Skip to main content

படைப்பாளி....!

   

சராசரியான மனோநிலையில் புதிதாய் ஒன்றையும் படைக்க முடியாது. புதிதாய் படைப்பவன் சராசரிகளோடு ஒத்துப் போகவும் முடியாது ஏனென்றால் கிளர்ந்தெழுந்த மனோநிலைகள் பூமிக்கு மட்டும் சொந்தமானது இல்லை. இலக்குகளை நோக்கிய பயணம்தான் லெளகீகவிதி என்றால் பயணம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான் ஒரு படைப்பாளியின் விதி. ஏன் பயணிக்க வேண்டும்...? என்ற ஒரு ஆதரக் கேள்வியை அவன் உங்களை நோக்கி கேட்டால் அதற்கு நீங்கள் கொடுக்கப் போகும் பதில்கள் அவனை ஒரு போதும் திருப்தி செய்ய போவதுமில்லை. 

அவன் வானத்தில் ஒரு நாள் நூறு நிலாக்கள் இருக்கும் மறுநாள் நிலவே இல்லாத அடர் இருளிருக்கும், மற்றொரு நாள் நட்சத்திரங்களால் மட்டும் வானம் நிரம்பிக் கிடக்க இவன் ஒவ்வொரு நட்சத்திரமாய் பெயர்த்தெடுத்து தான் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை வரிகளுக்கு நடுவே வைத்து அலங்கரித்துக் கொண்டிருப்பான். அவன் வாழ்க்கையில் விடியாத இரவுகள் இருக்கும், எப்போதும் சுடும் சூரியன் இருக்கும்....வற்றாதா நதி இருக்கும், பேசும் பசு இருக்கும், பேசாத மனிதர்கள் இருப்பார்கள், சண்டையிடாத காதலிகளும், விஷமற்ற சர்ப்பங்களும், பரந்த புல்வெளிகளும், நிற்காத மழையும், மேகத்தைப் போர்த்திக் கொண்ட மலைகளும், நிலத்தில் நகர்ந்து செல்லும் மீன்களும், கவிதைகள் சொல்லும் பட்டாம் பூச்சிகளும், கனவுகளைச் சொல்லும் மலர்களும்  என்று அவன் உலகத்தில் எல்லாமே இருக்கும்....

கிழிந்த பாயில் அவன் படுத்துக் கொண்டு சமூக முரண்களுக்கு நீதி சொல்லிக் கொண்டிருப்பான். பஞ்சடைந்த கண்களோடு ஒளி பொருந்திய மானுட வாழ்க்கைக்கு தீர்வுகளை யோசித்துக் கொண்டிருப்பான், அடுத்தவேளை புசிக்க ஒன்றுமில்லாவிட்டாலும் தேனில் தோய்த்த பலாச்சுளைகளையும், கோப்பைகளில் வழியும் மதுரசத்தையும், தீரத் தீர இனிப்புகளையும், வயிறு முட்ட அவன் நினைவுகளால் ருசித்துக் கொண்டிருப்பான்.  சமூகத்தின் சராசரி எதிர்பார்ப்புகளுக்குள் அவனை அடைத்துவிட யாரும் சிறு முயற்சி கூட எடுத்து விடாதீர்கள், ஏனென்றால் உங்களின் லெளகீக சடுகுடுக்கள் அவனுக்கு ஒரு போதும் திருப்தியைக் கொடுத்து விடாது.

என்ன வேண்டும் என்று எதிர்பார்த்து இந்த உலகம் காய் நகர்த்துகையில் எதுவும் வேண்டாம் என்று அவன் தீர்மானித்து விட்டு நடனமாட கால்களில் சலங்கை கட்டிக் கொள்வான். கட்டம் கட்டி வாழும் வாழ்க்கை ஒன்றுக்கு அவன் எப்போதும் எதிரானவன். கட்டுப்பாடுகளற்ற பெருவெளிகளுக்குள் புலிப்பாய்ச்சல் பாயும் அவனுக்கு இயல்புகள் என்று ஒன்றும் தனித்துக் கிடையவே கிடயாது. அவனுக்கு வெகுஜனத்தைப் பற்றிய அக்கறைகள் ஏதுமில்லை. ஊர் வாழ நான் வழி சொல்லுவேன் என்று நாகரீக மனிதர்கள் சேவைக்கொடியைத் தூக்குகையில் அவன் கிழிந்து கிடக்கும் அவனின் சட்டையைப் பற்றிய எண்ணமுமற்று ஏகாந்த உலகில் சிறகடித்துக் கொண்டிருப்பான். 

அவனுக்கு நன்றாகத் தெரியும் வாய்ப்புகளை கவனியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோற்றுப் போகிறார்கள் என்று....! எந்த மனிதன் யாரை அடக்கினானோ அவனாலேயே மீண்டும் அடக்கப்படுவான் என்ற வாழ்க்கையின் சூத்திரமும் அவனுக்கு நன்றாகத் தெரியும். யாரும் பேசி இங்கு எதுவும் மாறவில்லை...காலம்தான் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறது என்று அவன் அடித்து சொல்வான். அப்படி இருக்கும் போது அப்படி இருந்தது.. இப்படி இருக்கும் போது இப்படி இருக்கிறது...என்பதுதான் அவன் தேடல் அவனுக்குக் கொடுத்த விடை.

பொருள் பலத்தை வைத்து வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையைத்தான் வாழ்கிறான். பொருள் இல்லாமல் வாழ்பவனும் பொருளற்ற வாழ்க்கையையே வாழ்கிறான் என்பதை அவன் தெரிந்து வைத்திருப்பதால்தான் பொருள் என்ற  வார்த்தையை அவன் அகராதியில் அழுத்தம் திருத்தமாக அடித்து விட்டு அங்கே அதற்கு பதிலாக அருள், அருள் என்று எழுதி வைத்திருக்கிறான். இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நெறிகள் கொண்ட சமூகத்தை அவன் பைத்தியக்கார உலகம் என்று வர்ணித்துக் கொண்டிருக்கையில் இந்த உலகம் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது. அவன் அதை சட்டை செய்வதும் இல்லை.

வாழப் பிறந்தவர்கள் நாங்கள் என்று மனிதர்கள் அகந்தையோடு மார் தட்டுகையில், இவன் சாகப்பிறந்தவர்கள் நீங்கள் என்று அவர்களிடம் சவால் விடுவான்.  அவன் எழுதுவான்...எழுதுவது யாருக்காகவும் அல்ல..., என்றும் சொல்வான். கேட்டால் பரந்த வானத்தில் அடர்ந்து கிடக்கும் இரகசியங்கள் யாருக்காக சொல்லப்பட்டது...? கடும் வனத்தினூடே அடர்ந்து கிடக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து செல்லும் நதி யாருக்காக படைக்கப்பட்டது....? பாலைவனத்தின் நடுவில் பரந்து விரிந்து கிடக்கும் பெருமணல் வெளி யார் பார்க்க வேண்டுமென விரிக்கப்பட்டது...? ஆழ்கடலில் மானுடர் செல்ல முடியாத தூரங்களை எல்லாம் யாரும் பார்க்கவில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன...?

இருக்குவரையில் இயங்கவேண்டும். இயங்கும் வரையில் புறக்காட்சி என்ற ஒன்று இருக்கும். நீ ஏன் எழுதுகிறாய் என்று அவனிடம் கேட்டால், அவன் உங்களிடம் மழை ஏன் பெய்கிறது என்று கேட்பான். இங்கே எல்லாவற்றையும் யாருக்காகவும் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை என்ற உண்மையை உணருங்கள் என்று எழுத்துக்களால் விழிகள் உருட்டி மிரட்டுவான். அவன் பைத்தியக்காரன் தான்...இயல்பென்று இந்த உலகம் வரைந்து வைத்திருக்கும் எல்லா கோடுகளையும் அழித்த பைத்தியக்காரன் தான்...! அவன் ஒரு போதும் வார்த்தைகளை எழுதுவதில்லை மாறாக அவனின் உணர்வுகளையே எழுதிக் கொண்டிருக்கிறான்.

படைப்பாளியின் உலகம் என்பது உங்களுக்கு விசித்திரமானதாய் இருக்கலாம் ஆனால் அவனுக்கு இந்த உலகின் நடைமுறைகள் மிக விசித்திரமாய் தெரிகின்றன. காட்சிகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் மனிதர்கள் வார்த்தைகளைப் பெற்று பேசிக் கொண்டிருக்கையில் அவன் மெளனத்துக்குள் விழுந்து கிடக்கிறான். வெறுமையில் அவன் வாழ்க்கைக்கான விடையைத் தேடுகிறான். கடவுளை இந்த உலகம் கூறு போட்டுக் கொண்டிருக்கையில் அவன் கடவுள் என்ற வார்தையைக் கடந்து சென்று பெயரில்லாத பிரமாண்டம் ஒன்றை கண்டு விடுகிறான்.

வாழ்க்கைக்கு யாதொரு அர்த்தமும் இல்லையாதலால், ஒரு படைப்பாளியும் எதையும் அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமற்று நகர்கிறான். இதை இப்படி இங்கே செய்யவேண்டும் என்ற வரைமுறை வாழ்க்கை அவனுக்கு வேடிக்கையாய்த் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒன்றை படைக்கும் ஒருவன் இதுதான் வேண்டும் என்று விரும்பி அதைச் செய்ய அமர்வதில்லை. அப்படியாய் அவன் விரும்பி விளைவுகளை மனதில் இருத்தி ஏதேனும் செய்தால் அது வியாபரம் ஆகிப் போகும் என்பது அவனுக்குத் தெளிவாகவே தெரியும். 

லெளகீகத்தோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் அவன் வசித்தாலும், அவனின் படைப்புகளும் சந்தைக்கு வரத்தான் செய்கின்றன. வியாபரம் செய்யவே உருவாக்கம் செய்யப்பட்ட ஒன்றோடு, வெகுஜனத்தின் விருப்பத்திறாகவே அலங்கரித்துக் கொண்டு சந்தைக்குள் உலாவும் ஜிகினாக்களோடு, இவனின் வரைமுறையற்ற உணர்வுச் சித்திரங்களும் விற்பனைக்கு வருகிறது. அலங்காரித்துக் கொண்ட செயற்கைக்கு அருகில் கரடுமுரடான இவனது கற்பனைகளும் காட்சிப்படுத்தப் படுகின்றன. விற்பனைக்கென்றே பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட ஒன்றோடு......வரைமுறையற்ற எண்ணங்களிலிருந்து தோன்றிய வார்த்தை வடிவங்கள் ஒரு படைப்பாளியின்  உணர்வினைத் தாங்கியபடி படைக்கப்பட்ட ஒன்று, ஒரு மாயப் போட்டிக்கு வருகிறது..

முதலாவது விற்பனைக்கென்றே உருவானது, இரண்டாவது உருவானதால் விற்பனைக்கு வந்தது. இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் ஒன்றென்றுதான் உலகம் சொல்லும், ஏனெனில் இந்த உலகத்துக்கு வசீகரிக்கும் வார்த்தைகளும் ருசிக்கும் சொற்களும், முகஸ்துதி மனிதர்களுமே அவசியம்...

இங்கே யாருக்கும் தங்களின் சுயத்தைப் பற்றிய அக்கறைகள் கிடையாது. தன்னை எப்போதுமே வேறு யாரோவாகவே கற்பனை செய்து கொண்டு கோபப்பட்டு, சிரித்து, அழுது, புலம்பி கடைசியில் கடைவாயில் எச்சில் ஒழுக செத்துப் போகிறார்கள். மரணம் இங்கே எல்லோருக்கும் சமமாய் வழங்கப்படுகிறது. என்ன ஒன்று மனதின் இயல்புகளோடு திட்டமிட்டே வாழும் ஒருவன்...எதிர்பாராமல் இது இன்னதென்று அறியாமல் செத்துப் போகிறான்....

மனமற்ற நிலையில் எதிர்பார்ப்புகளின்றி வாழும் ஒருவன்...ஓ...இன்றுதானா அது என்று....வாஞ்சையோடு மரணத்தை கைகுலுக்கி வரவேற்று மகிழ்ச்சியாய் மரிக்கிறான். அது மரணமாய் இருப்பதில்லை பிரபஞ்சத்திடம் அடையும் சரணாகதியாகவே இருக்கிறது. இயல்புகளைப் படைத்தவன் மரணத்தையும் இயல்பாக்கிக் கொள்கிறான். அதனால் நீங்கள் ஒரு படைப்பாளியை எப்போதும் வரையறை செய்து பார்க்காதீர்கள்,  அவனின் உலகம் வேறு...

எங்கோ பயணிக்கும்
பிரபஞ்ச நகர்வுகளுக்கு நடுவே
அவன் தோட்டம்
எப்போதும் பூத்து...
சிரித்துக் கொண்டுதானிருக்கிறது....
நீங்கள் அவனை 
ஆதரிக்கலாம், எதிர்க்கலாம்
நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்...,
அவன் முரண்பட்டவன்...என்றும்
யாரையும் மதியாத 
திமிர் பிடித்தவன் என்றும்
ஏதேனும்....ஒரு
கருத்து கூட கொள்ளலாம்...
ஆனால்...
அவனோ யாருமற்ற 
தனிமையின் அந்தக் கணத்தில்
பேரமைதியின் தாலாட்டுப் பாடலை
கேட்டபடி...
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்...!



தேவா சுப்பையா...



Comments

வலைச்சரத்தில் காயத்ரி அக்கா அவர்கள் உங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள்...

http://blogintamil.blogspot.in/2013/08/4.html

இந்தப் பதிவை படித்துவிட்டு வந்து கருத்து இடுகிறேன் அண்ணா.

இங்கே யாருக்கும் தங்களின் சுயத்தைப் பற்றிய அக்கறைகள் கிடையாது. தன்னை எப்போதுமே வேறு யாரோவாகவே கற்பனை செய்து கொண்டு கோபப்பட்டு, சிரித்து, அழுது, புலம்பி கடைசியில் கடைவாயில் எச்சில் ஒழுக செத்துப் போகிறார்கள். மரணம் இங்கே எல்லோருக்கும் சமமாய் வழங்கப்படுகிறது. என்ன ஒன்று மனதின் இயல்புகளோடு திட்டமிட்டே வாழும் ஒருவன்...எதிர்பாராமல் இது இன்னதென்று அறியாமல் செத்துப் போகிறான்...

------

நிதர்சனம்... அருமை அண்ணா.
Seeni said…
arumaiyaana vilakkam...

nantri!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...