Skip to main content

இசையோடு இசையாக...தொகுப்பு 7!



வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய போர்க்களமாய் விரிந்து கிடக்கிறது. காதலென்னும்  வலுவான உணர்வும் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஒரு எரிமலையாய் உள்ளுக்குள் உடன் குமுறிக் கொண்டுமிருக்கிறது. தினவெடுத்த தோள்களும், உன்மத்தம் கொண்ட புத்தியும் எப்போதும் எதிரிகளாய் சூழ்ந்து நிற்கும் சூழல்களை ஒரு கணமேனும் தாமதிக்காமல் வெட்டி விடும் வேகத்தில் வெறியேறிப் போய் கிடக்கிறது. 

ஏதேனும் ஒரு எதிர் கேள்வியை வாழ்க்கை கேட்டு முடிக்கும் முன்னால் அந்தக் கேள்வியைப் பெயர்த்தெடுத்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டு மீண்டும் மனப்புரவியிலேறி நான் விரைந்து கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப் போவேன் என்று மிகையானவர்கள் தீர்மானித்து முடித்து என் உடலை இறந்து போன சடமாய் எண்ணி புதைப்பதா? எரிப்பதா என்று அவர்கள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே நான் விசுவரூபமெடுத்து எழுகிறேன். ஒரு இடத்தில் விழுந்து வேறொரு இடத்தில் எழுந்து நிற்கும் கோழையல்ல நான் என்பதை அக்கணமே அறுதியிட்டு நான் எங்கே விழுந்தேனோ அங்கேயே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறேன்....

வா..... வாழ்க்கையே ...வா...! வரிசையாக சூழல்களை என்னிடம் அனுப்பு. என்னை எள்ளி நகையாடிய மனிதர்களையும், நான் வேரறுந்து வீழ்ந்து விட்டேன் என்று எக்களித்த முரடர்களையும், நான் தாழ விழுந்து கிடந்த போது என் தேகத்தில் தத்தமது பாதங்களை அழுந்தப் பதிந்து நடந்து ஒரு அற்பனாய் என்னை மதித்த மனிதர்கள் கூட்டத்தையும் என்னிடம் இப்போது வரச் சொல்....

நான் சராசரி மனிதனா இல்லை மாவீரனா என்று காட்டுகிறேன்...! பெரும்பாலும் அவர்களோடு நான் போரிடப்போவதில்லை... என் கர்ஜ்னையே அவர்களின் சமாதிகளை தன்னிச்சையாக எழுப்பிக் கொடுக்கும்.

இனி விடியப்போகும் பகல்கள் எல்லாம் எனக்கானவை.... மலரப்போகும் இரவுகள் எல்லாம் எனக்கானவை...! ஆமாம்.....இது எனது முறை. மனிதர்களின் இகழ்ச்சிகளை எல்லாம் என் காலடியில் நான் இப்போது மிதித்து நிற்கிறேன், என்னை முகஸ்துதி செய்யக் காத்திருக்கும் கூட்டத்தின் குரல்வளைகளில் சரியாய் சொருகுவதற்காக என்னிடம் காத்திருக்கின்றன கூரான கத்திகள்....

வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்றமும் இறக்கமும் இயல்படா மூடர்களே....!!!சூழல்கள் எல்லாம் மனிதர்களை திடமாக்கும் காரணிகளடா நீசர்களே....!!!! புறம் பேசிப்  பேசி உங்கள் நாவுகள் எல்லாம் நீண்டு வளைந்து கிடக்கின்றன .. அடுத்தவர் பற்றிய சொரணை கெட்ட கதைகளில் சுகம் கொண்டவர்களின்   நீண்ட நாவுகள் எல்லாம் சர்வ நிச்சயமாய் அறுத்தெறியப்படவேண்டியவைகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் நீங்களும் உங்கள் அடிகளை பின்னோக்கி வைத்து திரும்பிச் செல்வது உத்தமம்.

நெருப்பாய் எரித்துப் போடும் சூழல்களை எனக்கு விதைத்துப் போட்ட ஏக இறையே.. உனக்கு கோடாணு கோடி நமஸ்காரங்கள்....நான் நெருப்போடு போராடி போராடி நெருப்பாய் நான் மாறிப்போன அதிசயம் நிகழ நீயே எனக்கு சூத்திரதாரியானாய்....

தகுதி உள்ளவை எல்லாம் தப்பிப் பிழைக்கும். இது உலக நியதி. அப்படியாய் தப்பிப் பிழைத்து வீறு கொண்டு ரெளத்ரத்தை புத்தியில் சுமந்து வாழ்க்கையை வெல்லும் தீரமான உக்கிரத்துக்குப் பின்னால் மென்மையான காதல் ஒன்று எப்போதும் ஒரு தாயைத் தேடும் குழந்தையாய் கை நீட்டிக் காத்திருக்கவும் செய்கிறது. 

காதலை கொடுக்கவும், காதலைப் பெறவும், அன்பில் நனையவும், அன்பாய் மாறவும், எதிர்பார்ப்பில்லாத உள்ளத்தை தொடும் ஒரு அரவணைப்பையும் நேசத்தையும், தாயாய் தலை கோதி நெஞ்சோடு சேர்த்து கொடுத்து  போரட்டங்கள் எல்லாம் ஒரு பெரும் நிம்மதிக்காத்தான், தேடல் எல்லாம் திருப்தியின் உச்சத்திற்குத்தான்.... 

கரடு முரடான வாழ்க்கையை ஒரு போராளியாய் கடந்து செல்வது எப்போதும் கரடு முரடாய் சுற்றித் திரிவதற்கு அல்ல...காதலில் நிறைந்து காதலாய் மாறி..........பிரமாண்டப் பிரபஞ்சத்தில்  முற்றிலுமாய் கரைந்து போக....என்று

இந்த ஆசை மறைமுகமாய் எப்போதும் துரத்த, எதிர்ப்படும் வாழ்க்கையின் இன்னல்களை துவம்சம் செய்து....நாம் நகரும் போதும் ஒரு ப்ரியமான காதல் எப்போதும் நம்மை துரத்தித் துரத்தி.......

' ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட....
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
தினம் மாலை நேரம் காணும் தோற்றம் யாவும் நீயடா
இனி மேலும் மேந்து நின்ற வஞ்சி 
மாமன் தோளை சேர வேலி ஏது.....'

என்று கேள்வி கேட்கவும் செய்கிறது.....! 


கேட்குதா இல்லையான்னு நீங்க வேணா பாட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுங்களேன்..!


தேவா. S


Comments

ஹேமா said…
ஒரு பாடல் உங்கள் கைகளில் அகப்பட்டு இன்னும் அழகாகி வெளிவந்திருக்கிறது தேவா.அத்தனை ரசிப்பு.எனக்கும் பிடித்த பாடல்.இந்தப் படமும் அப்படித்தான்.நன்றி !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...