
சென்னை இராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளியிடப்பட்டிருந்த அந்த குறுந்தகட்டை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் காண ஆரம்பித்தேன். இறை தேடலும் இரை தேடலும் எப்போதுமே இரைச்சலாய்த்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏதோ ஒரு கணத்தில்தான் உணர்ந்து கொள்கிறோம். அப்படியான ஒரு உணர்வினை எனக்கு அந்த கைலாஷ் புனித யாத்திரை குறுந்தகடு மெலிதாய் உணர்த்தத் தொடங்கியது.
பாதி ஓடிக் கொண்டிருந்த அந்த காணொளியை நிறுத்தி விட்டு... எண்ணங்களை பின்னோக்கி பறக்க விட்டேன்...!
ஓம் நமசிவாய என்னும் மந்திரமும், கந்தர் சஷ்டி கவசமும், ஓம் சரவணபவ மந்திரமும் சிறு பிராயத்திலிருந்தே என் புறச்சூழலால் எனக்குள் ஊற்றப்பட்டது என்றாலும், ஜீன்கள் முழுதும் பல தலைமுறைகளாக சைவ சமயத்தின் உணர்வுகள் எனக்குள் கடத்தப்பட்டு இன்னது என்று தெரியாமல் சிவன் என்றாலே எனக்குள் ஒரு ஈர்ப்பினை தன்னிச்சையாக ஏற்படுத்தி இருக்கிறது.
நிறைய வாசித்தால் ஏற்படும் தாக்கங்களின் வலிகள் நிறைய படைப்புக்களைப் பெற்றுப் போடும். புறச்சூழலின் தாக்கங்களும் இவ்வாறே..., எனினும் எந்த வித புறத் தாக்கங்கள் இல்லாமலும் வாசிப்பனுபவமும் இல்லாமல் என்னை ஈர்த்த ஒரு விடயம் சிவன்.
சிறு வயதிலிருந்தே எல்லா கடவுளரின் படங்களையும் நான் பார்க்கையில் எல்லா கடவுளரும் ஆபரணங்களும் கிரீடமும் தரித்துக் கொண்டு வசதியாய் காட்சி அளித்ததும், அதில் விதி விலக்காய் சிவனின் படம் மட்டும் இடுப்பில் ஒரு புலித்தோலும், கழுத்தில் ஒரு படமெடுக்கும் ஒரு பாம்பும், தலையில் கங்கையும், என்று வித்தியாசமாய் இருந்ததும் எனக்கு சிவன் என்றால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.
மேலும் அறிமுகம் செய்யப்பட்ட போதே ஆக்கி, அழிக்கும் கடவுள் என்று அறியப்பட்ட போது சிவன் எனது சூப்பர் ஹீரோ ஆகிப்போனார். தலைமைக் கடவுள் என்று ஒருகாலத்தில் எனது புரிதல் எனக்கு உணர்த்த அந்த காரணமும் என்னை சிவனை நோக்கி பயணிக்கச் செய்தது. படத்தில் காணும் சடாமுடி கொண்ட ஒருவராய் சிவனாய் அறிந்து பின்னொருநாள் திடீரென்று ஒரு லிங்கத்தை காட்டி இதுவும் சிவன் தான் என்று என் அம்மா சொன்ன போது....
என் பால்ய வயது மூளையிலிருந்து எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை அல்லது எனக்கு சொல்லக் கூடாது என்று அவர்கள் எண்ணி இருக்கலாம். இரவு முழுதும் உறங்காமல் கடவுள் எப்படி ஒரு அண்டாவை கவிழ்த்தது போன்ற அமைப்புடைய லிங்க உருவில் இருப்பார்? அல்லது ஏன் அப்படி இருக்க வேண்டும். லிங்க உருவில் இருக்கும் போது எப்படி பேசுவார்? கை எங்கே ? கால் எங்கே? என்றெல்லாம் யோசித்து யோசித்து மூளை நரம்புகள் பிய்ந்து போகாதது ஒன்றுதான் குறை.
சிவன் கோவிலில் இப்போது கூட்டம் இருக்கிறது. இந்த கூட்டம் நாட்டம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பத்து அல்லது பதினைந்து வருடத்திற்குள்ளாக வருவதுதான். அதுவும் பிரதோஷ வழிபாட்டினை சைவ அமைப்புக்களும், நகரத்தார் சங்கங்களும் சிறு சிறு புத்தகங்களினூடே பரப்பியதன் மூலம் பிரதோச வழிபாட்டிற்காக கூடும் கூட்டம் அதிகமானது.
இது ஒரு மார்க்கெட்டிங் யுத்தி என்று கூட சொல்லலாம். ஆமாம் காலமெல்லாம் அழிக்கும் கடவுளாய் அறியப்பட்ட சிவன் பொருளைக் கொடுப்பவர் அல்ல பொருளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஞானத்தையும், முக்தியையும் கொடுப்பவர் என்றே அறியப்பட்டார். இது ஒரு நாடகத்தன்மையான புரிதல் என்றாலும் இதில் மனோதத்துவ விஞ்ஞானம் இருப்பதும் உண்மை. அது பற்றி பிறகு பார்ப்போம்....
பிரதோச தினத்தன்று காலையிலிருந்து நோன்பு இருந்து சிவனை மனதில் தியானித்து மாலையில் குளித்து சிவாலயம் சென்று பிரதோஷ காலம் என்று அறியப்படும் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறுக்குள் நந்திதேவருக்கு நடக்கும் பூஜையை கண்டு நந்தி தேவரை வணங்கி அவரின் இரு கொம்புகளினூடே சிவலிங்க தரிசனம் கண்டு பின் நந்தி பெருமானுக்கு வெல்லமும் அரிசியும் படைத்து சிவ மந்திரங்கள் ஓதி பின் தனது நோன்பினை நிறைவேற்றிக் கொண்டால் கேட்டதெல்லாம் சிவன் கொடுப்பார், அப்படி கொடுக்க நந்தி பெருமான் உதவி செய்வார்.
என்றெல்லாம் பிரதோஷ மகிமை பற்றி எடுத்துக்கூறி அது சாமனிய மக்களையும் சென்று சேர.... எப்போதும் கொடுக்கும் தெய்வத்திற்கு சேரும் கூட்டம் சிவாலயங்களையும் சூழ ஆரம்பித்தது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பெல்லாம் யாரும் சிவனை அதிகம் வணங்குவதில் ஆர்வம் காட்டியதில்லை. காரணம் சிவனை வணங்கினால் இருக்கும் செல்வம் எல்லாம் போய் விடும் என்று ஒரு பொதுவான ஆனால் போலியான கருத்து நிலவிய காலங்களில் சிவாலயங்களில் கூட்டமே இருக்காது. ஏன் இன்னும் சொல்லப் போனால் இப்போது கூட மிகுதியான கோவில்களில் பிரதோசகாலம் தவிர்த்து சிவனை வழிபட இருக்கும் கூட்டம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
எல்லா கடவுள்களும் பணக்காரர்களாய் இருக்கும் போது என் சிவன் மட்டும் ஏன் சுடுகாட்டைச்சுற்றி வரவேண்டும்? சாம்பலை அள்ளிப் பூசிக் கொண்டு பாம்புகளை மாலையாகப் போட்டுக் கொண்டு ஏன் பரதேசி கோலம் பூண வேண்டும்? எரியும் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்து ஏன் தவம் புரிய வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்திருக்கிறேன்.
யாருமே இல்லாத காளையார் கோவில் காளீஸ்வரர் சன்னதியில் தனியாய் அமர்ந்து சிவலிங்கத்தையே உற்றுப்பார்த்து சிவன் என்றால் எடுக்கும் தெய்வம் என்று எப்போது பரப்புரை செய்யப்பட்டது ? அது யாரால் செய்யப்படது...? ஏன் செய்யப்பட்டது...? சைவம் என்பது தமிழனின் ஆதி வழிபாட்டு முறையாயிற்றே.... சங்காலம் தொட்டு தமிழர்களின் சூப்பர் கடவுள் சிவன் மட்டும்தானே...? தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களும் உருகி உருகி வழிபட்ட ஒரு தெய்வம் அல்லவா?
தேவாரம், திருவாசகம் என்று அடியார்கள் போற்றிப் புகழ்ந்த மெய்ப்பொருள் அல்லவா? யார் இந்த சிவன்? இவரே ஆதி கடவுள் என்று எப்படி சொல்கிறார்கள்? மண்ணைக் காட்டி இது சிவன் என்கிறார்கள், மலையைக் காட்டி சிவன் என்கிறார்கள், நெருப்பையும் நீரையும், காற்றையும், நீரையும், ஆகாசத்தையும் காட்டி சிவன் என்கிறார்கள்....
உருவமாயிருப்பவர் சிவனா? இல்லை அருவமாய் இருக்கும் லிங்க ரூபம் சிவனா? மண்ணா? மலையா? ஐம்பூதங்களா? யார் சிவன்.. அல்லது எது சிவன்...?
கேள்விகள் எல்லாம் என் மண்டையைப் பிளக்கத் தொடங்கிய காலத்தில் பதில் ஏதும் கிடைக்காமல் பரதேசியைப் போல சுற்றி இருக்கிறேன்...நான்....!
(தொடர்ந்து பேசுவோம்....)
தேவா. S
Comments
இன்றைக்கு உங்கள் பதிவில் அது பற்றியும் வந்து விட்டது. ஏனிந்த நேர்கோட்டுச் சிந்தனை என்று புரியவில்லை!
தொடருங்கள்... நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.