Skip to main content

மரத்தடி...!


கவிதை எழுதலாமா?  காஃபி குடிக்கலாமா? எதுவும் செய்யாமல் வெறுமனே பால்கனிக்குப் போய் வேடிக்கை பார்க்கலாமா? இல்லை ஏதேனும் புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிவிட்டு அதன் தாக்கத்தில் எங்கோ போய் விழுந்து புரண்டு கொண்டிருக்கலாமா? பிரியமான இசையைக் கேட்கலாம் கூடத்தான்.  தமிழின் ஆகச்சிறந்த படங்களின் தொகுப்பினை சேமித்து வைத்திருக்கும் போல்டர் கூட புஷ்டியாகிவிட்டது. பற்றாக்குறைக்கு நண்பர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பார்க்க சொன்ன உலகத் திரைப்படங்கள் வேறு கூடிக் கொண்டே போகிறது. யூ ட்யூபில் பார்த்து பார்த்து தொகுத்து வைத்திருக்கும் பாடல்களை, இன்னபிற காணொளிகளையும் கேட்டு முடிக்க தொடர்ச்சியாய் ஒருவாரம் கூட ஆகலாம்.

யூ ட்யூப் தொகுப்பில் இன்னதுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ராஜா சார், ரகுமான், எம்.எஸ்.வி, தியாகராஜ பாகவதர் என்று தொடங்கி கெனி ஜியின் சாக்ஸ்போன்,  பெஸ்ட் ஆஃப் மொசார்ட், பண்டிட் ஹரிபிரசாத் செளரஷ்யாவின் புல்லாங்குழல், யார் யாரோ வெறுமனே பாடி தொகுத்து வைத்திருக்கும் கர்நாடக சங்கீதத் தொகுப்பு, இஷா அமைப்பினரால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள், சைவ சித்தாந்தம் பற்றிய தொகுப்புகள், உலகின் புகழ்பெற்ற மேடைப் பேச்சுக்கள்,   இதைக் கேளுங்கள் நன்றாயிருக்கும் என்று கூறி அவ்வப்போது நண்பர்கள் கொடுத்த இணைப்புகள், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு என்று எப்போது எது பிடிக்குமோ அதை தொகுத்து வைத்துக்கொண்டு பொறுமையாய் பிறகு மாடு அசை போடுவது போல ஒவ்வொன்றாய் கேட்பதும் எனக்குப்பிடிக்கும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாய் கேட்க விடாமல் வேறு ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுவதால் இதுவரையில் முழுமையாய் அவற்றையும் கேட்டு முடிக்க முடியவில்லை. 

ஏதோ ஒன்றை செய்யலாம். இல்லை எதுவும் செய்யாமல் சிவனே என்று உட்கார்ந்திருக்கலாம். சுற்றி ஓராயிரம்  விசயங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பதே நலம். இந்த உலகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி விவாதம் செய்ய வைக்காத எதையும் நான் செய்யத் தயார்தான். இப்படி இருப்பதாலேயே நண்பர்களோடு கூட பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இருப்பதில்லை. வெகு நேரம் பால்கனியில் அமர்ந்து அதிகாலை வானத்தின் நீல நிறத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த செய்தியும் என்னிடம் இல்லை என்று வானமும் என்னைப் [போலவே மெளனமாய் இருந்தது. தூரத்தில் ஒரு குட்டி மேகம் நடைபயிலும் குழந்தையைப் போல தத்தித் தத்தி மிதந்து கொண்டிருந்தது. என்ன இருக்கும் இந்த வானத்தின் முடிவினில்? எங்கே செல்லும் இந்த அகண்டவெளி என்று நான் சிறுவயது முதலே யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதில் ஒன்றும் கிடைக்காதுதான் ஆனால் யோசிப்பது சுகமாய் இருக்கிறது எனக்கு. விடுமுறை நாளில் அதிகாலையில் வேலை ஏதும் இல்லாமல் என்னைப் போல எழுந்து கொள்ளும் பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நடக்கலாம் என்று கீழே இறங்கினேன்.

இரவின் வாசனையோடு மெலிதாய் விடிந்து கொண்டிருந்தது பொழுது. முழு இரவும், முழுப் பகலும் ஒருவிதமானது என்றால், விடிந்தும் விடியாத அதிகாலையும், மெல்ல இருட்டத் தொடங்கும் அந்திப் பொழுதும் வேறு விதமானது. வசீகரமான அந்தக் கலவை எனக்குப் பிடிக்கும். ஒரு ஓவியன் வர்ணங்களை குழப்பி புது நிறத்தை பெற முனைவது போல இருக்கும் இரவின்நுனியும் பகலின் முடிவும். வேலை நாட்களில் மனிதர்களோடு பேசி, ஓடி, ஆடி, கோபப்பட்டு, சிரித்து, நடித்து, ஏமாந்து, ஏமாற்றி, மிகப்பெரிய நாடகத்துக்குப் பிறகு அசுரத்தனமாய் மாலைப் பொழுதை கடந்து வரவேண்டி இருக்கும். ரசிக்க அப்போது ஒன்றுமே இருக்காது. இப்போது எல்லாம் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வாய் இருந்துவிட மாட்டோமா என்று ஏங்கியபடியேதான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பது விடுமுறை என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியாது.  ஓய்வு என்பது இடையூறு இல்லாமல் பிடித்த விசயத்தில் லயித்துக் கிடப்பது. 

யோசித்துக் கொண்டே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். ஆள் அரவமற்ற தெருக்களுக்குள் அதிகாலையிலேயே எழுந்து கொண்ட பட்சிகள் உணவு தேட வெளியே பறப்பதற்கு முன்பாக மரங்களிலமர்ந்து காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தன. அவை மகிழ்ச்சியாக  ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டிருக்கலாம், அதிகாலையிலேயே பசி எடுத்த குஞ்சுகள் அம்மா பறவையையோ அல்லது அப்பா பறவையையோ பார்த்து பசியில் விய்யா.. விய்யா என்று கத்திக் கொண்டிருக்கலாம். குஞ்சுப் பறவையைத் தன் சிறகால் அணைத்து இதோ உணவோடு வந்துவிடுகிறேன் என்று தாய்ப்பறவை அலகால் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம், காதல் பறவைகள் உரசிக் கொண்டு உலக மொழிகளில் இதுவரையில் எழுதப்படாத கவிதைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம், வலியால் சிலதும், கோபத்தில் சிலதும் கத்திக் கொண்டிருக்கலாம்....

வழி நெடுக மரம். மரம் முழுதும் பறவைகள். ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு விடியல். ஒவ்வொரு பிழைப்புப் போராட்டம். நடந்து கொண்டே வெகுதூரம் வந்து விட்டேன். ஒரு மரத்தின் தடித்த வேரின் மீது போய் அமர்ந்தேன். மரத்தின் மீது வாட்டமாய் சாய்ந்து கொண்டேன். பச்சையாய் ஈரத்தோடு இருந்த மரத்தின் பட்டைகள் செதில் செதிலாய் வெடித்துக் கோடுகள் ஆழமாய் இருந்தன. பழைய மரம் போல இருக்கிறது. எனக்கு என் அப்பத்தாவின் நியாபகம் சட்டென்று வந்தது. நகரத்தின் மரங்களும், கிராமத்தின் மரங்களும் ஒரே செய்தியைத்தான் ஒரே உணர்வைத்தான் தருகின்றன. மரங்கள் என்ன மனிதர்களா? இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, ஏமாற்றி வாழ்ந்து செல்ல.

எங்கு நட்டாலும் மரம் மரம்தான். கார்பன் மோனாக்சைடை உமிழ்ந்து காற்றை மாசுபடுத்த ஆயிரம் வாகனங்களை மனிதன் கண்டுபிடித்து அதை அறிவியல் சாதனை என்று மார்தட்டிக் கொள்வதைப் போல மரங்கள் மார்தட்டிக் கொள்வதில்லை. அவை போதும் போதும் என்னுமளவிற்கு அவற்றின் கடைசிக் காலம் வரை மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இருப்பது கிடையாது. இயற்கையின் பிச்சையில் வாழ்ந்து கொண்டு எல்லாம் இவனே செய்தது போல இறுமாந்து கொள்கிறான். பாவம் மரங்களும் இன்ன பிற தாவரங்களும். அவை ஒரு மனிதனை உருவாக்கி, சுமந்து, பின் அவன் மரணிக்கும் வரை அவனோடே பயணிக்கின்றன. பின்னொரு நாள் ஏதோ ஒரு மரம் விறகாகி பின் அது உயிரற்ற மனிதனின் உடலோடு பஸ்பமாகி தன் வாழ்க்கையின் இறுதியை எட்டிப் பிடித்து வேறு வடிவம் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் எரியும் போது மரங்கள் அழுவதில்லை ஏனென்றால் அவை வாழ்வில் ஊறிக் கிடப்பவை. இருப்பதும் இல்லாததும் பெரியவிசயம் இல்லை அவற்றுக்கு மனிதர்களைப் போல.

நான் நீண்ட பெருமூச்சோடு மரத்தின் வேர்களுக்குள் கிடந்தேன். விடியற்காலையில் இப்படி மரத்தின் மடியில் ஓய்ந்து கிடப்பது சுகமாயிருந்தது. குருக்கத்தியில் நான் என் வீட்டுப் பின்புறத்து தோட்டத்தில் இருக்கும்  பருத்த புளிய மரத்து வேர்களுக்கு இடையே இப்படி கிடப்பதுண்டு என்பதை இங்கே தட்டச்சு செய்து முடிக்கும் போதுதான் குருக்கத்தி பற்றி தெரியாதவர்களுக்கு என்னவென்று தெரியும் குருக்கத்தி பற்றி என்று யோசிக்கிறேன்.  தொடர்ச்சியாய் என்னை வாசிப்பவர்களுக்கு குருக்கத்தியையும் என்னையும் பிரித்துப் வைத்து பார்க்கக் தெரியாது. குருக்கத்தி என் பூர்வீக குக்கிராமம். நகரத்தில் மூச்சு திணற பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தானின் மூதாதையர்கள் மண்ணோடு  கட்டிப் புரண்ட இடம். கொத்திக் கொண்டும், உழுது கொண்டும், விதைத்துக் கொண்டும் கண்மாய்க் கரையோரம் படுத்துறங்கி வற்றி போன கண்மாய் தூர்ந்து போவதற்கு முன்னாலாவது வா மழையே.... என்று ஏக்கமாய் வானம் பார்த்த மனிதர்கள் அவர்கள். செம்மண் சரளையும், கருவேல மரங்களும் இப்போதும் என்னிடம் ஊருக்குச் சென்றால் நிறைய பேசுவதுண்டு. நிறைய வலிகளையும் அந்த வலிகளோடு வாழ்க்கையை கொண்டாடிய மனிதர்களையும் பற்றி அதிகம் புரிந்து வைத்திருப்பவை அவைதான். மழை பெய்தாலும் அவற்றுக்குத் தெரியும், மனிதன் மரித்தாலும் அவற்றுக்குத் தெரியும்.

என் உடலுக்குச் சொந்தமான பூமி அது. அங்கேதான் இந்த உடல் காற்றாயிருந்தது, மண்ணில் தாது சத்துக்களாய் கிடந்தது. விதையாயிருந்தது. பழமாயிருந்தது, காய்கறிகளாயும் இழை, தழையாயும் இருந்தது. அங்கிருந்துதான் இந்த உடல் கிடைத்தது. சொந்த ஊர் என்பது வெறுமனே முன்னோர்கள் வாழ்ந்து மரித்த இடம் மட்டுமல்ல. அது இந்த உடலாய் ஆவதற்கு முன்பு  பல்வேறு சத்துப் பொருட்களாயும் இந்த சதைக் கோளம் பரவிக்கிடந்த இடம். எந்த பாட்டன் வைத்த மரம் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் எல்லோரும் என் வீட்டு பின்னாலிருக்கும் அந்த மரத்தடியில் விளையாடி இருக்கிறார்கள். இன்னமும் போதும் போதுமென்னும் அளவிற்கு காய்த்துக் கொடுக்கிறது அந்த புளியமரம்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தோடு அந்தமரத்தின் வேர்களுக்குள் நான் ஒடுங்கிக் கிடப்பேன்.  மிக பாதுகாப்பான ஒரு கதகதப்பான இடமாய் அது இருக்கும். தாயின் கருவறையில் மிதந்து கிடக்கும் சிசுவாய் அங்கே நான் எண்ணமற்ற வெளியில் மிதந்து கிடந்திருக்கிறேன். மரத்தின் வேர்களுக்குள் போய் அமர்ந்த அடுத்த நொடியில் மனம் நின்று போகும். மரம் இருக்கும். மரம் மட்டுமே இருக்கும். மீண்டெழுந்து நான் பல நாட்கள் உடல் புகுந்திருக்கிறேன். பட்டை பட்டையாய் இருக்கும் அந்த மரத்தினூடே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும், சிறு பூச்சிகள், மரம் முழுதும் பறவைகள், என்று மிகப்பெரிய சம்சாரி அந்த மரம். பெரிய கை. என் வீட்டுக் கொல்லையில் நின்று கொண்டு பலரின் மரணத்தை அறிந்து வைத்திருப்பவள். பல திருமணங்களை பார்த்து ரசித்திருப்பவள். சண்டைகளையும் சச்சரவுகளையும் பார்த்து பார்த்து புரிந்து வைத்திருக்கும் அனுபவஸ்தி.

ஏப்ப்ப்பத்தா......என்ன செஞ்சுகிட்டு இருக்க நீய்யி.....என்று கேட்டுக் கொண்டேதான் அவளருகே செல்வேன். கை வைத்து மரத்தை தடவி, கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சம் மரத்தை விரலால் சுரண்டி, அதன் பச்சைத் தன்மையை விரலுக்குள் வாங்கி முகர்ந்து, புளிக்கும் காயையும், இனிக்கும் பழத்தையும் எடுத்து ஆவலாய் கடித்து தாயின் முலை பற்றி இழுத்து பாலருந்தும் குழந்தையாய் நான் உண்டிருக்கிறேன். அது வெறுமனே பார்ப்பவர்க்கு  ஒரு மரம். அதை வெறுமனே பார்த்தபடி ஆயிரமாயிரம் எண்ண ஓட்டத்தோடு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கலாம். அந்த மரம் மட்டுமல்ல இந்த உலகிலிருக்கும் எந்த மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அங்கே அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இளைப்பாற எத்தனையோ ஜீவன்கள் அதன் நிழலிலும் அதன் மீதிலும் வந்து அமர்ந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு நேரம் ஆனது என்று யோசிக்காமல் என் நகரத்து விடுமுறை தினத்தின் காலையில் அந்த மரத்தின் மடியில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்திருந்தேன். புத்தகம் படிப்பதைக் காட்டிலும், இசையைக் கேட்பதைக் காட்டிலும், தத்துவம் பேசுவதைக் காட்டிலும், கடவுள் தேடுகிறேன் என்று மமதை மொழியை மனதோடு பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்....... மொழியற்ற இயற்கைக்குள் விழுந்து கிடப்பதே பெரு ஓய்வு என்று எனக்குத் தோன்றியது.

இனி ஓய்வென்று கான்கிரீட் சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு ஏதேதோ செய்வதைக் காட்டிலும், ஞானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏதோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்போம் என்று யோசித்தபடியே....

எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  மரங்கள் எல்லாம் மெளனமாயிருந்தன.


தேவா சுப்பையா...






Comments

மரத்தடி...

கண்மாய்க்கரையில் வேப்பமரத்தடி...
அம்மன் கோவிலுக்குப் பின்னே வேப்பமரத்தடியில் அருவாள் தீட்டி வழுவழுப்பாய் இருக்கும் வேரில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிய நாட்கள்...

என எல்லாவற்றையும் மனசுக்குள் மீண்டும் தென்றலாய் பரவிச் சென்றது...
அருமை... அருமை அண்ணா.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...