Skip to main content

நான் ' ஈ ' விமர்சனம்(மா?) ..!?




















ரொம்ப சீரியசாவே போய்ட்டு இருக்கே லைஃப்ன்னு சொல்லிட்டு...நெட்ல ஏதாச்சும் படம் பாக்கலாம்னு எந்த சைட்லடா மாப்ள புது படமெல்லாம் பாக்க முடியும்னு நண்பன் ஒருவனுக்கு போனப் போட்டுக் கேட்டா....திருட்டு விசிடி.காம்னு ஒண்ணு இருக்கு மாப்ள, அதுலதான் உடனே உடனே புதுப் புது படமா போடுறாய்ங்கன்னு சொன்னான்...! 

ஓகோ இந்த புகை பிடிக்காதீர்கள்னு போட்டுட்டு சிகரெட் விக்கிறாய்ங்களே அது  மாதிரி..., குடி குடியை கும்மி அடிக்கும்னு போர்ட்ல போட்டுட்டு கவர்மெண்ட்டே சாராயம் விக்குறாங்களே...கேட்டா காந்தியோட தேசம், புத்தனோட பூமின்னு அகராதி பேசுவாய்ங்களே......, அது மாதிரி திருட்டு விசிடி.காம்னு பேர தைரியமா வைச்சுக்கிடுட் புதுப் புது படமா இறக்குவாய்ங்க போலன்னு நெனச்சுக்கிட்டு....

சைட்ட ஓப்பன் பண்ணின அன்னிக்கு முதல் நாளு ரிலீசான " நான் ஈ..."  படம் அதுக்குள்ள அங்க அப்லோட் பண்ணி இருந்தாய்ங்க..! ப்ரிண்டும், சவுண்டும் செம ஜோரா இருந்ததால மேற்கொண்டு படத்த பார்த்தேங்க. திருட்டு விசிடி.காம்ல திருட்டுத்தனமா படம் பார்த்தது தப்பா ரைட்டன்ற வாக்குவாதத்தை எல்லாம் வேற பதிவுல வச்சுக்கலாம் பாஸ்.... இப்போ படத்த பத்தி பேசுவோம் வாங்க...

அட ...யாருப்பா அது கூட்டத்துல இருந்து சவுண்ட கொடுக்குறது...?  "ஊர் ஒலகத்துல நெறைய பேரு விமர்சனம் எழுதுறாய்ங்க நீயுமாடா டவுசருன்னு...." ! அட நீங்க வேற நான் எப்போ இது விமர்சனம்னு சொன்னேன்...? நாங்க எல்லாம் நாலாவது, அஞ்சாவது படிக்கும் போது எங்கள எல்லாம் சுத்தி  ஒக்கார வச்சுக்கிட்டு ஜெகநாதன்னு ஒரு பையன் கதை சொல்லுவான் பாருங்க...

அவன் சொல்ற கதைய கேட்டுட்டு படம் பார்த்தீங்கன்னா சத்தியமா ங்கொப்புறானே ஒங்களுக்கு படம் சுத்தமா புடிக்கவே புடிக்காது அவன் அம்புட்டு அருமையா கதை சொல்லி இருப்பான்னா பாருங்களேன். கதை சொல்றதுல, கேக்குறதுல இருக்க ஒரு சுகமும், எதார்த்தமும் கதையை விமர்சிக்கும் போது இருக்காதுன்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.

இப்பத்தானே சேட்டிலைட் டிவி லொட்டு லொசுக்குன்னு இம்புட்டு வந்து கிடக்கு. நான் சின்ன புள்ளையா இருந்த அந்தக் காலத்துல....(எங்க காலத்துல எல்லாம் இப்புடி ஒண்ணும் இல்லப்புன்னு எங்கப்பத்தா சொல்ற மாதிரியே சொல்றேன் பாருங்க...) தூர்தசன் கூட எட்டிப்பார்க்காத ஒரு ரம்யமான காலத்துல, பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே பைக்கட்ட தூக்கி திண்ணையில எறிஞ்சு புட்டு இருட்டுற வரைக்கும், கல்லா மண்ணா விளையாடிட்டு, இருட்டுன அப்புறம் வெயிலா, நிழலான்னு வெளிச்சத்தையும் இருட்டையுமே மெயின் ஆப்ஜக்கட்டா வச்சு வேர்க்க விறுவிறுக்க விளையாடிப்புட்டு...

கரும் கும்ன்னு இருட்டுன அந்த எட்டு மணி ராத்திரிக்கு சாப்பாடு எல்லாம் முடிச்சுப்புட்டு.... ஏய் அப்பத்தா ஏதாச்சும் கத சொல்றியா இல்லையாடி கெளவி நீன்னு செல்லமா அவுங்க கண்டாங்கி சேலை முந்தானிய எடுத்து முண்டாசு கட்டிக்கிட்டு பக்கத்து வூட்டு பக்கியலையும் கூப்டு சுத்தி ஒக்காந்தம்னா....

நாலணாவுக்கு வாங்கியாந்த களிப் பாக்க உடைச்சு வாயில போட்டுக்கிட்டு கொஞ்சமா பொகையிலைய உருட்டி கடைவாயில வச்சு உறிஞ்சிக்கிட்டு எங்கப்பத்தா கதை சொல்ல ஆரம்பிக்கும் பாருங்க...

செக்கச் செவேர்னு இருப்பாருப்பு அந்த ராசான்னு சொல்லும் போதே செக்கச் செவேர்னு ராசா (அட. ஸ்பெக்ட்ரம் ஆ. ராசா இல்லேங்க நெச ராசா...) நம்ம மனசுக்குள்ள வந்து நிப்பாரு...,


ஆளுப்பேரு இல்லாத வனாந்திரக் காட்டுக்குள்ள ராசா ஒத்தையில போகையில காத்து சல சலன்னு  அடிச்சுச்சாம், காஞ்சு கிடந்த சருகு எல்லாம் காத்துல பர பரன்னு பறந்து போயிருக்கு ராசாவுக்கு, தூரத்துல கருப்பா ஒரு உருவம் ராசா கண்ணுல தட்டுப்பட்டிருக்கு அப்பு....ன்னு  கெளவி சொல்லி முடிக்கையில சுத்தி இருந்த புள்ளக் குட்டிங்க எல்லாம் அப்பத்தா கெளவி மடியிலயும், காலுக்குள்லயும் கைக்குள்ளையும் அணைஞ்சாப்ல ஒக்காந்து இருக்குங்க...

கதைய பாதியில நிறுத்துன கெளவி விளம்பர இடைவேளை மாதிரி ஒரு வெத்தலைய எடுத்து நல்லா நீவி விட்டு காம்ப கிள்ளி என் வாயில திணிச்சுப்புட்டு, மெல்ல சுண்ணாம்ப தடவி களிப்பாக்க சேத்து வாயில மடிச்சு போட்டுக் குதப்பிட்டு மறுபடி கதை சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள சுத்தி இருக்க அம்புட்டு பேருக்கும் ஈரக்கொலை ஆடிப்போயி அந்த கருப்பு உருவம் என்னவா இருக்கும்னு ஏதேதோ கற்பனைக்கு எல்லாம் போயி அப்பத்தாவோட வாய பாத்துக்கிட்டே இருப்போம்....

படமா பார்க்கும் போது பாக்குற காட்சிக்குள்ள சிக்கிக்கிட்டு அது பின்னாடியே ஓடுற நம்ம புத்தி ஒரு அடிமை வேலைதான் பாக்குது, ஆனா கதை கேக்கும் போது ஒரு ராஜா குதிரையில போற மாதிரி நம்ம மூளை கம்பீரமா கதைய கற்பனை செஞ்சு நமக்கு எப்டி எல்லாம் வசதியோ அந்த திசையில எல்லாம் சிட்டா பறக்குது....அந்த லயிப்பே தனிதான் போங்க...

பொதுவா ஏதோ ஒரு விசயத்தை விமர்ச்சிக்கிறேன் அப்டீன்னு சொல்லிட்டு நாம பேனா மூடிய திறக்குறது ஒரு மாதிரியான வன்முறையாத்தான் நான் பாக்குறேன். உள்ளத் உள்ளபடி சொல்லி நான் விமர்சிக்கிறேன் அப்டீன்றது எப்டீங்க பொதுவான கருத்தா இருக்கும்? ஒரு படம் பார்த்தேன் அதை ஒரு கதையா சுவாரஸ்யமா இப்படி நான் புரிஞ்சுக்கிட்டேன் அப்டீன்றதோட நிறுத்திக்கிட்டா ஒரு டீசன்ஸி இருக்கும்னு நினைக்கிறேன். 


அதுக்கு அடுத்த லெவலுக்குப் போயி கதை இப்படி வந்து இருக்கலாம், திரைக்கதை இப்படி வந்து இருக்கலாம்னு, மியூசிக் இந்த  இடத்துல சொதப்பல், கேமரா இன்னும் நல்லா இருந்து இருக்கலாம், படம் சொதப்பல் ஊத்தல் என்று பொதுவுல சொல்ற கருத்து என்ன பண்ணுதுன்னு கேட்டீங்கன்னா....

ஒரு வெவரமும் இல்லாம படிக்கிற அத்தனை பேரையும் படம் சரி இல்லேன்ற ஒரு மனோநிலைக்கு மனோதத்துவ ரீதியா இழுத்துக்கிட்டு போகுது. அதனால படம் பாக்கணும்னு நினைச்சு இருக்கவங்க கூட பாக்காம போயிடலாம், ஒரு வேளை அவுங்க பார்த்து இருந்தா அவுங்களுக்குப் படம் புடிச்சு கூட இருக்கலாம்...

எனக்கு படுமொக்கைன்னு தோணுற படம் எங்க எதுத்த வீட்டுக்கார அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருக்காங்க...! அவுங்க படு மொக்கைன்னு பீல் பண்ற படம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்து இருக்கு...! பிரபலமான ஊடகங்கள் எல்லாம் படம் செம ஊத்தல்னு சொல்லி விமர்சனம் எழுதிட்டு இருக்கும் போது படம் தியேட்டர்ல கலெக்சன் பிச்சு உதறிக்கிட்டு இருக்கும்.... செம சூப்பர் படம்னு விமர்சனம் எழுதி இருப்பாங்க பார்த்தா தியேட்டர்ல கூட்டமே ஈ ஆடாது.....


அட....... ' ஈ ' ன்னு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது.....

ஓ...மை காட்......நாம இந்த கட்டுரைய எழுதினதோட நோக்கமே நான்....ஈ படத்த பத்தி உங்க கிட்ட சொல்றதுக்குதானே....பாத்தீங்களா? எங்க ஆரம்பிச்சு எங்க முடிச்சுட்டேன்னு....கொடுமை..! சரி விடுங்க நான் ஒண்ணும் கதை எல்லாம் சொல்லல எனக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்துச்சு...செம ரகளைன்னு  வச்சுக்கோங்களேன்...! நீங்களும் பாருங்க உங்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம்.....

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S



Comments

தேவா...நீங்களுமா...????
இப்பதான் நம்ம லைன்க்கு மீண்டும் வரீங்க....வாங்க...
Anonymous said…
இது மாதிரி ஒரு சினிமா விமார்சனம் என்னோட வாழ்க்கையில படிச்சதுல்லை பாஸ்... ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...