Skip to main content

ஊமை என்றால் ஒரு வகை அமைதி...!


பசித்திருக்கையில் தாயின் முலை தேடி பக்கத்திலிருக்கும் துணியை எடுத்துச் சுவைக்கும் குழந்தையைப் போல சுவைத்து விட்டு நான் பசித்தே இருக்கிறேன் எப்போதும். ஏதோ ஒரு துணி கிடைத்து விடுகிறது இல்லையேல் என் விரல் சுவைத்து நானே பசி தீர்த்துக்கொண்டதாய் எண்ணிக் கொள்கிறேன். தீராத பசியை தீர்ந்தது போன்றெண்ணிக் கொண்டு தற்காலிகாய் வயிறு எக்கிப் போய் ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கையில் ஏதோ ஒரு தருணத்தில் தாக்கம் நிறை அனுபவமாய் என் வாய் நிறைக்கிறது அவ்வப்போது பிரபஞ்சத்தின் பஞ்சு முலை. 

தாயிடம் பாலருந்தாத யாரும் இந்த பூமியில் இல்லை. அது வெறுமனே பசியாற்றிக் கொள்ளுமொரு இடமாய் மட்டுமா நமது அனுபவப் பதிவில் பதிந்து கிடக்கிறது...? அல்ல....அது பசிக்கு தொடர்பில்லாத பெரும் திருப்தியை கொடுத்திருக்கிறது. சலனமில்லாத பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. கதகதப்பான இளம் சூட்டை நமக்குள் பரப்பி உறுதியாய் இரு பிள்ளாய் என்று உறுதி கொடுத்திருக்கிறது. பாலருந்துகையில் தலை தடவும் தாயின் வாஞ்சையை வார்த்தைப் படுத்தவோ அல்லது அதற்கு சமமான ஒரு அன்பொழுகு நிலையை காட்சிப்படுத்தவோ அல்லது கற்பிதம் செய்து கொள்ளவோ இயலவே இயலாது. பரிபூரணம் என்ற வார்த்தையை பிராயத்தில் வாசித்தும், விவாதித்தும், தேடியும் கொண்டிருக்கும் அத்தனை பேரும் அதை அனுபவித்த இடம் அது.

வாழ்க்கை முழுதும் அந்த வாஞ்சை நிமிடங்களை நினைவுகளுக்குள் பதுக்கிக் கொண்டு மீண்டும் மீட்டெடுக்குமொரு ஆசையிலேயே நாம் கல்வி கற்று, பொருள் ஈட்டி, காதல் கொண்டு, காமம் செய்து, அதிகார சுகபோகங்களைத் தேடி ஓடினாலும், பின்னாளில் நம்மால் அப்படி ஒரு அதிர்வு நிறை உணர்வு நிலையை எட்ட முடிவதில்லை அல்லது எட்டினாலும் அதிலேயே நம்மால் லயித்துக் கிடக்கவும் முடிவதில்லை. வாஞ்சையோடு அணைத்துப் பாலருந்தும் நெகிழ் நிகழ்வுகளை பல நேரத்தில் எனக்கு காலம் கொடுத்திருக்கிறது. பொருளோ, பொருளற்றதோ, சலனமோ, சலனமற்ற சூன்யமோ, என்னை நெஞ்சணைத்து தலைவருடி லெளகீக உலகின் பொருளற்ற தன்மை கடந்த ப்ரியத்தை எனக்குள் ஊற்றி இருக்கிறது. உயிரை உயிர் வருடிக் கொடுக்கும் நிகழ்வது.

பல படைப்புகளை வாசித்து கடந்து சென்று கொண்டிருக்கையிலேயே கதை மறந்து, கதைக்களன் மறந்து, அதன் கரு மறந்து, கதை மாந்தர் விட்டு விலகி கையிலிருக்கும் புத்தகத்தையும் நழுவ விட்டு விட்டு நிலைகுத்திப் போன பார்வையுடன் எங்கோ வெறித்து நான் கிடந்த நாட்கள் அனேகம். இந்த வாழ்க்கையில் என்னோடு சினேகமாய் இருக்கும் யாதுமே என்னோடு தொடர்பில் இல்லாத ஒன்றாகவே இதுவரையில் இருந்திருக்கிறது. ஒரு இசையோ, ஒரு கதையோ ஒரு கட்டுரையோ, அல்லது ஒரு திரைப்படமாகவோ அது என்னை திக்குகளற்ற பெருவெளிக்கு என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.

பாலுமகேந்திரா சாரும் இப்படியாய் அவரின் படைப்புகள் மூலம் என்னை மூர்ச்சை நிலைக்குத் தள்ளி இருக்கிறார். ஒரு தலைசிறந்த படைப்பாளியோடு பேசிச்சிரித்து சினேகமாயிருப்பது அல்ல அவர் மீது கொண்ட ப்ரியம் என்பது. அவரின் படைப்புகளோடு கூடிக் குலாவி அது கொடுக்கும் ப்ரிய முத்தங்களை கிளர்ச்சியாய் வாங்கிக் கொண்டு சிலாகித்துக் கூடிக் கிடப்பது வரைமுறையற்ற பேரானந்த வார்த்தைப்படுத்த முடியாத சுகத்தைக் கொடுக்கவல்லது. நான் பாலுமகேந்திராவின் கதைநேரத்தை அடிக்கடி யூ ட்யூபில் பார்ப்பதுண்டு. அது எப்படியானது என்றால் வெறுமனே ஒரு பார்வையாளன் பொழுது போக்க அமர்ந்து கொண்டு ஏதோ ஒன்றை பார்த்துச் செல்வது போல அல்ல...

சினேகமாய் அந்த மனிதர் சொல்லும் கதைகளுக்குள் பரவிக் கிடக்கும் காமத்தின் உச்சம் நிகர் நிகழ்வுகளை புத்திக்குள் போதையாய் ஊற்றிக் கொண்டு மது குடித்த வண்டாய் கிறங்கிக் கிடப்பதை ஒத்தது. மனதுக்கு பிடித்த பெண்ணொருத்தியின் பின்னால் அவளுக்கு நம் காதலறியா வண்ணம் சுற்றித் திரியும் சுகமொத்த நிலை அது. பதின்மத்தில் காதல் செய்ய எத்தனித்த அத்தனை பேருக்கும் நான் சொல்லவரும் நிலையின் பொருள் விளங்குமென கருதுகிறேன். அது புதிது, அது இனிது அது இதற்கு முன்பு எப்போதும் அனுபவித்திராத ஒன்று.. சுகப் பெருவெளியில் இஞ்ச் இஞ்ச்சாய் முன்னேறிச் செல்வது.....

முதல் பெண்ணின் ஸ்பரிசம் கொள் நிகழ்வது. நெஞ்சோடு இறுக்கி எதிர்ப்பாலினத்தை அணைத்துக் கொண்டு அவளின் அல்லது அவனின் வாசத்தை நுகர்ந்து அனுபவித்து மகிழ்ந்து கிடப்பது. உடலின் அவயங்கள் உரசிக் கொள்ள அத்தனை செல்களும் உச்ச லயத்தில் விழித்துக் கிடக்க மெல்ல மெல்ல முன்னேறி உதட்டோடு உதடு வைத்து பற்றி இழுக்கையில் உயிர் போய் உயிர் வருமே அந்த வேதனையை ஒத்தது. காமம் தீர்ந்து புரண்டு படுத்து உறுப்புகள் தளர உறங்கிப் போவதல்ல அது....

அது எரியும் நெருப்பு. அதிரும் சப்தம். அடர்த்தியான மெளனம், தெளிவான மரணம், மொட்டிலிருந்து பிரிந்து விரியும் மலர். மெலிதான மழைக்குப் பின் வாசம் பரப்பும் மண். தெளிவற்ற துல்லிய தெளிநிலை. பித்த நிலை ஆனால் அதுதான் சுத்த நிலை. வார்த்தைகளற்றுப் போக வைக்கும் அப்படியான படைப்பாளிதான் பாலுமகேந்திரா....அப்படியான படைப்புகள்தான் அவர் படைத்தளித்து  நம் சமூகத்திற்கு சமைத்துக் கொடுத்திருப்பது. வரிகளைப் படித்து விட்டு தத்துவ மமதை கொள் உலகில் வரிகளுக்கு இடையில் சுவாரஸ்யத்தை ஒளித்து வைக்கும் பிரம்மா அவர்....

சப்தங்களில்லாத சினிமாவை, மெளனத்தைச் போதனை செய்யும் இசையை, வெற்று விழிகள் காண முடியாத காட்சிகளை திரைக்குள் கொண்டு வந்து விட்டு சலனமில்லாமால் நடந்து போக பாலுமகேந்திரா போன்றவரகளால் மட்டுமே முடிகிறது. அவர்கள் ஏதோ ஒன்றை சொல்ல விரும்பி அதை தெளிவாய் சொல்லிவிட்ட நிறைவில் பின் மெளனித்து விடுகிறார்கள். ஒரு படைப்பைக் கொடுத்த நிறைவுதான் ஒரு படைப்பாளியாய் அடுத்த படைப்பு நோக்கி நகரவைக்கிறது. வர்த்தகத்திற்காய்  ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத ஆதி உணர்வைக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளிக்க்கு கொடுப்பது பற்றிதான் எப்போது கவலை...கொடுப்பது வரைதான் அவன் பித்தனாய் ஆடிக் களிக்கிறான்.பிசிறில்லாமல் தெளிவாய் படைக்க வேண்டும். அந்த படைப்பு புரிந்துணர்வோடு பார்ப்பவனை வாசிப்பவனை சொக்க வைக்க வேண்டும்...அவ்வளவுதான்...! அவன் ஆட்டம் என்பது...

இலக்குகளற்ற பிரபஞ்ச நடனம். சீற்றமாய் ஆடும் நடராஜ தத்துவத்தை ஒத்தது. அவன் ஆடி முடித்தவுடன் அமைதியாகிறான். அமைதி என்றால் வெறும் அமைதி அல்ல... அது பாழுக்கும் பாழ் பெரும்பால் அப்பாழுக்கும் பாழ் அப்பால் உள்ள பேரமைதி. நிறை நிலை. அவன் படைத்து முடித்தவுடன் படைப்பும் தனக்கும் இருக்கும் தொடர்பறுத்துக் கொள்கிறான். பின் படைப்புகள் நம் பார்வைக்கு வருகின்றன. இனி அது அந்த படைப்பை வாசிப்பவனின், பார்ப்பவனின் கேட்பவனின் பொறுப்பு அந்த படைப்பை எப்படி சீராட்டுவது என்பது....

நான் இன்னமும் தலைமுறைகள் படம் பார்க்கவில்லை. இரண்டு இடங்களில் விமர்சனம் படித்ததோடு சரி. பாலுமகேந்திரா தன்னுடைய முதுமையினை சாட்சியாக்கி ஒரு பார்வையாளனாய் சமகாலத்து சமூகத்தைப் பார்த்து தனது உணர்வுகளை பதிய வைத்திருக்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டேன். தலைமுறைகள் டீசரையும் அதனுடையை புரோமசனல் வீடியோவையும் பார்த்து மெய்யறிந்த பித்தனாய் விவரிக்க வார்த்தைகளற்று நான் பிரமித்துப் போய் நிற்க காரணம் இளையராஜா என்னும் இன்னுமொரு ராட்சசன்.....

என்னை இசை அது.....!!!!!!!? படம் பார்க்காமலேயே டீசரின் பின்ணனி இசையை மட்டும் கேட்டு நம்மை விம்மி அழ வைக்கிறாரென்றால் அந்த மனிதரின் புத்தியில் சுரந்த அதிரசமான என்றென்றும் தீராத அமுதிசையை என்னவென்று சொல்ல...!!!? அது நரம்புகளை முறுக்கேற்றுகிறது... நினைவுகளை அழிக்கிறது...நான் என்ற நமது கர்வத்தை துவம்சம் செய்கிறது.... நம்மை அறியாமலேயே எதை நோக்கியோ கை கூப்பச் சொல்கிறது.....

கால் மடக்கி நிலம்பட விழுந்து கதறி அழச் சொல்கிறது. ஏன் அழவேண்டும்....? தெரியாது.....? யாரிடம் கை கூப்புகிறேன் தெரியாது....? இது நல்லதா? தெரியாது. கெட்டதா...? அதுவும் தெரியாது. என்னதான் நான் சொல்ல வருகிறேன் இங்கே...? அதுவும் தெரியவில்லை.

தலைமுறைகளின் கதையும், டீசரும் பின்ணனி இசையும் என்னை இங்கே விரட்டி இருக்கிறது. நான் எழுத்துக்களாய் ஓடி இருக்கிறேன். அவ்வளவுதான்.

வாழ்க்கையில் அழுத்தம் திருத்தமாய் வாழ்ந்து, முதுமையில் மெல்ல மெல்ல இந்த வாழ்க்கையின் மைய அச்சு விட்டு நகர்ந்து விலகி, சுழற்சி நின்று போவதற்கு முன்னால் எனக்கும் இந்த வாழ்க்கைக்கும் என்ன தொடர்பிருந்தது இதுவரையில்...? இனி என்னமாதிரி இருக்கும் அந்தத் தொடர்பு....? இந்த உலகத்தில் நான்..யார்? இந்த உலகம் எனக்கு யார்...? மையப் பொருளாய் என்னை நினைத்திருந்தேன்.....

இதோ அன்று பச்சை பசுமையாய் இருந்த நான் இன்று சருகாகி  உதிரப்போகிறேன்.......அர்த்தமாயிருந்தேன்....அர்த்தமில்லாமல் என்னை காலம் ஆக்கும்.....புரிதலோடு நடந்து கொண்டிருக்கிறேன்.....

ஏதேதோ தோன்றுகிறது எனக்கு.....! இங்கே (துபாயில்)தியேட்டரில் போய் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.... எப்படியாவது தலைமுறை படத்தைப் பார்த்து விட்டு.....தாயின் மடியிலிருந்து நான் பாலருந்தி வாஞ்சையாய் அவள் என் தலை தடவிய சுகத்தை....

உங்களிடம் பகிர்வேன்...!



தேவா சுப்பையா... 






Comments

துவம்சம் செய்வது உண்மை... தொடர வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...