Skip to main content

மாயா....!





















அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

என் உடல் எரியூட்டப்படுகிறது
நானே பார்க்கிறேன்...
உறவுகளின் கண்ணீர்கள்
அவசர யுகத்தில் அனிச்சையாய்
தோன்றி மனங்களின்..
எதார்த்த சூட்டில் பஸ்பமாகின்றன...!

காற்று வேகமாக வீசுகிறது
என் உடலின் பக்கங்களில்
பற்றிப் பரவுகிறது தீ...
ஒரு திருட்டுத்தனமான ருசித்தலில்
சுகம் காணும் மனிதன்போல
என்னை அரித்தே போடுகிறது அது...!

வெறித்தபடி நான் பார்க்க....
உறவுகள் எல்லாம் போயே விட்டனர்...
சம்பிரதாயச் சடங்குகளில்...
அவர்களின் கவலையை குளப்பி
அடுத்த நகர்விற்கு செல்லும்...
பரபரப்பில் நகர்ந்தே போயின
அந்த மானுட தலைகள்...!

நான் எரிகிறேன்...நானே பார்க்கிறேன்...
அதோ...என் கண்களைத்...
தடவுகிறது காந்தல் தீ...
காதலை மட்டுமா சுமந்தது அவை
ஏதேதோ கனவுகளையும் தானே?

தத்துவங்கள் சேமித்த மூளை
தடுமாற்றமின்றி விருந்தாய்ப் போனது
விறகிலிருந்து ஜனித்த அக்னிக்கு..!
மணமறியும் குணமறிந்த நாசிகளும்
ஓராயிரம் விவாதங்கள் புரிந்த நாவும்
மறுபேச்சின்றி மண்டியிட்டு விட்டன
ஜுவாலைகளின் நாக்குகளிடம்...!

எரியும் என் சிதையோடு
என்னை மறந்தே போனது உலகம்..
கருகும் என் உடலோடு
கலைந்தே போனது என் வாழ்க்கை...!

அலைதலாய் எல்லாம் கவனிக்கிறேன்...
யாரோ சிரிக்கிறார்கள்..
யாரோ இருவர் கூச்சலிடுகிறார்கள்
வேறு யாரோ அடித்துக் கொள்கிறார்கள்
எப்போதும் மரணம் நிகழ்கிறது
காதலைச் சொல்லி காமமும்...
காமத்தைச் சொல்லி காதலும்
ஜனிப்பித்தலின் விதிகளாகின்றன....!

ஒரு தெரு நாய் தன் துணையிடம்
வால் குழைத்து நெருங்குகிறது
செடிகள் பூக்கின்றன; காய்க்கின்றன..
வேகமாய் காற்றடிக்கிறது..
ஒரு பட்ட மரம் வேறோடு சாய்கிறது;
ஒரு பச்சை மரம்...
கண்ணடித்து சிரிக்கிறது...!

எப்போதும் நகரும் ஏதோ ஒன்றிற்கு...
யாருமே தேவையில்லை என்றுதான்
சப்தமாய் அங்கு படர்ந்திருந்த
மெளனம் சொன்னது...!

ஆமாம்...
அது ஒரு நீண்ட கனவு
நான் மீண்டெழுந்து
பகலின் உச்சி தொட்ட பின்னும்
நிஜமாய் தொடரும் ...
அது ஒரு பொய்யா? இல்லை...
பொய்யில் நான் கண்ட நிஜமா?

தேவா. S

Comments

வினோ said…
அண்ணா, கவிதை என்ற வகையில் அருமை...

அதன் வழி, கரு என்ற வகையில் நாம் கண்டிப்பாக பேசுவோம்...
ரொம்ப ஆழமான.. மனதைத் தொடும்/சுடும் ஆத்மார்த்தமான வரிகள்...

கவிதை காட்சியாக
கண்களில் விரிந்தது..

ஜனிக்கும் ஜீவன் மரிக்கும் நேரம்
சகலமும் கண்முன்
தோன்றி மறைவது போல் உணர்வு..!

...கவிதைக்கு நன்றி :-)
கவிதைக்கு ஏற்ற பொருத்தமான படத்தேர்வு :)
Kousalya Raj said…
இது ஒரு நீண்ட கனவு என்றாலும் வாசிக்கும் போது கற்பனையில் கண்ட காட்சிகள் மனதை கீறி பார்க்க தவறவில்லை.

இதுதான் யதார்த்தம் என்று அறிவு சொன்னாலும், அலையும் மனதிற்கு தெரிவதில்லை எல்லாம் மாயை என்று !

தலைப்பு, படம் இரண்டும் மிக பொருத்தம்.

படிப்பவர்களையும் கனவு காண (கற்பனை) வைத்துவிட்டது பதிவு.
யுகாந்திரங்களாக தொடரும் நிகழ்வுகள்.. அருமையான கவிதை.
யார் நீங்கள்.நீங்கள் ஞானியா!!! இல்லை காதலில் தோல்வியுற்ற ஒரு தேவதாசா### இருவரும் இப்படியேதான் பேசுவார்கள்///மன்னிக்கவும்///நிறைய நண்பர்களின் ஆலோசனைப்படி கருத்துக்கள் படிமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டுரை சம்பந்தமான கருத்துக்களும், புதிய கருத்துக்களும், விமர்சனங்களும் மட்டும் வரவேற்கப்படுகின்றனநன்றாக இருக்கிறது என்று வாழ்த்த விரும்பும் நண்பர்களின் வாழ்த்துக்களை மனதார ஏற்றுக் கொள்கிறேன் அதற்காக ஒரு கருத்துரை இட வேண்டாமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.///இப்படிப்பட்ட இரு வெறு விதங்களை இணைக்கும் விதத்தில் உள்ளது உங்கள் பதிவு.தெளிவுபடுத்துங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/
ஹேமா said…
தேவா...மனதின் ஏவல்கள் வார்த்தைகளாகிப் பின் கனவுபோல !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...