Skip to main content

கதவு திறக்குமா ...?!


அதிக நேரம் பேஸ்புக்கில் நேரம் செலவிடக் கூட வேண்டாம், வெறுமனே அதில் வரும் நிலைத்தகவல்களை பார்த்துக் கொண்டே இருந்தாலே நமக்குள் இருக்கும் மொழியும், கற்பனைத் திறனும், விவரித்துப் பார்த்து சிலாகிக்கும் இயல்பும் சிதைந்து போய்விடுகிறது. எழுதிக் கொண்டிருப்பதற்கு வசதியான தளம்தான் பேஸ்புக் என்றாலும் அது எழுத்தாளர்களுக்கான தளம் கிடையாது. அன்றாட செளக்கியங்களையும், தினசரி நிகழ்வுகளைப் பற்றிய பார்வைகளையும் எல்லோரும் கொட்டி வைக்கும் ஒரு பெருந்தொட்டி அது. தும்மினால், இருமினால் எழுதி அஞ்சல் செய்ய வசதியான ஒரு இடம் என்பதாலேயே.... வரைமுறை இல்லாத வார்த்தைகளை வாசிக்க வேண்டிய ஒரு சங்கடம் ஏற்பட்டுப் போகிறது.

வலைப்பூக்களை பேஸ்புக் வீழ்த்தியது. பேஸ்புக் வருவதற்கு முன்னால் வலைப்பக்கங்கள் எனப்படும் ப்ளாக்ஸ்தான் சமூக தொடர்பு ஊடகமாய் இருந்து வந்தது. 2010, 2011ல் எல்லாம் வலைப்பக்கங்கள் எல்லா தரப்பினர்களாலும் பிரம்மாண்டமாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோலேச்சிக் கொண்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று நவீனம் செய்து கொடுத்திருந்த ஒரு வசதியினை நிறைய பேர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வெறுமனே தகவல் பரிமாற்றுக் களமாக வலைப்பூக்கள் மாறிப்போயின. தமிழர் சமூக வாழ்வில் மிகப்பெரிய பங்காற்றியிருக்க வேண்டிய வலைப்பூக்களின் பயன்பாடுகள் மெலிந்து போய் வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் குறைந்து போயினர். வலிமையான எந்த ஒரு நிர்ப்பந்தமோ அல்லது தடையோ இல்லாத ஒரு மாற்று ஊடகம் என்பதை பெரும்பாலானவர்கள் மறந்து  போய் அல்லது அதை அறியாமலேயே, பேஸ்புக் என்னும் சமூக நட்பு வலைத்தளத்தில் போய் தஞ்சம் அடைந்தனர்.

காலை வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, இரவு வணக்கம் சொல்லி முடிப்பதற்குள் நிகழும் யாவையும்  பதிவு செய்து, விதவிதமாய் புகைப்படங்களைப் பதிவேற்றும் செல்ஃபி கலாச்சாரம் பிரம்மாண்டமாய் இன்று பேஸ்புக்கில் வளர்ந்து நிற்கிறது. சமூகத்தின் இயங்கு நிலையில் தோன்றி மறையும் பல்வேறு விதமான சூழல்களை கவனமாக உற்று நோக்கி அதிலிருக்கும் உண்மை நிலையை உணர யாருக்கும் இப்போது அவகாசமே இல்லை. மனம் என்னும் குரங்கு கிளைக்குக் கிளை தாவ ஒவ்வொரு கிளையும் அசைய அசைய ஒவ்வொன்றும் ஒரு நிலைத்தகவலாய், வெற்று மன எழுச்சியின் பதிவுகளாக இன்று செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது பேஸ்புக் வால் எனப்படும் சுவர்களில். அரசியல் கட்சிகளில் ஆரம்பித்து, சினிமா நடிகன் முதல் இன்றைக்கு ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் சாதாரண நிகழ்ச்சி விவரணையாளராய் இருப்பவர் வரைக்கும் பேஸ்புக்கில் பக்கங்கள் உண்டு. நவீன வளர்ச்சியில் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். போட்டோ ஷாப் இன்ன பிற ஆயத்த இணையதளங்கள் எதை வேண்டுமானாலும் மாயாபஜார் போல மாற்றிக் காட்ட....

நவீன தமிழர்கள் இணையத்தை தட்டித் தட்டி பெரும்பாலும் பொய்ச்செய்திகளையும், வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களையும் பார்த்து விர்ச்சுவல் பிழைக் கிணற்றுக்குள் தொடர்ச்சியாய் விழுந்து கொண்டிருப்பதோடு அந்த பிழையையே  உண்மை என்று நம்பியும் கொள்கிறார்கள். இன்றைக்கு நான் அறிந்தது உண்மை என்று கருதும் மிகையானவர்கள் பொய் வடிவத்தையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் ஒரு போதும் பொதுமக்களுக்கு நேர்மையான செய்திகளை கொடுப்பதில்லை என்ற வலியினை ஏந்திக் கொண்டு மிகவும் பொறுப்புணர்ச்சியோடு சாமானியர்களால் செயல்பட்டிருக்க வேண்டிய சமூக இணைவு ஊடகங்கள் எல்லாம் இன்றைக்கு அபத்தத்தின் உச்சமாய் நவீன காட்டுமிராண்டிகளாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வலைப்பூக்களில் இருந்து பேஸ்புக்கிற்கு தாவிய தமிழ்ச்சமூகத்தை கிடுக்கிப் பிடி போட்டு இப்போது வாட்ஸ் அப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. வலைப்பூக்களாகட்டும், பேஸ்புக் ஆகட்டும் வாட்ஸ் அப் ஆகட்டும் இவை அத்தனையுமே நவீனம் பெற்றுக் கொடுத்திருக்கும் திறமையான வசதிபடைத்த ஊடகங்கள் அவற்றை வெறுமனே பரப்புரைகளுக்காகவும், சார்ந்திருக்கும் அமைப்புகளைச் சந்தைப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வது கோடி ரூபாய் கொடுக்க தயாராய் இருக்கும் ஒருவரிடம் 50 பைசாவை பெற்றுக் கொண்டு மகிழ்வதற்கு சமமானது. என்னோடு இணையத்தில் எழுத வந்த சில நண்பர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் தகவல் தொடர்புக்காக எழுத வந்தவர்கள் அல்லர் அவர்கள். எனக்குள் இருக்கும் வெற்றிடத்தை இறக்கி வைக்க நான் முயற்சித்துக் கொண்டிருப்பது போல, தங்களின் வலிகளை, தேடலை, வரைமுறைகள் ஏதுமில்லாத இந்த வாழ்க்கையின் அழகினை, அவலத்தை எழுதி வைத்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற ஆவலை இவர்களின் எழுத்தில் என்னால் உணர முடிந்தது.

எங்கோ பறந்து செல்ல வேண்டும் என்ற பேராவலோடுதான் ஒவ்வொரு முறையும் எழுதுவதற்கு நான் அமர்கிறேன். திடமான வாழ்க்கைக்குள் நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போதே அதை விட்டு விலகி இப்படி ஏதாவது எழுத அமர்வது மிகப்பெரிய விடுபடலாய் இருக்கிறது. யாருமேயில்லாத ஒரு வாழ்க்கையைத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் வாழ விரும்புகிறான் ஆனால் அந்த வாழ்க்கையை அனேகருடன் வாழ்ந்து தீர்க்க வேண்டிய ஒரு கட்டாயமும் நிழலாய் அவன் மீது படிந்து கிடக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு நேர்முகத்தேர்விற்காய் சென்றிருந்தேன். நிர்வாக மேலாளருக்கான பதவியிடம் அது. என்னை மதிப்பிட்டுக் கொண்டிருந்தவர் ஒரு வட இந்தியப் பெண். உங்களிடம் இருக்கும் குறிப்பிடத்தகுந்த விசயமாய் நீங்கள் கருதுவது என்ன என்று அவர் கேட்டார்....

எனக்கு எழுதப் பிடிக்கும். புதிது புதிதான சூழலுக்குள் சென்று அதை கிரகித்து ஊறிக்கிடப்பது எனக்குப் பிடிக்கும் என்றேன். அதில் என்ன உங்களுக்கு கிடைத்து விடப்போகிறது என்று கேட்டார் அந்தப் பெண். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை மட்டும்தானே வாழ்கிறீர்கள்...? என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் புன்னகைத்தபடியே ஆமாம்...என் வாழ்க்கையை மட்டுமே நான் வாழ்கிறேன், அப்படித்தான் இங்கே எல்லோருமே இருக்கிறார்கள் என்றார். நான் கூறினேன்... நான் என் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து தீர்க்க வந்திருப்பதாய் நினைக்கவில்லை, அதோ அங்கே வாசலில் நிற்கிறாரே காவலாளி அவருடைய வாழ்க்கையை, சற்று முன் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாரே இந்த அலுவலகத்தின் உதவியாளர் அவரின் வாழ்க்கையை, ஏன் உங்களின் வாழ்க்கையை என்று என் முன் எதிர்ப்படும் எல்லாவற்றின் வாழ்க்கையையும், அவற்றின் வலிகளையும், மகிழ்ச்சியினையும் வாழ்ந்து தீர்க்க ஆசைப்படுகிறேன். அப்படியாய் வாழும் கணங்களில் நான் என்பது இந்த உடல் மட்டும் கிடையாது என்ற ஒரு ஆன்மீக உண்மைக்கு வெகு சமீபமாய் போய் நின்று கதவு தட்டும் வாய்ப்பும் எனக்கு கிடைக்கிறது என்றேன்....

கதவு திறக்குமா .....என்று கேட்டார் அவர் புன்முறுவலோடு....

தட்டுங்கள் திறக்கப்படும் என்றுதானே ஜீசஸ் கூறியிருக்கிறார் அதனால் கண்டிப்பாய் திறக்கும் என்றேன் நான்...! இப்படி ஏதோ ஒரு வேகம், அல்லது ஆவல் இருப்பதால்தான் எழுத வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் இரண்டு புத்தகங்களையாவது வெளியிட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை தவிர வேறொன்றும் பெரிதாக என்னிடம் இல்லை. தொடர்ந்து என்னை  வாசிக்கும் அத்தனை பேருக்கும் நன்றிகள்...

முடிந்து போகாத பெரும் அத்தியாயங்களாய் இனிக்கட்டும் நமது வாழ்வு....!




தேவா சுப்பையா...








Comments

மகிழ்ச்சி தலைவா!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...