படைத்த திருப்தியில் தூரிகைகள் எப்போதும் சந்தோசித்துக் கிடக்கின்றன....அவை ஓவியமாக எப்போதும் முயல்வதே கிடையாது...

இப்படித்தான் காதலுக்கு ஒரு கருப்பொருளாய் ஒரு காதலி அவளே கைத்தளம் பற்றிய ஒரு வாழ்க்கைத் துணை என்று நகரும் போது, தனித்து பகுத்து பிரித்து எப்படி எழுதுவது...

இயல்பை வெளிப்படுத்துதல் ஒரு போதும் கவிதையாவதில்லை...! நிறைவுகள் எப்போதும் காவியங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும் இல்லை. தீரத் தீர எரியும் பெருங்கனலில் எரிதல் மட்டும் நிகழும்....! அப்படியான ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய எரிதலில் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு நகரும் ஒரு பெருஞ்சக்தியாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் அமைகிறாள்.

எனக்கான நகர்வில் ஒரு சப்தமான மெளனத்தை நான் என் வாழ்க்கைத் துணையாக கொள்ள வெண்டியிருந்தது. நாம் பேசிப் பேசி சாதிக்க நினைத்ததை எப்படி ஒரு பெண்ணால் சப்தங்களற்று இறுக்கமான மெளனங்களால் மட்டுமெ வெற்றிக் கொள்ள முடிகிறது என்ற குழப்பமே எனக்கு இன்னும் தீரவில்லை....

ஆனால்...

காலம் என்னை வார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் என்னை புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னோடு அழுகிறது. என்னோடு சிரிக்கிறது. என்னோடு பட்டினிக் கிடக்கிறது.  என் சந்தோசங்களை எப்போதும் தூர நின்று ரசிக்கிறது...

காலம் எப்போதும் நம் கூட இருப்பது...! அது நம் ஜனித்து விழுந்த நொடியில் இயங்கத் தொடங்கிய ஒரு மறைமுக வஸ்து ஆனால் ஒவ்வொருவரின் திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு அது ஆணாகவும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாகவும் தன்னை பரிணமித்துக் கொள்கிறது....!

மானுடர்கள் இதை உற்றுக் கவனிப்பதில்லை. நான் நின்று நிதானித்து ஒரு குருடன் வாகனங்கள் நிறைந்த சாலையைக் கடக்கும் பொறுமையோடு இதை உணர்ந்திருக்கிறேன். வலியை வாங்கிக் கொள்ளவும், வலிகளை போக்கி விடவும் இந்தத் துணை காலம் காலமாக நம் சமூகம் மட்டுமில்லை...உலகத்தில் எல்லா சமூகத்திலும் உதவியிருக்கிறது.

பந்தங்களை, உறவுகளை, வெறுமனே கருவிகளாக பாவிக்கும் மனிதர்கள் இதனைப் பெரும்பாலும் உணர்வதில்லை..ஆனால் வாழ்க்கையை உணர்ந்து நகரும் போது திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் ஆளுமை என்ன என்று ஒரு ஆணாலும், ஒரு ஆணின் தேவை என்ன என்று ஒரு பெண்ணாலும் தெளிவாக உணர முடியும்...

காலங்கள் நகர, நகர என் புத்திக்குள் தேங்கிக் கிடந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திடம் எல்லாம் மெல்ல, மெல்லக் கரைய,  திருமணம் சடங்குகள் எல்லாம் கடந்த ஒரு துணையாக என் மனைவியை நான் பார்க்கத் தொடங்கினேன் அல்லது உணரத் தொடங்கினேன்...

மாயைகள் எல்லாம் உடைந்து போக.... ஒரு கோப்பை தேநீரை எதிர் எதிரே அமர்ந்து பருகும் ஒரு சுகத்தில் பக்கதில் இருக்கும் இருப்பினை உணர்தலே மிகப்பெரிய பாக்கியம், ஆறுதலான ஒரு தோள் சாய்தலே மிகப்பெரிய நிம்மதி.

தேவைகளற்ற ஒரு அன்பில் காதல் மிளிர்கிறது. அப்படியான தேவைகள் எல்லாம் தீர மிகப்பெரிய புரிதலும்...., பல தரப்பட்ட சூழல்களை நாம் கடக்கவும் வேண்டியிருக்கிறது.

பகிரமுடியாத அன்பாய் பரவும் காதலில் இருப்பு மட்டுமே இருக்கிறது...அங்கே வார்த்தைகளோ வசீகரமோ எப்போதும் இருப்பதில்லை...! காதலோடு இருக்கும் போது அதை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை...!

பொய்யைப் பகிர்ந்து மெய்யை எப்போதும் என்னோடே நான் சுமக்கிறேன்....! ஆமாம் வாழ்க்கையின் அனுபவங்கள் எப்போதும் சுகமனவை ஆனால் பகிர முடியாதவைதானே...!!!!

ப்ரியங்களுடன்...

தேவா. சு



Comments

ஹேமா said…
தேவைகளற்ற ஒரு அன்பில் காதல் மிளிர்கிறது....இது போதும் தேவா !
Prem S said…
//காலங்கள் நகர, நகர என் புத்திக்குள் தேங்கிக் கிடந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திடம் எல்லாம் மெல்ல, மெல்லக் கரைய, திருமணம் சடங்குகள் எல்லாம் கடந்த ஒரு துணையாக என் மனைவியை நான் பார்க்கத் தொடங்கினேன் அல்லது உணரத் தொடங்கினேன்...//உண்மையான வரிகள் அன்பரே

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...