Skip to main content

பிராப்ள பதிவர்....பப்பு...!!!!!


















சுத்தி நடந்துட்டு இருக்க விசயத்தை பத்தி ஏதோ அபிப்ராயத்தை சொல்லாம போய்ட்டோம்னா நம்ம தலை வெடிச்சே போயிடும்ன்ற மாதிரி தோண ஆரம்பிச்சுடுச்சு.... டாக்டர்...

திணறிக் கொண்டே பப்பு பேச ஆரம்பித்து இருந்தான்....

பொங்கி பொங்கி என்னைய மட்டும் தனியா வச்சுட்டு மிச்சம் இருக்குற உலகத்தையே காறித்துப்ப தோணுற எனக்கு ஒரு ட்ராபிக் சிக்னல்ல கரெக்ட்டா லைன்ல நிக்க துப்பு இல்லீங்க...! ரெயில்வே ஸ்டேஸன்ல ட்ரெயின்ல இருந்து இறங்கி பிளாட்பார்ம தாண்டி வெளியில வர்றதுக்குள்ள பஞ்சப் பரதேசிங்க பிச்சைக் கேட்டு தொல்லைப் பண்றத பாத்துட்டே வந்தாலும் யாராச்சும் ஒரு முடியாத வயசானவங்களுக்கு பத்து ஒத்த ரூபாய  கொடுக்க வக்கு இல்லாத நான்....

பொதுவா ஊர்ல எங்க்யாச்சும் ஒரு பிரச்சினை நடந்து அதுகு ஒரு நடிகனோ இல்லை அரசியல்வாதியோ ஏதாச்சும் உதவி பண்ணலேன்னா அவுங்கள பாத்து ஏண்டா எச்சக்கலைங்களா? ஏன் வூட்டு காச...நல்லா கவுனிங்க டாக்டர்.. ஏன் வூட்டு காச... எச்சத் தின்னு பெரிய நடிகனாவும், அரசியல்வாதியாவும் ஆன டுபாக்கூருங்களா.....இந்த இந்தப் பிரச்சினைக்கு இன்னாடா செஞ்சு நீங்க கழட்டுனீங்கன்னு... கம்ப்யூட்டர் பொட்டிய தொறந்து கோபம் தீர தட்டி எங்கயாச்சும் ஒரு சமூக பொது வெளியில வாந்தி எடுத்தாத்தான் திருப்தியா இருக்குங்க சார்...

எனக்கு எப்பவுமே ராஜா சார பிடிக்கும்னு எல்லோர் கிட்டயும் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன் சார்....ஆனா ஒரு பாட்டைக் கூட மன நிம்மதியோட ஒக்காந்து நான் கேட்டதே கிடையாது....நான் எது செஞ்சாலும் அதை நிம்மதியா என்னால செய்ய முடியல.. தட்டுல சோத்தப்போட்டு துன்ன சொல்ல அதை மொதல்ல போட்டோ புடிச்சு பேஸ்புக்லயோ இல்லை வேற ஏதாச்சும் ஒண்ணுலயும் போட்டு இதை நான் துன்னப் போறேன்னு சொன்னாதான் சார் தொண்டையில சோறு எறங்குது...

என்னைய பாத்து நாலு பேரு நல்ல எழுதுற.....நீ..... , உங்க கருத்து அருமை , உங்களப் போல யாரும் உண்டா? அசத்தீட்டிங்கன்னு... பாராட்டி பாராட்டி ஏதாச்சும் சொன்னாதான சார்....அட மனசுக்குள்ள என்ன வேணா நினைச்சுக்கிடட்டும், ஆனா பொது வெளியில சும்மா நாலு வார்த்தை இப்டி சொன்னாதான் இந்த சொரணை கெட்ட மனசு சிக்குனு ஜில்ப் ஆகி ரெம்ப சந்தோசப்படுது...., அதுவும் பெரும்பாலும் பொண்ணுங்க யாராச்சும் பாராட்டிட்டா....... டக்குன்னு சிச்சுவேசன், லொக்கேசன் எல்லாம் மாத்தி கனவுல ஏதோ ஒரு வெளிநாட்டுக்குப் போயி ஜிங்கு ஜிங்குன்னு டான்ஸ் ஆடுற மாதிரி எல்லாம் தோணுது சார்...! 

கண்ணை மூடிக்கிட்டு....நான் இப்ப அமெரிக்காவுல இருக்கேன்....ஆமாம் ஆமா வெள்ளை மாளிகைதான்... யெஸ்.. யெஸ்.. ஒபாமா கூடத்தான்... நாங்க ஒண்ணா சாப்டோம்.... இப்போ ஒலக அரசியலப் பேசிட்டு இருக்கோம்..... 

இப்ப லண்டன்ல இருக்கேன். யெஸ்.. யெஸ்....பேலஸ்லயேதான்... மகாராணி கூட இருக்காங்க....

நான் பெரிய ஹீரோ.. நான் ஒரு பெரிய எழுத்தாளன்....நான் பெரிய புரட்சியாளன்...........நான் ஒரு கவிஞன்....நான் ஒரு விமர்சகன், நான் ஒரு பெரிய சமூக சேவகன்...... நான் ஒரு எல்லாமே....

நான் ஒரு பெரிய ரவுடி.....அடிச்சுடுவேன்.......பேத்துடுவென்.............நான் வந்து.. பெரிய......பெரிய......ஆளாக்கும்....

கண்ண தொறந்துகிட்டே இப்படி எல்லாம் பலவிதமா கனவுகள என்னால இணையத்துல பார்க்க முடியுது.....சார்....

என்ன ஒண்ணு கடைசியில என்னோட எல்லா வேலையும் கெட்டுப் போயி,,,,அமிஞ்சிக்கரையில இருக்க என் ஆபிஸ்ல இருந்து ஆபிஸ் விட்டு வீடு வர்ரதுக்கு பஸ்சுக்கு நிக்கும் போது ஆட்டோக்காரன் ரோட்டு ஓரமா கிடக்குற சேத்த மூஞ்சில அடிச்சுட்டுப் போகும் போது... ரொம்ப கஷ்டமாவும் ஒண்ணியும் செய்ய முடியாமையும் நிக்க வேண்டி இருக்கு சார்....

பஸ்ஸுக்குள்ள கூட்டத்துல முன்னால இடிக்கிறானுகோ.....பின்னால இடிக்கிறானுகோ.... ஷேவ் பண்ணாம வந்து தாடியால ஷோல்டர்ல கீறுரானுங்கோ... காலை மிதிச்சு நாசம் பண்றானுகோ....முடியலை.... ரோட்ல ட்ராபிக் மேல ஜன்னல் வழியா எச்சித் துப்புறானுகோ.. கண்டக்டர் வேற அசிங்க அசிங்கமா திட்டி ....இத்தப் பாரு.. கனவு கண்டுகினு கீது... அப்பால போன்னு தள்றான்...

இன்னா சார் செய்ய முடியும் நானு...? வூட்டுக்கு போனா கரண்ட்  இல்லை.... பைக்க எடுத்தா பெட்ரோல் விக்கிற வெலையில பைக்கு ஒரு கேடான்னு... நைனா சவுண்ட் வுடுறாரு..... எல்லா வெல வாசியும்  பீக்ல போவுது... நீ தக்காளிய துன்னாம ஏன்டா துப்புறன்னு அம்மா கத்துது...

பேப்பர எடுத்துப்படிச்சா..... காவிரி தண்ணி உடாம பத்தாயிரம் ஏக்கருக்கு மேல வெவசாயம் இல்லாம கெட்டுப் போச்சு, ஜெயலலிதா அம்மா சரியா பேசி தண்ணி வாங்கலன்னு சொல்றானுகோ....

சிவகாசில பட்டாசு மருந்து வெடிச்சு புள்ளைங்க எல்லாம் செத்துப் போச்சுங்க.... அனுமதியே கொடுக்கலேன்றானுகோ..., இடமே சின்ன இடம்ன்றானுகோ..., தீபாவளி ஒரு கேடானு கேக்குறானுகோ, நிலக்கரி ஊழல்ன்றானுகோ, பாராளுமன்றம் முடங்கிப் போச்சுன்றானுக......

இதுக்கு எல்லாம் இன்னா தீர்வுன்னு ராத்திரி முச்சூடும் ரோசிச்சு... ஒரு முடிவ எடுத்து மறுநாள்.....ஆபிசுக்குப் போயி நான் அங்க அங்க பொங்கி, அங்கிட்டும் இங்கிட்டும் போயி எழுதி, எவனாச்சும், லைக்கோ ஒரு கமெண்ட்டோ போட்டுட்டா... கண்ண மூடிக்கிட்டு ...நான் அவன்டா.. இவன்டா, பிரபல புலிடான்னு மறுபடியும் கனவு... கண்ண தொறந்துகிட்டே கண்டுபுட்டு.... கடைசியில.. என் தாலி ஆபிஸ்ல அந்து போயி....வேலை கெட்டு போயி.....ஆபிஸ்ல திட்டு வாங்கி...அங்க எச்சூஸ் கேட்டு.... மூஞ்சத் தொடச்சுக்கிட்டு......மறுபடி சாங்காலம் பஸ் புடிச்சு..........

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ......எனக்கு பைத்தியமே புடிக்கப் போவுது டாக்டர்.. ஏழு வருசமா பொது வெளியில இயங்கிட்டு இருக்க ஒரு பிரபலம் நானு....எனக்கு என்னா வியாதின்னு பாத்து கொஞ்சம் சரி செஞ்சு வுடுங்கோ......

பப்பு அலறிக் கொண்டிருந்தான்....டாக்டர் அவசரமாய் ஏதோ ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் பேஸ் புக்கில் போட்ட படி.. ஒன் செகண்ட் ப்ளீஸ்... என்று விட்டு... யெஸ்..... என்னாச்சு....எங்க மறுபடி சொல்லுங்க... என்றார்....

பப்பு.........டேய்ய்ய்ய்ய்ய்ய் என்று டாக்டரை நோக்கிப் பாய்ந்தான்.....!


தேவா. S

Comments

Kousalya Raj said…
வாவ் சூப்பர் !! பப்பு ரிடர்ன்ஸ் !!!!

//அங்க அங்க பொங்கி, அங்கிட்டும் இங்கிட்டும் போயி எழுதி, எவனாச்சும், லைக்கோ ஒரு கமெண்ட்டோ போட்டுட்டா... கண்ண மூடிக்கிட்டு ...நான் அவன்டா.. இவன்டா, //

பப்பு இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கார் போல !! அதுக்காக பொதுவெளியில(!) எல்லாத்தையும் இப்படியா ஓபேனா புட்டு புட்டு வக்கிறது... சிரிச்சு முடியலைங்க. :))

//ஏழு வருசமா பொது வெளியில இயங்கிட்டு இருக்க ஒரு பிரபலம் நானு...//

இதுவேறயா ? :)
இத்தன நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சா இதுக்காகவே ஒரு விழா எடுத்து இருக்கலாம்.:)

//Labels: கட்டுரை அனுபவம்//

யாரோட அனுபவம் ?
பப்பு ?
டாக்டர்?
தேவா?
:))

...
எப்போவோ ஒருமுறை வராமல் பப்பு அடிக்கடி வரணும் !!

dheva said…
கெளசல்யா @ பப்பு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டே இப்டி ஒரு கேள்வி கேட்டா எப்டிங்க..?

ஹா.. ஹா!!!!

நன்றிகள்.!
Kousalya Raj said…
எனக்கு தெரியும், ஆனா மக்களுக்கு கொஞ்சம் தெரிஞ்சா எந்த அட்ரெஸ்க்கு ஆட்டோ அனுபலாம்னு முடிவு பண்ண வசதியா இருக்கும் ...அதுக்கு தான் :))

(ஆட்டோ ல கூப்ட்டு போய் விழா எடுக்க)

:))
பங்காளி...ம்...ம்ம்...ம்ம்ம்.... :-)))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...