Skip to main content

தல Vs தளபதி தலைப்பொங்கல் யாருக்கு...?


விஜயின் தலைவாவையும், அஜித்தின் ஆரம்பத்தையும் பார்த்த மிரட்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை நான். இரண்டு படமுமே அவ்வளவு கொடுமையானது. இரண்டும் நன்றாகத்தானே இருந்தது என்று தல, தளபதியின் ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் என்னை போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு அவை இரண்டும் கெட்ட கனவுகள்.

தலைவா படம் பார்க்க நள்ளிரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்து பார்க்கச் சென்றேன். அதிகாலை 2 மணிக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பல்லைக் காட்ட ஆரம்பித்தது. ரஜினி பார்முலா எல்லாம் ரஜினிக்கே இனிமேல் ஒத்து வராது என்னும் உண்மையை இப்போது  நடிக்கும் நடிகர்கள் குறிப்பாய் விஜய் உணரவேண்டும். எம்.ஜி.ஆர் பார்முலாவை தூசு தட்டி ரஜினி ஆட்டம் காட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இது  ‘ஆம் ஆத்மி’ களின் காலம். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களின் வழிகாட்டுதலோடு நடுத்தர வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்தாகி விட்டது. திரையில் தன் அரசியல் தலைவனைத் தேட வேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் இப்பொது தமிழ் மக்களுக்கு கிடையாது.

விஜய் தலைவாவில் அரசியல் பேச முயன்று மாண்புமிகு முதல்வர் அம்மாவின் பெருங்கருணையால் பந்தாடப்பட்டு படத்தை வெளியிடவே குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருந்தது. இவர் எப்படி திமுக, அதிமுக என்னும் ராட்சச கட்சிகளை எதிர்த்து நிற்க முடியும்? விஜய் அண்ட் டீம் பரீசிலனை செய்து தங்களின் அரசியல் கனவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டு ஒழுங்காக நடிக்க ஆரம்பித்தால் தமிழ் சினிமாவுக்கு அட்டகாசமாய் ரஜினிக்குப் பிறகு எல்லோரும் விரும்பும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நாயகன், தளபதி, அமரன், இப்படி தமிழ் சினிமா காறித் துப்பின விசயத்தை விஜய்காக புத்தம் புதிதாய் எடுத்துக் கொடுப்பது போல டைரக்டர் கதை சொன்ன போது இளைய தளபதி தயிர் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா என்ன..? தலைவா என்னும் உலக மகா மொக்கையை கொடுத்த விஜயின் ஜில்லா ஏதோரு வகையில் கல்லா கட்டும் என்று எனக்குள் ஏதோ ஒரு பட்சி சொல்கிறது. இந்தப் பாழாய்ப் போன பட்சி தலைவாவுக்கும் இப்படித்தான் சொன்னது. இந்த முறைய் பட்சி சொல்வது பலிக்க வில்லை என்றால் எங்கள் ஊர் கருப்பசாமிக்கு பட்சியைப் பலி கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

போன படத்தில்  தளபதி ஒரு வாயிற் காப்போன் அளவு கூட கம்பீரமாயில்லாமல் நம் எல்லோருக்கும் தலைவலியைக் கொடுத்ததுதான் மிச்சம். இது ஒரு புறமிருக்க தலயின் ஆரம்பமாவது நன்றாக இருக்குமா என்ற பேராவலில் டோரண்ட்டிலிருந்து தரவிறக்கம் செய்து ஆரம்பத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்ப காட்சிகளில் அசத்தலாய்  இருந்த படம் போகப் போக அம்புலிமாமா கதை போல பல்டி அடிக்க ஆரம்பித்தது. பில்லா 2 பார்த்தது இன்பம் என்றால் ஆரம்பம் பேரின்பம் என்றுதான் சொல்ல முடியும். நீங்க ஏன் சார் லாஜிக் எல்லாம் பாக்குறீங்க...சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க என்று ரசிகப் பெருமக்கள் எங்களைப் போன்ற போரடிச்சா சினிமா பாக்குற அசமந்தமான ரசிகர்களைப் பார்த்துக் கேட்கக் கூடும்...

எவ்ளவுதான் சகித்துக் கொண்டு படத்தைப் பார்ப்பது..? துபாய்க்கு வந்து வங்கியின் மேலாளரை மயக்கமடைய வைத்து விட்டு துபாய் ரோடுகளில் அஜித் பைக் ஓட்டுவார் என்பதற்காகவே காரை எல்லாம் எடுத்து ஓரமாய் வைத்து விட்டு அவரை பைக் ஓட்ட வைத்து அவர் பின்னால் எங்களை ஓட வைத்து....சர்வ சாதாரணமாய் பணத்தை அஜித்தின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதையும், இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை காட்சிகள் நீண்டு ஜித்து விளையாடி இருப்பதையும் எப்படி ஒத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்..? அஜித் தான்,  தலதான்...தன் உழைப்பால் முன்னேறியவர்தான் அதற்காக...மொக்கை கதைகளை எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி கை தட்டி ஆராவரமா செய்ய முடியும்..?

லட்சக்கணக்கில் தங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இப்படித்தான் தலயும், தளபதியும் படம் நடித்துக் கொடுப்பார்கள் என்றால் வெகு விரையில் அந்த ரசிகர்கள் கூட்டம் அவர்களை விட்டு விலகிப் போய்விடும் என்ற உண்மையை இந்த சூப்பர்  ஹீரோக்கள் உணரவேண்டும். எம்ஜிஆர் படத்தைக் கையில் பச்சைக் குத்திக் கொண்டு எம்ஜிஆரைக் கடவுளாகக் கருதி வாழ்ந்த உணர்வுப்பூர்வமான ரசிகர்கள் கூட்டம் ஒன்றும் இப்போது கிடையாது. இது உலகமயமாக்களின் மயக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் இளையர்களைக் கொண்ட சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது. திரைப்பட நடிகனுக்காய் கொடி பிடிக்கும் வேகம் முன்பைப் போல இல்லை. திணறடிக்கும் மூர்க்கம் எல்லாம் இப்போது ஒடுங்கிப் போய்விட்டது. பெரும்பாலான இளையர்கள் இப்போது ஐயா நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள். அவரைப் பற்றி பேசுகிறார்கள். யார் அரசியல் தலைவர்கள்...? யார் தகிடுதித்தங்கள் என்று மனக்கணக்குப் போட ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசத்தின் தலைநகரில் என்ன மாதிரியான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று பார்த்து அதை ஏன் நம் தமிழகத்தில் நிகழ்த்த முடியாது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தில் வடிமைக்கப்படும் கதாநாயகப் பிம்பத்திற்கும் சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.  ரஜினி, கமலுக்குப் பிறகு அடுத்த மாற்றாய் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் விஜயும், அஜித்தும் கவனித்து தரமான பொழுது போக்கு படங்களை கொடுத்தாக வேண்டியிருக்கிறது. விஜய் டிவியில் ஒரு சாதரண ஆங்கராய் இருந்த சிவகார்திகேயனின் படங்கள் இப்போது நூறு நாள் தாண்டி ஓடுகிறது. விஜய் சேதுபதி போன்ற மூன்றாம் கட்டத்தில் இருந்த நடிகர்கள் முதல் கட்ட நடிகர்களாகி தொடர்ச்சியாய் வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

2013 ஆம் ஆண்டில் ரசித்துப் பார்க்கக் கூடிய படங்களாய் சிவகார்த்திகேயனின் படங்களும், விஜய் சேதுபதியின் படங்களும் இருந்தன. தலயும், தளபதியும் தமிழ் மக்களின் முன்பு தலை சிறந்த நடிகர்கள் என்ற இடத்தை இன்னும் பிடிக்கவே இல்லை. சில, பல விருதுகளை வாங்கி அவர்கள் தங்களை இன்னும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அஜித்தைப் பொறுத்த வரையில் அவருக்கு அரசியல் ரீதியாய் தன்னை வார்த்துக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் அவருக்கும் தன்னை ரசிகர்களும், மற்ற சினிமாக்காரர்களும் தல, தல என்று புகழ்வது பிடித்திருக்கிறது. அந்த போதையில் வந்த கடந்த இரண்டு படங்களும் படுகேவலமாகவும் இருந்தது. இப்படி எல்லாம் நான் சொல்கிறேன் என்று ஆரம்பம் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா என்று என்னிடம் ஆரம்பிக்க வேண்டாம்....

8 கோடி பேர் இருக்கும் ஒரு மாநிலத்தில் 1 கோடி பேர் படம் பார்த்தாலே அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்தான் என்ற அரதப் பழசான உதாரணங்களை பிறகு நான் சொல்ல வேண்டி வரும்.

விஜய்க்கு என்று தனியாய் நாம் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் அம்மா ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து ஒரே ஒரு தரம் அவர் பார்த்தால் மட்டும் போதும் அவரது தலைவா பட அனுபவமே அவருக்குப் புத்தி புகட்டும்.

நிற்க..!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகப் போகும் அஜித்தின் வீரமும், விஜயின் ஜில்லாவும் ஒரே ரேஞ்சில் கல்லா கட்டும் என்றே நான் நினைக்கிறேன். வீரம் பாடல்கள் எல்லாம் சரவெடி என்றால் ஜில்லா பாடல்கள் எல்லாம் அதிரடி. வீரம் படத்தின் டீசர் அஜித் ரசிகர்களை முறுக்கேற்றி விட்டிருக்கிறது. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதையில் அஜித் நடித்திருக்கிறார். இந்தப் படத்தாக அவர் கோட்டை எல்லாம்  கழற்றி வைத்து விட்டு வேட்டி சட்டையில் நடித்திருப்பது ஒரு ப்ளஸ். அஜித் தன்னை இந்த மண்ணின் மைந்தராக காட்டிக் கொள்ளக் கூடிய படம் ஏதேனும் ஒன்றாவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என்னைப் போன்றோருக்கு அட்டகாசத்துக்குப் பிறகு....வீரம் ஒரு அந்த ஏக்கத்தை தீர்த்து நிச்சயமாய் ஹிட்டடிக்கும் என்றே நினைக்கிறேன்.

முன்பெல்லாம் சாதரணமாகவே விஜய் படத்தில் பாடல்கள் பின்னி பெடல் எடுக்கும். இடையில் அவரது  படத்தின் பாடல்களில் ஏற்பட்ட அந்தத் தொய்வினை தூக்கி நிறுத்தி இருக்கும் டி. இமானுக்கு விஜய் கடமைப் பட்டிருக்கிறார். விஜய் சொந்தக் குரலில் பாடி இருக்கும் பாடல் அட்டகாசம். மொத்தத்தில் எல்லா பாடல்களும்....தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கப் போவது என்னவோ நிஜம்....!

பார்க்கலாம்.....

வரப் போவது தலப் பொங்கலா? இல்லை  தளபதிப் பொங்கலா.... அல்லது தலதளபதி பொங்கலா...? இல்லை வெண்பொங்கலா என்று...



தேவா சுப்பையா...





Comments

This comment has been removed by the author.
'தல' வீரம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... பார்ப்போம்...!
Anonymous said…
நீங்கள் தீவிரமான டி அர் ரசிகர் என்று உங்கள் போஸ்டில் இருந்து தெரிகிறது
பெரும்பாலான விமர்சனங்கள் தல பொங்கல் என்றுதான் சொல்கின்றன...

வீரம் என்னைப் பொறுத்தவரை நன்றாக இருக்கிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல