Skip to main content

சிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!


எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்...

ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது.  விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...? சிம்புவின் பாட்டாச்சு அவர் வீடாச்சு அதைக் கேட்கும் அவரது உறவுகளாச்சு என்று வழக்கப்படி தன் தொடர் வேலைகளைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்திருப்பார்கள்  மக்களும். 

அவர்களுக்கா வேலை வெட்டி இல்லை...?

நேரமிருந்தால் சமூக இணைவு தளங்களுக்குள் எப்போதாவது எட்டிப் பாருங்கள் இணையம் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் எவ்வளவு அவசரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்   என்று? தினம் தினம் எதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தெருவில் யாரோ இருவர் அடித்துக் கொள்ள நம் மண்டையா அதில் உடையப்போகிறது? எவன் மண்டையோ எங்கோ உடைந்தால் சரிதான் என்ற சமூக பக்குவத்தோடு வெகு சிரத்தையான பாதுகாப்புணர்வோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எம்பி, எம்பி இவர்கள் கம்பு சுற்றும் லாவகத்தை பார்க்கவேண்டும் நீங்கள். அன்றாட இணைய உலாவிகள் சராசரியாய் தங்களுக்கு எத்தனை லைக்குகள் எட்டிப்பார்க்கின்றன என்ற தொடுபதத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் சமூகப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞையையே தொழிலாய் செய்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரர்களுக்கும்,     சாருக்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...

அள்ள அள்ளக் குறையாத வைரம் போல நித்தம் நித்தம் நிகழும் சமூக நிகழ்வுகள்தான் இவர்களுக்கு தீனியே. எது நடந்தாலும் அதில் தன் கருத்தை சொல்லியே தீர்வது என்ற தீர்மானத்தோடுதான் இவர்களெல்லாம் பிறந்திருப்பார்கள் போலும்...? அடித்துப் பெய்த மழையில் ஆதரவாய் நின்ற மனிதர்களைப் பற்றி சொல்லிச் சிலாகித்துக் கொண்டிருந்த எல்லோரும் சடாரென்று தாவிக்குதித்து சிம்புவின் சொம்பு பாட்டை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஆலமரமாய் பார்த்து தேடி அமர்ந்து ஆளுக்கொரு கவுலி வெற்றிலையை வாங்கிப் போட்டு குதப்பியபடி நாட்டாமையாய் நர்த்தனம் ஆடத் தொடங்கிய பொழுதில் வெளுக்க ஆரம்பித்திருந்தது சென்னையின் வானம். 

சிம்புவைப் பற்றி வந்த நிறைய விமர்சனங்களையும் கண்டனக்கட்டுரைகளையும் படித்து கடந்து கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்தே விட்டேன் நவீன புத்தபிரான் சாருநிவேதாவின் வெருண்ட கோபக்கட்டுரையைக் கண்டு. அவர் வயது வந்தவர்களுக்காக மட்டும் ஆபாசங்களை எழுதித்தள்ளுவாராம் அதனால் சமூகத்தில் ஒரு பாதிப்பும் வராதாம், அவர் வயது வந்தவர்களைப் பார்த்து ஆபாச விமர்சனங்களை வைப்பாராம் அதனால் சமூகம் இன்னும் நன்றாய் வளர்ந்து மேலேறி வருமாம்.... அய்யோ பாவம் அவரால் சிம்புவின் பாடலைக் கேட்டுவிட்டு தாங்க முடியவில்லையாம், அவருக்கு கோபம் கோபமாய் வந்ததெல்லாம் சரிதான் என்றாலும் அவர் வீசிய கல்லில் பாவம் டன் கணக்கில் இருந்ததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சிம்புவாகட்டும், சாருவாகட்டும் தத்தமது வெளி என்று ஏதேதோ ஒன்றை தாங்களாகவே வரையறை செய்து வைத்துக் கொண்டு நீதிகளை தங்கள் வீட்டு முற்றத்தில் கட்டும் நாயைப் போல பாவிக்கும் பாங்கினை நினைத்தால் உவ்வ்வ்வே என்று குமட்டிக் கொண்டுதான் வருகிறதெனக்கு. சிம்பு விவகாரத்தில் சிம்புவை விட நான் நினைத்துப் பரிதாபப்படுவது அவரது அப்பா டி.ஆரைத்தான். பாவம் மனுஷன் தனி மனிதனாய் நின்று பெரிய பெரிய  ஜாம்பவான்களை எல்லாம் எதிர்த்து நின்று இசையமைத்து, பாட்டெழுதி, கதையெழுதி அதில் கண்ணியமாய் நடித்து, இயக்கி அப்ப்பப்பா....இன்றைக்கு வளர்ந்து நிற்கும் தலை, தளபதி ரசிகர்களின் காலத்தில் அவர் காமெடியனாய் பார்க்கப்பட்டாலும்...

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது....

என்றெல்லாம் பாடி எழுதி கண்ணியமாய் நேற்று வரை மகன் செய்த தவறுக்கு தாய்க்குலங்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளியில் கண் கலங்குகிறார் அவர். தகப்பனின் உழைப்பால் கிடைத்த புகழையும், அவரால் கிடைத்த மரியாதையையும், கற்றறிந்த  கலையையும் எந்த அளவுக்கு தவறாக கையாண்டிருகிறோம் என்பதை சிம்பு உணரவேண்டும். பெண்களைப் பற்றி விமர்சித்து எப்போதும் தன்னை ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொள்ளும் சிம்புவின் தாறுமாறான எண்ணங்களுக்கும் தான் தோன்றித்தனத்திற்கும் காலம் சரியான கடிவாளத்தைப் போட்டிருக்கிறதுதானென்றாலும்....

இதையெல்லாம் கடந்து வந்த பின்னர் தெளிவான மனிதராய் தன் தந்தையை போல தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிம்பு இருந்தால் சரிதான்...!



தேவா சுப்பையா...





Comments

Ahamed Kabeer said…
அருமை அண்ணா.
Anonymous said…
TR is not an angel. People who worked in his films have told about the kind of dirty words he uses in the set to scold workers without any concern for female artists. Nor his films are, I remember in one film, there were three women with skimpy clothes dancing (club dance) when the titles were running.

Also, TR still talks we should punish the guy who stole (???) the song, which in the end can turn out to be Simbu. TR is an A****le as much as Simbu or the other way around.
அருமை அண்ணா...
டி.ஆர். இப்போது பேச்சால்தான் தன்னைக் கெடுத்துக் கொள்கிறார். ஆனால் வாழ்க்கையில் சிறந்த மனிதர்தான்... அவரைப் போல் அவர் பிள்ளை இல்லாதது வருத்தமே...

இனியேனும் சிம்பு திருந்தட்டும்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...