Skip to main content

உன்னை நான் தேடித் தேடி....!


உனக்குப் பிடித்த பாடல்கள் என்று நீ குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் மீண்டுமொரு முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கவலையுமின்றி உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த நாட்களுக்குள் என்னை பிடித்து தள்ளி விட்டு விளையாடிக் கொண்டிருந்தன ஒவ்வொரு பாடலும்...

சொர்க்கத்திற்குள் சுகமாய் நாம் சுற்றித் திரிந்த அந்த நாட்களும் அந்த நாட்களை அசைபோடும் இந்த நாட்களையும் விட வேறு ஏதேனும் சிறப்பாய் இருக்க முடியாது. வாசனையான பெண்ணொருத்தி, கிறக்கமான விழிகளோடு தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெளர்ணமி ராத்திரியில் கிறக்கமாய்  அதை அனுபவிப்பவனின்  மனோநிலையில் இப்போது நான் இருந்து கொண்டிருக்கிறேன்... ததும்பி வழியும் காமத்தின் அடுத்த முடிச்சு எந்த நொடியில் அவிழும் என்பதை எப்படி வரையறுக்க முடியாதோ அப்படித்தான்  கவிதை ஒன்று உருப்பெறுவதும்....

நான் எழுதுவதற்காக....
என் நோட்டுப் புத்தகத்தை திறந்திருந்தேன்....
என் பேனாவிலிருந்து அவிழ்ந்து விழத் தொடங்கி இருந்தன வார்த்தைகள். 
உன்னோடு பேசிக் கொண்டிருப்பதை போல தோன்றியது எனக்கு....
இப்போதெல்லாம் உன்னோடு பேச வேண்டுமானால்
நான் ஏதாவது எழுதி எழுதித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்...
மெளனமாய் நீ கேட்டுக் கொண்டிருப்பாய் என்ற 
கற்பிதத்தில் வெட்கத்தோடு  எழுதிக் கொண்டிருக்கும் சுகத்தை....
இதை கவிதையென்றெண்ணி வாசிக்கும்
யாரேனும் பெறக்கூடுமா ...என்பது சந்தேகம்தான்...

கவிதை என்பது யாரோ வாசிப்பதற்காகத்தான் இருக்க வேண்டுமா என்ன..? உன்னை அணைக்கவும், முன்நெற்றியில் முத்தமிடவும், சப்தமில்லாமல் பேசும் உதடுகளில் என் விரல் வைத்து அழுத்தி ஸ்பரிசிக்கவும், போதையான விழிகளுக்குள் விழுந்து மிதந்து கிடக்கவும் எனக்கு கவிதை உதவுகிறது. ஏதோ ஒன்றை கிறுக்கிக் கொண்டு எதிர்பாராமல் ஒன்று புத்திக்குள் உதயமாகும் அந்தக் கணத்தில் உன் முந்தானையால் என் முகம் மூடி  உன் மடியில் விழுந்து கிடப்பது போல உணர்வேன்....! அழுத்தமாய் பேனாவை காகிதத்தில் பதிய வைத்து என் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறுவதை கவனித்தபடியே எழுதிக் கொண்டிருப்பது எத்தனை சுகமானது தெரியுமா?

நிறைய பாடல்கள் நீ பிடிக்கும் என்று கூறியிருக்கிறாய். பாடல்கள் உன் நினைவினைக் கொடுக்க,  உன் நினைவு என்னை ஸ்பரிசித்துப் பார்க்க கவிதை எழுதச் சொல்கிறது. நீ இல்லாத நாட்களில் உன்னை தேடிக் கொண்டே இருக்கிறேன் என்று கூறினேன். யாரோ யாரையோ தேடுவது, யாருக்கோ யாரோ தேவையாய் இருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா? என்றாய்... நீயும் என்னை தேடுவாயா என்று கேட்டேன்.... என் இருப்பு வேண்டும் என்று விரும்புவாயா என்று  கேட்டேன்....

இந்தக் கணத்தில் மூழ்கிக் கிடக்கையில்
என்னோடு நீ இருக்கையிலும் கூட
உன்னை நான் தேடுகிறேன்....
என்னை எனக்குள் நீ தேடுவது போல...
தேடல் என்பது இல்லாத 
ஒன்றைத் தேடிச் செல்வது அல்ல...
அது இருப்பதற்குள் இல்லாத ஒன்றை
பித்துப் பிடித்தது போல தேடி அலைவது...
நீ கவிதை சொல்வாய்...
நான் கனவுகளில் உன்னைத் தேடுவேன்...
ஏதேனும் கதைகள் சொல்வாய்...
அதன் கருவினில் நாம் இருக்கிறோமா 
என்று தேடுவேன்....

எப்போதும் பெறுதல் சுகமல்ல. பெற்றாலும் அங்கே இழக்க ஏதேனும் இருக்க வேண்டும். இருக்கிறது என்ற திருப்தி கற்பனைச் சிறகுகளை வெட்டி விட்டு கூண்டுக்குள் நம்மை போட்டுப் பூட்டி வைத்து காலையில் கொஞ்சம் இரை கொடுக்கும், மதியம் கொஞ்சம், மாலை கொஞ்சம் என்று கொடுத்து தாகம் தீர்க்க அவ்வப்போது நீர் கொடுக்கும் அவ்வளவுதானே.......?!

சிறகுகள் விரித்து எங்கே.. எங்கே.. எங்கே எனக்கான வாழ்க்கை...? எங்கே எனக்கான பூமி...? எங்கே எனக்கான மலர்கள்.....? எங்கே எனக்கான சமவெளிகள்...? எங்கே எனக்கான அருவி.....? எங்கே எனது கடல்கள்? எங்கே எனக்கான நிலம்.... என்று தேடி தேடி அலையும் சுகத்தை நிறைவு ஒரு போதும் கொடுத்து விடாது. நிறைவு என்பது நின்று போவது. தேவைகளோடு இருப்பதே சுகம். பிரிந்து விடுவோம் என்று எண்ணியே ஒன்றாய் வாழ்வது தவம். இங்கே இது எப்போதும் என்னிடம் இருக்கும் என்று உணர்ந்து விட்டால் அப்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதன் மீது ஒரு அலட்சியம் வந்து விடுகிறது. இல்லை என்ற உடனேயே.. எங்கே எங்கே என்று பட படக்கும் பட்சி.... இதோ எடுத்துக் கொள் என்றவுடன்.. அவ்வளவு தானா. ... என்று சுவாரஸ்யம் இழந்து போய்விடுகிறது...

இப்போது சொல்.... எப்போதும் தேடுதல் இருக்கத்தானே வேண்டும்....? தேடும் வரையில்தான் சுகம். தேடல் நின்று போன இடத்தில் சுவாரஸ்யம் நின்று போகிறது. குறையோடு இருத்தலும் ஒரு வரம்தான். ஞானியை விட அஞ்ஞானி ஒரு குறுகுறுப்போடு துறு துறு வென்று இருக்கிறான். அறியாமை அழகு. படபடவென்று அவள் என்னிடம் கூறியது எல்லாம் எனக்குள் தூரத்து வானின் நட்சத்திரமாய் புத்திக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே.....

ஸ்ரேயா கோஷலின் குரல் ராஜா சாரின் இசைக்குள் வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை கேட்ட மாத்திரத்தில் எப்படி காதல் உணர்வு நமக்குள் பற்றிகொள்கிறது...?  அல்லது பற்ற வைக்கப்படுகிறது....? என்று விழிகளால் என்னை பற்ற வைத்துக் கொண்டே அவள் கேள்வி கேட்ட தினம் இன்னும் பசுமையாய் இருக்கிறது எனக்குள். காதலை எப்படி வரையறுக்க..? எழுதித் தீர்க்க முடியாத இந்த வாழ்க்கையின் பெரும் பக்கங்களில் வாசித்து தீர்க்க முடியாத அளவு காதலும் காதலைப் போன்றவைகளும் நிரம்பிக் கிடக்கிறது. காதலின் ஆதி வடிவமே சப்தம்தானே? எதுவுமில்லாமல் இருந்த ஒன்று பல்கிப் பெருகி விரிய பெருங்காதல் கொண்டுதானே அதிரத் தொடங்கியது.. அதிர்வு தானே சப்தம். சப்தம்தானே இசை. இசைக்கு வளைந்து கொடுப்பதுதானே கவிதை. கவிதைக்கும் இசைக்கும் மயங்கிக் கிடப்பதென்பது..... ஆதி உணர்வில் கலந்து கிடப்பது போன்றதுதானே? 

பேசிக் கொண்டே நாம் கரைத்த நிமிடங்களை எல்லாம் மெல்ல மெல்ல மீட்டெடுத்து இப்போது நினைவு ஊஞ்சலில் என்னை ஆட்டிக் கொண்டிருந்தது காதல். பிரஞ்ஞை நிலையில் அவள் என் முன் விழி விரித்து எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க....

உனக்கான நிமிடங்களில் எல்லாம்
என்னோடு நீ இருக்கவில்லைதான் என்றாலும்
இந்த வாழ்க்கையும்... சூழலும்
அடித்துப் பெய்யும் மழையும்...
அலைந்து திரியும் மேகங்களும்
காற்றுக்கு தலையசைக்கும் கனத்த பூக்களைச் சுமக்கும் செடிகளும்
ஊர்ந்து செல்லும் அரவமும்,
கனைத்து ஓடும் குதிரைகளும்
படர்ந்து சிரிக்கும் கொடிகளும்.... பறந்து திரியும் பறவைகளும்
எப்போதும் என்றென்றும்...
உன் இருப்பை எனக்குத் தெரிவிக்கத்தான் செய்கின்றன...

என்றாலும் என் உடனில்லாத உன்னைத் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்... நித்தம் நித்தம் விடியலிலும்.... விடியல் மடங்கிக் கொள்ளும் அந்திகளிலும்....

'என் வீட்டில் இரவு... அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்...'


இன்னொரு பாடலில் என் தேடல் தொடர்ந்து கொண்டிருந்தது....




தேவா சுப்பையா...







Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...