Skip to main content

எப்பவும் நான் ராஜா - I

ஏதோ ஒரு தளத்தில் நின்றபடி கிடைக்கும் நேரத்தில் அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன் நான். இடை இடையே மனதுக்குள் மென்று கொண்டிருக்கும் ஒரு காதல் கட்டுரை, பார்க்க வேண்டிய படங்கள் என்று மெதுவாய் நான் நகர்ந்து கொண்டிருக்கையில்தான் வசந்த் டிவியில் ராஜா சாரின் பாடல்களைப் பற்றிய மனுஷ்ய புத்திரனின் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. தலையை சிலுப்பிக் கொண்டு அவர் அரசியல் பேசும் கொடுமையை எல்லாம் சகித்துக் கொள்ள முடிந்த என்னால்....

வசீகரமான ராஜா சார் பாடல்களைப் பற்றி அவர் சிலாகித்து ஆடிக் கொண்டிருந்த டான்ஸ் கடுப்பைக் கிளப்பியது. கவிஞன், இலக்கியவாதி என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு மனுஷ்யபுத்திரர்கள் இந்த சமூகத்திற்குள் செய்யும் அட்ராசிட்டி மிகக் கொடுமையானது. எது பற்றி வேண்டுமானலும் பேசுவேன், எனக்கு எல்லாம் தெரியும் என்பது அதிகபிரசங்கித்தனம். மனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

பனிவிழும் மலர்வனம்....
உன் பார்வை ஒருவரம்...

இரும்புக் குதிரைகள் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும் இடை இடையே கதோயோடு சேர்த்து பாடல் வரிகளைப் பற்றி அருமையாய் சிலாகித்திருப்பார் பாலா சார். பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க வேண்டு என்ற ஆவல் அந்த நாவலை வாசித்த அத்தனை பேருக்குமே வந்திருக்கும். ரசனை என்பது எப்போதும் அறிவோடு தொடர்புடையது கிடையாது. அது அறியாமையோடு தொடர்புடையது. விழி விரித்து ஒரு பூவை பார்த்து ஆச்சர்யப்படும் குழந்தையின் உணர்வினை ஒத்தது அது. ராஜா சாரின் பாடல்களுக்கு மனுஷ்யபுத்திரன் கொடுத்துக் கொண்டிருந்த தத்துவார்த்தமான விளக்கங்களும், இலக்கிய நடைக்காக அவர் மெனக்கெட்டு தேடி எடுத்து பேசிய வார்த்தைகளும் எனக்கு உவ்வ்வ்வே என்று குமட்டலைத்தான் உண்டாக்கியது.

அவர் பேசி முடித்து பின் அந்த இடைவெளியில் பாடலில் நான்கு நான்கு வரிகளை ஒளிஒலிப்பரப்பிய போது அந்த பாடலில் லயித்துக் கிடக்க முடிவில்லை. காரணம் என்னவென்றால் பாடலின் அழகை வர்ணிக்கிறேன் என்ற பெயரில் மனுஷ் போட்டு விட்ட மேக் அப் நம் புத்திக்குள் ஏற்படுத்தும் ஒரு அயற்சி அப்படியானது. ராஜா சாரின் பாடல்களை எல்லாம் ரசிக்கவும் அது பற்றி சிலாகித்து பேசவும் எந்த வித விசய ஞானங்களும் இல்லாத சாதரண மனிதன் போதும். இது போன்ற நிகழ்சிகளைத் தொகுக்க கொஞ்சமேனும் தன் மேதாவிக் கொம்புகளைக் காட்டிக் கொள்ளாத வெகு இயல்பான யாரோ ஒரு மனிதர் தேவைப்படுகிறார். அந்த மனிதர் அந்த இசை தனக்குள் எப்படியான பரவசத்தை ஏற்படுத்தியது...எந்த மாதிரியான மாற்றத்தை உருவாக்கியது... அந்த இசையால் எப்படி தன் மனது மகிழ்ந்தது அல்லது கனத்துப் போனது என்று சாமனியனின் தோளில் கை போட்டுக் கொண்டு பேசவேண்டுமே அன்றி.....

அடர்த்தியான பொறுக்கி எடுத்த சொற்களோடு ஆஜானுபாகுவான ஒரு முரட்டு ரவுடியைப் போல ஆட்டம் போடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? ராஜா சாரின் இசை ஆச்சர்யமானதுதான் என்றாலும் அது மிக எளிமையானது. வெகுஜன இதயத்துடிப்பின் தாளத்தை எளிதாய் மாற்ற வல்லது. ” மரி மரி நின்னே....”என்று ராஜா சாரின் சாஸ்திரிய சங்கீதத்துக்குள் கதைக்காய் போய் உலா வந்தாலும் சடாரென்று... ” தண்ணித் தொட்டு தேடி வந்த கண்ணுக்குட்டி நான்...: என்று குப்பு சாமியையும், முனுசாமியையும் தாளம் போடவும் வைக்கும். உறக்கம் தொலைந்து போய் மன அழுத்தத்கோடு இருக்கும் மனிதனை....தூளியிலே ஆட வந்த என்று அது தாலாட்டவும் செய்யும்..... 

” பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது...” என்று நம்மை உறும வைக்கவும் செய்யும். அந்தக் காலம் போல பாடலை எழுதி விட்டு அப்புறம் இசை அமைத்தால் என்ன என்று கூட நான் நினைத்திருக்கிறேன்....ஆனால் பின்னர்தான் புரிந்து கொண்டேன், சூழலை இயக்குனர் இசையமைப்பாளரிடம் விவரிக்க அந்த உணர்வினை உள்வாங்கிக் கொண்டு இசை பிறக்கிறது அந்த மெட்டு கதையின் சூழலோடு சேர்ந்து கொண்டு கவிஞனை உலுக்குகையில்.....சிவனின் டமருகத்திலிருந்து பிறக்கும் சப்தமாய் கவிதை பிறக்கிறது. இசையும் மெட்டும் சாட்டையை எடுத்து வீச....பாடல் பிறக்கிறது. மெட்டுக்கு பாட்டெழுதுவது கடினமெல்ல....மெட்டுப் போடுவதுதான் கடினம் என்பது கவிப்பேரரசர்கள் அத்தனைப் பேருக்குமே தெரியும்.

ராஜா சாரின் பாடல்களை இப்படி மனிதர்கள் ஆங்காங்கே தாங்கள் பிரபலம் என்பதால் கொடுக்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி ரசனை என்ற பெயரில் குத்திக் குதறிக் கொண்டிருக்கையில்தான் எனக்குத் தோன்றியது...சிலாகித்து ரசிக்கும் ஒவ்வொரு பாடலையும் ” எப்பவும் நான் ராஜா...” என்ற பெயரில் ஒரு தொகுப்பாய் எழுதத் தொடங்கினால் என்ன என்று....


வாத்தியங்களைப் பற்றியோ தாளக்கருவிகளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சங்கீதம் பற்றிய எனது உச்சபட்ச அறிவு ராஜாசாரின் இசை மட்டுமே. ஸ்வரங்களைப் பற்றியும் எனக்குத் தெரியாது, ஸ்ருதியைப் பற்றியும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விசயம்...ராஜா சாரின் இசைக்குள் அந்தப் பாடலுக்குள் விழுந்து ஜீராவுக்குள் ஊறும் ஒரு  குலோப்ஜாமூனாய் அமிழ்ந்து கிடப்பது, அவரின் இசை கூட்டிச் செல்லும் இடத்துக்கெல்லாம் ஆராய்ச்சியோ கேள்வியோ ஒப்பீடோ இன்றி தாயின் கைபிடித்துக் கொண்டு கடைத்தெரு செல்லும் குழந்தையாய்  பயணிப்பது. நகரத்து நெரிசலுக்குள் நான் இருக்கும் போதே வயல்வெளிகளுக்கு நடுவே வாழும் சுகத்தை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்...., இனிமேல் ஒன்றும் இல்லை என்று உடைந்து உட்கார்ந்த பொழுதெல்லாம்....வீறு கொண்டு எழச் சொல்லி இருக்கிறது அவரது இசை....

இப்படி ரசிக்க மட்டுமே தெரிந்தவனின் ஒரு சாதரண உணர்வெழுச்சிப் பயணமாய் இந்த தொகுப்பு இருக்கக் கூடும். பேரறிவோடும், பெரும் ஆராய்ச்சியோடும் இருக்கும் இசை வல்லுனர்களுக்கும், உலக இசையை நெட்டுரூ போட்டு வைத்துக் கொண்டு உலகமகா இசைக்கலைஞர்கள் பற்றிய செய்திகளை அறிந்த மேதைகளுக்குமானது அல்ல ”இந்த எப்பவும் நான் ராஜா....”

இது ராஜா சாரின் இசையை சுவாசிக்க விரும்பும் சாதாரண ராஜா சாரின் ரசிகனுக்கு சொந்தமானது...!

இனி....

வழக்கமாய் எழுதும் கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் நடுவே......”எப்பவும் நான் ராஜாவைத்” தொடர்ந்து எழுதுகிறேன்....

ராஜாவின் ராஜாங்கத்துக்குள் நுழைந்து தொலைந்து போவோம் வாருங்கள் நண்பர்களே....



தேவா சுப்பையா...








Comments

ராஜி said…
ராஜாவின் ரசிகையாய் நான் தொடர்கிறேன். தொடருங்கள்
//ராஜாங்கத்துக்குள் நுழைந்து தொலைந்து போவோம் வாருங்கள் நண்பர்களே//
வந்தாச்சு வந்தாச்சு.
சார் வணக்கம் .எஸ்ரா,ஜெமோ ,சாரு, வரிசையில் மனுஷ் திமுகவுக்கு ஜாலரா தட்டும் முன் ஒரு மரியாதை இருந்தது ஆனால் இப்போது அவர் அதை திருப்பி பெற போராடுகிறார் .அவர் செய்து வரும் பித்துகுளித்தனமான் முயற்சி இது .விட்டுவிடுவோம் .ஆனால் ராஜாவின் அற்புதமான இசைபற்றி அவரை பிடிக்காதவகூட விமர்சிக்க முடியாது.ஆனால் உங்கள் பதிவில் அவரின் இசைபற்றி சொல்லும்போது நீங்கள் குறிப்பிட்ட ”பனி விழும் மலர் வனம்” பாடலை இயற்றிய வைரமுத்துவை அவர் வரியில் மயங்கி ,முயங்கி ,பாலா சார் இரும்பு குதிரையில் சொன்னதை விட்டு விட்டீர்களே சார் வரிக்கு வரி ராஜா சாரை புகழ்ந்த நீங்கள் இதையும் சொல்லி இருக்கலாமே என்பது என் சின்ன ஆதங்கம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...