Skip to main content

மெலுகா - சிவா த வாரியர் 0.1


காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில்  நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்....

மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது போலவே எனக்குத் தோன்றியது. மஞ்சள் சூரியன் தூரத்தில்  நிதர்சனமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன தெரியும் என்பது போல என்னை பார்த்து புன்னகைத்தபடியே மெல்ல மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

பால்யம்தான் எவ்வளவு அழகானது? சிறு பிள்ளையாய் இருந்த போது இந்த மானசரோவர் கரையில் கற்களை விட்டெறிந்து யார் எறிந்த கல்லினால் அதிக அலைகள் உருவாகின்றன என்றெல்லாம் விளையாடிச் சிரித்திருக்கிறோம். என் உடம்பு முழுதும் போரில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இருந்தன. அந்தத் தழும்புகளை சூரியனின் செங்கதிர்கள் தொட்டு தடவ, மெலிதாய் வீசிய தென்றல் காற்று என்னையும் அந்த பிராந்தியம் முழுதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது.

நான் ஷிவா...என்னை ருத்ரன் என்றும் என் மக்கள் அழைப்பதுண்டு. என் மக்களை இந்த காட்டுமிராண்டித்தனமான பாக்கிரதி கூட்டத்திடம் இருந்து காப்பதற்கே என் நேரம் எல்லாம் சரியாய்ப் போய் விடுகிறது, பிறகெப்படி இந்த வாழ்க்கையின் ஆழத்திற்குள் நான் சென்று விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலைப் பெறுவது...?

சற்று தூரத்தில் இருந்த எம் கூடாரத்தின் நுழை வாயிலில் பத்ரா பாதுகாவலனாய் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் ஏதோ கனவில் உறங்கிக் கொண்டிருக்க நான் பத்ராவை  பார்த்து புருவம் உயர்த்தினேன். பத்ரா என் முகமாற்றத்தைப் புரிந்தவனாய் அவனுக்கு பின்னால் திரும்பிப்பார்த்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களை எட்டி உதைத்து அவர்களை கவனமாயிருக்க சொன்னான்.

நான் மீண்டும் மானசரோவர் ஏரியை நோக்கி முகம் திருப்பிக் கொண்டேன்.

இந்தக் ஏரிக்கரையில்தான்  என் வாழ்க்கை துவங்கியது. யாதென்றும் இன்னதென்றும், விளங்கிக் கொள்ள முடியாத புதிரோடு நகரும் இந்த வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கேள்விகள் என்னுள் எழுந்ததும் இந்த ஏரியின் கரையில்தான். புற்றீசல்கள் போல மனிதர்கள் பிறப்பதும் பின் மறைவதுமென தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டிருக்க அசையாமல் நிற்கும் இந்த காலத்தை எப்படி நான் வெல்வது...? உண்ணவும், உடுக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் என்று மனிதர்கள் எல்லோரும் ஏதேதோ ஒரு அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்க எனக்கும் இந்த காலத்திற்கும் இருக்கும் தொடர்பின் முதல் முடிச்சை எப்போது தொட்டவிழ்ப்பது நான். இடைவிடாத போர்கள், போர்கள், உயிர்காத்துக் கொள்ள உயிர்களை கொல்ல திட்டங்கள் என்று எங்கே சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை...?

யோசித்தபடியே எனது இடது பக்கம் திரும்பினேன்.  அங்கிருக்கும் கூடாரத்தில்தான் அன்னிய தேசத்தவர் இருவரயும்  தங்க வைத்திருக்கிறேன். இருபது காவலர்கள் அந்த கூடாரத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். பாகிரிதிகளாலும் இன்ன பிற மலைவாழ் இனக்குழுக்களாலும் எப்போதும் உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த மலைகளுக்கு அப்பால் பெருஞ்சமவளிப் பகுதியிலிருக்கும் மெலுகாவிற்கு வரக்கூடாது என்று அவர்கள் என்னிடம் கேட்டதில் ஒரு நியாயம் இருப்பதாய்த்தான் எனக்கு தோன்றுகிறது...

மீண்டும் ஆழமாய் புகைத்தபடியே.....யோசிக்க ஆரம்பித்தேன்...


...will continue....



தேவா சுப்பையா...






Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...