Skip to main content

தேடல் - 1


காரணமின்றி காரியமில்லை

எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது?

சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன.

பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை.

வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேரம். பிரதோஷ தரிசனம் முடித்து அவர் ஸ்கூட்டியில் போய்விட்டார். அவ்வளவுதான் பாலகுமாரனுக்கும் எனக்குமான ஸ்தூல தொடர்பு. பட்டினத்தார் கோயில், வாலிஸ்வரர் கோயில், முண்டக்கன்னி அம்மன் கோயில், காரைக்கால் அம்மையாரை  பார்க்க திருவாலங்காடு, ஒற்றீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, கும்பகோணம் பக்கத்தில் பாடகச்சேரி, பார்த்தசாரதி கோயில், சுசீந்தரம் தாணுமலயன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரம்மந்திரர் என்று சுற்றி விட்டு கோடி முறை போன தஞ்சை பெரியகோயிலுக்குள் உடையார் படித்து விட்டு நுழைந்த போது சோழப் பேரரசு……..சோழம்…சோழம்…சோழம்….என்று யாரோ காதுக்குள் கத்த வாளால் கேடயத்தை அடித்து சப்தமெழுப்புவாக எல்லாம் தோன்றியது.

உடையார் அவ்வளவு ஆழம். எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வாழ்க்கை தெரியும். வாழ்க்கையின் முன்னும் பின்னும் என்னவாயிருக்கும் என்று தேடத் தெரியும். பாலகுமாரனின் எழுத்து ஆன்மீகத்தை எழுதத் தொடங்கிய போது அவரைக் காதலிக்கத் தொடங்கியவன் நான். இங்கே அனேகருக்கு வேறுவிதம். இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு இப்படி.

கோயிலின் நடை சாத்திவிட கோயில் முழுதும் சுற்றி வந்தேன். நாங்கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், உடையார் ராஜராஜத் தேவர் என்ற எழுத்துக்களை எல்லாம் படிக்க முடிந்தது. கல்வெட்டு வாசிப்பில் பாண்டித்திய இல்லை, பாமரத்தனம்தான்.

தஞ்சை மாறிவிட்டது. கோயில் மட்டும் பத்தாம் நூற்றாண்டின் பழமையோடு ஊருக்கு நடுவே, மனிதர் வந்தனர், வணங்கினர், சுற்றினர் சென்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இது ஒன்று போததா வாழ்க்கையை சொல்ல. யாரோ கட்ட எவர் எவரோ வந்து செல்ல, ஏதேதோ பேச, வாழ்க்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரியாய் அல்ல, வெவ்வேறாய்.

கோயிலுக்கு பின் மண்டபத்தில் தலைக்கு பையை வைத்து கோபுரத்தை பார்த்தபடி தூங்கி விட்டேன். தோளைத் தொட்டு ஒருவர் எழுப்ப திடுக்கிட்டு விழித்தேன்…தாடியும் மீசையுமாய் ஒரு பெரியவர், அழுக்கு சட்டையோடு நின்று கொண்டிருந்தார்.
கோயில்ல தூங்கலாமா? என்று அதட்டல் வேறு...

எழுந்து அமர்ந்தேன்.
பக்கத்தில் அமர்ந்தார்.
சொன்னேன்.
சிவன பிடிக்குமா?
ஆமாம்.
அப்போ எல்லாம் முடிஞ்சுது, நீ கெளம்பு.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 
பேசத் தொடங்கினார்...



-எழுதுவேன்...



தேவா சுப்பையா
15.06.2018



x

Comments

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...