Skip to main content

Posts

Showing posts from January, 2014

மடை திறந்து... தாவும் நதியலை நான்!

சொகுசு வாழ்க்கை  வாழ புரவிகள் ஒரு போதும் பிறப்பெடுப்பதில்லை. சொடுக்கி விட்டால் காற்றில் பாயும் வித்தை செய்ய பிறந்தவை சோம்பித்திரிந்தாதாய் சரித்திரமும் இல்லை. வாழ்க்கையே ஓட்டம் தான் என்று அறிந்து பிறந்தவை அவை. எந்தத் திசை என்று தெரியாமல் சொடுக்கி விட்டால் ஓடும் என் வார்த்தைகளையும் நான் புரவிகளைப் போலத்தான் கருதிக் கொள்வேன். குதிரையிலேறி பயணிக்கையில் ஏற்படும் கம்பீரமும் திமிரும், கர்வமும் எழுதும் போதெல்லாம் என் மீதேறிக் கொள்ளும். குதிரை ராஜவாகனம். கம்பீரத்தின் குறியீடு. விழுந்த நொடியில் மீண்டெழும் மிருகம் அது. சாத்திரம் பேசுறாய்....கண்ணம்மா   என்றொரு புரவியொன்றிலேறி புரவியின் விருப்பத் திசையில் நான் பயணித்த கதையொன்று என்னிடம் இருக்கிறது. அதில் வரும் பத்மா இந்த சமூகத்தைச் சேர்ந்த சமகாலத்தை சேர்ந்த பெண் தான். அவள் காமத்தை பேசுகிறாள் அந்தக் கதையில் கற்பென்று மனிதர்கள் கட்டியெழுப்பியிருக்கும் பொய்யை தன் கால்களால் எட்டி உதைக்கிறாள்.  காமத்தைப் பற்றிய புரிதலற்றுக் கிடக்கும் பிண்டங்களின் புத்தியில் படிந்து கிடக்கும் ஆபாசக் கறைகளைப் பார்த்து காறி உமிழ்கிறாள். அவள் அவனுக்குப் பிடித்தவனு

நாளும் எனக்கொரு சேதி சொல்லும்..!

பிடித்தமான பெண்ணை சந்திக்க வருகையில் வரும் கவனத்தோடு எழுத அமர வேண்டியிருக்கிறது. மனக் கிறக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வேறு எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது. காதலோ, ஊடலோ அந்தக் கணத்தை கட்டெறும்புகள் வந்து மொய்ப்பது போல எந்த ஒரு மனிதத் தொந்தரவும் நம்மை தொட்டு விடக்கூடாது என்றுதான் காதலர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தங்களை எல்லா சூழல்களிடமிருந்தும் ஒளித்துக் கொள்கிறார்கள். மெரீனா பீச்சை மேம்போக்காக நான் சுற்றுவதுண்டு. நேரம் காலம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அது சுற்றுதல் கிடையாது.  மேய்ச்சல். மேய்ச்சல் என்றால் என்ன தெரியுமா? அப்படியே அலைந்து  கொண்டிருப்பது. கிடைக்கும் தேவையானவற்றை வாய் வைத்து கடித்து இழுத்து புசித்து மென்று கொண்டே தினவெடுத்து திரிவது. மேய்ப்பனாயும் இருந்து கொண்டு மேய்பவனாயும் நான் இருந்திருக்கிறேன். காதலிப்பவர்களின் உலகமே தனிதான். அங்கே என்ன மிகுந்திருக்கும் எது நலிந்திருக்கும் என்று கணக்குப் போட்டே பார்க்க முடியாது. சொல்வதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டு...கெஞ்சிக் கொஞ்சி கிடக்கும் அந்த நிமிடங்கள் போலத்தான் சொர்க்கம் (என்ற ஒன்று இர

காலமென்னும் நதியினிலே...!

எழுதும் போது பாலகுமாரன் சார் எவ்வளவு  கஷ்டப்பட்டு இருப்பாரோ தெரியவில்லை.....ஆனால் அதைப் படித்து முடிக்க நான் கிட்ட தட்ட 2 வருசம் ஆகிவிட்டது. உடையார் ஆறாவது பாகத்தைப் முடித்து விட்டு அதை விட்டு விலகி வர முடியவில்லை. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பின் மறுபடி கல்லூரிக்கோ இல்லை வேலைக்கோ வேறு ஊருக்கு கிளம்பும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருக்குமே அது மாதிரி இருந்தது. புத்தகத்தை எடுத்து மடக்கி வைக்க மனதே வரவில்லை.அது கதையல்ல ஒரு வாழ்க்கை. அழகிய ஒரு கலாச்சாரம். ராஜராஜசோழன், பஞ்சவன் மாதேவி, இரேஜேந்திரச் சோழர், பிரம்மராயர் கிருஷ்ணர் ராமன் அவருடைய மகன் அருண்மொழிப் பட்டன், வல்லவராயர் வந்தியத் தேவர், பெருந்தச்சர் குஞ்சரமல்லன், வினோதகப் பெருந்தச்சன்....,  எல்லாவற்றுக்கும் மேலாக கருவூர்த் தேவர்... கதையின் ஆதர சக்தியாய் இருக்கும் நிசும்ப சூதனி....இப்படியாய் விரிவடைந்து கொண்டே செல்லும் ஆதிக்கம் நிறைந்த பாத்திரப்படைப்புகள் முதல் தெருவில் சாதாரணமாய் வணிகம் செய்யும் மனிதர்கள், அவ்வப்போது சண்டையிடும் மறவர்கள் என்று மனம் முழுதும் மனிதர்கள் வியாபித்து நின்று கொண்டிருக்கிறார்கள். முழுதாய் இந்த நாவ

கனவுப் பூ - 2

கனவுப் பூ -1 மாதவிக்கு சுரீர் என்று வலி எடுத்தது....அம்ம்ம்ம்ம்ம்மா......சப்தமாய் கத்தினாள்...! சாம்பசிவம் பதறி எழுந்தார். என்னாச்சும்மா....ஏய்....எந்திரிடி....மனைவியை பிடித்து உலுக்கினார்...சரசு வேகமாய் எழுந்தாள்... என்னத்தா...? வலி எடுக்குதா....மாதவியின் தோள் பிடித்து கேட்டாள். ஆமாம்மா பாத்ரூம் போகணும்.... கைத்தாங்கலாய் பிடித்து வாஷ்ரூமில் உட்கார வைத்தாள். மாதவிக்கு வலி அதிகமானது. இடுப்பு எலும்பு மெல்ல விலகுவதைப் போல தோன்றியது. அந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை.  ....ஏங்க... போய் முருகேசன எழுப்பி ஆட்டோவ எடுத்திட்டு வாங்க....சரசு ஓலமிட்டாள். மூணாவது தெரு முருகேசனின் ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதிகாலை இரண்டரை மணி. சுதா...அக்காவோட சீல துணிமணி நைட்டி எல்லாம் எடுத்து பைல வச்சு எடுத்துட்டு வாம்மா... எதித்த வீட்டு ஜோசப் அம்மாவ எழுப்பி கூட்டிட்டு வாடி சுதா....சரசு கத்தினாள். முன் சீட்டில் சாம்பசிவம் டென்சனாய் அமர்ந்திருந்தார்.  மாதவி பிறந்து கையில் கொண்டு வந்து நர்ஸ் கொடுத்த நினைவு புத்திக்குள் அவருக்கு எட்டிப்பார்த்தது. பெண்

கனவுப் பூ - 1

சுவற்றில் சாய்ந்திருந்தாள் மாதவி. இடுப்பு லேசாக வலிப்பது போல இருந்தது. எப்போ வலி வந்தாலும் உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துடுங்க ஏன்னா இதுதான் அவுங்களுக்கு டைம்.....ஏம்மா மாதவி...வலி அதிகமாச்சுன்னா....வந்துடு சரியா...? பனிக்குடம் உடைஞ்சா வெளில வர்ற லிக்விட் கொஞ்சம் பிசு பிசுப்பா கெட்டியா இருக்கும்...உடனே கெளம்பி வந்துடுங்க...... காலையில் டாக்டர் சுபா சொன்னதை நினைத்துக் கொண்டாள். சுவற்றில் வாகாக சாய்ந்து உட்கார்ந்திருந்த மாதவி வயிற்றை தடவிப் பார்த்தாள். உள்ளுக்குள் ஒரு ஜீவன் வெளியே வர துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். கீழே தரையில் தலைக்கு கை கொடுத்தபடி படுத்திருந்த அம்மாவையும், அப்பாவையும் பார்த்தாள். எழுப்புவோமா....என்று யோசித்தாள். இப்பதானே லேசா சுரீர்னு வலிக்கிற மாதிரி இருக்கு.. இன்னும் வலி கொஞ்சம் கூட போனிச்சின்னா எழுப்பலாம்...யோசித்தவள்.... சுதா.. சுதா என்று மெல்லிய குரலில் அவள் தங்கையை அழைத்தாள். வாரிச் சுருட்டி எழுந்த சாம்பசிவம்...ஏத்தா.. என்ன வேணும்......? இல்லப்பா கொஞ்ச வெந்நீர் வேணும்....குடிக்க... சரசு ஏய்...சரசு...பிள்ளை வெந்நீர் கேக்குற பாரு...

தல Vs தளபதி தலைப்பொங்கல் யாருக்கு...?

விஜயின் தலைவாவையும், அஜித்தின் ஆரம்பத்தையும் பார்த்த மிரட்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை நான். இரண்டு படமுமே அவ்வளவு கொடுமையானது. இரண்டும் நன்றாகத்தானே இருந்தது என்று தல, தளபதியின் ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் என்னை போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு அவை இரண்டும் கெட்ட கனவுகள். தலைவா படம் பார்க்க நள்ளிரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்து பார்க்கச் சென்றேன். அதிகாலை 2 மணிக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பல்லைக் காட்ட ஆரம்பித்தது. ரஜினி பார்முலா எல்லாம் ரஜினிக்கே இனிமேல் ஒத்து வராது என்னும் உண்மையை இப்போது  நடிக்கும் நடிகர்கள் குறிப்பாய் விஜய் உணரவேண்டும். எம்.ஜி.ஆர் பார்முலாவை தூசு தட்டி ரஜினி ஆட்டம் காட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இது  ‘ஆம் ஆத்மி’ களின் காலம். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களின் வழிகாட்டுதலோடு நடுத்தர வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்தாகி விட்டது. திரையில் தன் அரசியல் தலைவனைத் தேட வேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் இப்பொது தமிழ் மக்களுக்கு கிடையாது. விஜய் தலைவாவில் அரசியல் பேச முயன்று மாண்புமிகு முதல்வர் அம்மாவின

மதயானைக் கூட்டம்...!

இயக்கம் விக்ரம் சுகுமாரன் என்ற அறிவித்தலோடு படம் முடிந்து போய்விடுகிறது. நள்ளிரவில் படம் பார்த்து முடித்திருந்தேன். கடைசிக் காட்சியில் கழுத்தில் வளரி வாகாய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் மூச்சுக்குழல் அறுபட்டு பார்த்தியாய் நடித்த கதிர் திணறிக் கொண்டிருந்த காட்சி என் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து விட்டு பால்கனிக்கு வந்தேன். நள்ளிரவு ஷார்ஜா நேசனல் பெயின்ட்ஸ் பகுதி நானெல்லாம் உறங்கமாட்டேன்... உள்ள போடா என்று என்னைப் பார்த்து அதட்டியது. என் வீட்டிலிருந்து பார்த்தால் பழைய எமிரேட்ஸ் ரோடு தற்போதைய ஷேக் முகமது பின் சையித் ரோடு தெரியாது...ஆனால் அதில் அசுரத்தனமாய் விடிய விடிய அலைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சப்தம் துல்லியமாய் கேட்கும். என் வீட்டிலிருந்து வலது புறம் பார்த்தேன் ஷார்ஜா யுனிவர்சிட்டி தூரமாய் தெரிந்தது. ஆறாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டால் உயிர் போகுமா..? போகாதா என்ற ஒரு எண்ணம் விபரீதமாய் உள்ளுக்குள் எட்டிப் பார்த்த போது நான் கீழே சிதறிக் கிடந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பகல் நேரத்தில் அத்தனை வாகனங்களும் பிழைப்பு நோக்கி ஓட