Skip to main content

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!















ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்லாம் புதியதொரு சிலை செய்யும் சிற்பியொன்றின் கவனத்தோடும், ஆர்வத்தோடும்தான் நானிருந்திருக்கிறேன்...

உன் பிஞ்சுக் கரங்களால் என் கழுத்தினைக் கட்டிக்கொண்டு நீ உறங்கும் இரவுகளை ஏன் விடியவைக்கிறான் அந்த இறைவனென்று எனக்கு கோபங்கள் வந்ததுண்டு. விடியலில் இமை பிரிக்கும் அத்தனை மென்மையோடு உன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு நான் பொருள் தேடச் செல்லும் விடியல்களில் எல்லாம் நான் இராட்சசனாய் மாறி வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதெல்லாம் என் செல்வம் உனக்காக செல்வம் சேர்க்கத்தான்..! நீ பேசிக் கொண்டே இருக்கையில் உன் கிள்ளைத் தமிழை நான் செவிகளில் ப்ரியமாய் வாங்கிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் சொர்க்க நிமிடங்களை எத்தனை கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் யார் கொடுக்க முடியும்...?

முதன் முதலாய் நீ வரைந்த ஓவியமொன்றில் கோடுகளாய் என்னை நீ அடையாளம் காட்டிய அந்த சித்திரத்தில் முதன் முதலாய் என்னை நான் கண்டு கொண்டேன் மகளே...! எத்தனை உறவுகள் என்ன என்னவெல்லாம் சொல்லி என்னை அழைத்தாலும் அப்பா என்று நீ  அழைக்கும் தருணங்களில் எல்லாம் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரொன்று மெல்ல கைகொட்டி சிரித்து மகிழும் ரகசியத்தை நான் யாரிடம் சொல்லி மகிழ்வேனடி மகளே...!

ஆணும் பெண்ணும் வேறல்ல எந்த குழந்தை என்றாலும் ஒன்றுதான் என்று உலகம் சமப்பட்டு பேசிக் கொள்ளும் நாடக வார்த்தைகளை நான் புறம் தள்ளுகிறேன் மகளே...! மகள்களின் பிறப்பில் அப்பாக்கள் நிஜமாய் கதாநாயகர்களாய் ஆகிப் போகும் அதிசயத்தை நீ பிறந்த அன்று நான் உணர்ந்து கொண்டேன்...

எட்டு மாதத்திலொருநாள் முதன் முதலாய் என்னை உறக்கத்தில் நீ தேடி என் கழுத்தை வளைத்துக் கொண்ட கணத்தை என்னை தெய்வம் தேடி இழுத்து அணைத்துக் கொண்டது என் நாட்க்குறிப்பேட்டில் குறிப்பெழுதி வைத்திருக்கிறேன். உன் விழிகளில் நிரம்பிக் கிடக்கும் காதலில் மிகுந்து கிடக்கும் பாசத்தில் அழுத்தமாய் இருக்கும் ஆதரவு ஒன்றை எந்த வார்த்தை கொண்டு நான் எழுதித் தீர்க்க முடியும். 

அப்பா என்ற
மூன்றெழுத்துக்குள்
என்னை ப்ரியங்களால்
பூட்டி வைத்து 
சிரிக்கும் என் தேவதையை
கவிதைகளில் சொற்களுக்குள்
அடைக்க முயன்று, முயன்று  
தோற்றுப் போய்
மீண்டும் மீண்டும்
அவள் முகம் பார்த்து 
மகிழ்ந்தபடியே
சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது
என் வானவில் பொழுதுகள்....!

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகளா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லோரும் உயிர்ப்போடு இருப்பவர்கள் என்று நான் உறுதியாய் சொல்வேன்..!

அட்டகாசமான பாடலோடு நீங்கள் மூழ்கிப் போவது உறுதி என்று நானறிந்திருந்தாலும் தங்கமீன்கள் போன்ற நேர்மையான படைப்புகளை ஆதரித்து படைப்பாளிகளை வாழச்செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்...!




தேவா சுப்பையா..




Comments

Unknown said…
lovely song....

all love it

thanks annna for sharing....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...