Skip to main content

சாதி பூதமும் சதிகார அரசியலும்....!
















வாழ்க்கையின் போக்கு எல்லாவற்றையும் சட் சட்டென்று மாற்றியமைத்து விடுகிறது. கணத்துக்கு கணம் மாறும் வாழ்வின் நிதர்சனமில்லாத தன்மையை மறந்து விட்டுத்தான் இங்கே மனிதர்கள் சாதிக் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். புஜம் தட்டி நான் யார் தெரியுமா..? என்று கொக்கரிக்கிறார்கள். ஆரிய சாதி, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, என்று இங்கே சாதி பேசும் நாக்குகளை எல்லாம் ஏதோ ஒரு  புழு மண்ணுக்குள்ளிருந்து முண்டியடித்துக் கொண்டு வந்து ஒரு நாள் அரித்து விடப்போகிறது, இல்லை என்றால் கொடும் தீ சட்டென்று பரவி கருக்கி விடப்போகிறது.

இந்தப்  பூமி தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. சூரியனிலிருந்து பிய்த்து எறியப்பட்ட நெருப்புத்துண்டுக்குள் இத்தனை சாதிகளும் இருந்திருக்கிறதே என்ற ஆச்சர்யம் மட்டுமல்ல எனக்கு, அதை வைத்து அரசியல் நடத்தவும், வியாபாரம் செய்யவும் இத்தனை மனிதர்களும் இருந்திருக்கிறார்களே என்ற பிரமிப்பும் எழத்தான் செய்கிறது. மூன்று வேளை சோற்றை  உண்டு வாழ்ந்து மரிக்க மானங்கெட்டுப் போய் எத்தனை பிழைப்பு பிழைக்க வேண்டியிருக்கிறது இந்த மனித இனம் என்ற வேதனையும் எழுகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்னவனையும் சாதிக்குள் அடைத்துப் பார்த்த வேகாத மூளைகள் இருக்கும் நாடு இது. இங்கே எந்த நியாயத்தைப் பேசுவது...? எதை விடுவது என்றுதான் புரியவில்லை.  உங்களின் பாட்டன் பூட்டன் செய்த தொழில் விவசாயம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வேளாண்மை செய்தவர்கள் ஆதலால் உங்களை அடையாளப்படுத்த வேளாண்மைக்காரர்கள் என்று அழைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுப் போனது. இதை சாதி என்று கூறி தன் தலையில் சுமந்து கொண்டு சென்னையில் அமர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் என்ன வேளாண்மையா செய்து கொண்டிருக்கிறார்?

சாதி என்பது செய்த தொழிலின் அடிப்படையில் உருவானது என்னும் போது அந்தத் தொழிலை விட்டு விட்ட போதே அந்த மாயை  செத்துப் போய்விட வேண்டுமா இல்லையா?

இன்னும் சில பராக்கிரமசாலிகள் சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று விட்டு விட முடியுமா என்று கேட்கிறார்கள்? காலம் காலமாய் செய்த தொழிலை வைத்து சக மனிதனை மனோதத்துவ ரீதியாக ஒடுக்கி விட்டு அவர்கள் மேலெழும்பி வர பொருளாதார ரீதியாகவும், கல்வி கற்று மேலேறி வருபவர்களுக்கு  அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமாக மனதத்துவ ரீதியாக அவர்கள் மீண்டெழவும் யாரோ ஒரு மனித நேயம் கொண்ட புண்ணியவான் உருவாக்கிய திட்டமே இச்சட்டம் என்பதை இவர்கள் உணர்வதில்லை. நூற்றாண்டுகளாக மனிதம் நசுக்கப்பட்டு மனதளவில் ஊனப்படுத்தப்பட்டு எரிய விடப்பட்ட தீண்டாமை நெருப்பு, நாம் கணிணி முன் வந்து அமர்ந்து விட்டதாலேயே அணைந்து போய்விட்டது என்று கருதுவது அறிவீனம்.

வக்கிருப்பவன் வாழ்க்கையை திமிறி வரும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை எதிர்கொள்வதைப் போல எதிர் கொண்டு அதன் திமிழ் பிடித்து அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து தான் பிழைக்க வழி தேடிக் கொள்கிறான். பிழைக்க வழியறியா பிச்சைக்காரர்கள் எல்லாம் எம்மை ஆள்கிறேன் பேர்வழி என்று எதைப் பற்றிய புரிதல் அதிகம் வேண்டுமோ அதைப் பற்றிய புரிதலை கடைசி வரை எம் மக்களுக்கு ஏற்படுத்தாமல், மனிதர்களை சாதி சாதியாகப் பிரித்து வைத்து சந்தி சிரிக்க வைக்கும் அரசியல் அநீதீயை தொடர்ந்து என் சமூகத்துக்குள் புகுத்தி எங்கள் நீண்ட நெடிய கரும் இரவுகளை அவர்கள் விடியவே விடவில்லை.

கோட்டான்கள் எல்லாம் இங்கே ஓட்டரசியலுக்காய் சொக்கட்டான் போட்டு விளையாடி சாதிக்கொருவரைப் பிடித்து, ஒவ்வொரு கட்சிகளுக்குத் தலைவர்களாக்கி அவர்களை தங்களுக்கு ஆதரவு கொடுக்கச் செய்து எப்படியாவது ஆட்சியில் ஏறிவிடலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்க....

சர்வதேச விஞ்ஞானம் பிரபஞ்ச வெளியின் பிடிபடாத புதிர்களைப் பற்றியெல்லாம் ஆராயத் தொடங்கி இருக்கிறது. சாதியை விட்டு மனிதன் வெளியே வரவேண்டுமெனில் பொருளாதார ரீதியாக ஒரு மேம்பட்ட நிலை எல்லா மனிதர்களுக்கும் வரவேண்டும். அப்படியான ஒரு சூழல்  வரவிடாமல் நம்மை கையேந்த வைத்துக் கொண்டிருக்கும் நம் வறுமையும் புரிதலின்மையும் தான் நம்மை பிரித்தாண்டு பிழைப்பு நடந்தும் இந்த பிணந்திண்ணிகளின் முழு  மூலதனம் என்பதை அறிக.

இந்த நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளே இப்போது இல்லை என்பதால் நாம் வேறு வழியில்லாமல் சாதியைப் பற்றி பேசி பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமா என்ன?

தமிழ் நாடு நம் தாய் பூமி. பிறப்பால், உணர்வால் நாம் தமிழர்கள். நம்மை நிர்வகிக்க நாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் நம்மை இப்போது என்ன நிலைமையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்..? என்று கேட்க ஒரு சப்தமான சமூக கோபங்கள் கொண்ட இளைஞர்கள் கூட்டம் ஏன் இல்லை இங்கே?

மின்சாரம் இல்லாமல் எப்படியடா நாம் வசிக்குமிடம் இருண்டு போனது?  என் உறவுகள் எல்லாம் தொழில் செய்ய முடியாமல் முடங்கிப் போய் மன அழுத்தத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்..., எமது பிள்ளைகள் எல்லாம் இரவிலே உறக்கிமின்றி வீதிகளில் கொசுக்களால் கடிபட்டு டெங்கு காய்ச்சல் போன்ற பிணிகளால் அல்லலுற்றுப் போயிருக்கின்றன.  திட்டங்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் அரியணை ஏறி கவர்ச்சித் திட்டங்களைக் கொடுத்து கொடுத்து எங்களை தெருநாய்களாக்கி வைத்ததை விட வேறென்ன சாதனைகளை நீங்கள் எங்களுக்காக செய்து விட்டீர்கள்...? என்று ஏன் நாம் கேட்பதில்லை...?

மூலைக்கு மூலை திறந்து கிடக்கும் அரசு மதுபானக்கடைகள் எம்மக்களின் உழைப்பை சுரண்டிச் செல்வதோடு, உடல் நலத்தை கெடுத்து குடும்பம் என்ற அமைப்போடு இயைந்து வாழ பெரும் சவாலாயும் இருக்கிறதே....?!

வாய்மையே வெல்லும் என்று சொல்லிக் கொண்டு மகாத்மாவின் புகைப்படைத்தைப் போட்டுக் கொண்டு இவர்கள் நடத்தும் அரசியல் உங்களுக்கும் எனக்கும் ஏன் அயோக்கியத்தனமாய் தெரியவில்லை....?

மாறி மாறி வாக்களித்து விட்டு நம் வாழ்க்கையை அழித்துக் கொண்டு விலைவாசிகள் எல்லாம் விண்ணைத் தொட்டிருக்க என்ன சுபிட்சம் கண்டு விட்டோம்.... நாம்? மாநிலத்தின் தலைநகரிலேயே சாலைகள் குண்டும் குழியுமாய் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றன, ஒரு சிறு மழையைக் கூட எதிர் கொள்ள முடியாத  மோசமான வடிகால் வசதிகள், தெருவெங்கும் சாக்கடைகள் என்றிருக்கும் போது மிச்சமிருக்கும் சிற்றூர்களின் வசதிகளைப் பற்றியெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லையே?

இவற்றை எல்லாம் பற்றி நாம் பேச மாட்டோம். பேசவும் முடியாது, ஏனென்றால் நமது முதுகெலும்புகள் எல்லாம் சாதி என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு செக்கு மாடுகளாய் உழன்று கொண்டு நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று அடித்துக் கொள்ளத்தான் பணிக்கப்பட்டிருக்கின்றன.  நீ அடித்துக் கொள்.. நான் கண்ணீர்ப்புகை குண்டு வீசி உன்னை கலைக்கிறேன், தடியடி சரிப்பட்டு வரவில்லை என்றால் .... துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறேன்..... என்பதுதானே இங்கே எழுதப்படாத நியதியாய் இருக்கிறது.

ஏன் நாம் அடித்துக் கொள்ள வேண்டும் என்று தன் முனைப்பினை கழற்றி எறிந்து விட்டு  மனித நேயத்தோடு நாம் யோசிக்காததால்தானே இப்படி....?

சக மனிதனை மனிதனாய் பார்க்கும் தெளிவும், மனித  நேயமும் சமகால இளைஞர்களிடமும் இல்லாமல் போயிருப்பது இந்த சமூகத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சாபம். அறிவை விருத்தியாக்கும் விசால பார்வைகள் கொண்ட ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் நம்மால் அங்கமாயிருக்க முடியாவிட்டால்  கூடப் பரவாயில்லை... ஒரு மனசாட்சி உள்ள மனிதனாக, நேர்மையான வாக்காளனாக கூடவா இருக்க முடியாது...?

இதை வாசிக்ககும் யாவரும் சாதி என்னும் ஒரு மாய அடையாளத்தை பயன்படுத்தியே ஆகவேண்டிய சூழலை வாழ்க்கை முறை கொடுத்திருக்கலாம்.. ஆனால் அந்த அடையாளத்தை வைத்துக் கொன்டு சக மனிதனை தாழ்த்தவோ, அடிமைப்படுத்தவோ அல்லது பணிந்து போகவோ செய்யாதீர்கள். சாதியின் பெயரால் ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளோ அல்லது சாதிக் கட்சிகளின் கூட்டில் வென்று விடலாம் என்று கூட்டணி வைக்கும் கட்சிகளோ எப்படி பரந்த மனப்பான்மை கொண்ட கட்சிகளாக இருக்க முடியும் என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்..!!!!! அவர்களை கண நேரமேனும் யோசிக்காமல் புறக்கணியுங்கள்....!

மதச்சார்பில்லாத நாடு இது என்று சொல்லிக் கொண்டு மதச்சார்பில்லாத கட்சிகளை ஆதரிக்கும் அத்தனை பேரும் இது சாதி சார்பில்லாத நாடு , சாதி சார்பில்லாத கட்சிகளையே நாங்கள் ஆதரிப்போம் என்று திண்ணமாக கூறுங்கள்.

நாம்  இல்லாவிட்டாலும் நம் பிள்ளைகளும் இன்னமும் வரப்போகிற சந்ததிகளும் இந்த சாதிப்பேய் என்றால் என்னவென்றே அறியாமல் போகட்டும்.....

இந்தப் பூமிப்பந்தில் ஜனித்த மனிதர்கள் நாங்கள் என்ற ஒற்றை எண்ணத்தோடு மனித நேயத்த்துடன் வாழட்டும்....!

" ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை-என்றும் மாண்புடன் வாழ்வமடா
கள்ளம் கபடமில்லை-வெறும் கர்வங்கள் சிறுமையில்லை
கட்டுகள்  ஒன்றுமில்லை-பொய்க் கதைகளும் ஒன்றுமில்லை
தீட்டுகள் தீதங்கள்-முதற் சிறுமைகள்  ஒன்றுமில்லை

கேளடா மானிடவா-எம்மில்  கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமை  யில்லை- எல்லோரும் வேந்தரெனத் திரிவோம் "


தேவா. S



Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...