கண்களால் பற்ற வைத்து
உச்சரிக்காமல்
உதடுகளுக்குள் மடங்கிக் கிடக்கும்
வார்த்தைகளில் முடங்கியே
போய் விடுமா நம் காதல்?
நீண்டு கிடக்கும் வானத்தின்
ஆழ மடிப்புகளில்
ஆளரவமற்ற வெளிகளுக்குள்
கரைந்திருக்கும் உப்பின்
மிகுதிகள் நிறைந்திருக்கும்
என் கண்ணீரின் படிமங்களை
நான் காதலென்கிறேன்...
நீ கரிப்பு என்கிறாய்!
கீறிக் கிழித்த முள்ளின்
ஆழாமான கூர்களுக்குள்
படிந்திருக்கும் திசுக்கள் கூட
மரணிக்கும் முன்பு
நான் கொண்ட காதலை
சொல்லி மடிகிறதென்கிறேன்
நீ மருந்தில் மாறா
காயமுண்டா என்கிறாய்!
ஒர் உறைக்கும் வெயிலின்
காந்தலில் எரியும் எனது
ரணங்கள் எல்லாம்
உன் மெளனக் கத்திகளால்
கிழிக்கப் பட்டவை என்றேன்
மெளனத்தால் மேலும்
கீறல்களை வரங்களாய்த் சபித்தாய்!
முடவனாய் ஒரு கொடும்
விலங்கிடமிருந்து
தப்பிக்கும் முயற்சிகளில்
உன் கரம் பிடிக்க
எட்டி எட்டி..முயன்ற
என் தோல்விகளில்
நீயும் நானும் சொல்லாத
காதல் ஒன்று செத்துப்போய்
எரிந்து போன சாம்பாலாய்
சிதறுண்டு கிடக்கிறது இன்னமும்
ஏதோ ஒன்றின் நினைவாக!
தேவா. S
Comments
ஆழ மடிப்புகளில்
ஆளரவமற்ற வெளிகளுக்குள்
கரைந்திருக்கும் உப்பின்
மிகுதிகள் நிறைந்திருக்கும்
என் கண்ணீரின் படிமங்களை
நான் காதலென்கிறேன்...
நீ கரிப்பு என்கிறாய்!
மிக அருமையான வரிகள் நண்பா