Skip to main content

மீளல்...!


மீளல் என்பது எப்போதும் கடினம்தான்
அது காலத்தை தின்று விடுகிறது
சுற்றியிருப்பவர்களுக்கு புரிதலின்மையைக் கொடுக்கிறது
வலியோடு நகர வைக்கிறது
வார்த்தைகளைக் கொன்று விடுகிறது;

பதுங்கித் திரியும் அடிபட்ட புலியின்
கொடூரத்தோடு பாய்வதற்கான தருணத்தை
அது எதிர்பார்த்து காத்திருக்கிறது;

மீளல் ஒரு வேள்விதான்
அது எலும்புகளைத் துளையிட்டு
ரத்தத்தை உறிஞ்சி 
நரம்புகளை அறுத்தெறிந்து 
தடாலென்று கீழ் தள்ளி விடும் போதுதான்
விழுந்த இடத்திலிருந்து நாம் 
எழுந்து விஸ்வரூபமெடுக்க வேண்டியிருக்கிறது
மீட்சி அல்லது மீளலென்பது
காலம் கையளிக்கும் இடைநிலைச் சூழல்தானென்றாலும்
மீளும் வரை மீண்டு கொண்டிருப்பவன்
பாவிதான், துரோகிதான்;

மீளல் ஒரு சூழ்நிலை மாற்றிதான்
அது மீளும் வரை
இடதை வலதாக காட்டுகிறது
வலதை இடதாகவும் மேலைக் கீழாகவும் 
கீழை மேலாகவும் காட்டிக் கொண்டேஇருக்கிறது...
மீள்பவனை ஊமையாக்குகிறது;
மீள்பவனின் வார்த்தைகளிலிருக்கும் 
சத்தியமென்பது விழலுக்கிறைத்த
வெற்று நீர்தான்...
ஆனாலும்...
மீளலொரு நாள் தன்னை
மீட்டெடுத்துக் கொள்கிறது
கூட்டுப் புழுவினை உடைத்து
சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியென என்றாலும்
மீளும் வரை கூட்டுப் புழுவின் 
அவஸ்தையோடுதானிருக்க வேண்டியிருக்கிறது...
ஆமாம்....
தூரிகையும் வர்ணக் கலவையும் மட்டும்
என்ன புரிதலைக் கொடுத்து விடும்
காண்பவர்களின் கண்களுக்கு....
தீட்டி முடியும்வரை
அது ஓவியமல்ல....
வெற்று வர்ணங்களின் 
குழப்பக் கலவைதானே...?!




தேவா சுப்பையா...






Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...