இதோ உன் நினைவுகளை எனது வார்த்தைகள் ஒரு பட்டத்து அரசியை சுமந்து வரும் பணியாட்களைப் போல மிக கவனமாக சுமந்து வருகின்றன. விழிகளால் நீ இமைத்து, இமைத்து என்னை அணைத்துக் கொள்ளும் அன்பில், நான் உன் விழியாக இருந்து எப்போதும் நீ இமை பிரிக்காமல் ஆழ்ந்து உறங்கும் அற்புத தருணங்களில், உனக்கான கனவுகளை நான் காணும் பாக்கியத்தை பெறுவதே இந்தக் கணத்தில் எனக்குப் பேராசையாய் இருக்கிறது.
நீ, உனக்கு என்று எதை நான் எழுதினாலும் அந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் முற்றுப் புள்ளிகளை எல்லாம் விழுங்கிக் கொண்டே ஒரு அசுரனாய் நீண்டு கொண்டிருக்கிறது. என் கேசம் கலைத்து நீ விளையாடிய போது, உனக்கு நான் சொன்ன கவிதையை நீ உன் கையெழுத்தால் எழுதி என்னிடம் காட்டிய பொழுது உன் கையெழுத்து இருந்த அழகில் என் கவிதை பொருள் இழந்து, உப்பில்லா பண்டமாய் சுவை இழந்து காகிதத்தில் இருந்து இறங்கி தற்கொலை செய்ய முயன்ற பொழுதில் பொருளில்லா விட்டால் என்ன அழகிருக்கிறதே என்று கர்வமாய் என்னை பார்த்ததாய் நான் உன்னிடம் கூறிய போது....
நீ சப்தமாய் சிரித்தாய்..!!!! நான் கவிதையின் காட்சி வடிவத்தைப் பார்த்து விட்டேன் என்று ஆர்க்கிமிடிஸ் போல யுரேகா யுரேகா என்று சந்தோசத்தில் குதித்த போது என் உற்சாகம் அங்கே ஆடையில்லாமல் கட்டுக்களை உடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்ததை நீ வெட்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாய். நான் லெளகீக ஆடைகளைக் களைந்து முக்தியடைந்த முனிவனானேன்...!
ப்ரியங்களை, ப்ரியங்கள் என்றுதான் சொல்ல முடியும். ப்ரியங்களின் உச்சங்கள் அவற்றை விவரிக்க முடியாமல் மெளனித்து விடுகின்றது. அங்கே சொல்லவும், கேட்கவும் ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது.
உன் மீதான் ப்ரியத்தின் உச்சத்தில் நான் மெளனித்து இருந்ததைப் போலத்தான் நீயும் என் மீதான ப்ரியத்தில் மெளனித்து இருந்தாய் என்று மூர்க்கமாய் உன்னோடு நான் இயங்கிக் கொண்டிருக்கையில் நீ முச்சிறைக்க சொன்னதை என்னால் ஆமோதிக்கத்தான் முடிந்ததே அன்றி அதை வார்த்தையால் சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை என் உதடு கவ்வி நீ ஏற்றுக் கொண்டாய். காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும் என்று நான் சொன்னதற்கு நீ அப்போது கெட்ட காதல் என்னவாகும் என்று கேட்டாய்...
காமத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடியும் என்றேன்...!
ஆமாம் காமம் எப்போதும் உடலின் இச்சையப் போக்கவே உதவுகிறது. காமத்தின் உச்சத்தில் அது தொலைந்து போகவும் செய்கிறது. எது தேவையோ அது முடிந்தவுடன் அது ஒரு வணிகத்தின் சாயலில் வணிகமாகவே முடிகிறது ஆனால் காதல் தொடங்கும் இடத்தில் காமத்தின் சாயல் கூட தோன்றுவதில்லை. அங்கே அன்பு என்னும் பெரு விருப்பம் ஒரு மலைப்பாம்பாய் சுற்றி வளைத்து இறுக்க இறுக்க அந்த அன்பில் திக்கித் திணறித் திணறி அதை வெளிக்காட்ட கடைசியில் மலர்ந்தே விடுகிறது காமமென்னும் வாசம் வீசும் காதல் மலர்.
இங்கே தேவைகள் எல்லாம் அன்பாய் இருக்கிறது. காமத்தைக் கடக்க காதல் வசதியான துடுப்பாகிறது. கடந்தே முடித்தவுடன், காமம் என்னும் கடலுமில்லை, துடுப்பென்ற காதலுமில்லை, நானும் இல்லை, நீயும் இல்லை....பேரமைதி, பெரு இன்பம் என்று கூறி விட்டு நான் சப்தமாய் சிரித்தேன்...., நீ என்னை இறுக அணைத்திருந்தாய்....துடுப்புகள் அசைய துவங்கியது மீண்டுமொரு முறை நமது காதல் பயணம்....
' மங்கைக்குள் காதலெனும்..
கங்கைக்குள் நான் மிதக்க...
சங்கமங்களில் இடம் பெறும்
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....'
என்று எங்கெங்கோ கூட்டிச் செல்லும் மயக்கும் இசைக்கு ஈடு கொடுக்கும் குரல்களும் வரிகளும் என்று 1970களின் இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் என்ற ஜாம்பவான்களின் கூட்டணி நம்மை கட்டி இழுத்துச் சென்று வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இறக்கி விட்டு விட... திரும்ப வர வழி தெரியாமல் வாலியின் வார்த்தைகளே துணை என்று நாம் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்....
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...'
தேவா. S
Photo Courtesy: Kaviyam
Comments
பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...