
அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?
என் உடல் எரியூட்டப்படுகிறது
நானே பார்க்கிறேன்...
உறவுகளின் கண்ணீர்கள்
அவசர யுகத்தில் அனிச்சையாய்
தோன்றி மனங்களின்..
எதார்த்த சூட்டில் பஸ்பமாகின்றன...!
காற்று வேகமாக வீசுகிறது
என் உடலின் பக்கங்களில்
பற்றிப் பரவுகிறது தீ...
ஒரு திருட்டுத்தனமான ருசித்தலில்
சுகம் காணும் மனிதன்போல
என்னை அரித்தே போடுகிறது அது...!
வெறித்தபடி நான் பார்க்க....
உறவுகள் எல்லாம் போயே விட்டனர்...
சம்பிரதாயச் சடங்குகளில்...
அவர்களின் கவலையை குளப்பி
அடுத்த நகர்விற்கு செல்லும்...
பரபரப்பில் நகர்ந்தே போயின
அந்த மானுட தலைகள்...!
நான் எரிகிறேன்...நானே பார்க்கிறேன்...
அதோ...என் கண்களைத்...
தடவுகிறது காந்தல் தீ...
காதலை மட்டுமா சுமந்தது அவை
ஏதேதோ கனவுகளையும் தானே?
தத்துவங்கள் சேமித்த மூளை
தடுமாற்றமின்றி விருந்தாய்ப் போனது
விறகிலிருந்து ஜனித்த அக்னிக்கு..!
மணமறியும் குணமறிந்த நாசிகளும்
ஓராயிரம் விவாதங்கள் புரிந்த நாவும்
மறுபேச்சின்றி மண்டியிட்டு விட்டன
ஜுவாலைகளின் நாக்குகளிடம்...!
எரியும் என் சிதையோடு
என்னை மறந்தே போனது உலகம்..
கருகும் என் உடலோடு
கலைந்தே போனது என் வாழ்க்கை...!
அலைதலாய் எல்லாம் கவனிக்கிறேன்...
யாரோ சிரிக்கிறார்கள்..
யாரோ இருவர் கூச்சலிடுகிறார்கள்
வேறு யாரோ அடித்துக் கொள்கிறார்கள்
எப்போதும் மரணம் நிகழ்கிறது
காதலைச் சொல்லி காமமும்...
காமத்தைச் சொல்லி காதலும்
ஜனிப்பித்தலின் விதிகளாகின்றன....!
ஒரு தெரு நாய் தன் துணையிடம்
வால் குழைத்து நெருங்குகிறது
செடிகள் பூக்கின்றன; காய்க்கின்றன..
வேகமாய் காற்றடிக்கிறது..
ஒரு பட்ட மரம் வேறோடு சாய்கிறது;
ஒரு பச்சை மரம்...
கண்ணடித்து சிரிக்கிறது...!
எப்போதும் நகரும் ஏதோ ஒன்றிற்கு...
யாருமே தேவையில்லை என்றுதான்
சப்தமாய் அங்கு படர்ந்திருந்த
மெளனம் சொன்னது...!
ஆமாம்...
அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?
தேவா. S
Comments
அதன் வழி, கரு என்ற வகையில் நாம் கண்டிப்பாக பேசுவோம்...
கவிதை காட்சியாக
கண்களில் விரிந்தது..
ஜனிக்கும் ஜீவன் மரிக்கும் நேரம்
சகலமும் கண்முன்
தோன்றி மறைவது போல் உணர்வு..!
...கவிதைக்கு நன்றி :-)
இதுதான் யதார்த்தம் என்று அறிவு சொன்னாலும், அலையும் மனதிற்கு தெரிவதில்லை எல்லாம் மாயை என்று !
தலைப்பு, படம் இரண்டும் மிக பொருத்தம்.
படிப்பவர்களையும் கனவு காண (கற்பனை) வைத்துவிட்டது பதிவு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/