Skip to main content

கனவிலாவது...?
















நேற்றைய கனவும்
உன்னால்தான் நிரம்பி வழிந்தது,
வழக்கம் போல நெருக்கமாய்
தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,
வழக்கம் போல காதலை
மெளனத்திற்கு இரையாக
இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!

ஏதேனும் செய்திகளை
உன் விழிகள் எனக்குப் பகிருமா?
என்று உற்று நோக்கினேன்
அது காதலைத் தவிர
வேறொன்றும் பகிரேன் என்று
பிடிவாதம் பிடித்தது...!

என் மெளனத்துக்கு காரணத்தை
நீயும் மெளனத்தால் தேடியது
போலவே நானும் தேடியதில்
குடி கொண்டிருந்த நிசப்தத்தில்
பரவிக் கிடந்த அதிர்வுகளோடு
சப்தங்களை அதிகமாக்கிக்
கொண்டிருந்த நமது இதய துடிப்பும்
அன்னிய தேசத்து எல்லையை
கடந்து செல்லும் அவஸ்தையோடு
தொண்டையை கடக்கும்
அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்
சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லப்போவதில்லை
என்பதைப் போல...
நீயும் சொல்லப்போவது இல்லை
என்பதை உரக்க கட்டியம்
கூறிக் கொண்டிருந்த
மெளனத்தை உடைக்கும் முயற்சியில்
முதலில் எட்டிப் பார்த்த
உனது உதட்டோரப் புன்னகையில்
நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்?
வார்த்தைகளை வாங்கிக் கொண்டு
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

கலைந்து போன கனவில்
நிஜத்தை தொலைத்த வெறுமையோடு
விடியப்போகும் பொய்மையில்
உன்னை சந்திக்கையில்....
இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்
என்று என் மெளனத்தால்
உன் மெளனம் மோதி
ஒரு கேள்வி கேட்கிறேன்...
நிஜத்தில் நீ மெளனித்தாலும்
பரவாயில்லை,
அடுத்த கனவிலாவது சொல்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று!


தேவா. S




Comments

//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

உணர்வுபூர்வமாக எழுதியிருக்கீங்க நண்பா. அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த வார்த்தையின் வலி. கலக்கலான காதல் கவிதை. வாழ்த்துக்கள்.
உணர்வுபூர்வமாக ரசித்து எழுதியுள்ளீர்கள் சொல் என்றாள் போகவா என்பது தவிப்பின் உச்சம் வாழ்த்துக்கள்!
Kousalya Raj said…
கவிதை அதன் பின் ஒலிக்கும் பாடல் இரண்டும் மனதை இழுத்து பிடித்து வைத்து கொள்கிறது !

கவிதை படித்ததும் அந்த உணர்வு படிப்பவர்களுக்கும் ஏற்பட வேண்டும்...அதை கச்சிதமாக செய்துவிடுகிறது இந்த கவிதை.

வாழ்த்துக்கள்.
//ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //

...அடடா.. செம செம.. வார்த்தை கோர்ப்பு பின்றீங்க போங்க.

...கனவிலாவது சொல் என்னை காதலிக்கிறாய் என்று! :)

Beautiful Kavithai.. with perfect song on the Background!
அழகான கவிதை. இந்த மௌனத்தால் தோற்று போன காதல் ஏராளம்.
//சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்? //
பொருத்தமான வார்த்தை பயன்பாடு !
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

அழகு கவிதை-அழகு வரிகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
அருமையான கவிதை...
பல காதல்கள் மௌனத்தை உடைக்காமல் மரணித்துப் போகின்றன. இங்கு கனவிலாவது துளிர்க்கட்டும்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...