Skip to main content

திராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!




டோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம் பார்க்கும் பொறுமை  சுத்தமாய் இல்லாமல் போய் விட்டது. எழுந்து போய் பால்கனியில் வெறுமனே உட்கார்ந்து வானம் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு என்ன இது அபத்தம் என்று மிச்ச படத்தை சக தர்மினியிடமும், மகளிடமும் விட்டு, விட்டு எழுந்து வந்து விட்டேன்.

ஆதி பகவான், சந்தமாமா, ஒன்பதுல குரு என்ற மூன்று படங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு  படைத்தளித்த படைப்பாளிகளுக்கு எனது வந்தனங்கள். மெனக்கெட்டு அதைப் பற்றி உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு எனக்கு ' 7 அப்' போ அல்லது ஸ்பைரைட்டோ வாங்கி, கிளாஸில் ஊற்றி லெமனும், சால்ட்டும் போட்டு நீங்கள் கொடுத்து என் வயிற்றுக் குமட்டலை சரி செய்ய வேண்டி இருக்கும் என்பதால்.. மூன்று படங்களையும் நான் உங்களை சாட்சியாக வைத்து இப்போதே மறந்து விடுகிறேன்.

நிறைய எழுதுவதற்கு போதும், போதுமென்று சுற்றிலும் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் எல்லாமே செவியோடு செய்தியாய் நின்று விட்டு பிறகு டாட்டா  பை..பை.. என்று கிளம்பி விடுகின்றன. தாக்கத்தைக் கொடுக்கும் படியாய் ஒரு மனிதரையும், ஒரு புத்தகத்தையும், ஒரு சினிமாவையும்  ரொம்ப நாளாய் நான் பார்க்காமல் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஈழப்பிரச்சினைக்காக மாணவர்கள் வெகுண்டெழுந்து நடத்திக் கொண்டிருக்கும் மாணவப் போராட்டங்களைத் தவிர வேறெதிலும் எனக்கு ஒரு ஈர்ப்பு இல்லை.

ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை இன்று எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தைப் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிக் கொடுத்தது மிருகத்தனமாய் போரை நடத்திய கொடூரன் ராஜபக்சேதான். எந்த ஆயுதத்தை நாம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான் என்ற கூற்று இப்போது மெய்ப்பட்டுப் போயிருக்கிறது. ஈழம் தமிழக அரசியல் போக்கினைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாய் விசுவரூபமெடுத்திருக்கிறது...! ஈழம் பற்றி பேசாமல் யாரும் இனி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது...!

ஆனால்...

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தீர்களேயானால், மூன்றாவது ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் மிகையான முக்கிய அரசியல் கட்சிகள் ஏதோ ஒப்புக்காக சில போராட்டங்களை அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்துக் கொண்டிருந்தனவே அன்றி உணர்வுப் பூர்வமாய் யாரும் அப்போது ஈழத்தை பார்க்கவில்லை. அப்போதைய ஆளுங்கட்சியான திமுக செய்த எல்லா பிளக் அண்ட் வைட் அரசியல் ஸ்டண்ட்களும்...ஏனோதானோ என்று மக்களை குறைத்து மதிப்பீடு செய்து ஏமாற்றி விடலாம் என்ற ரீதியில்தான் இருந்தது....!!!! இதில் கொடுமை என்னவென்றால் அந்த ஸ்டண்ட் அடித்து அரசியல் செய்யும் மனோபாவத்தை விட்டு அவர்கள் இன்னமும் வெளியே வராததுதான். சமூக ஊடகங்களின் மூலம் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போயிருக்கிறது. ஆன்லைனில் இருப்பவர்கள் ஆஃப் லைனில் இருப்பவர்களிடம் பேசுவார்கள்...

இணையப் போராளிகளுக்கும், உறவுகள், நண்பர்கள் இருக்கிறார்கள். விர்ச்சுவலாய் பேசிக் கொண்டாலும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களே இங்கே உலாவுகிறார்கள் என்பதை எல்லாம் கொஞ்சம் இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. இணையம்.. என்ன செய்யும்..? அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் பத்து வருடங்கள் கழித்து தெளிவாய் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள். 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ரீதியில் பேசி ஓட்டுக் கேட்டு வென்ற அதிமுகவின் தலைமை ஒரு சில நிலைப்பாடுகளை ஈழத்துக்கு ஆதரவாக எடுப்பது போல எடுத்து திமுகவை பிடித்து கீழே தள்ளி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதே அன்றி....உண்மையான ஈழ ஆதரவு என்பது அம்மையாரைப் பொறுத்தவரை ஜீரோ பர்ச்ன்டேஜ்தான். போர் நடந்த போது தமிழகத்தில் அதிமுக எத்தனை அதிரடியான போராட்டங்களை அந்த மக்களுக்காக நடத்தியது...? போர் நடந்த போது அதிமுக தலைமை என்ன செய்து கொண்டிருந்தார்...? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் இன்னமும் நம்மிடம் மிச்சமிருக்கின்றன....

திமுக., அதிமுக என்ற இரு நாடகக் கம்பெனிகளின் கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் பேய் முழி முழித்துக் கொண்டிருப்பதை சாதகமாக்கிக் கொண்டுதான் காங்கிரஸ் உள்பட மற்ற எல்லா தமிழக அரசியல் கட்சிகளும் தங்களின் நகர்வுகளைத் தீர்மானித்துக் கொள்கின்றன, மாறாக தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும், ஸ்திரமான ஒரு மாற்றுக் கட்சியாய் தங்களை முன்னெடுத்து மேலேறி வர சமகாலத்தில் யாருமே இல்லை என்பதே நிதர்சனம்.

விஜயகாந்த் எல்லாம் அரசியல் நடத்தி, தலைமை தாங்கி நமக்கு விமோசனம் வாங்கித் தந்து விடுவாரா என்ன...? திமுகவையும் அதிமுகவையும் ஒரு பங்கில் வைத்துக் கொண்டாலும் சர்வ நிச்சயமாய் விஜயகாந்த் எல்லாம் நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டும். எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பெல்லாம் இல்லை அவர் மீது....இருந்தாலும்.. என்ன கொள்கை இருக்கிறது அவரிடம்..? ஏன் அவரை நாம் மாற்று சக்தியாக பார்க்க வேண்டும்...? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் தெரியவில்லை.

குடிக்க தண்ணீர் இல்லை என்றால் மாற்று என்று கூறி வாழ்வதற்கு ஆசைப்பட்டு விசம் குடித்து செத்து விடுவோமா என்ன....? அப்படி விசம் குடித்து சாக முடிவெடுத்தால் அது எத்தகையதோ அத்தகையது... விஜயகாந்தை ஆதரிப்பது என்பது...!!!!!?

தமிழகத்தின் இப்போதைய தேவை வலுவான மாற்று சக்தி. இளையர்களை வழி நடத்தக் கூடிய தெளிவான அரசியல் பார்வைகள் கொண்ட திடமான கொள்கைகள் கொண்ட ஒரு தலைவர். இப்படியான ஒரு இளைஞர் இருந்தார். அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி, தமிழகத்தின் முதல்வராக்கிப் பார்க்காமல் ...காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டு சடு குடு ஆடி...சறுக்கி விழுந்தவராய் ஆகி விட்டார் கலைஞர். தமிழக அரசியலை இப்படி ஆளுமை செய்தவரும் இல்லை..அசிங்கப்பட்டவரும் இல்லை. ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரசை செருப்பால் அடித்து துரத்தி விட்டு...திமுக வரும் பட்சத்தில்...., தமிழர் நலனை நிஜமாய் உற்று நோக்கி நகரும் பட்சத்தில், அடுத்த இருபது வருட அரசியலை திமுகவால் கண்டிப்பாய் தீர்மானிக்க முடியும்....

ஆனால்.. இதெல்லாம் நடக்குற காரியமாகத் தெரியவில்லை.....

அது போகட்டும்...

சரியான வழிகாட்டுதலும் தலைவர்களும் இல்லாமல் அனாதைப் பிள்ளைகளாக நம் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தாய் அதை அதிகாரத்தால் நசுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முக்காடு விலகி இருக்கிறது.....! உண்மையான தமிழின ஆதரவாளர்கள் அரிதாரமிட்டு தமிழர் ஆதரவு நாடகம் நடத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

சரி கட்டுரையின் முதல் பாராவிற்கே மீண்டும் வந்து விடுகிறேன் . டோரண்டில் எல்லா புதுப் படமும் உடனே உடனே வந்து விடுகிறது. மூன்று சூப்பர் ஹிட் மொக்கைப் படங்களுக்குப் பிறகு....பாலாவின் பரதேசியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் முழுதும் பாலாவை கஞ்சி காய்ச்சிய க்ரீன் கிராஸ் (மிருகங்களுக்கு ப்ளூ க்ராஸ்னா.. மனுசங்களுக்கு க்ரீன் க்ராஸா இருக்கப்படாதா என்ன....? ஆனைக்கு தெலுங்குல அர்ரம்ன்னா.. குதிரைக்கு குர்ரம்தானே...!!!!!) மெம்பர்ஸ் எல்லாம் இப்போது வாய் பிளந்து படம் நல்லா இருக்காம்ல என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

அவன் அடித்த தடி ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னே தெரியாம....பொங்குன பொங்கல்களுக்கு எல்லாம் மெளனமாய் பாலா என்னும் படைப்பாளி பதில் கூறியிருக்கிறான். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம்....அதை திரையில் காட்சியாய் கொண்டு வரும் சிரமத்தை, வலியை ....வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது...

பரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....

அப்போ.....வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா..!


தேவா. S




Comments

//பரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....//
ரெம்ப ரெம்ப சந்தோசம் அண்ணா ..!
ஆளாளுக்கு காச்சி, கழுவி ஊத்திட்டாங்க .இவங்க ஊத்துன ஊத்துல இனிமே வீணாப்போன விமர்சனமே படிக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் .
அவரவர்கள் மேதாவித்தனத்தையும் , ரசனையையும் , அவரவர்கள் படைப்புகளில் காட்டாமல் அடுத்தவர் படைப்புகளிலேயே காட்டுவது வேதனையாக இருக்கிறது .

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...