Skip to main content

உலகம் அழிந்துதான் போகட்டுமே....!


















இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்று நீங்கள் எண்ணுவதற்கு நியாயமாய் ஒரே ஒரு காரணம் என்னிடம் சொல்லுங்கள் போதும். டிசம்பர் 21ல் உலகம் அழியாமலேயே போகட்டும். மாயன் காலண்டர் பொய் என்று கூறி நாம் புளகாங்கிதம் பட்டுக் கொண்டு தெருக்கு தெரு, நின்று பேசவும், இணையத்தில் சவுடாலாய் வாயடிக்கவும் கூட செய்யலாம்.

ஆனால்...

எனது கேள்வி எல்லாம் ஏன் இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்பதுதான்...? என்னைப் பொறுத்தவரை மாயன் காலண்டர் உயிர் பெற்று ஏதோ ஒரு சக்திக்கு உயிர் வந்து இந்த பூமியை சிதறடித்து மானுட பிண்டங்களைத் பிரபஞ்ச வெளியில் திக்குகள் எட்டும் பிய்த்து எறியட்டும். ஆழ்கடல் சிறு துளியாய் இந்தப் பெருவெளியில் மிதக்க உயிர்களை உறிஞ்சிக் கொண்ட இந்த பிரபஞ்சம் வெடித்து சிரிக்கட்டும்.

வாழ்க்கையை இயல்பாய் கட்டியமைத்துக் கொண்ட இயற்கையை சின்னாபின்னப் படுத்திக் கொண்டே....

எல்லைகள் வகுத்துக் கொண்டு நிறம், மொழி, மதம், நாடு, சாதி, பிராந்தியம் என்று பிரிந்து நின்று கொண்டு இந்த பிண்டங்கள் பிண்டங்களை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறந்தது இயற்கையே எல்லாவற்றையும் நொறுக்கிப் போடுவது. நெருப்பாய் சீறி விழுந்த பூமி நெருப்பு அணைய, அணைய சிலிக்கானோடு சில்மிஷங்கள் செய்து மண்ணாயும், ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் கலவி செய்து நீராயும், இன்ன பிற வாயுக்களும் ஏற்ற, இறக்க சதவீதங்களில் இந்த மண்ணோடும், நீரோடும் கூடிக் கலக்க எதேச்சையாய் வந்து விழுந்த மனிதன்...

சப்தமில்லா பேரமைதியோடு இருந்த இந்த பூமியை  சிதிலப்படுத்தி, எல்லைகளுக்குள் நின்று கொண்டு என் கடவுள் வேறு, உன் கடவுள் வேறு என்று பிரித்துக் கொண்டு தன் கற்பனையை எல்லாம் கடவுளாக்கிக் கொண்டு...மனிதனே மனிதனை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் ஏதோ ஒன்று பூமியை மொத்தமாய் அழித்து போவதில் என்ன  குறைந்து விடப்போகிறது என்று சொல்லுங்கள்...?

தானே ஜனித்த பூமியில் செடிகளுடனும், கொடிகளுடனும் சிரித்து விளையாடி மேகங்களை கலைத்துப் போட்டு மழை பெய்ய வைத்த நெடும் மரங்கள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்ற புதிருக்கு யாரிடமேனும் விடை உண்டா? பூமியின் பரிசுத்தத்தை வாழ்ந்து மரித்துப் போக வந்த மானுடர்கள் இந்தப் பூமிப்பந்தில் உரிமை கொள்கிறேன் பேர்வழி என்று எதை நிறுவி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...!

பல்வேறு கால நிலைகளைக் கொண்ட பூமியில் சூழலுக்கு ஏற்ப மனிதத் தன்மைகள் தன்னிச்சையாய் வடிவமைந்து போயின. தத்தம் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலம் குணாதிசயங்களைக் கடத்திச் சென்ற இயற்கையின் அற்புதம் ஒவ்வொரு மனிதனையும் அவனவன் பரம்பரையைப் பொறுத்தும் அவனவனின் தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்தும் சுட்டுப் போட.. மனிதன்... ஒவ்வொரு மாதிரியாய் ஆகிப் போனான். இது இயற்கையின்பால் ஏற்பட்ட மாற்றம் என்று உணர்ந்து நகராமல் வெள்ளையாய் இருப்பவன் கருப்பாய் இருப்பவனை அடிமைப்படுத்த நினைத்த இடத்தில் ...பிடித்தது இந்த பூமிக்கு சனி.

ஆக்கிரமிக்க நினைத்த இடத்தில் தான் ஒரு தன்னிச்சையாய் தோன்றி தன்னிச்சையாய் மறையும் ஜந்து என்பதை உணராதவனாய் மனிதன் போய்விட்டதன் விளைவுகளே பல்வேறு நாடுகளும், அவற்றுக்கான கொள்கைகளும், இராணுவங்களும், இன்ன பிற சட்டங்களும். சட்டங்களை யாருக்காக மனிதன் பிறப்பித்தான்... ? வேற்று கிரகவசிகளுக்கா?  இல்லையே .. உடன் ஜனித்து வாழும் சக மானுடர்களுக்காகத்தானே...?

என்ன மானங்கெட்ட ஒழுங்கு இருக்கிறது இந்த பூமியில்...என்று என்னிடம் சொல்லிவிட்டு பிறகு சொல்லுங்கள் ஏன் இந்த பூமி அழியக்கூடாது என்று...! தர்மத்தை பேச கோடி பேரில் ஒருவன் இருப்பதுதான் உங்களின் ஒழுங்கு என்றால் அந்த ஒருவனும் இந்த கோடி பேருக்கு நடுவில் நல்லவனாய் வாழ்வதை விட....மொத்தமாய்  அழிந்து போவதே மேல்...!

கொத்துக் கொத்தாய்  ஈழத்தில் லட்சக்கணக்கில் உயிர்களை அழிக்க ஒருவன் இருப்பான் அவனைக் தட்டிக் கேட்க நாதியில்லாத இந்த பூமி ஏன் இருக்க வேண்டும்....? வலு இருப்பவனுக்கு ஒரு சட்டம் வலு இல்லாதவனுக்கு சட்டமென்பதை நிதர்சனப்படுத்த காஸாவிலே எறிகணைகள் வீசி உயிர்கள் பறிக்கும் கொடியவர்கள் கால் இந்த பூமியில் பதிந்து கிடப்பதை விட.. பூமி அழிந்து ஒழிவதே மேல்....

நொறுங்கிப் போ பூமியே....
உன் கருணையை 
வாங்கிக் கொள்ளும் தகுதியற்றுப் 
போனது மனித இனம்...
தொடர்ந்து சுற்றிக் கொண்டு
நீ சூரியனையும் சுற்றி வந்து
எம்மையும் சுமந்து வரும்
கருவில் சிசு சுமக்கும் 
தாய் நீ....!
உன் வலியறியாத எம் மானுடத்தை
மொத்தமாய் ஏதோ ஒன்று..
மென்று போடட்டும்...
இல்லையேல்...
இந்த மானுடமே உன்னை
ஒரு நாள் கொன்று போட்டு விடும்....!

பச்சை குழந்தையாய் பூமி மீது படர்ந்து கிடந்த பிராணனை நச்சுப்படுத்தி விட்டோம், இயற்கையில் கிடைத்த நீரினை பங்கிட்டு வாழத் தெரியாமல் பதுக்கிக் கொள்ளும் யுத்திகள் செய்தோம், பூமித்தாயின் வளங்களை எல்லாம் சூறையாட சூட்சுமங்கள் ஓராயிரம் செய்தோம், இயற்கையின் மூலப்பொருள்களை முரண்பட்ட நிலையில் செயற்கையாக்கி நெகிழிகள் என்னும் பிளாஸ்டிக் அரக்கனை கண்டு பிடித்தோம்.... அது மட்கிப் போகாமல் பூமியினுள் ஆழப் படுத்துக் கொண்டு ஒரு மழையின் நீரினை தாகத்தோடு பூமி வாங்கி பருகக் கூட விடமால் தடுத்து நிற்கிறது....

அசுத்தங்களை கடலில் கலந்து நிலத்தைக் கடந்து நீரில் வாழும் உயிர்களின் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டோம்...! என்ன செய்ய வில்லை இந்த மானுடம்...? எல்லா அநீதிகளையும் தாங்கிக் கொண்டு மெளனமாய் சுற்றிக் கொண்டிருக்கிறது இந்த பூமி.  சூரிய குடும்பத்தில் பூமி ஒரு புள்ளி, பிரபஞ்ச வெள்ளத்தில் சூரியன் ஒரு தூசு என்பதையெல்லாம் மறந்து விட்டு....என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த மானுடம்...?

இயற்கையின் வளங்களைத் திருடிக் கொண்டதோடு, இயற்கைக்கு முரணாயும் மனிதம் செய்யும் அட்டூழியங்களுக்காக வேண்டி ஒன்று இந்த பூமி மொத்தமாய் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல்.. பூமியை விட்டு தூர  இந்த பிரபஞ்சக் காட்டுக்குள் குப்பையைக் கொட்டுவதைப் போல மொத்த ஜன சமுத்திரத்தையும் கொட்டி விட்டு வெறுமையால் நிறைவாய் மீண்டும் தன் பயணத்தை புதிதாய் தொடங்கவேண்டும்....

மிருகங்கள் நிறைந்து போன பூமியில் வக்கிரமான கற்பழிப்புகளும், தேவைக்கு அதிகமாய் கோடிகளில் ஊழல்களும், முறையற்ற உறவுகளும், தொடர் வறுமையால் திருட்டுக்களும், மனிதநேயம் வற்றிப் போன இடங்களில் ஆக்கிரமிப்புகளும், கொலைகளும், அதிகார போதையில்  மேலேறி வர குறுக்கு வழிகளும், வணிகம் என்ற பெயரில் அடக்கு முறைகளும் மட்டுமல்ல....

நீரை உறிஞ்சி உறிஞ்சி வற்றிப்போன மார்பகமாக்கப்பட்ட இந்த பூமியில் ஒரு மரம் நடக் கூட மனிதர்களிட சென்று கெஞ்ச வேண்டிய சூழலை மனிதனை அன்றி யார் இங்கே உருவாக்கியது...? உணவுப் பொருள்களை விளைவிக்கும் நிலங்களை எல்லாம் கான்கிரீட் காடுகளாகிப் போட்டது யார்..? மாசுபட்டுப் போன நீரை பூமியெங்கும் ஓட விட்டதோடு, ஆற்று மணலையும் அள்ளி இந்த பூமியை அம்மணமாக்கியது யார்...? மானுட சமூகம் தோன்றி இதுவரையில் மனிதர்களுக்கு எதிரே வர திரணியற்ற கடவுளுக்கு ஏதேதோ பெயரிட்டுக் கொண்டு...

விவாதித்து, விவாதித்து என் கடவுளும் மதமும்தான் பெரிது என்று பேய்க்கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொளவது யார் இங்கு..? இந்த பூமியின் ஒட்டு மொத்த முரண்பாட்டுக்கும், கொலைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும், நிம்மதியற்ற தன்மைக்கும் முழு முதற் காரணம் மனிதன் தானே...?

இப்படியாய் சுயநலப் பேய்கள் தங்களின் வாழ்க்கையை மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று வாழும் ஒரு அவல வாழ்க்கை நாளையோடு முடிந்து போகட்டும்...!!!

மாயன்களின் காலண்டர் அவர்கள் கணக்கீட்டின் படியான வருட முடிவைச் சொல்லித்தான் சென்றிருக்கிறது...அதனால் உலகம் அழியாது என்று நாசா அறிவித்தவுடன்... கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போல நிம்மதிப் பெருமூச்சு  விடும் அத்தனை நாசிகளும் தங்களின் சுவாசிப்பை இன்னும் 200 வருடத்திற்கு உறுதி செய்ய இயலுமா? முடியாது.... தானே...?

டிசம்பர் 21 பூமி அழியாவிட்டால் அழியவில்லையே என்ற மகிழ்வின் உச்சத்தில் சக மனிதரை நேசித்து வாழப்போகிறோமா? சுயநலங்கள் தொலைக்கப்போகிறோமா? அன்பையும், கருணையையும் நமது குணமாக்கிக் கொண்டு, எல்லைகள் மறந்து, மதங்கள் ஒழிந்து, இன, மொழி வேறுபாடுகள் இன்றி....இயற்கையைப் பேணி வாழப்போகிறோமா என்ன...?

அதனால்...
மொத்தமாய் அழிந்து
மீண்டுமொரு முறை
பிறந்து வா பூமியே....!
அங்கே புலன்களை கடந்த
புத்தர்களை பிரசவித்துக் கொடு...
சக மனிதர்களோடு
அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ள
ஏதேனும் ஒரு யுத்தி செய்து வை...!
எல்லைக் கோடுகள் கிழித்து
நாடுகளாக பிரிந்து கிடக்கும்
அவலம் தீர்....!
தீரத் தீர சுவாசிக்க
சுத்தமான பிராணனால் 
நிரம்பி இரு...!
மரங்களுக்கு நடுவே
மனிதர்கள் வாழும் 
பாக்கியம் கொடு....!
வற்றிப் போகாத நீரால் 
நீ நிரம்பிக் கிட...!
வளமான வாழ்க்கையை 
புது மனிதர்களுக்கு கொடுத்தோம்
என்ற இறுமாப்பில்...
நீ யுகங்கள் கழிந்தும்
சூரியனைச் சுற்றி வா...!
அதனால்..
இப்போது
நீ மொத்தமாய் அழிந்து 
மீண்டுமொரு முறை 
பிறந்து வா....!


தேவா. S



Comments

Ungalranga said…
ஸேம் பீலிங் மச்சி..!!
எனக்கும் சேம் பீலிங் தான் :))
ஆனா எனக்கு சேம்(Shame) பீலிங் :)
Anonymous said…
Very nice article. Everything you said is 100% true.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...