Skip to main content

மடை திறந்து... தாவும் நதியலை நான்!


சொகுசு வாழ்க்கை  வாழ புரவிகள் ஒரு போதும் பிறப்பெடுப்பதில்லை. சொடுக்கி விட்டால் காற்றில் பாயும் வித்தை செய்ய பிறந்தவை சோம்பித்திரிந்தாதாய் சரித்திரமும் இல்லை. வாழ்க்கையே ஓட்டம் தான் என்று அறிந்து பிறந்தவை அவை. எந்தத் திசை என்று தெரியாமல் சொடுக்கி விட்டால் ஓடும் என் வார்த்தைகளையும் நான் புரவிகளைப் போலத்தான் கருதிக் கொள்வேன். குதிரையிலேறி பயணிக்கையில் ஏற்படும் கம்பீரமும் திமிரும், கர்வமும் எழுதும் போதெல்லாம் என் மீதேறிக் கொள்ளும். குதிரை ராஜவாகனம். கம்பீரத்தின் குறியீடு. விழுந்த நொடியில் மீண்டெழும் மிருகம் அது.

சாத்திரம் பேசுறாய்....கண்ணம்மா  என்றொரு புரவியொன்றிலேறி புரவியின் விருப்பத் திசையில் நான் பயணித்த கதையொன்று என்னிடம் இருக்கிறது. அதில் வரும் பத்மா இந்த சமூகத்தைச் சேர்ந்த சமகாலத்தை சேர்ந்த பெண் தான். அவள் காமத்தை பேசுகிறாள் அந்தக் கதையில் கற்பென்று மனிதர்கள் கட்டியெழுப்பியிருக்கும் பொய்யை தன் கால்களால் எட்டி உதைக்கிறாள்.  காமத்தைப் பற்றிய புரிதலற்றுக் கிடக்கும் பிண்டங்களின் புத்தியில் படிந்து கிடக்கும் ஆபாசக் கறைகளைப் பார்த்து காறி உமிழ்கிறாள். அவள் அவனுக்குப் பிடித்தவனுடன் கூடுகிறாள். கூடல் செய்யாத மனிதருண்டோ இப்பூமியில்..?  பின் ஏன் கூடலை கலை நயத்தோடு பேச மறுக்கிறீர் என்று ஒழுக்கக் கூரைகளில் ஏறி நின்று கூவும் சேவல்களின் குரல்வளைகளை நெறித்துக் கொன்றும் போடுகிறாள் அவள்.

திருமணத்திற்கு முன் காமம் தவறென்று சட்டம் இயற்றி இருக்கும் ஒழுக்க சீலர்களிடம் திருமணத்திற்குப் பிறகு வரைமுறையற்ற காமம் என்பது சரிதானா? என்று கேள்வியைத் தூக்கிப் போட்டு சதிராட விடுகிறாள். கண்ணகிகளுக்கு கற்பரசி என்று கோயில் கட்டி வணங்கியது பெண்களுக்குச் செய்த துரோகம் என்று சொல்லும் அந்த கதையின் நாயகி பெயர் பத்மா. வெறுமனே ஏதோ ஒரு பெயர் சூட்ட வேண்டம் என்று பத்மா என்று பெயர் சூட்டப்பட்டவள் அல்ல. மலர்ந்த செந்தாமரையை ஒத்த புத்தி கொண்டவள். அந்த புத்தியில் கிளர்ந்தெழுந்த ஞானம் கொண்டவள். இருப்பதை இயம்பும் செம்மை கொண்டவள். இருக்கும் சமூகம் சாக்கடையெனினும், சகதி நிறைந்த பார்க்க முடியாத இடமாயினும் தன் புரிதல் தண்டுகளால் உயர்த்திக் கொண்டு விரிந்து பரந்த்து சிரிக்கும் தாமரையாய் பரந்து விரிந்த வானின் முழுமையை வாங்கிக் கொள்ளும் திமிர் கொண்டவள்தான் பத்மா.

மாதவி கொண்டிருந்தது காதல். அந்தக் காதலினால் அவள் கொண்டது காமம். காதலால் நெகிழ்ந்தும் நெகிழ்ந்து அங்கே அனிச்சையாய் பூத்துச் சிரித்த காமத்தை போற்ற திரணியற்ற என் சமூகம் திருமணமென்னும் பந்தத்தில் தாலிக்கயிறு என்னும் அடையாளத்தைச் சுமந்து கொண்டு காமத்தில் தொடங்கும் முதலிரவும் அந்த காமத்தினால் பிறக்கும் காதலும் கொண்ட கண்ணகிகளை கற்புக்கரசி என்று போற்றச் செய்கின்றன. கண்ணகிகளை நீங்கள் போற்றிக் கொள்ளுங்கள் அதில் பிழையில்லை, ஆனால் தயவு செய்து மாதவிகளை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.

“ கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலாய் மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....”

என்று பேசும் பத்மாவை விளங்கிக் கொள்ள கொஞ்சம் நமக்குள் இருக்கும் திணிக்கப்பட்ட பொதுபுத்திகளை எல்லாம் தளர்த்திக் கொள்ளத்தான் வேண்டும். இருண்ட அறைக்குள் இருந்து இருந்து பயின்ற விழிகளுக்கு வெளிச்சம் கூசுகிறதென்று சூரியனை அணைத்து விடமுடியுமா…? அது போலத்தான் பழகிவிட்டதென்று இருளில் இருந்து கொள்கிறேன் என்பவர்களின் அறியாமையை தன் சுடர் மிகு அறிவால் விரட்டப் பார்க்கிறாள் பத்மா.

என் கதையில் பத்மா தன் காதலனோடு திருமணத்திற்கு முன் கூடுகிறாள். அந்தக் கூடலை எந்த ஒரு உறுத்துதலும் இல்லாமல் நளினமாய் சொல்லி முடித்த கதைதான் சாத்திரம் பேசுகிறாய் கண்ணமா என்னும் கதை. கண்ணமா சாத்திரம் பேசினால் யார் ஒப்புக் கொள்வார்கள்…? அதுவும் எப்போதும் தங்களை பூட்டி வைத்துக் கொண்டு பொய்விழிகளால் வாசித்து கருத்தெடுத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு எப்படி பிடிபடுவாள் என் கண்ணம்மா? 

எழுத்து.காமில் இந்தக் கதையை பகிர்ந்திருந்தோம். அந்தக் கதையை அந்தத் தளத்திலிருந்து நீக்கி விட்டு எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிரத்தான் வேண்டும். ஏனென்றால் கலை என்பதை வக்ர உள்ளதோடு பார்க்கும் போது அங்கே படைப்பாளி சிதைக்கப்படுகிறான். மனிதர்கள் சிந்தித்து தெளிவுறா பக்கமாய் இருக்கும் காமத்தை நெருப்பில் நடக்கிறோம் என்று தெரிந்தே ஆபாசத்தை எட்டிப் பிடித்துவிடாமல் சொற்களை செதுக்கிய சிற்பியை சிரச்சேதம் செய்த எழுத்து. காமின் வன்முறையான மின்னஞ்சலை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.
இதோ….

“ 
எச்சரிக்கை

எழுத்து குழுமத்திலிருந்து பேசுகிறோம். 

http://eluthu.com/kavithai/174899.html

மேல்காணும் உங்களுடைய படைப்பை நங்கள் அழித்துவிட்டோம். இனிமேல் விதிமுறை மீறிய இது போன்ற படைப்புக்களை சமர்பிக்காதீர்கள். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

– யமுனா   ”

யாருக்கு எச்சரிக்கை செய்கிறீர்கள் சகோதரி…? வார்த்தைகளை மூளையிலிருந்து பிழிந்தெடுத்து வாசிப்பாளனை புதிய திசைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் படைப்பாளிக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் இந்த எச்சரிக்கையா…..? கஜூராஹோவில் செதுக்கிக் கிடக்கும் சிற்பங்கள் எல்லாம் ஆபாசமா அல்லது கலையா? பாரத தேசத்தின் பரந்து விரிந்த பகுதிகளுக்குள் ஊடுருவிக் கிடக்கும் சனாதான தருமம் என்னும் வழிமுறையில் வடித்தெடுக்கப்பட்ட கோயிற் சிற்பங்களில் நிறைந்து கிடப்பது சமூகத் தீங்கா? அல்லது நளினத்தை எடுத்தியம்ப விரும்பிய கலையார்வம் கொண்டவனின் கலை படைப்பா…?

நீங்கள் என்னைப் போன்ற படைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். ஆமாம்…சீர்கெட்டுப் போய்கிடக்கும் இந்த சமூகத்தில் அன்றாடம் நிகழ்ந்தேறும் பாலியல் வல்லுறவுகளைத் தட்டிக்கேட்டுப் போராட நாதியற்ற சமூகத்தில்….நீங்கள் என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதலை இந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்காவது புகுத்தலாமே என்று எண்ணியதற்காக வேணும் நீங்கள் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும் சகோதரி. துலாக்கோல் போல் சீர்த்துக்கிப் பார்க்கும் திறம் வேண்டும் என்பதெல்லாம் வார்த்தைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும். தெளிவினை புகட்டும் கற்பு நெறி கொண்ட படைப்பாளிகளுக்கு நீங்கள் எச்சரிக்கை கடிதமெழுதி சீர்கெட்டுப் போகவிருக்கும் சமூக சீரழிவினை தடுத்து நிறுத்தியிருப்பதாய் நினைத்தும் கொள்ளுங்கள். அதில் தவறொன்றும் இல்லை ஆனால்…..

ஒரு கடிதத்தை எழுதி அனுப்பும் முன் அதை பெறும் நபர் யாராய் இருக்கக் கூடும் என்று சிறிதேனும் அனுமானம் கொள்ளுங்கள். உங்கள் எச்சரிக்கையும், நடவடிக்கையும் என்ன மாதிரியான எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தி எதிராளியை  காயப்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு தளத்தின் நிர்வாகக் குழு என்பது சரி தவறுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது என்னும் அதே நேரத்தில்….

ஒரு விசயத்தை எப்படி மறுப்பது, எப்படி உங்கள் தளத்தின் கொள்கையை நிறுவி சொல்ல விரும்பியதை நாகரீகமாய் சொல்வது என்பதை எல்லாம் யார் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பது….? தடித்த வார்த்தைகளையும் மிரட்டும் எழுத்து வடிவங்களையும் கண்டு சத்தியம் எப்போதும் பின்வாங்கிக் கொள்ளாது. சுற்றும் பூமியை எந்த சட்டம் போட்டும் யாரும் நிறுத்த முடியாது. பருவ காலங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வேறு சமயம் வா என்று யாரும் அறிவுறுத்தல் செய்யவும் முடியாது.

அதே போலத்தான் எம் மொழியும், எம் மொழியால் அகண்டு விரிந்த எம் அறிவும் பார்வைகளும், அதனால் விளைந்த தெளிவும் எம் உயிரோடு ஒட்டிக் கிடப்பவை. எரிமலைகள் ஒரு போதும் தீக்குச்சிகளைப் பார்த்து பயந்தது கிடையாது. பாட்டில் குற்றமுண்டு என்று கூறி இறைவனையே புறம் தள்ளி நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரக்க உரைத்த நக்கீரனின் நாவில் நின்ற எம் தமிழ்த் தாயே எம் எழுத்திலும் ஆட்சி செய்கிறாள் என்ற உண்மை உணர்க!

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை 
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ 
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு (கம்பன்)




தேவா சுப்பையா…














Comments

Anonymous said…
I did not find any wrong or fault in that story. Is there anything wrong in speaking about sex openly ... or is it wrong if a woman talk abut sex openly
What fault they found out in that story... is it wrong to speak about sex openly or is it wrong if a woman speak about sex openly.
Shankar M said…
விதிமுறை என்ன ?? என்ன நடவடிக்கை ?? என்ன சொல்ல வருகிறார்கள் ? புரியல... அட விடு தேவா... இதெல்லாம் புரவி போகும் வழியில் வரும் சிறு இடர்கள்... தாண்டிப் போக வேண்டாம் ; மிதித்துவிடு... நாம் பயணிக்க உதவிடும் கிரியா ஊக்கிகளாய் அவர்களை நினைத்து அதற்கு ஒரு நன்றியும் சொல்லி விடு!! தொடரட்டும் போராளியின் பதிவுகள்!!
படைப்பை நிராகரிப்பது தளம் நடத்துபவர்களின் உரிமை! ஆனால் வன்முறையான வாசகங்களை சொல்லாமல் புண்படுத்தாமல் காரணங்கள் கூறியிருக்கலாம்! விட்டுத்தள்ளுங்கள்!
என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதலை இந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்காவது புகுத்தலாமே // இப்படி நினைத்து எழுதும்போது சமூகம் இப்படித்தான் எதிர்வினை செய்யும்...விதையை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்....எதிர்ப்பை பதிவு செய்ததை வரவேற்கிறேன்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...