Skip to main content

அந்திமக் கனவுகள்...!


உன்னை சந்தித்த நாளும் கிழமையும் எனக்கு ஞாபமில்லை என் சித்திரமே..ஆனால் முதல் சந்திப்பிலேயே என்னை ஐ லவ் யூ என்று தட்டச்சு செய்ய வைத்த உன் காதலை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எத்தனையோ அபத்தங்களை தருவித்திருக்கும் இணையத் தாய் நம்மைப் போன்ற காதல் குழந்தைகளையும் பெற்று தான் போட்டிருக்கிறாள். முகமறியாமல் அகம் அறிந்து காதல் கணைகளை வீசிக்கொள்ளும் ஒரு அற்புத அனுவத்தை ஒரு காலத்தில் கடிதங்களும், பின்பு தொலைபேசிகளும், தற்போது இணையமும் செய்து கொண்டிருக்கின்றன.

ஏதோ ஒன்றைத் தேடி நான் வலைவீசிக் கொண்டிருக்கையில் என் வலைக்குள் விழுந்த மீன்கள் உன்னுடைய எழுத்துக்கள். முதன் முதலாய் உன் கவிதை வரிகளை எதேச்சையாய் பார்த்த நான் திணறித்தான் போய்விட்டேன்.  யோசித்த படியே நான் அவற்றை வாசிக்க வாசிக்க அவற்றை நான் சுவாசிக்கத் தொடங்கி இருந்தேன். உன் கவிதைப் புத்தகத்தில் கவிதையை நான் பார்க்கவில்லை வார்த்தைகளாய் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தை நான் பார்த்தேன். எதார்த்தமாக என் இணைப்பில் வந்த நீ எனக்கு எல்லாமாகிப் போன கதையை காதலின் வெற்றி என்பதா இல்லை நாம் காதலை வென்றோம் என்பதா?

முதல் இணைய உரையாடலில் நீ என்னிடம் உரையடிக் கொண்டிருந்தாய், உன் மந்திர வார்த்தைகளோடு நான் உறவாடிக் கொண்டிருந்தேன். காதலிக்க வேண்டும் என்ற உணர்வை எப்படி வெறுமனே வார்த்தைகள் கொடுத்துவிட முடியும் என்று நான் என் புத்தியோடு மல்லுக் கட்டிக்கொண்டிருக்கையில் எதார்த்ததை கனவு வென்றேதான் விட்டது. நான் ஒரு ஓவியன்... என்று எத்தனையோ பேரிடம் நான் என்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் முதல் முறையாக...ஒர் ஓவியத்திடம் நான் ஓவியன் என்று அறிமுகம் செய்து கொண்டது எனக்கு ஒரு வித்திசமான அனுபவம்தான்.

என் காதலை உன்னிடம் சொன்னேன். ஒரு கைக்குழந்தையை வாங்கிக் கொள்ளும் கவனத்தோடும் பரிவோடும் நீ காதலை வாங்கிக் கொண்டாய்....

அது ஒரு நீண்ட இரவு...நாம் இருவரின் இம்சைகளையும் இரு வீட்டு தட்டச்சுக்களும் சகித்துக் கொண்டிருந்த ஒரு வசீகரமான ராத்திரி.  ஐ லவ் யூ என்று அடித்து அடித்தே நாம் களைத்துப் போயிருந்த பொழுதில் போனால் போகிறது என்று வெகு நேரமாய் போரடிக் கொண்டிருந்த உறக்கத்திடம் வேறு வழியின்றி நாம் இருவரும் தோற்றுப் போனோம்....

காதலை உரையாடலாய் தொடங்கி நகர்த்திக் கொண்டிருப்பது வலியோடு கூடிய ஒரு சுகம். அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போ என்று உடம்பிலிருக்கும் அத்தனை ஹார்மோன்களும் கட்டளையை பிறப்பிக்க அவற்றை நிதானமாய் பார்த்துக் கொண்,டு பார்க்காமல் காதலிக்கும் ஒரு பக்குவ நிலைக்கு நகர்ந்து செல்தல் என்ன அவ்வளவு எளிதா..? நவீனத்தின் வளர்ச்சியில்

ம் என்றால்...வாய்ஸ் சாட்....
ஏன் என்றால் வீடியோ சாட்....
உடனடியாய்
தொலைபேசி எண்கள் பரிமாற்றம்...
எதிர்ப்பார்ப்புகளோடான சந்திப்புகள்
ஏமாற்றமான திருப்பங்கள்...

என்று மூன்று நாளில் ஒடிந்து விழும் காதல்கள் கோடியைத் தாண்டும். என் கவனமெல்லாம் நீ எப்படி இருப்பாய் என்பதாய் இல்லை. நான் எப்படி உன்னிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதாய்தான் இருந்தது. பார்த்துக் கொள்ளாமல் பேசுகையில் உருவத்தைப் பற்றிய அக்கறைகள் இல்லாமல் உணர்வுகளால் தழுவிக் கொள்ளும் நிஜ சுகத்தை நாம்  அனுபவித்துக் கொண்டிருந்தோம். அதிகமாய் மனம் ஈடுபடாத போது கற்பனைகள் இல்லாத உணர்வின் தன்மைகளை நம்மால் உணரமுடியும். நீயும் நானும் காதலை காதலாய் செய்து கொண்டிருக்கையில்....காதலால் நமக்கு  போதும் போதுமென்னும் அளவிற்கு கவிதைகள் கிடைத்தன. பல நேரம் நம் வார்த்தைகள் இனிக்கவும் சில நேரம் கரிக்கவும் செய்யும். கண்ணீரோடு நாம் போட்டுக் கொண்ட சண்டைகள் எல்லாம் காதலோடு மீண்டும் வலுவாய் நம்மை கட்டியணைக்கச்  செய்தன.

மூன்று வருடங்கள் கழித்து உன்னை முதன் முதலாய் நேராய் பார்த்த அந்த காலைப் பொழுதில் உன் விழிகளில் அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த காதல் கண்ணீராய் ததும்பிக் கொண்டிருந்தது. விழிகளால் சொல்ல முடியாத ஒரு காதல் காதலே இல்லை. உன் விழிகள் என் விழிகளை வாஞ்சையாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது எவ்வளவு நேரம் என்று எனக்கு தெரியாது ஆனால் உன்னை பார்த்துக் கொண்டிருந்த போது நான் உயிரோடிருப்பதற்கான காரணம் என்னவென்று மட்டும் தெளிவாக உணர்ந்து கொண்டேன். காதலிப்பது பெரிய விசயமில்லை அந்தக்காதலை திருமணமாக மாற்றும் போது காதலை நிறைய பேர்கள் தொலைத்து விடுகிறார்கள் என்று நான் உன்னிடம் சொன்ன போது...நீ சப்தமாய் சிரித்தாய்...

யாரென்று அறியாது பேசிக் கொண்டிருந்த போதும் காதலே விஞ்சி நின்றது, உருவமாய் அறிமுகம் ஆன பின்பும் காதலே விஞ்சி  நிற்கிறது திருமணத்துக்குப் பிறகு வேறென்ன எஞ்சி நிற்கும்..? என்று கேட்டாய்....

உன் கரம் பிடித்த அந்த நொடியில் நிச்சயிக்கப்பட்டது நம் திருமணம். திருமணம் என்னும் நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக சடங்கை சம்பிரதாயத்திற்காய் செய்து கொண்டது நமது காதல். இதோ எனக்குள் ஜீவனாய் நிறைந்து போயிருப்பவளே உன்னுடைய உயிரை பற்றிக் கொண்டு படரும் கொடியாய் வளர்ந்து செழித்து பூத்து நிற்கிறது என் காதல்....

என் இரவுகளுக்கும் பகல்களுக்கும் உன் பெயரைதான் எழுதி வைத்திருக்கிறேன் அம்மு.......என் சுவாசம் நீ....

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
வேறெங்குதான் பெய்யும்
மழை....?!
........
........
........
வாசித்து விட்டு டைரியை பெருமூச்சோடு மூடி வைத்து விட்டு கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

ஏன் தாத்தா...... எப்ப பாத்தாலும் அந்தப் பழைய டைரிய எடுத்துப் படிச்சுட்டே இருக்கியே...என்னதான் இருக்கு அதுல...யார்ட்டயும் கொடுக்கவும் மாட்டேன்ற....

பத்தாவது படிக்கும் பேரன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்...

சொல்லு தாத்தா....மறுபடி கேட்டான்....

" காதல் " என்று சொல்ல நினைத்தேன்....

பிறகு.. ஒண்ணும் இல்லப்பா சும்மா...நீ போய் படி.....அவனை விரட்டினேன்.

தனிமை எனக்கு தேவைப்பட்டது. எல்லாமாய் இருந்து விட்டு ஒரு நாள் அவள் போய்விட்டாள்...

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....!

நினைவுகளைத் துணையாக்கி விட்டு
நீங்கா துயில் கொண்டவள்
என் நெஞ்சுக்குள் மட்டும்
விழித்துக் கொண்டிருக்கிறாளே...
அது எப்படி...?



தேவா சுப்பையா..




Comments

அது அப்படித் தான்...!
அது எப்படி...
இத்தனை அழகான ரசனையான எழுத்தை எங்களையும் ரசித்துப் படிக்க வைப்பதற்காகத்தான்...

அருமை அண்ணா...
கலக்கிட்டீங்க...
ஜீவா said…
எல்லாமாய் இருந்து விட்டு ஒரு நாள் அவள் போய்விட்டாள்...

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....!///
மனச என்னவோ பண்ணிடுச்சு
ஜீவா said…
எல்லாமாய் இருந்து விட்டு ஒரு நாள் அவள் போய்விட்டாள்...

நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....!/// மனச என்னவோ பண்ணிடுச்சு
ezhil said…
அந்திமக் கனவு அல்ல அந்திமக் காதல்....அதற்கு வயதுண்டா என்ன?

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...