Skip to main content

வேங்கைகளின் மண்...4 !







இனி.....


கெளரீ...விடியற்காலை பிரயாணம் உனக்கு ஒன்றும் உபாதை தரவில்லையே... காதலோடு தன்னுடன் குதிரையில் வந்த கெளரி நாச்சியாரைப் பார்த்து கேட்டார் மன்னர் முத்து வடுகநாதார். ராணியாரையும், மன்னரையும் பின் தொடர்ந்து மூன்று குதிரைகளும், அவர்களுக்கு முன்னால் இரண்டு குதிரைகளும் காற்றில் பறந்து கொண்டிருந்தன. சிவகங்கைச் சீமை வானம் பார்த்த பூமிதான் என்றாலும் முத்துவடுகநாதர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆறேழு ஊருணிகளையும் கிராமத்து எல்லையில் மிகப்பெரிய கண்மாய்களையும் வெட்டுமாறு ஆட்களைப் பணித்திருந்தார்.

செம்மண் பூமியில் ஆற்றுப்பாசனம் இல்லாவிட்டாலும் பெருங்கேணிகளும், தேக்கி வைத்த மழைநீரை அடைத்து நின்ற பெருங்கண்மாய்களும் விவசாயத்தை செழிப்பாய்த்தான் வைத்திருந்தன. கார்காலம் தொடங்குவதற்கு முன்பு நெல்லும், கார்காலத்திற்கு பின்பு அறுவடை முடிந்த பின்பு மீண்டும் நிலத்தை உழுது பண்படுத்தி மிளகாய், கம்பு, கேழ்வரகு, திணை, நிலக்கடலை, எள் போன்ற தானியங்களும் தொடர்ந்து அந்த மண்ணிலே பயிரிடப்பட்டன. சீமை ஓடுகளாலும் நெருக்கமான முறையில் பனை ஓலைகளாலும் வேயப்பட்ட வீடுகளின் கூரைகள் இருந்தன. சாணம் மொழுகிய வீடுகளின் உள்ளும் புறமும் மாக்கோலங்கள் இடப்பட்டிருந்தன. வீடுகளும் வீட்டை ஒட்டிய மிக நீண்ட மாட்டுத் தொழுவங்களும், ஆடுகள், மாடுகள் கோழிகளோடு வாழும் மனிதருமாய் ஒரு இயல்பான இயற்கை சார் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது சீமை முழுதும். 

விவசாயக் கலப்பைகள் செய்யும் கொல்லர் பட்டறையை கடந்த போது, நிறைய கலப்பைகளை செய்யும் படி சீமை முழுதும் அறிவுறுத்தி இருக்கிறேன் கெளரீ... விவசாயம் செய்பவர்கள் அதிகரித்து விவசாயக் கலப்பைகளின் தேவை எந்த ஒரு தேசத்தில் அதிகரிக்கிறதோ அங்கே மக்கள் குறைவில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.  சோழ தேசத்தில் ஆற்றுப்பாசனம் இருப்பதால் அவர்களால் எளிதாய் விவசாயம் செய்து விட முடிகிறது....

ஆனால்...

நம்மைப் போன்ற வானம் பார்த்த பூமியில் வாழும் மக்களின் உணவுத்தேவையை, உற்பத்தியை அதிகரிக்க துல்லியமான செயற்திட்டங்களை நாம் செயற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சீமை முழுதும் இருக்கும் கண்மாய்களை கோடைக் காலங்களில் தூர் வாரி மழைக்காலங்களில்  அவற்றை நீரினைத் தேக்கி வைக்கும் பெருங்கலன்களாக நாம் மாற்றி வருகிறோம். தமிழர் பூமியில் நம் சீமையில் மட்டும்தான் வேறெங்கும் காண முடியாத பெருங்கரைகளைக் கொண்டக் கண்மாய்களை வெட்டி உயர்த்தியிருக்கிறோம். எந்த ஒரு அரசு அல்லது அரசன் மக்களின் உணவுத் தேவையை, பூர்த்தி செய்ய திட்டங்கள் தீட்டுகிறானோ அவனை மக்கள் எப்போதும் போற்றிக் கொண்டேயிருப்பார்கள்....! 

உணவுதான் வாழ்க்கையின் பிரதானம் கெளரீ. பசியோடு இருக்கும் ஒருவனால் எந்தச் செயலும் செய்ய முடிவதில்லை. பசி தீர்ந்தால்தான் உயிர் அடுத்தடுத்த விசயங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும். உணவுக்குப் பிறகு உறக்கம். உண்டு, உறங்கி செழிப்பாய் இருக்கும் ஒருவனால்தான் அடுத்தடுத்த சுகபோகங்களை நோக்கி நகர முடிகிறது. தேவையான அளவு உணவும் அதை அடுத்த தேவைகளும் பூர்த்தியானால் மனிதன் தன் சக மனிதர்களுக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருக்க முடியும். அடிப்படையில் திருப்தியின்மையிலிருந்துதான் கெளரி எல்லா பிரச்சினைகளுமே தொடங்குகிறது. கீழை நாட்டைச் சேர்ந்த நமக்கு நமது மூதாதையர்களால் அகம் சார்ந்த வாழ்க்கை போதிக்கப்பட்டிருக்கிறது. எல்லா அசாதாரண சூழல்களிலும் திருப்தியை நோக்கி நகர்வது எப்படி என்பதுதான் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பாலபாடம். 

வெள்ளையர்களைப் பார், அவர்களின் தேசத்தில் திருப்தியுற்று அவர்களால் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு திருப்தி என்றால் என்னவென்றே தெரியாது. ஆசையும், ஆதிக்க மனப்பான்மையும் அவர்களின் ரத்தத்தில் கலந்த ஒன்று. நன்றியுணர்ச்சியும், உறவுகள் மீது நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகம் கிடையாது. புறம் சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. அதனால்தான் வியாபாரம் செய்ய வந்த இடத்தில் இப்படி ஆதிக்க மனப்பாங்கு கொண்டு அலைகிறார்கள். பயம் மிகுந்தவனே பாதுகாப்பிற்காக என்ன என்ன செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறான். பயமே பாதுகாப்பு என்ற பெயரில் புதிய புதிய போர்க்கருவிகளை தயாரிக்க வைக்கிறது. நமது போர் என்பது வீரம் சார்ந்தது இதில் தந்திரம் என்பது மிக மிகக் குறைவு. நமது போர்கள் திட்டமிடலின் பெயரிலும், வியூகங்கள் வகுப்பதன் பெயரிலுமே பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. வாள் வீசி எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதற்குப் பெயர்தான் வீரம். 

போர் என்பதை முன்பே அறிவித்து போர் செய்யப்போகும் களம் இதுவென்று முடிவு செய்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாய் அனுப்பி விட்டு போர்புரிந்து வெல்வதுதான் நமது போர்முறை. அதோடு மட்டுமில்லாமல் நாடு பிடிக்க வேண்டி பாண்டியர்கள் அதுவும் சீமைக்காரர்கள் ஒரு போதும் இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பது கிடையாது. பொருள் வேண்டி புகழ் வேண்டி ஒரு போதும் சீமைக்காரர்கள் இன்னொரு நாட்டை பிடித்தழிப்பது கிடையாது. நமது போர் என்பது துரோகத்தை அழிப்பதும், பாதுகாப்பை நிலைநிறுத்தவும் வேண்டிதான் எப்போதும் நிகழ்கிறது கெளரி.....


மன்னர் முத்துவடுகநாதர் பேசிக் கொண்டே வந்ததை ராணி கெளரி நாச்சியார் வைத்த கண் வாங்காமல் கேட்டுக் கொண்டே வந்தார். முத்துவடுகநாதர் அற்புதமான பேச்சுத் திறமை கொண்டதால்தானே... காளையார்கோயிலில் அவரைக் கண்டவுடன் காதலில் விழுந்தார் கெளரி நாச்சியார். கெளரீ ....என்ன அமைதியாய் வருகிறாய் என்று கெளரி நாச்சியாரின் மெளனத்தை உடைத்தார் மன்னர் முத்துவடுகநாதர். இல்லை மன்னா... உங்களின் சத்தியமான வார்த்தைகளுக்குள் தேன் குடித்த வண்டாய் நான் மயங்கிக் கிடந்ததால் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.  அன்றொரு பொழுதில் உங்களை முதன் முதலில் கண்டு நான் காதல் வயப்பட்டதும், நம் காதலை அறிந்து அக்கா வேலுவே நம்மை சேர்த்து வைத்ததும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறது. கொல்லன்குடிக்குதானே திருமணம் முடிந்து என்னை முதன் முதலில் அழைத்து வந்தீர்கள்....? வெட்கத்தோடு கேட்ட கெளரிநாச்சியாரை பார்த்து புன்னகைத்தபடியே குதிரையை செலுத்திக் கொண்டிருந்தார் மன்னர் முத்துவடுக நாதர்.

கொல்லன்குடி அரண்மனைக்கு மன்னரின் வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால் அரண்மனை முழுதும் நிறைய தீபங்கள் ஏற்றி வெளிச்சமாக்கப்பட்டது. மன்னரும்,ராணியும் தங்கப்போகும் அறைக்குள் நறுமணப்புகை இடப்பட்டது. படுக்கைகள், மெத்தை விரிப்புகள் ரத்தின கம்பளங்கள் விரித்து அலங்கரிக்கப்படது. கொல்லன்குடி நகரத்தின் எல்லையிலிருந்து சாலை முழுதும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அழகிய கோலங்கள் இடப்பட்டிருந்தன. சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாய் முதலில்  தாரை தப்பட்டைகளும், கொம்பு ஊதுபவர்களும், மிருதங்கம் வாசிப்பவர்களும், நாதஸ்வரம் ஊதுபவர்களும், அதன் பிறகு தமுக்கடிப்பவர்களும், செண்டை மேளம் வாசிப்பவர்களும், பறை அடிப்பவர்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னரும் ராணியும் கொல்லன்குடிக்குள் நுழையும் போது ஆரம்பித்து தொடர்ச்சியாய் அவர்கள் அரண்மனையை அடையும் வரையில் குலவை இட பெண்கள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். 

ஆங்காங்கே... குடம் குடமாக, பாலும், மோரும், பானகமும், பழங்களும், தட்டில் நிரப்பப்பட்டு எங்கு நின்று மன்னர் எது கேட்டாலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொல்லன்குடி நகர நிர்வாகி சொக்கப்பன் மன்னரையும் ராணியையும் வரவேற்க கையில் பூமாலைகளுடன் பரிவாரங்களுடன் நின்றிருந்தார். ஊர் முழுதும் ஆவாரம்பூ, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, கதம்பப் பூக்களாலும் தென்னங்குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நொங்கும், பனங்கிழங்கும், தேனும், பாலும், பழங்களும், பணியாரம், தேன்குழல், முறுக்கு, அதிரசம், தேனப்பம் போன்ற உணவுப் பொருட்கள் குடம் குடமாய் அரண்மனைக்குள் மன்னருக்காகவும் ராணிக்காகவும் சென்று கொண்டிருந்தன. 

யாருக்கும் சொல்லப்படவேண்டாம் என்று சொன்னேனே.. ஏன் இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகள் என்று நகர நிர்வாகி சொக்கப்பனை அன்பாகக் கடிந்து கொண்டபடியே அரண்மனைக்குள் சென்ற மன்னர்.... நான் காளையார்கோயிலுக்கு மாலை செல்லப்போவது பற்றி யாருக்கும் தெரியக்கூடாது, இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகளும் கூடாது, நானும் என் உடன் வந்த ஐவரும் மட்டும் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொள்கிறோம்...சரிதானே....?

என்று அதட்டலாய் நகரத்து நிர்வாக அதிகாரி சொக்கப்பனிடம் ஆணையிட்டார்.

அதில்லை மன்னா....வேலு நாச்சியார் தாய்தான்...என்று ஏதோ சொல்லவந்த சொக்கப்பனை...நான் சொல்வதைச் செய் என்று கட்டளையிட்டு மன்னர் அனுப்பி வைத்த அதே நேரத்தில்...

கொல்லன்குடி காட்டுப் பகுதிக்குள் மாமரத்தடியில் கோமணத்தோடு படுத்திருந்த வீர முத்தானந்தம் என்னும் சித்தர் படக்கென்று எழுந்து உட்கார்ந்து......

ஓ....கோ....இதுவும் நடத்துவாயோ சிவனே நீ.............????!!!!! என்று கொல்லன்குடி காடதிர கர்ஜிக்க.... சுற்றி இருந்த மரத்திலிருந்த பட்சிகள் எல்லாம் சப்தம் கேட்டு பயந்து கீச்சிட்டு கத்த, காட்டு நரிகள் உடன் ஊளையிடத் தொடங்க.... வீர முத்தானந்தம் எழுந்து காடதிர கையிலிருந்த உடுக்கையை அடித்தபடி ஆட ஆரம்பித்திருந்தார்....

இதுவும் நடக்குமோ ஈசனே....????
எதுவும் நடத்துவாயோ மோசனே....?!!!!
உயிரெங்கே போகுமோ...?
அப்போதுணர்வெங்கே போகுமோ...????!!!
இதுவெல்லாம் வெறுங்கனவென்றே ஆகுமோ.....
இதுவும் நடக்குமோ...ஈசனே....!!!!????


சித்தரின் ஆட்டத்தில் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது கொல்லன்குடிக் காடு....!



(புரட்சி இன்னும் வெடிக்கும்....)




தேவா சுப்பையா...














Comments

உங்கள் தேடல் வியப்பளிக்கிறது அண்ணா... ஒரு வரலாற்றை எல்லோரும் அறியும் வண்ணம் மிகச் சிறப்பான தங்கள் நடையில் கொடுக்கிறீர்கள்... அருமை... அருமை...

உடுக்கடித்து ஆடுவது மனதுக்குள் திடுக் என்றிருக்கிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...