Skip to main content

பிரதோஷம்...!


எப்போது இருந்து பிரதோஷம் அன்று விரதம் இருக்கத் தொடங்கினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. சிவபக்தன் என்று என்னை சொல்லிக் கொள்வதிலும் சிவபூஜை செய்வதிலும் எனக்கு ஏன் அதிக ஆர்வம் உண்டானது என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. சிவன் என்று சொன்ன உடனேயே எனக்குள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போகும். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் மனது ஒடுங்கிக் கொள்ளும், நெஞ்சு அடைக்கும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் மட மடவென்று உடையும். அப்படி உடைந்து எல்லாம் நொறுங்கி விழுந்த பின்பு....

என்னப்பன் அல்லவா... என் தாயுமல்லவா...
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா...

என்று உள்ளுக்குள் புலம்பத் தொடங்கி விடுவேன். புலம்பல் நின்று போன பின்பு நினைக்க எதுவுமின்றி ஒரு புள்ளியில் மனம் ஸ்தம்பித்து நிற்க பீறிட்டு அழுகை வரும். அழுகையை கட்டுப்படுத்தாமல் கேவிக் கேவி அழுதிருக்கிறேன். அழுகையோடு சேர்ந்து ஏன் இப்டி எல்லாம்? ஏன்? ஏன்? ஏன் என்று ஒரு கேள்வி அடி நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும். எதற்காக ஏன் என்று கேட்கிறேன் என்றும் எனக்குப் பிடிபடாது, ஆனால் மானசீகமாய் சிவனை ஒரு உருவாய் நினைத்து பாதங்களைப் பிடித்து ஏன்...? ஏன் என்று கதறி இருக்கிறேன். 

ஏன் என்று எதைக் கேட்டேன் என்று தெரியாமலேயே...இருக்கையில் அதற்கு ஒரு பதில் கிடைக்கும். அந்த பதிலில் ஒன்றுமே இருக்காது. இதுதான் பதிலா? என்று கூடக் கேட்கத் தோன்றாமல் வெறுமனே இருந்து விடுவேன். மீண்டும் சிவ வழிபாடு, மீண்டும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம் புரண்டு உடைதல், மீண்டும் அடிநெஞ்சிலிருந்து அழுகையோடு ஏன்..? ஏன்...? என்றொரு கேள்வி...பின் வெறுமையான பதிலுக்குள் போய் விழுதல்...என்றுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனக்கும் சிவனுக்குமான தொடர்பு. இதுவெல்லாம் என்ன? ஏன் செய்கிறேன்? என்ற ஆராய்ச்சிக்குள் நான் செல்ல விரும்புவதே இல்லை. மீண்டும் மீண்டும் தீராக் காதல் கொண்டு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என் வழிபாடு என்பது இத்தோடு முடிந்து போய்விடுகிறது. தனியாய் தியானம் என்று எதுவும் செய்வதில்லை. ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் புறம் நோக்கி ஓடாத மனது....மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு, பின் உள் இழுத்து வெளிவிடும் இந்த உடம்பை கவனித்தபடியே இருக்கிறது....

யார் யாரோ வருவார்கள், பேசுவார்கள், சிரிப்பார்கள், வாழ்த்துவார்கள், திட்டுவார்கள், ஏளனம் செய்வார்கள், புகழ்வார்கள், பாராட்டுவார்கள், இகழ்வார்கள், உதவி கேட்பார்கள், உதவி செய்வார்கள், அறிவுரை சொல்வார்கள், அறிவுரை கேட்பார்கள், புதுப் புது செய்திகள் சொல்வார்கள், உற்சாகமூட்டுவார்கள், எரிச்சலூட்டுவார்கள், அன்பாய் இருப்பார்கள், வெறுப்பை உமிழ்வார்கள்.....

எல்லாவற்றையும் வெறுமனே கடந்து செல்லும் போது ஒரு மலையைப் போல என்னை நான் உணர்வேன். வெயிலையும், குளிரையும், மழையையும், காற்றையும் மலை கண்டு கொள்வதில்லை. மலையின் அமைதியும், பொறுமையும், எந்தவித கருத்துக் கோட்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாத அதன் தனித்தன்மையும் என்னை எப்போதும் கவருவதுண்டு. மலைகள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் ஆழமான உண்மையைத்தான் யுகங்களாய் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இருப்புதான் நமக்கான செய்தி. அவை இருக்கின்றன. அந்த இருத்தலில் இல்லாமை என்பது மறைந்தே இருக்கிறது. 

மலைகளின் ரசவாதம் மிகவும் நுட்பமானது. மலையை சிவனாகவே கருதி வழிபடுவது எனக்குத் தெரிந்து இரண்டு இடத்தில்தான். ஒன்று திருவண்ணாமலை இன்னொன்று கைலாயம். இரண்டு இடத்திலும் மலைதான் சிவம். சிவம்தான் மலை. பேருண்மையும் பெரு ஞானமும் இந்த மலைகளில் ஒளிந்து கிடக்கின்றன. ஜீசஸ் கிரைஸ்ட் சொன்னது போல கேட்டால் கிடைக்கும், தட்டினால் திறக்கும், தேடினால் அடையமுடியும். வாழ்க்கையின் நுட்பமே அதுதான். எதை விரும்பிச் செல்கிறோமோ அது சம்பந்தமான விசயங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். டாஸ்மாக் சென்று தினமும் மதுவருந்தினால் மது அருந்தும் ஒரு பெருங்கூட்டம் நமக்கு நண்பர்களாகிவிடும். இப்படித்தான் பக்தி, பணம், தத்துவம், தேடலில் இருப்பவர்களுக்கு அது சம்பந்தமாகவே நண்பர்கள் கிடைக்கிறார்கள். நண்பர்களால் சூழல்கள் உருவாகிறது. சூழல்கள் வாழ்க்கையாக மாறுகிறது. இதைத்தான் சைவ சித்தாந்தம்...

எது மிகையாகிறதோ அது அதுவாகிறது என்று எளிமையாய்க் கூறுகிறது.

விடம் அருந்திய நீலகண்டன் பிரதோஷ தினத்தன்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று அருள் புரிகிறார் என்றும் பிரதோஷ காலமான மாலை 4:30லிருந்து 6 மணி வரை நந்தியிடம் வேண்டிக் கொள்ள எல்லா விதமான சங்கடங்களிலுமிருந்தும் தோஷங்களிலிருந்தும் சிவன் நம்மைக் காத்தருளுகிறார் என்று புராண விளக்கங்கள் கூறுகின்றன என்றாலும்...

வளர்பிறையில் ஒரு நாள், தேய்பிறையில் ஒரு நாள் என்று மாதத்திற்கு இருமுறை காலையிலிருந்து எந்தவித உணவும் அருந்தாமல் வெறுமனே நீரை மட்டும் பருகியோ அல்லது பருகாமலோ உற்று நோக்கும் போது உடலுக்குள் இருக்கும் அசையாத் தன்மையின் பெரு மெளனம் என்னவென்று விளங்க ஆரம்பிக்கிறது. எப்போதும்  சக்தி ஓட்டமாய் இருக்கும் நம் உடல் பிரதோஷ தினத்தில் சலனமின்றி ஒடுங்கி நின்று விசுவரூபமெடுக்கும் சிவத்தை, அந்த சிவத்தின் பேரமைதியிலிருந்துதான் உடலின் சக்தி தோன்றியது என்ற  உண்மையை சக்தி உணர ஆரம்பிக்கிறது....

எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி அந்த சக்திக்கு தேவையான உணவு உட்கொள்ளாத தினத்தன்று... தன்னை விட வலிவான சிவத்தின் மெளனத்தை காதலோடு உற்று நோக்க ஆரம்பிக்கிறது. சிவத்தின் பெருங்கருணையும் எப்போதும் சக்தியோடு இரண்டறக் கலந்து நிற்கும் அதன் பேரன்பை வியப்போடு நோக்குகிறது சக்தி. 

நீதானா...? அது நீதானா?  என் கனவுகளின் ஆதாரம் நீதானா? என் கற்பனைகளின் வேர் நீதானா? என் சுவாசத்தின் பிராணன் நீதானா? என் வாழ்க்கை நீதானா? நீ இல்லையென்றிருந்தால் நான் என்னவாகியிருப்பேன்..? என் காதல் என்னவாகியிருக்கும்? என் உணர்வுகள் என்னவாகியிருக்கும்...? நித்தம் நித்தம் நான் கண்டு ரசிக்கும் காட்சிகள் என்னவாகியிருக்கும்...? எப்போதும் நான் கேட்டு ரசிக்கும் இசையும், கவிதைகளும் என்னவாகியிருக்கும்....? முழு நிலவென்று ஒன்று இருந்திருக்குமா? ஒளி தரும் சூரியன் தான் உயிர் கொண்டு தினம் சுட்டிருக்குமா..? சுகமாய் மேனித் தடவிச் செல்ல தென்றலென்ற ஒன்று இப்புவியில் வலம் வந்திருக்குமா? அல்லது புவி என்ற ஒன்றுதான் தனியே இருந்திருக்குமா? 

காதலே....,பெருங்கருணையே... சிவனே..... என்று உடலுக்குள்ளிருக்கும் சக்தி ஒடுங்கி நின்று ஆச்சர்யமாய் எதுவுமற்ற பேரமைதியை ரசிக்க, ரசிக்க.... விரதமிருக்கும் அந்த தினம் அற்புதமான அனுபவமாகிப் போகிறது. இதுதான் பசியா? வயிறு பசியாய் இருக்கும் போது இப்படி எல்லாம் நிகழுமா? உண்டால்தான் வாழ்க்கையா? இல்லையென்றால் துடித்து அடங்கி விடுமா இந்த வாழ்க்கை என்றெல்லாம்  மேலதிக கேள்விகளை விரதநாட்கள் நம்முள் உலுக்கி எழுப்பி விடுகின்றன.

நோன்பிருத்தல் இதனால்தான் எல்லா மண்ணிலும், பலவகைப் பட்ட மனிதர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இயந்திரத்தனமாய் நோன்பிருக்காமல் நோன்பு அல்லது விரதத்தின் மேன்மையை விளங்கிச் செய்யும் போது சிவம் என்னும் பேருண்மையின் அதிர்வுகள் எத்தகையது என்பதை சக்தி நிலையிலிருந்தபடியே நம்மால் உணர முடியும். ஒரு வருடத்தில் 24 நாட்கள் பிரதோச தினத்தன்று இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உண்ணாமல் நோன்பிருக்கும்போது.....

சிவம் மேலோங்கி நிற்க....சக்தி சலனமில்லாமல் சிவத்தை வியந்து பார்க்கிறது. இந்த வியத்தலில் சக உயிர்களின் பசியையும், பசித்திருக்கும் உயிர்களுக்கு உணவிடுதலின் அவசியமும் என்னவென்றும் தெளிவாய் ஒரு புரிந்துணர்வுக்குள் வரவும் செய்கிறது. பிரதோஷம் என்பது புராணங்கள் கூறும் ஒரு கதைக்கான தொடர் நிகழ்வாக இருந்து விட்டுப் போகட்டும் அது நம்பிக்கைகளோடு தொடர்புடையது... என்பதால் அதை விவாதத்திற்கு அப்பாற் வைத்து விடுவோம்....

ஆனால்....


உண்ணாமல் பசியடக்கி, பசியை உற்று நோக்கி புலன்கள் புறத்தில் பாய சக்தி இல்லாமல் போக உள் நோக்கி உள்ளுக்குள்ளிருக்கும் பேரமைதியை ஒரு சீரான கால இடைவெளியில் செய்ய இது போன்ற தினங்கள் சூட்சுமமாய் நமக்கு உதவத்தான் செய்கின்றன. பிரதோஷம் என்பது ஒரு குறியீடு. ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோன்பிருக்க வகுக்கப்பட்ட ஒரு பயிற்சி முறை. இதை தெளிவாய் உணரும் பட்சத்தில் 

மனசெல்லாம் மார்கழி தான்
நம் கனவெல்லாம் கார்த்திகை தான்....!


சம்போ...!!!




தேவா சுப்பையா...










Comments

நல்ல பகிர்வு அண்ணா...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...