Skip to main content

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!















ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்...

ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்லாம் புதியதொரு சிலை செய்யும் சிற்பியொன்றின் கவனத்தோடும், ஆர்வத்தோடும்தான் நானிருந்திருக்கிறேன்...

உன் பிஞ்சுக் கரங்களால் என் கழுத்தினைக் கட்டிக்கொண்டு நீ உறங்கும் இரவுகளை ஏன் விடியவைக்கிறான் அந்த இறைவனென்று எனக்கு கோபங்கள் வந்ததுண்டு. விடியலில் இமை பிரிக்கும் அத்தனை மென்மையோடு உன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு நான் பொருள் தேடச் செல்லும் விடியல்களில் எல்லாம் நான் இராட்சசனாய் மாறி வாழ்க்கையை எதிர்கொள்ளச் செல்வதெல்லாம் என் செல்வம் உனக்காக செல்வம் சேர்க்கத்தான்..! நீ பேசிக் கொண்டே இருக்கையில் உன் கிள்ளைத் தமிழை நான் செவிகளில் ப்ரியமாய் வாங்கிக் கொண்டு சொக்கிக்கிடக்கும் சொர்க்க நிமிடங்களை எத்தனை கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் யார் கொடுக்க முடியும்...?

முதன் முதலாய் நீ வரைந்த ஓவியமொன்றில் கோடுகளாய் என்னை நீ அடையாளம் காட்டிய அந்த சித்திரத்தில் முதன் முதலாய் என்னை நான் கண்டு கொண்டேன் மகளே...! எத்தனை உறவுகள் என்ன என்னவெல்லாம் சொல்லி என்னை அழைத்தாலும் அப்பா என்று நீ  அழைக்கும் தருணங்களில் எல்லாம் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரொன்று மெல்ல கைகொட்டி சிரித்து மகிழும் ரகசியத்தை நான் யாரிடம் சொல்லி மகிழ்வேனடி மகளே...!

ஆணும் பெண்ணும் வேறல்ல எந்த குழந்தை என்றாலும் ஒன்றுதான் என்று உலகம் சமப்பட்டு பேசிக் கொள்ளும் நாடக வார்த்தைகளை நான் புறம் தள்ளுகிறேன் மகளே...! மகள்களின் பிறப்பில் அப்பாக்கள் நிஜமாய் கதாநாயகர்களாய் ஆகிப் போகும் அதிசயத்தை நீ பிறந்த அன்று நான் உணர்ந்து கொண்டேன்...

எட்டு மாதத்திலொருநாள் முதன் முதலாய் என்னை உறக்கத்தில் நீ தேடி என் கழுத்தை வளைத்துக் கொண்ட கணத்தை என்னை தெய்வம் தேடி இழுத்து அணைத்துக் கொண்டது என் நாட்க்குறிப்பேட்டில் குறிப்பெழுதி வைத்திருக்கிறேன். உன் விழிகளில் நிரம்பிக் கிடக்கும் காதலில் மிகுந்து கிடக்கும் பாசத்தில் அழுத்தமாய் இருக்கும் ஆதரவு ஒன்றை எந்த வார்த்தை கொண்டு நான் எழுதித் தீர்க்க முடியும். 

அப்பா என்ற
மூன்றெழுத்துக்குள்
என்னை ப்ரியங்களால்
பூட்டி வைத்து 
சிரிக்கும் என் தேவதையை
கவிதைகளில் சொற்களுக்குள்
அடைக்க முயன்று, முயன்று  
தோற்றுப் போய்
மீண்டும் மீண்டும்
அவள் முகம் பார்த்து 
மகிழ்ந்தபடியே
சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது
என் வானவில் பொழுதுகள்....!

மகள்களைப் பெற்ற அப்பாக்கள் பாக்கியசாலிகளா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் மகள்களைப் பெற்ற அப்பாக்கள் எல்லோரும் உயிர்ப்போடு இருப்பவர்கள் என்று நான் உறுதியாய் சொல்வேன்..!

அட்டகாசமான பாடலோடு நீங்கள் மூழ்கிப் போவது உறுதி என்று நானறிந்திருந்தாலும் தங்கமீன்கள் போன்ற நேர்மையான படைப்புகளை ஆதரித்து படைப்பாளிகளை வாழச்செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்...!




தேவா சுப்பையா..




Comments

Unknown said…
lovely song....

all love it

thanks annna for sharing....

Popular posts from this blog

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...