Skip to main content

பேசித் திரியும் மான்கள்...!


அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு  அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்ன போது மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது....

குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள்.

இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்...

கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது.  மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுதான் இன்னதுதானென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த நிதர்சனமற்ற வாழ்க்கையை சட்டை செய்யாமல் தன் போக்கில் வளர்ந்தவளைத்தான் இந்த கிராமத்தில் மின்மினிப் பூச்சியைப் போல கொண்டு வந்து போட்டிருக்கிறது காலம்.

இதுவரையில் வாழ்க்கையில் நடந்து முடிந்தன யாவும் பொய்களே என்று அவள் கூறிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டிப்பார்த்த நிலவினை நான் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

சூரியனைப் பார்த்தாயா மாறுவேடமிட்டு இரவிலும் சுற்றித் திரிகிறது என்ற பாட்டியை நான் ஊடுருவிப் பார்த்தேன்....

விளக்கொளியில் பட்டு அவளது மூக்குத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது....வெளுத்த தலைமுடியும் பளபளக்கும் கண்களையும் கொண்ட அவள் யுகங்களாய் காதலோடு ஜனித்து மரித்து ஜனித்து வந்திருப்பவள் என்று என் மனது சொன்னது....

இதோ ஆயிற்று பத்து வருடங்களுக்கு மேல்....

தாத்தாவுக்கு அருகே பாட்டியும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்....ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது விளக்கு.....

தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்குப் பின்னாலிருக்கும் சமவெளியில் பேருண்மையைப் பேசும் மான்கள் இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்க வேண்டும்....




தேவா சுப்பையா...










Comments

kanchana said…
Was waiting for your post Dheva! Nn it is Simply Dhevaish as always! Good!
ஆஹா...
என்ன எழுத்து அண்ணா இது...
வசப்படுத்தி... வசப்படுத்தி... ரசிக்க வைக்கிறது...
அருமை...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...