Skip to main content

ப்ரியமுள்ள பாலுமகேந்திரா....!



ப்ரியமுள்ள பாலுமகேந்திரா......

ஒருமையில் நான் உன்னை எழுதினாலும் ஒருமைக்குள் உன்னை அடைத்துவிடவோ அல்லது அழைத்து விடவோ முடியாதென்பதை நீ அறிவாய். வாழ்க்கை ஒருமையிலிருந்து வெடித்து சிதறிய வேடிக்கைகளின் நிகழ்வுதான் ஆனாலும் அது ஒருமை என்று அறியப்படுவதில்லை. அது எல்லாமே ஆனால் ஒன்று. நீயும் அப்படித்தான் என் ஆசானே....!!!!!!! நீ எல்லாமே ஆனாலும் ஒன்று.  நீ எந்தப் புள்ளியைத் தீட்டினாலும் அது ஓவியமாகிப் போன அதிசயம் நிகழ்ந்தேறியது. நீ செதுக்கிய செல்லுலாய்டு சித்திரங்களில் மழை பெய்தால் அதை திரையில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு குளிரெடுக்கும். பூக்களை நீ காட்சியாக்கினால் வண்ணத்துப் பூச்சிகள் தேனெடுக்க திரையை மொய்க்கும்....

நீ எழுதிய கவிதைகளைத்தான் நாங்கள் திரைப்படம் என்று கொண்டோம். உன் காட்சி அமைப்பும், பாத்திரப்படைப்புகளும் கதைக் களங்களும் ஏகாந்தத்தை அனுபவிக்க ஆவல் கொண்ட மனிதர்களுக்கு சிறகுகள் கொடுத்தன. கோணங்கள் நிறைந்த இவ்வாழ்க்கையின் எல்லா கோணங்களின் கோணல்களையும் அளவெடுத்தன உனது விழிகள். நீ பார்த்தாய். உன் விழிகளால் நாங்களும் பார்த்தோம். சிக்கெடுக்க முடியாத சிக்கல்களுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் எதார்த்தத்தை நீ எழுதிப்பார்த்த போதெல்லாம் அது உனக்குக் திரைக்கதையாகிப் போனது.  

உன்னை சந்திக்க விரும்பினேன் பாலுமகேந்திரா. வாழ்வில் நீ போட்டு வைத்திருக்கும் அத்தனை முடிச்சுக்களுக்குப் பின்னாலும் இருக்கும் ரகசியம் யாதென்று கேட்க விரும்பினேன் பாலுமகேந்திரா. உன் காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் சூட்சும முடிச்சின் வேர் என்னவென்று அறிய விரும்பினேன் பாலுமகேந்திரா. பதின்மத்தின் ஆசைகளை திரையில் இறக்கி வைத்து நீ சொன்னது கதையல்ல இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களும் பதின்மத்தை தொட்ட போது செய்ததுதான் என்று பகிர நினைத்திருந்தேன். இதோ  உன் மரணச்செய்தி என்னை சம்மட்டியால் தாக்கி இருக்கிறது.  வீடு திரைப்படம் பார்த்து விட்டு ஒரு பகல் முழுதும் அழுது கொண்டிருந்தேன். சந்தியா ராகம் பார்த்து விட்டு மூன்றுநாள் தூங்கவில்லை நான். மூன்றாம் பிறை பார்த்து விட்டு பித்துப் பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தேன். இப்போது உன் மரணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இதோ இந்தக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

வலைப்பக்கங்களில் நீ எழுத வந்த போது உற்சாகமாய் உன்னை பின் தொடர்ந்தேன். உன் எழுத்தில், உன் படைப்பில் உன் படங்களில் நீ எதைப் பகிர முயன்றது எல்லாமே மெளனம்தானே பாலுமகேந்திரா? உன் மரணத்தின் மூலமும் இப்போது நீ அதைத்தானே நீ பகிர்ந்து சென்றிருக்கிறாய்? எத்தனை சிற்பிகளை உருவாக்கிய பட்டறை உன்னுடையது? எத்தனை படைப்பாளிகள் உன் கை பிடித்து அச்சரம் எழுதிப் பழகி இருக்கிறார்கள்? உன்னைப் போல வரவேண்டுமென்ற கனவில் உன்னின் சிறுபகுதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் உன் படங்களை பைத்தியக்காரர்களாய் பார்க்கும் படைப்பாளிகள் எத்தனை பேர்? ஆமாம்....பாலுமகேந்திரா நீ தமிழ் சினிமாவின் ஆலமரம். உன்னை புத்தி செதுக்கிய யுத்திகளை பயன்படுத்தாத, உத்வேகம் கொள்ளாத கலைஞன் யாரும் கிடையாது இங்கே. நீ படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் இங்கே பலபேர் கேமராவை எப்படி பயன்படுத்துவது என்றே அறிந்து கொண்டனர்.

செயற்கை கோள் தொலைக்காட்சியில் நீ இயக்கிய கதை நேரம் பார்த்து அதில் தொலைந்து போனவர்கள் கோடி பேர்கள். உனது பலம் கதை அல்ல. சூழல்!!!!!!! கதை சொல்கிறேன் பேர்வழி என்று கரடி விடுபவர்களுக்கு மத்தியில் சூழல்களை உணர்வு ரீதியாய் திரையில் பதிவு செய்தவன் நீ. ஒரு காட்சி, ஒரு களம், கதை மாந்தர் எல்லாம் கடந்து அந்த சூழல்தான் உனக்கு முக்கியம். மனிதர்களின் சந்தோசத்தை, துக்கத்தை, இழப்பை, தேடலை, காதலை, கோபத்தை, விரக்தியை, காமத்தை உன்னைத் தவிர வேறு யாரால் அச்சர சுத்தமாக மொழி பெயர்க்க முடியும்?

இந்த அத்தியாயம் இன்றோடு முடிந்தது. இது போல ஒன்றை யாராலும் இனி எழுத முடியாது. இது இதுவாய் எப்போதும் இருக்கும். இது போல வேறு ஒன்றும் இங்கே இனி இருக்கவே இருக்காது. தலைமுறைகள் படம் எடுக்கும் போதே நீ தடுமாறி போயிருந்ததை கவனித்தேன் பாலுமகேந்திரா. இது உன் கடைசிப் படமாயிருந்து விடக்கூடாது என்றும் கொஞ்சம் கவலை கொண்டேன். உணர்வு ரீதியான உன் படத்தை தமிழகம் கடந்து வியாபாரம் செய்ய யாரும் முன்வராததால் இதுவரையில் உன் கடைசி படத்தை பார்க்கமுடியவே இல்லை எனக்கு. ட்ரைலர் பார்த்து விட்டு படத்தை எனக்குள் நான் ஓட்டிப்பார்க்க முயன்று முயன்று ஒரு குருடன் புறாக்காட்சி ஒன்றை தனக்குள் உருவாக்க முயலும் ஒரு இயலாமையோடு இன்று நின்று கொண்டிருக்கிறேன்.

உன்னைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே....மனிதர்களின் அனுமானங்கள். ஷோபாவோடு நீ கொண்டிருந்த காதலை நான் உன் திரைப்படங்களிலிருந்து புரிந்து கொண்டேன். உன் காட்சியாக்கங்களில் இருந்து அது எவ்வளவு கவித்துவமானது என்று புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் பக்கங்கள் செழிப்பாய் இருக்கும் போது அதை பாராட்டிப் பேச பெரும்பாலும் யாரும் வருவதில்லை. ஏதேனும் ஒரு சரிதலில் வாழ்கை சற்றே தடுமாறுகையில் அங்கே குற்றம் சொல்ல கோடி பேர்கள் வருவதுண்டு. உன்னைச் சுற்றியும் கோடி விரல்கள் குற்றம் சொல்ல நீண்டன. கலாச்சாரத்தை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் உன் காதலுக்குள்ளும் களங்கம் சுமத்த எழும்பிய நாவுகள் இங்கே ஏராளம். அதெற்கெல்லாம் நீ மறுப்பு கூட தெரிவித்தது கிடையாது. உனக்கு தெரியும் உன் காதல் ஆழமானது. உன் காதலி உனக்கு கவிதையானவள் என்று.....

நீ ஒரு அழகிய காதலன். நீ காதலித்தவைதான் உன் திரைப்படங்களில் காட்சிகளாய் வெளிப்பட்டிருந்தன. உன் காதல்தான் ஷோபாவை உன்னோடு சேர்த்துக் கொண்டது. உன் காதலே ஷோபாவிற்குப் பிறகும் உன்னை மெளனமாய் அவளைப் பற்றிய நினைவுகளோடு வாழ வைத்தது. படைப்பாளிகளை எந்த சம்பிரதாயமும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த சாங்கியமும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. ஒழுக்க நெறிகளை வைத்துக் கொண்டு உன்னை வரையறை செய்ய முடியாது. வரையறுக்க நினைப்பவர்களின் புத்திகளின் வரையறைதான் அறுந்து போகும். நீ நூலில்லாமல் பட்டம் விட்டவன். காட்சிகளை விழிகளால் மனிதர்கள் கண்டு, கண்டு கடந்து செல்லும் போது நீ அவற்றை கவிதைகளாய் பார்த்து, பார்த்து லயித்துக் கிடந்தவன்.

காலம் உனக்கு எறிந்த கடைசிப் பந்தில் நீ தலைமுறைகளை செதுக்கி வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டாயா பாலுமகேந்திரா...?! கனவுகளையும் கற்பனைகளையும் காட்சிகளாக்கிய கேமராக் கவிஞனே சென்று வா...! உன் ஆழ்ந்த நித்திரையில் உனக்குள்  கோடி கனவுகள் தோன்றும். உனக்குள் நீயே சாட்சியாய் நின்று பெரு நித்திரையினூடே நீ இடைவிடாது படைத்துக் கொண்டே இரு....

அது தாகம் நிறைந்த இளம் படைப்பாளிகளுக்குள் விதையாய் இறங்கும். விருட்சமாய் விரியும். விழுதாய் நிலம் தொடும். தலைமுறைகள் கடந்தும் அதனால் மானுடர் பயனடைவர்.

 நீ மரணிக்கவில்லை... உன் வாழ்க்கைப் பயணித்தின் திசை மாற்றிக் கொண்டாய் அவ்வளவே......!  ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி 
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!



தேவா சுப்பையா...






Comments

அவரது ஆதமா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ஆழ்ந்த அஞ்சலிகள் பாலுமகேந்திரா சார்...!
அருமையான இயக்குனர், ஒளிப்பதிவாளர்! ஆழ்ந்த இரங்கல்கள்!
பாலுமஹேந்திரா ஒரு சகாப்தம் ஆலமரம் சாய்ந்தாலும் அதன் விழுதுகள் மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட விழுதுகள் அது வீறு கொண்டு எழுந்தாலும் அது அந்த வீரனின் ஆளுமையையே பறைசாற்றும் .....

எமது ஆழ்ந்த இரங்கல் என் மானசீக குருநாதனுக்கு...

எத்துனை இரங்கல்கள் என் வாய் மொழிந்தாலும் என் தீபத்தின் அந்த ஆளுமைத்திருவுருவம் என் மரணம் வரை நிலலாடும்... வலிகளுடன் வேங்கையின் மைந்தன்...

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...