Skip to main content

தேடல்...16.04.2015!


எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று  எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று வீசி சூழலை ரம்யமாக்க இதோ எந்த நொடியிலும் கனிந்து விழுந்து விடும் தூறல் மழை என்று தோன்றுமல்லவா அப்படித்தான். சட சடவென்று புறச் சூழல்கள் அறுபடத் தொடங்கிய அந்த கணத்தில் பேனாவோடும் பேப்பரோடும் பரந்து விரிந்த வான் பார்க்கும் வசதி கொண்ட இந்த சாமானிய எழுத்தாளனின் பால்கனிக்கு நீங்களும் வந்தமர்ந்து பார்த்தீர்களானால் இதைப் புரிந்து கொள்வீர்கள்...

கடந்த வாரத்தில் மலைகள் சூழந்த ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவை ஒன்றும் என்னிடம் பேசவில்லை. பெருந்தவத்திலிருக்கும் யோகிகளைப் போல வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு அக்கறையுமின்றி ஆங்காங்கே அவை படுத்துக் கொண்டிருந்தன. சாலையோரமாய் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைகளோடு மலைகளாய் படுத்துக் கொள்ளலாமா என்று அவ்வளவு ஆசையாயிருந்தது எனக்கு. வெயிலோ, மழையோ, குளிரோ, பெருங்காற்றோ அவை அப்படியேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவை முழுமையாய் வாங்கிக் கொள்கின்றன. வாங்கிக் கொள்கின்றதானே அன்றி அவை எதற்கும் எதிர்வினை ஆற்றுவது கிடையாது.  சபிக்கப்பட்டவர்கள் மனிதர்கள்தான் இங்கே எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்ற வேண்டியிருக்கிறது.

நான் சொல்றது காதுல விழுதா இல்லையா? ஏன் கல்லு மாதிரி உக்காந்து இருக்கீங்க என்று யாரவது கேட்டால் நிச்சயமாய் சந்தோசப்படத்தான் வேண்டும். கல் மாதிரி இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சகித்து வாழ்வது என்பது வேறு சகிக்க ஒன்றுமே இல்லை என்று தேமேவென்று வழிவிட்டுக் கிடப்பது வேறு. மலைகளும் அப்படித்தான் அவை தேமே என்று கிடக்கின்றன. பெயர்த்தெடுத்தால் பெயர்த்தெடுத்துக் கொள்ளுங்கள், பார்த்து ரசித்தால் ரசித்துக் கொள்ளுங்கள். உங்கள் செயலோடு எனக்கு யாதொரு தொடர்புமில்லை என்பது மாதிரிதான் அவை இருக்கின்றன. எவ்வளவு பெரிய ஞானத்தை இவை போதிக்கின்றன என்பதை யோசித்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

பேசுவதிலும் எழுதுவதிலும் ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எழுத்தாளர் நண்பவர் ஒருவர் என்னிடம் கூறினார். இங்கே கருத்தே கிடையாது, எதிலுமே கருத்து கிடையாது என்று நான் சொன்னதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. கருத்து என்பதே பொய். நிகழ்வது மட்டுமே நிஜம். ஏதோ ஒன்று செய்ய ஏதோ ஒன்று நிகழ்கிறது. அந்த ஏதோ ஒன்று நிகழ இன்னொன்று நிகழ்கிறது. இப்படி எல்லாமே சங்கிலித் தொடராய் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எதுவுமே அர்த்தமில்லாதது என்றாலும் மனிதர்களுக்கு அர்த்தம் வேண்டும். அர்த்தப்படுத்திக் கொள்ளவே நிறைய பேசுகிறார்கள். நான் மிகப்பெரிய புரிதல் கொண்டவர்கள் என்று கருதிய நிறைய பிரபலங்களை கூர்ந்து கவனித்த போது சுயதம்பட்டமும் பெருமையும் அவர்களுக்குப் பின்னால் பேயாட்டம் ஆடியதைக் கவனிக்க முடிந்தது.

எல்லாப் பாதைகளுமே பொய்யானவை. எந்த பாதையுமே எங்கும் நம்மைக் கூட்டிச் செல்லாது. இந்த கணத்தில் எனக்குள் என்ன நிகழ்கிறது. அதை நான் எப்படிப் பார்க்கிறேன், இந்த இரண்டுக்கும் நடுவில்தான் என் வாழ்க்கை நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. சந்தோசமோ துக்கமோ, பிறப்போ இறப்போ, பெறுதலோ இழத்தலோ எல்லாமே ஒன்றுதான். பிழைப்புக்காய் நான் வந்திருக்கும் இந்த நகரத்தின் ஓட்டத்தில் எவ்வளவு பிரம்மாண்டமாய் பொய்கள் தங்களை நிஜமென்று அறிவித்தபடி ஆடிக் கொண்டிருக்கின்றன தெரியுமா?

120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் எங்கோ மோதி தூள் தூளாகி எப்போது மரணித்தோம் என்று தெரியாமல் மரணித்துப் போகும் மனிதர்கள்தான் இங்கு அதிகம். எனது அதிகபட்ச ஆசை என்ன தெரியுமா? குறைந்த பட்சம் நான் மரணிக்கும் போது என் மரணம் எனக்குத் தெரிய வேண்டும். ஒரு கோப்பை முழுதும் நிரம்பியிருக்கும் குளிர்ந்த பியரை ஒவ்வொரு மிடறாக மெல்ல மெல்ல அனுபவித்துக் குடிப்பது போல மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இதோ என் நினைவு தப்பப் போகிறது. இதோ என் உடல் மெல்ல மெல்ல தளர்ச்சியடைகிறது. ஏதேதோ வலிகள் உடல் முழுதும் பரவுகின்றன.... உடம்பு கிடந்து அடித்துக் கொள்கிறது, ஒரு விக்கலோடு விடுபடுவேனோ, அல்லது பெரும் இருமலோடு பிய்த்துக் கொண்டு வெளியேறுமோ உயிர், அல்லது கதறிக் கதறி கூக்குரலிட்டு வாழ வேண்டும் என்ற ஆசையோடு போராடி விடுபடுமோ....

எது எப்படியாய் வேண்டுமானலும் இருக்கட்டும் ஆனால் என் மரணத்தை நான் பார்த்து விட வேண்டும். எல்லாம் பொய் என்று நான் படித்த பாடத்தை சரிதான் என்று உணர்ந்தபடியே நீண்ட பெருமூச்சோடு குட் பை ஆல் என்ற நினைப்போடு போய்ச்சேர வேண்டும். எல்லாம் அடங்கினாலும் எனக்குள் இருக்கும் பெருங்காதல் என்னும் உணர்வு என்னோடு வரவேண்டும். உணர்வாய் பனி படர்வது போல அந்தப் பேருணர்வால் இந்த பிரபஞ்சத்தில் எல்லா பகுதியிலும் பரவி விரவி நீக்கம்ற யான்....எனது என்பவனாய் மாற வேண்டும். மலையைப் போல வெறுமனே இந்த வாழ்க்கைக்குள் வெறுமனே நீரில் மிதந்து கொண்டு வானைப் பார்ப்பது போல பிரக்ஞையோடு கிடக்க வேண்டும்.

என்னவாயிருக்கும் அது?
யாதாய் இருக்கும் அது?
இருளினில் வெடித்து கிளம்பும்
பேரொளியாய் இருக்குமோ?
இல்லை...
எல்லாம் சுருங்கிப் போய்
அசாத்திய இருளாய் 
கம்பீரமாய் கிடக்குமோ..?
மிருகமென திரியவைத்த அது
கடவுள் நான் என்று
என்னை தன்னுள் அடக்குமோ?
அல்லது
கடவுளென்ற கற்பனையை
உடைத்தெறிந்து பெரு மிருகமாய் 
என்னை தின்னுமோ?
யாதாய் இருக்குமது...?
என்னவாயிருக்குமது...?

வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் நினைவு வந்து சட சடவென்று என்னுள் மழை பெய்ய, கூடு திரும்பும் பறவையாய் மனம் சிறகடிக்கத் தொடங்கியது.

ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.....

காதல் மட்டும் என்னுள் இல்லையென்று வைத்துக் கொள்ளுங்களேன்....இந்நேரம் எங்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்....


எழுதத் தொடங்கி இருந்தேன் நான்...!



தேவா சுப்பையா...








Comments

Anonymous said…
Very Nice. You are into deep always whatever your touch. Always your writing is touching my soul. Keep on write for few people like me.
Thanks
Rangan

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...