Skip to main content

சுவடுகள்...!


திசைக்கொன்றாய்
என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்
எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்
குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க
அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக
நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,
இனி எப்போதும் நான் முன்பு போல்
இருக்கப் போவதில்லை..என்று
என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது
எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம்,

முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது
யார் யாரோ வந்தார்கள்,
ஏதேதோ கேட்டார்கள்,
பேசிச் சிரித்தார்கள்,
பூக்களை சிலர் பரிசளித்தார்கள்,
புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள்,
கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள்,
ஏமாந்தேன் என்றார்கள்....
சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன
என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி
ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது
என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி
இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது...
அப்போதும் துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல்
யாருக்கானதாய் இருக்கும் என்று
இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று
என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட்டார்கள்...

பூக்களால் தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதே பூமியின் இன்னொரு பக்கத்தில்
வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலத்திற்குள்
வேர் நாக்குகளை செலுத்தி தாகம் தீர்த்துக் கொள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய் கோபமாய்
நிற்கின்றன முள் மரங்களுக்கு எப்படித் தெரியும்
துரோகத்தையும், நியாயத்தையும்
ஒரே பாத்திரத்திலிருந்துதான் இந்த வாழ்க்கை
எடுத்து பரிமாறிக் கொண்டிருக்கிறது என்று....

யாருக்கோ என்னைப் பிடித்தது,
யாரையோ எனக்குப் பிடித்தது,
இரண்டுமே இப்போது ஒன்றுமில்லை
அறுபடாத இந்த மனதின்  கன்னத்தில்
தீக்குளம்பாய் வழிந்து கொண்டிருக்கும்
தகிக்கும் கண்ணீரை துடைக்க முடியாமல்...
அமீபாவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...நான்...
எங்கு போவது...?
யாருக்காய் போவது..?என்றெழும் கேள்வியை மட்டும்
அறுத்தெறிந்து விட்டால் போதும்....



தேவா சுப்பையா...









Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...