அது அப்படித்தான். அதிகம் அலட்டிக் கொள்ளாது. வியாக்கியானங்கள் பேசி தன்னை புகழ்ந்து கொள்ளாது. சோகமாய் தலை சாயும் போது அதுவே தோள் கொடுக்கும். கீழே விழும் போது மடி கொடுக்கும். ஆதரவாய் எப்போதும் கரம் பற்றிக் கொள்ளும், பற்றும். கவிதையாய் பேசிக் கொண்டு உரைநடையாய் வாழும் மனிதர்களுக்கு நடுவே பேச வார்த்தைகளின்றி அது மெளனமாய் நடந்து கொண்டிருக்கும்.
அடிக்கடி உணர்ச்சிவசப்படும். கோபத்தில் ஊரையே தீக்கிரையாக்கும். நேசித்து நேசித்து பிரளயம் உண்டாக்கும். பிடிக்கும் என்று சொல்லும். பிடிக்காது என்றும் முகம் திருப்பிக் கொள்ளும். பட்டாம் பூச்சியாய் எப்போதும் பட படக்கும், அந்த படப்டப்பினை கண்டும் மகிழும். அதற்கு தேவைகளென்று ஒன்றுமே கிடையாது. ஒரு கோப்பை தேநீரோடு ஆகாயத்தை வேடிக்கப் பார்த்தபடியே கண் சிமிட்டும், மழை பெய்யும் பொழுதினில் வேண்டுமென்றே குடை மறந்து நடை பயில வா என்று அழைக்கும்.
பேசிக் கொள்ள உலகமே அதனிடம் இருக்கும். பேசாமல் இருக்கவும் அதே உலகம் அதனிடம் இருக்கும். நெகிழ்ச்சியாய் உச்சிமுகந்து, ஆழமாய் நெற்றி வழி தன் அன்பினை செலுத்தும், வாங்கியும் கொள்ளும். கவிதை எழுதுகிறேன் என்று ஏதேதோ எழுதிக் கிறுக்கும். எழுதிக் கிறுக்கியதை பெருங்கவிதை என்று அதுவே வாசித்து விழிகள் விரித்து வாய் பிளக்கும். இருக்கும் போது உதாசீனப்படுத்தும். இல்லாத போது ஏங்கி அழும்.....
ஆமாம் காதல்தான் எத்தனை வலியது. எத்தனை இனியது.
இதோ..
இங்கே உனக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதில் நாம் சந்தித்த நாளில் தொடங்கி
ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்தவற்றை
ஒரு பொக்கிஷத்தை அடைத்து வைப்பது போன்று
என் வார்த்தைகளுக்குள் அடைத்துக் கொண்டிருக்கிறேன்...
மழைநாளில் நீ எனக்கு கம்பளி போர்த்தியதும்
கடுங்குளிரில் நீ நடுங்கிக் கொண்டிருந்த போது
உனக்கு நான் கால் பிடித்து விட்டதும்
இந்த கவிதையில் கவிதையைப் போல தோற்றமளிக்க முயன்றாலும்
நிஜத்தில் அந்த நாட்கள்தான் எத்தனை சுகமானவை...
ஒரு நாள்...
என்னால் நடக்க முடியாமல் மூச்சிறைத்து நின்றபோது
நான் அறியாதபடி கண் கலங்கி எனக்காக
மெதுவாக நடந்து சென்றதை நான் கவனித்து...
கலங்கிப் போனது உனக்குத் தெரியுமா?
காலத்தின் மாற்றத்தில்
நாம் வலுவிழந்து கொண்டே இருந்தோம்...
ஆனாலும்...
உனக்கு மட்டுமே வயதாகிறது என்பாய்
எனக்கு வயதே ஆகதென்று கூறி உன் காதலால்
என்னை எப்போதும் இளைஞனாகவே வரைந்து கொள்வாய்...
உன் நெஞ்சினில் காது வைத்துக் கேட்கச் சொல்லி
அங்கே துடிப்பது இதயமல்ல உன் மீதான காதலென்பாய்...
மிச்சமில்லாமல் வாழ்ந்து விட்டோம் என்று அடிக்கடி நீ சொல்வாய்
இதோ மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு
வழக்கம் போல கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
இதை நீ கவிதை என்று சொன்னாலும் சரி
அல்லது
காதல் என்று சொன்னாலும் சரி...
தேவா சுப்பையா..
Comments