Skip to main content

சாக்தனானேன்...!


சைவம் என்பது பிறப்பால் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட வழிமுறையாய் எனக்கு ஆகிப் போனதால் சைவம் பற்றி அறிந்து கொள்ள நிறைய நாட்கள் மெனக்கெட்டு இருக்கிறேன். அம்மாவின் தாத்தா எங்கள் பாட்டையா காலம் வரை கடுமையான சைவர்கள் நாங்கள். தலைவாசல் ஒரு தெருவிலும் கொல்லைப்புறம் அடுத்த தெருவிலும் இருக்கும் அம்மாவின் பூர்வீக வீட்டின் நடு ஹாலில் ஆளுயர தட்சிணாமூர்த்தி படம் தேக்கு மரத்தால் பிரேம் போடப்பட்டு பிரம்மாண்டமாய் இருக்கும். குரு நிலையை போதிக்கும் அந்தப்படத்தை நான் அதற்கு முன் யார் வீட்டிலும் பார்த்திருக்கவில்லை. ஞானம் என்றால் என்னவென்று வார்த்தைகளின்றி நேரடியாய் விளக்கும் நுட்பங்கள் நிறைந்த படம் அது. ஒரே ஒரு சித்திரத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்ச தன்மையையும் கொண்டு வந்தது யார்? யார் இதை யோசித்தது? தட்சிணாமூர்த்தியின் தத்துவத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

வார்த்தைகளால் விளக்க முற்பட்ட மாத்திரத்தில் அந்த உண்மை உடைந்து போய்விடும். இந்த உண்மையைத்தான் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சமூக அரசியலுக்கும் பின்னால் இந்த தத்துவமே வெகு ஆழத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. கவிதைகளுக்குள்ளும், கதைகளுக்குள்ளும், மனிதர்களின் எல்லா உணர்வுகளுக்கும் பின்னாலும், இன்ன பிற சமூக சிந்தனைகளுக்குள்ளும் அடிப்படையாய் தட்சிணாமூர்த்தி தத்துவமே விளங்குகிறது. இந்த தத்துவமே உலகம் முழுதும் பரந்து விரிந்து கிடக்கும் மானுட சமூகத்திற்கு அந்த அந்த நிலத்தின் வேதங்களாய் எழுந்து நின்றது. இருந்ததனை  இருந்தது போல இருந்து காட்டிய வேதநாயகனாய் ஒரு உயர்சிறப்பில் மனிதர்களுக்கு விளங்கும் வகையில் ஒரு பால்வகையைச் சுட்டி அதை சித்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் சர்வ நிச்சயமாய் வெகு அற்புதமான மனிதராய் இருந்திருக்க வேண்டும்.

சனாதான தருமம் நேரடியாய் சத்தியத்தை ஒரே ஒரு படத்தில் பளீச் என்று சொல்லியிருப்பது எனக்கு வெகு வியப்பாய் இருந்தது. எத்தனையோ புத்தகங்களை வாசித்து, வழிபாடுகள் செய்து, மந்திர ஜபங்கள் செய்து, தவங்கள் செய்து கடுமையாய் முயற்சித்து, சொர்க்க நரகங்கள் சொல்லி மனிதர்களை மிரட்டி சாந்தப்படுத்தி இதை உணரத்தான் இங்கே எல்லாமே செய்யப்பட்டது. வாழ்க்கையின் எல்லா சுக துக்க அனுபவங்களும் இந்த உண்மையைதான் நமக்கு மெலிதாய் காலங்கள் தோறும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மாரியம்மன் கோயில் திருவிழாவும், முருகன் கோயில் காவடியும், பிரதோஷ விரதமும், புனிதவெள்ளியும், கிறிஸ்துவின் பிறப்பும், இஸ்லாமின் அடி ஆழமும் இந்தத் தத்துவத்தை வலியுறுத்தவே எல்லா சட்ட திட்டங்களையும் எழுதி வைத்தன. ஏதோ இருக்கிறது என்று சொல்லி சொல்லி எல்லா சமூகத்து வழிமுறைகளும் மனிதர்களை அன்பாய் இருக்க சொல்லி போதித்து பேரமைதிக்குள் அவர்களைப் பிடித்து தள்ளவே முயன்றன.

மதங்கள் என்றில்லை, சித்தர்களும், நாயன்மார்களும், பிறவி மூலம் அறிந்த பித்தர்களும் ஒவ்வொரு விதத்தில் இதையே செய்ய முயன்றனர். வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடச் சொன்னார். வாடி வாடி அழுது அந்த வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றி அந்தப் பயிர் நனைந்து வேர்கள் நீரினை உறிஞ்ச மெல்ல சிலிர்த்து பசுமையாய் நிமிர்ந்து நின்று அன்பாய் நம்மை பார்த்து சிரிக்கையில் நம் மனம் படக் என்று ஒடுங்கிக் கொள்கிறது. நான் நீரூற்றினேன். நீர் பூமியிலிருந்து கிடைத்தது. பூமியிலிருந்தல்லவா நீயும் வளர்கிறாய். நீர் பூமி கொடுத்தது. பயிர் பூமியிலிருந்து வளர்வது. நான் இந்த பூமியிலிருந்து வந்தவன். இந்த பூமிப் பந்து ஆகாசத்தில் மிதப்பதற்கு முன்பு சூரியனாய் இருந்தது. இந்த சூரியன் சூரியனாய் ஆவதற்கு முன்பு தூசுக்களாலும் இன்ன பிற வாயுக்களாலும் நிரம்பி இருந்தது. இந்த தூசுக்களும் பலவிதமான வாயுக்களும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தோன்றின. இவை எல்லாம் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் சும்மாதானே இருந்திருக்கும். ஒன்றுமில்லாமல் மெளனமாய் இருந்திருக்கும். சப்தமில்லாமல், அசைவு இல்லாமல் சலனமில்லாமல் ஒரு பேரமைதி. அடர் கருமை. அது இருந்தது. சரி எப்படி இருந்தது? அது இருப்பது போல இருந்தது. 

இருப்பது போல என்றால்....என்ன? அது எப்படி இருந்ததோ அப்படி. இதைப் பற்றி கூடுதலாய் சொல்ல முடியாது. அது இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியது. அந்த இருத்தலை நாம் பார்த்தோ, படித்தோ, விவாதித்தோ அறிந்து கொள்ள முடியாது. சரி அப்படி என்றால் எப்படித்தான் நாங்கள் அறிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அதை அறிந்து கொள்ள அந்த குணமற்ற, நிறமற்ற, சுவையற்ற, அதிர்வற்ற,  சலனமற்ற தன்மையாய் நாம் இருந்துதான் பார்க்க முடியும். இருந்து பார்க்க எல்லாம் விடவேண்டும். ஒன்றுமில்லாத தன்மையை உணர ஓராயிரம் கருத்துக்களை ஏற்றுக் கொள்தல் சரியான வழிமுறையா? 

ஒன்றுமில்லை என்று சொல்லாமல் சொல்ல, இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியதை விளக்க ஒரு படம். பாட்டையா இந்தப் படத்தை ஏன் வைத்திருந்தார் என்று நான் கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லும் பக்குவத்தோடு வீட்டில் யாரும் இப்போது இல்லை. எல்லோருக்கும் அது ஒரு படம் என்ற அளவோடும், நல்லது கெட்டதுக்கு அந்தப் படத்தின் முன்பு நின்று வேண்டிக் கொள்வதோடும் முடிந்து போகிறது. சத்தியம் மட்டும் வாங்கும் பாத்திரத்திற்கு ஏற்றார் போலத்தான் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஏதேதோ கருத்துக்கள் கொண்டிருப்பவர்களிடமும், யாரோ சொன்னதை நம்பி கற்பனையில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பவர்களிடமும் சத்தியம் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுவதில்லை என்பதை விட எதிர்த்து விவாதம் செய்வது இல்லை என்று சொல்லலாம்.

விவாதத்தால் இங்கே வெல்ல ஒன்றுமே கிடையாது. எல்லாம் சரி என்று நிறுவி பேசும் ஒரு எதார்த்தத்தில்தான் இங்கே எல்லாமே இருக்கிறது. அதனால் சத்தியம் எப்போதும் புரிதல் இல்லாதவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறது. திருத்தவேண்டும் சரியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசரமும் அதற்கு இல்லை. ஏன் தெரியுமா? தவறுகள் வலிகளைக் கொடுக்கும் வலிகள் அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவம் புரிதலைக் கொடுக்கும். புரிதல் தெளிவினைக் கொடுக்கும். தெளிவு சத்தியத்தை நோக்கி இழுத்துச் செல்லும். சிலருக்கு ஒரு சறுக்கல்  புரிதலை கொடுத்து விடும். பலர் மேலும் மேலும் அடிபட்டு ஜென்மங்களாய் இந்தப் புரிதலுக்காக அதிர்வு கொண்ட ஆன்மாவாய் பயணிக்க கூடும்.

சிவம், சைவம் வாழ்க்கை முறையாகிப் போன பின்பு சாக்தம் எனப்படும் சக்தி வழிபாடு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் போயிருந்தது எனக்கு. ஆதிநிலையிலிருந்து கொண்டிருக்கையில் அதுவே உண்மை என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு சாக்தம் என்பது வேறு எதாகவோ பட்டது. இதனாலேயே விபூதியைத் தவிர வேறு எதுவும் பூசமாட்டேன். எரிந்து போன பிணத்தின் சாம்பல் வெண்ணிறம். விபூதியும் வெண்ணிறம். நானும் ஒரு நாள் வெண் சாம்பலாவேன். குங்குமம் எதற்கு..? சிவப்பு எதற்கு? ரத்தத்தின் நிறம் எதற்கு? அடர் வசீகரம் எதற்கு நெற்றியில், சூடு தணிந்துதானே...வெண்ணிறம். உஷ்ணமான செந்நிறம் எனக்கெதற்கு என்று ஒதுங்கி இருந்திருக்கிறேன்.

சாக்தம் சிவனின் பெரும் தாண்டவம் என்பதை எனக்கு காலம்தான் உணர்த்தியது. சிவனின் இயங்கு நிலையே சக்தி. சூடு. அனல். அதிர்வு. உயிராய் உடலுக்குள் இருக்கும் போது லெளகீகத்தின் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஓட்டத்தை நிறுத்தினால் தடுக்கித்தான் விழவேண்டும். நான் ஓட்டத்தை நிறுத்தி தடுக்கி விழுந்தேன். ஓட்டம் சுத்தமாய் நின்று போக வேகமாய் ஓடவேண்டும். வேகமான ஓட்டத்திற்குப் பிறகு அது நின்று போகும் போது அது பூரணமாகும். ஓட்டம் சக்தி. பூரணம் அல்லது அமைதி சிவம்.

சிவத்தின் தன்மையை ஆண்கள் தாங்கி இருக்கிறார்கள். ஆண்கள் அடிப்படையில் இயங்காப் பொருள்கள். சூழல்தான் ஒவ்வொரு ஆணையும் இயக்குகிறது. சூழல் பெரும்பாலும் வாழ்க்கை என அறியப்படுகிறது. வாழ்க்கை என்பது ஒரு ஆணுக்கு பெண்ணோடு நிகழ்வது. நேர், எதிர் சக்திகள். இது ஈர்க்க அது அது நோக்கிப் பாய்கிறது.  அதிர்வு நிலையிலிருக்கும் சிவமாய் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களிடம் அந்த ஓட்டம் அதிகமாயிருக்கிறது. இயக்கம் பெண். தீச்சுவாலயாய் பெண் இருக்கிறாள். ஆண்கள் இந்த உலகத்தில் அதிகம் இயங்குகிறார்கள். அப்படி இயங்குவதற்கு காரணம் பெண்கள். எப்படி இந்த வசீகரம் வந்தது? 


வெறுமனே காமத்திற்காக என்று சொல்லிவிட முடியாது. இயக்கத்தின் தன்மை அடிப்படையில் பெண்களிடம் மட்டுமே இருக்கிறது. வேகமாய் இயங்கும் ஆண்கள் ஆண்களாய் தோற்றத்தில் இருந்தாலும் அவர்கள் பெண்களே...! உலகில் சாதித்திருக்கும் அத்தனை ஆண்களிடம் நிரம்பிக் கிடப்பது பெண் தன்மையே! இளகு தன்மையே இயங்கும். பெண் தன்மை என்பது இளகிய தன்மை. அப்படியான ஆண்கள்தான் வெற்றியாளர்களாக பரிணமிக்கிறார்கள். பெண்தன்மை இல்லாமல் வெற்றி பெறும் ஆண்கள் சர்வாதிகாரிகளாக மாறிப் போகிறார்கள். அவர்களிடம் கருணையோ, நீதியோ, சத்தியமோ, இருப்பதில்லை.

சாக்தம் இயக்கத்தின் குறியீடு. இயக்கம் என்பது நெருப்பு. நெருப்பின் அம்சம் குங்குமம். யோசித்துக் கொண்டிருந்த போதே சைவனாயிருந்த நான் ஒற்றைப் பாய்ச்சலில் சாக்தனாகிப் போனேன். திருவேற்காடு போயிருந்த போது அது நிகழ்ந்தது. கருவறைக்குப் பக்கத்தில் அமர்ந்து சக்தி மந்திரங்களைக் கேட்க கேட்க அந்த அதிர்வுகளால் சூடேறிப் போயிருந்த உஷ்ணமான சூழலும், அக்னியாய் இருந்த அந்த கருவறையும் மின்னலைப் போல என்னை தாக்கிய பொழுதில் சாக்தம் என்பது வாழ்தல். சாக்தம் என்பது அன்பு செய்தல்.

சாக்தம் என்பது அந்த சாக்த தன்மை நிரம்பிக் கிடக்கும் பெண்களை புலன்களைக் கடந்து உணர்தல், சாக்தம்  என்பது அம்மா, தாய், போராட்ட குணம் என்று உணர முடிந்தது. வாழும் வரை சாக்தம் வேண்டும். இது சிவனின் இன்னொரு கோலம். தன்னில் பாதியென்று தன்னைத்தானே அவன் சொல்லியிருக்கிறான். நான் எப்படி இதை விட்டு தூர போனேன் என்று நினைத்த போது அது என் அறியாமை என்று புரிந்தது.

யோசித்தபடியே குங்குமத்தை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டேன். குங்குமம் இயக்கத்தின் குறியீடு. இருக்கும் வரை இயங்குவேன், அதி உஷ்ணமாய் இயங்குவேன், சீற்றமாய் நகர்வேன் என்று தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ளும் ஒரு சூட்சுமம். இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டுவது என்பது பேரமைதியை விளக்க மட்டுமல்ல, இயங்கும் தன்மையை விளக்கவும்தான் என்று எனக்குத் தோன்றியது. கோயிலின் ஓரத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து கண்களை மூடினேன். 

கோயிலும், சிலைகளும், சுட்டிக் காட்ட எதுவுமில்லா பெருவெளிக்குள் தூக்கி வீசப்பட்டேன்....! 

சாக்தம் வாழ்வு. சிவம் நிறை வாழ்வு. 

வீடு வந்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது, ஓட்டம் நிறுத்த வேண்டுமெனில்.... இன்னும் வேகமாக ஓடவேண்டும். ஓட ஆரம்பித்திருக்கிறேன். ஆமாம்... நானும் சாக்தன்தான்...!



தேவா சுப்பையா...

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...