Skip to main content

கனவுப் பூ - 2



மாதவிக்கு சுரீர் என்று வலி எடுத்தது....அம்ம்ம்ம்ம்ம்மா......சப்தமாய் கத்தினாள்...! சாம்பசிவம் பதறி எழுந்தார்.

என்னாச்சும்மா....ஏய்....எந்திரிடி....மனைவியை பிடித்து உலுக்கினார்...சரசு வேகமாய் எழுந்தாள்...

என்னத்தா...? வலி எடுக்குதா....மாதவியின் தோள் பிடித்து கேட்டாள்.

ஆமாம்மா பாத்ரூம் போகணும்....

கைத்தாங்கலாய் பிடித்து வாஷ்ரூமில் உட்கார வைத்தாள்.

மாதவிக்கு வலி அதிகமானது. இடுப்பு எலும்பு மெல்ல விலகுவதைப் போல தோன்றியது. அந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை. 

....ஏங்க... போய் முருகேசன எழுப்பி ஆட்டோவ எடுத்திட்டு வாங்க....சரசு ஓலமிட்டாள்.

மூணாவது தெரு முருகேசனின் ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதிகாலை இரண்டரை மணி.

சுதா...அக்காவோட சீல துணிமணி நைட்டி எல்லாம் எடுத்து பைல வச்சு எடுத்துட்டு வாம்மா...

எதித்த வீட்டு ஜோசப் அம்மாவ எழுப்பி கூட்டிட்டு வாடி சுதா....சரசு கத்தினாள்.

முன் சீட்டில் சாம்பசிவம் டென்சனாய் அமர்ந்திருந்தார். 

மாதவி பிறந்து கையில் கொண்டு வந்து நர்ஸ் கொடுத்த நினைவு புத்திக்குள் அவருக்கு எட்டிப்பார்த்தது. பெண் பிள்ளைகள் அப்பாவின் செல்லமாய் வளர்கிறார்கள். மாதவியும் அப்படித்தான். தகப்பன்களின் வலி மிகுந்த தருணம் தன் மகளின் பிரசவ வேதனையை பார்த்து சகித்துக் கிடப்பது. இது தன் மனைவி பட்ட வேதனையைப் பார்த்து பட்டதை விட பத்து மடங்கு அதிகமானது.

தோளில் தூக்கிப் போட்டு வளர்த்து, சாப்பாடு ஊட்டி விட்டு, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து பத்து வயது வரைக் கட்டிப்பிடித்து உறங்கும் மகள்களை 13 வயசுக்குப் பிறகு தலை தடவி...என்னடா கண்ணு என்று ஆசையோடு அணைத்துக் கொள்ள மட்டுமே தகப்பன்களால்  முடிகிறது. தன் மகளின் மீது உயிரையே ஒரு தகப்பன் வைத்திருந்தாலும்.....

அவள் வளர வளர அவளைத் தூர நின்று ரசிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தகப்பனுக்கு வந்து விடுகிறது. மகள்கள் அப்பாக்களின் இறக்கி வைக்க முடியாத பேரன்புச் சுமைகள். திருமணம் செய்து கொடுத்து விட்டு யாரோ போல ஒரு தகப்பன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் அதாவது பெண் இந்தச் சூழலை எளிதாக கடந்து வந்து விடுகிறாள். அது நமது சமூகத்தில் அவளுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட அறிமுகமான ஒரு விசயம். தன் வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போதே அவளுக்குத் தெரிந்து போய் விடுகிறது.....

23 வருடங்கள் பாசம் பாரட்டி என் வீடு என் வீடு என்று வாழ்ந்தது பொய்யாய்ப்  போய் விட்டது. இங்கே எல்லாம் மாறும் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற நிலையாமையை ஒரு பெண்ணின் ஆழ் மனது தன்னிச்சையாய் கிரகித்து வைத்துக் கொள்கிறது....ஆனால் ஒரு ஆண் அப்படி அல்ல....

அவனுக்கு எல்லாமே எப்போதும் வேண்டும். யாரையும் விட்டுக் கொடுக்க அவன் அவ்வளவு எளிதாய் இறங்கி வந்துவிடுவதில்லை. இப்படி இருப்பதனாலேயெ அவனால் தன் மகளை மணமுடித்துக் கொடுத்துவிட்டு யாரோ போல திரும்பி வரவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள அவ்வளவு எளிதாக முடிவதில்லை. அதிகாரமாய் தன்னை ஆளுமை நிறைந்தவனாய் காட்டிக் கொள்ளும் ஆண் உண்மையில் ஒரு பெண்ணை விட பலவீனமானவன். ஒரு பெண்ணின் தைரியம் ஒரு போதும் ஒரு ஆணுக்கு வந்து விடவே விடாது. 

ஆண் எப்போதும் வீரமாய் இருப்பது போல நடிக்கிறான்....! பெண் கோழையாய் இருப்பது போல நடிக்கிறாள். பெண் அவன் நடிப்பதை விரும்புகிறாள். ஆண் தான் நடிப்பதை உண்மை என்று நம்பிக் கொண்டு பெண்களை பலவீனமானவர்களாக கருதிக் கொள்கிறான்.

சாம்பசிவம் கலங்கிப் போயிருந்தார்.

ஆட்டோவின் பின் சீட்டில் நடுவில் மாதவியும் ஒரு பக்கம் சரசுவும் இன்னொரு பக்கம் எதிர்வீட்டு ஜோசப் அம்மாவும் பக்கவாட்டு கம்பியில் சுதாவும் உட்கார்ந்திருந்தனர்.

                                                                        ***

ஆயிர பாம்புகள் கொத்துவது போன்றது அது. உயிர் போய்விட்டால் கூட தேவலாம் என்று கூடத் தோன்றும் நேரமது. மூச்சு விட முடியாமள் திணறினாள் மாதவி. ஆழமா மூச்சு இழுத்து விடம்மா....கொஞ்சம் பொறுத்துக்க தாயி....

ஜோசப் அம்மா......ஐந்து பிள்ளைகள் பெற்றவள் நிதானமாய் மாதவியின் தலை தடவினாள்.

அடி வயிறு கனமாயிருந்தது......வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. மாதவி....பிரதீப்பை நினைத்தாள்....கண்ணீர் வழிந்தது.

வயித்துல காது வச்சுக் கேளுங்களேன்..... ஒரு மாதிரி குறு குறுன்னு ஓடுதுங்க....நான்கு மாதம் முன்பு பிரதீப்பிடம் சொன்னது நினைவு வந்தது.

டேய்...பையா....என்னை மாதிரியே இருக்கணும் அம்மா மாதிரி நாட்டியா இருக்க கூடாது....

ஓய்,,,,,என்ன மாதிரி என்ன நாட்டி....???? பிரதீப்பின் காது பிடித்து திருகினாள்...மாதவி.

அது என்ன பையன்னு முடிவே பண்ணிட்டீங்களா...பொண்ணா இருந்தா....என்ன பண்ணுவீங்க....?

பையனா இருந்தா...குமணன்...பெண்ணா இருந்தா குழலி....? எப்டி இருக்கு என் பேர் செலக்சன்...?

பேசுறது பாதி இங்கிலீஸ்..பாதி தமிழ்....பேர் மட்டும்...தமிழ்ப் பேரா சொல்றீங்க...எப்டிங்க.. புலவரே...? பிரதீப்பை சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம் பாக்குற உத்தியோகம் பிஸினஸ் டெவலப்மெண்ட்....ஏர்லைன்ஸ்ல இன்ட்டர் நேசனல் மார்க்கெட்டிங் செய்யணும்....தமிழ் பேசுறதாம்....தமிழ்நாடு பார்டர் தாண்டினா ஒருத்தனும் தமிழ்ழ பேச மாட்டேன்றானடி ...என்ன என்ன பண்ண சொல்ற...

நான் எல்லாம் ஆங்கிலமோகம் இருந்த ஒரு காலச்சூழல்ல இருந்து இங்கிலீபீசு பேசுறதே பெருமைன்னு சொல்லி சொல்லி வளர்ந்தவனாக்கும்....

                                                                      ***

அம்மா ரொம்ப வலிக்குதும்ம்மா.....வீறீட்டாள் மாதவி.

குன்னக்குடி முருகா....எம்புள்ளைய காப்பத்துப்பா.....அழுதபடியே இரண்டு ரூபாயை படக்கென்று காணிக்கையாக முந்தானையில் முடிந்து கொண்டாள் சரசு. மாதவியின் திமிறலை ஆட்டோ தாங்க முடியாமல் குலுங்கியபடியே....அந்த மருத்துவமனையின் முன்னால் போய் நின்றது.

அதிகாலையிலும் சுறு சுறுப்பாய் இருந்தது அந்த மருத்துவமனை.

சுபா மேடம் அன்எக்ஸ்பெக்டடா....ஒர் அவசர வேலையா சொந்த ஊர் போய்ட்டாங்க...சார்....மிஸ் கிருத்திக்கா சுப்ரமணியன் அவுங்களுக்கு பதிலா...ஒங்க டாட்டர் கேஸ அட்டெண்ட் பண்ணுவாங்க....

நுனி நாக்கில் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நளினத்தோடு சொல்லி முடித்திருந்த ரிசப்சனிஷ்டைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டார் சாம்பசிவம்.....

சீக்கிரம்மா....என் பொண்ணு துடிச்சுட்டு இருக்காம்மா வலியில.....

சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.....இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க இட் வில் எஃப்கட் அதர் பேஷண்ட்ஸ்....கண்டிப்பு குரலில் அதட்டியபடியே ஒரு நர்ஸ் சாம்பசிவத்தைக் கடந்து மாதவி இருந்த அறைக்கு ஓடினாள்...!

மருத்துவமனைகள் எந்த சென்டிமெண்டும் எப்போதும் இருப்பது கிடையாது. அது வலியையும், வேதனையையும், பிறப்பையும் இறப்பையும் என்று சந்தோசத்தையும் துக்கத்தையும் பார்த்து பார்த்து சலித்துப் போன மனிதர்கள் நிரம்பியது. மனித உடலோடு பழகிப் பழகி மனிதர்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு கேஸ் என்னும் அளவைத் தாண்டி அதிகமாய் நினைக்க முடிவதில்லை. அப்படி நினைத்து அவர்கள் வருந்தியும் மகிழ்ந்தும் கொண்டிருந்தால் அவர்களால் வேலை செய்யவும் முடியாது.

டாக்டர் கிருத்திகா சுப்ரமணியன் குன்னக்குடி முருகனாய் தெரிந்தார் மாதவியின் குடும்பத்திற்கு.....

சரசு டாக்டரை கை எடுத்து கும்பிட்டாள்....அம்மா.. என் மகளுக்கு தலைப்பிரசவம்மா....

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா..ப்ளீஸ்....அதிகம் பேசாமல்...அறைக்குள் சென்றார் மருத்துவர்.

லேபர்  ரூமிற்குள்...மாதவியின் உடை எல்லாம்  கழற்றப்பட்டு.....நிர்வாணாமான அந்தக் கணத்தில் பிரதீப்பின் நினைவு வந்தது மாதவிக்கு. முதல் முதலாக உடை இல்லாமல் அவன் முன் நின்ற பொழுது....புத்திக்குள் எட்டிப்பார்த்தது....! தாயிடம் தந்தையிடம், இன்னும் எல்ல உறவுகளையும் விட கணவன் என்னும் உறவு உயர்ந்தது. தாயிடமும் சொல்லக் கூச்சப்படும் விசயங்களை கணவனிடம் மட்டுமே பெண்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

மாதவிக்கு அழுகை வந்தது. பச்சை நிற அங்கியை போட்டு விட்டிருந்தார்கள்....தலை முடியை கட்டி பின்னலாக்கி இறுக்க கட்டிவிட்டார் ஒரு நர்ஸ்...! உடம்பு முழுதும் மாதவிக்கு மழிக்கப்பட்டது......

இங்க பாரும்மா....ஏற்கெனவே....டெலிவரி டேட் தாண்டி போயிடுச்சு ஒரு பத்து நிமிசம் பார்ப்போம்....இல்லேன்னா ஆப்பரேசன் பண்ணிடுவோம்....டாக்டர் மாதவியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்....

உள்ளே....

வேகமாய் மூச்சிழுக்கச் சொல்லி ஆழமாய் மூச்சை வெளியேற்றபடியே மூச்சால் அடி வயிற்றை உந்தித் தள்ளச் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்...நர்ஸ்.....

மாதவி திணறினாள்....பிரதீப்.....பிரதீப்.....பிதற்றினாள்...

சரி...சரி... நீங்க கையெழுத்துப் போடுங்க.....நர்ஸ் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டார்...சாம்பசிவம்....

மாதவியின் முதுகுத்தண்டும் இடுப்பும் சேரும் இடத்தில் சொருகப்பட்டது அந்த ஊசி.....

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாஆஆஆஆஆஆஅ.............வீறிட்டாள்.

கண்கள் சொருகியது.....! ஒரே இருட்டாய் இருந்தது....தன்னைச் சுற்றிலும் இருந்த மனிதர்கள் மங்கத் தொடங்கினார்கள்......வலி வலி வலி...வலி....

வலி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது....! மாதவி இருட்டுக்குள் விழுந்தாள்....மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது. புறம் இருட்டில் ஒளிந்து போக......

மாதவி உள்ளுக்குள் உணர்வுகளால் கேவிக் கொண்டிருந்தாள்....

" ஏண்டா என்ன விட்டுப் போன பிரதீப்......காலையில போய்ட்டு வர்றேன்னு சொல்லிப் போனவன....சாயந்திரம் பொட்டலாமா கட்டிக் கொண்டாந்து போடுவாங்கன்னு தெரியாமப் போச்ச்சேடா.....

நீ இல்லாம எப்டிடா வாழப் போறேன்....உன் உயிர என் வயித்துல கொடுத்துட்டு...என்னை விட்டு தூரமா போயிட்டியே....என்னால இப்போ சாகவும் முடியலையே.......

பிரதீப்.....பிரதீப்....பிரதீப்.....உள்ளுக்குள் அலறினாள்.....மாதவி..."


ஏம்மா....எந்திரி...எந்திரி...உனக்குப் பையன் பொறந்திருக்கான் பாரு....! நர்ஸ் அதட்டி கன்னத்தில் அடித்து எழுப்பினாள்.... 

மாதவி....மாதவி....

மாதவி எழுந்திரிக்கவில்லை...!

பூமி முழுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கின்றன....! எத்தனைப் பூக்களைப் பார்த்தாலும் பிடித்தாலும் ஒவ்வொருக்குள்ளும் பிடித்த ஒரு பூ இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பூ எப்போதும்  தனக்கு மட்டுமே பிடித்ததாய் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

அதிசயமா அந்தக் கனவுப்பூ சிலருக்கு வாழ்க்கையில் தனக்குப் பிடித்த உறவாய் அமைந்து விடுகிறது. இல்லாத பூவை கனவினில் நினைத்து நினைத்து வாழப் பழகியவர்களுக்கு....கிடைத்து விட்ட கனவுப் பூவை இழப்பதில் விருப்பமில்லை.....

அப்படி இழந்து விட்டால்....அவர்களுக்கு இருப்பதிலும் விருப்பமில்லை...!

தன் கனவுப் பூவைத் தேடி மாதவி பயணிக்கத் தொடங்கி இருந்தாள்....!

சரசுவும்....சாம்பசிவமும்....நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்...!



தேவா சுப்பையா....









Comments

அண்ணா...
படிக்கும் போது மகளின் வலியை விட தந்தையின் வேதனை முன்னின்று பயணித்தது... கனவுப்பூக்கள் நறுமணத்தைக் கொடுக்கும் என்று படித்தால் முடிவில் பூக்கள் கண்ணீர் விட வைத்துவிட்டது....


அருமை அண்ணா...
கலங்கவைக்கும் பகிர்வு.
ஆண் எப்போதும் வீரமாய் இருப்பது போல நடிக்கிறான்....! பெண் கோழையாய் இருப்பது போல நடிக்கிறாள். பெண் அவன் நடிப்பதை விரும்புகிறாள். ஆண் தான் நடிப்பதை உண்மை என்று நம்பிக் கொண்டு பெண்களை பலவீனமானவர்களாக கருதிக் கொள்கிறான்.
அருமையான பதிவு நண்பா ...

உண்மையை இவ்வளவு உக்கிரமாய் சொல்லி நான் பார்த்ததில்லை

வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...