Skip to main content

நானில்லை....!


















எத்தனை நாட்களானதென்று உணர முடியவில்லை எனக்கு. நான் ஆழமாய் உறங்கிக் கொண்டிருந்தேன் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். விழிப்பு வந்தும் அதை உணராமல் உறக்கம் அழுத்திக் கொண்டு இருப்பதை உணராமல் மீண்டும், மீண்டும் நான் உறக்கத்திலிருந்தேன் என்றே..நினைத்தேன். சட்டென உதறி எழ உடம்பு என்ற ஒன்று இல்லாமல் போனதால் உணர்விலேயே புரிந்து கொண்டேன் நான் இறந்து விட்டேன் என்று...

இலகுவாய் காற்றில் பறக்கும் இறகு போல அங்கும் இங்கும் அலைய முடிந்த எனக்கு எந்த வடிவமும் இல்லை என்றே எனக்குத் தெரியவில்லை. கை போன்ற ஒரு உணர்விருக்கிறது ஆனால் கையை தூக்க நினைக்கத்தான் முடிகிறது செயலாய் அது நிகழ வில்லை. நகர நினைத்த மாத்திரத்தில் அந்த, அந்த இடத்தில் போய்....அலைந்து கொண்டிருக்க முடிகிறது.

உயிரே இல்லை ஆனால் எப்படி யோசிக்க முடிகிறது என்று ஒரு எண்ணம் போல தோன்றியது...! அட உயிர் இல்லையென்று யார் சொன்னது? உடல் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம். உடலாய் இருக்கையில் புத்தியில் தேக்கி வைத்திருந்த அனுபவங்களை எல்லாம் நான் ஒரு பெயராய், உடலாய் நம்பி, நம்பி அதை விஸ்தாரித்து அது அப்படியே அதிர்வுகளாய் திடப்பட்டு அது உடலே இல்லாமல் இன்னும் மனமாய் என்னை அலைய வைத்திருக்கிறது.

பசிப்பது போல ஒரு உணர்வு இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.....அதை பசிக்கிறது என்றே உணர்கிறேன் ஆனால் உணவுகளைக் கண்டும் அருந்த இயலாமல் பரவியே நிற்கிறேன்....பசி, உணவு என்று ஆழமாய் உள் வாங்கிக் கொண்ட உணர்வு....முன்பொரு நாள் நான் உடலாய் இருந்த போது நாகமொன்று கனவில் துரத்தி வருகையில் பயந்து ஓடிய அவஸ்தையைப் போல கொடுத்தது.

அப்போது உடலிருந்ததால் உதறி எழுந்தேன். இப்போது உடலற்றுப் போய் மனமாயிருக்கையில் அணையா பசியாய் நானென்ற ஏதோ ஒன்றை எரித்துப் போடுகிறதே....ஐயகோ இதுதான் நரகமா? பற்றற்று வாழ படித்து படித்து சொன்ன பெரியவர்களின் கருத்தெல்லாம் கேளாது விட்டேனே...இன்று இருண்டதொரு வெளியில் அதுவற்று, இதுவற்று உருவமற்று அலைந்தல்லவா திரிகிறேன்...!

நான் இறந்து விட்டேன்...! என் வீடு என்ன செய்யும் இப்போது...? என் பெற்றோர் என்ன செய்வர்..? என் காதலி என்ன செய்வாள்? உயிர் நண்பன், உயிர் சொந்தங்கள் எல்லாம் என்ன செய்யும்...?நானில்லா சுமையில் கதறி அழத்தானே செய்வர்...!! நான் ஏதேதோ எழுதினேனே....யார் யாரெல்லாம் படித்தனரே, பாராட்டினரே, சீராடிட்டினரே...என்னை போல ஒருவன் இல்லை என்று கொண்டாடினரே...! நான்....நான்....என்றல்லவா வாழ்ந்தேன்....நான் இல்லையெனில் யாரும் இயங்க முடியாது என்று எத்தனை தடவை கூறியிருப்பேன்...!

பல தடவை மனிதர்கள் எல்லாம் என்னைச் சுற்றி மையம் கொண்டே வரவேண்டும் என்று மமதையில் கூட பேசியிருக்கிறேன். நானில்லாத உலகம் இயங்காமலா இருக்கும்...!!!!! இறந்தும், உடலற்று மனமாய் அலையும் இந்த பொல்லா நிலையிலும் ஐயகோ என் அகங்காரம் இன்னமும் அறுபடாமல் என்னை சுற்றி வருகிறதே...! என் செய்வேன்..!

யார் யாரோ கடவுளர் என்று கணக்குப் போட்டு இன்று என் மனமே எனக்கு நரகமாய் போய் விட்டதே...! இதுவற்று இருந்தால் சுகமாயிருந்திருக்குமோ? என்றொரு ஏக்கம் வந்து ஒரு வேதனையை நெருப்பைப் போல பரவவிடுகிறதே...இதுதான் நரகமா? வயிறற்றும் பசிக்கிறது, உடலற்றும் நினைப்பிருக்கிறது.....சிறு சிறு கொடும் எண்ணங்களும் கடும் வலியைக் கொடுத்து என்னை சுட்டெரிக்கும் இந்த "தீ" தான் எண்ணைக் கொப்பரையா? அழுகை போன்ற ஒரு உணர்வும், உரக்க கத்த வேண்டும் என்றொரு உணர்வும் சூழ்ந்துதான் நிற்கிறதே அன்றி அதை நீக்கவும், போக்கவும் உடலெனும் அவயமில்லையே....!!!

திணறலாய்....பிண்டமற்ற பண்டமாய் மெல்ல ஊர்கிறேன்..காற்றினூடே....அதோ என் காதலி...!!!!அதோ என் காதலி....!!!!அவள் பேருந்து நிறுத்தமொன்றில் கல்லூரி செல்ல நிற்கிறாள். அவள் முன் சென்று அலைகிறேன்..! அவள் அறியவில்லை..அவளிடம் ஏதோ ஒரு விசயம் அவள் தோழி சொல்ல அவள் சப்தமாய் சிரிக்கிறாள்.....

கடைசியாய் நான் அவளைக் காணச் செல்லும் போதுதானே பேருந்துக்கடியில் ஹெல்மட் அணியா காரணத்தால் சிக்குண்டு இறந்து போனேன். அந்த வேதனை என் நினைவினூடே அழுத்த....இன்னும் அந்த கடைசி நேர வலி என்னை தலையில்லாமலேயே ஆட்கொண்டது....

என்னால் நம்ப முடியவில்லை...நானில்லை என்றால் இறந்தே விடுவேன் என்றவளா இவள்....????????!!!! வாழ்க்கையின் பல நிலைகளில் நாம் பேசிக் கொள்வது எல்லாமே ஒரு சம்பிரயதாயத்துக்குத்தான்.....ஆனால் வாழும் வரையில் அவையேல்லம் இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் பேரில் பல நம்பிக்கைகளைக் கொள்வதும், அல்லது நம்பாமல் சண்டைகள் செய்வதும் என்று..ஆனால்...எல்லாமே ...ஒரு உணர்ச்சியின் உச்சத்தில் பகிர்வதுதான் போல.....!

கண்ணீரில்லா அழுகையோடு அவளைக் கடந்து....நான் கண்ட நண்பர்கள், என்னை உயிரென்ற உறவுகள் என்று ஒவ்வொருவராய் பார்த்து பார்த்து....எல்லோரும் ஒன்று மற்ற ஒரு இலக்கு நோக்கி ஓடும் ஒரு இயந்திரமாய்த்தான் தெரிந்தார்கள்...

யாரோ ஒரு உறவுக்காரன் யாரிடமோ உரக்க சப்தமிட்டுக் கொண்டிருந்தான்..." நான் யார் தெரியுமா? என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான்.....ஐயோ...ஐயோ .....வேண்டாமடா முட்டாள்.....நான் நான் என்று சொல்லிக் கொண்டு அழுந்த உன்னை ஒரு உடலாக அல்லது பெயராக அல்லது பதவியாக பார்க்காதேடா முட்டாள்......கொடுமையாய் போய் விடுவாய் என்னைப் போலவே...என்று கத்திக் கூவி சொல்ல ஒரு எண்ணம் வந்து ஒடுங்கிக் கொண்டது....! ஆமாம் கத்திச் சொல்ல வாயும் நாவும் இல்லையே..அவற்றை மண்ணரித்ததோ...அல்லது தீ பொசுக்கியதோ...????

ஆனால்...

செவியற்று அதிர்வுகளாய் எல்லாம் உணர முடிந்தது, விழியற்றி ஒளியின் வீச்சினூடே...பார்க்கும் ஒரு பார்வை இருந்தது....ஆமாம் புலனற்ற பார்வை....! பேச்சு என்ற ஒன்றை அதிவுகளாய் வெளிப்படுத்தினாலும் அதை விளங்கும் நிலையில் யாரும் இல்லாமல் இருந்தது மேலும் வலியானது.

இப்போது எனது தந்தையப் பார்த்தேன்...! ஈன்றெடுத்த தகப்பா...என்னை பிண்டமாக்கிய கடவுளே..உனக்கு ஒன்றும் செய்யாமல் போய்ச் சேர்ந்து விட்டேனே என் தகப்பனே...! ஒற்றை பிள்ளை பெற்று விட்டு அதையும் தூக்கிக் கொடுத்து விட்டு தள்ளாத வயதில் அங்கும் இங்கும் உன்னை அலைய வைத்தேனே....!!!! ஒவ்வொரு முறை பைக்கினை எடுக்கும் போதும் ஓராயிரம் முறை சொல்வாயே...பார்த்து போப்பா...பார்த்துப் போப்பா என்று..கேட்டேனா நான்.....

என் புலம்பலை அவர் செவி சேரவில்லை திடமாய் சைக்கிள் மிதித்து யாரிடமோ தொலை பேசியில் நலம் விசாரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்...!

யாவரும் நலமே...!!! சகோதரிகள், காதலி, நண்பர்கள், உறவுகள் அனைவரும் நலமே.....இருக்கும் வரை எல்லோருக்கும் நாம் ரொம்ப அவசியம் என்று நினைத்து விடுகிறோம். இதோ காலம் என்னை பிடுங்கிப் போட்டு விட்டது....! நானில்லை..என்னையே நினைத்து உலகம் நின்று போய் விடவும் இல்லை....எல்லாம் இயங்குகிறது...எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இருத்தலும் இல்லாமையும் ஒரு பொருட்டல்ல இந்த உலகிற்கு...! இந்த எண்ணம் ஏன் நான் உடலாய் இருக்கும் போது வர மறுத்தது...

அடுத்ததென்ன தெரியவில்லை..இப்படியே...பசியோடு வலியோடு கோபத்தோடு உடலற்று சுற்ற வேண்டும். உறவுகள் எல்லாம் பொய் அதை எல்லாம் தேடி நான் அலையக்கூடாது..எங்கோ செல்கிறேன்.... என்ற எண்ணத்தை தாங்கிய படி காற்றில் அலைய முற்பட்டேன்...

இதோ...இதோ..இதோ.. என் வீட்டினுள் இருந்துதான் இந்த சப்தம்....

" நான் பெத்த மகனே...நீ இல்லாமா போயிட்டியேடா.....! உனக்கு சோறு போட்டுட்டுதானே..நான் சாப்பிடுவேன்...! என் செல்ல மகனே உன்னை சீராட்டி வளர்தேனே....! மார்லயும் தோள்லயும் போட்டு வளர்த்த என் ராசா.. என்ன நட்டாத்துல் விட்டுட்டு நீ போய்ட்டியே.....

உன் செல்லக் கண்ணழுகும், வைர நெஞ்சழகும்..
எங்க போயி நான் பாப்பேன்....
என் செல்ல மகனே....எங்கயிடா நீயிருக்க...
பாலூட்டி வளர்த்த மாரு ..பத்திகிட்டு எரியுதுய்யா...
உன்னை சொமந்த என் வயித்துக்குள்ள
உன் அழுகுறலு கேக்குதய்யா..
துக்கி பால் கொடுக்க நீ பக்கதுல இல்லைன்னு
நான் துயரத்துல நிக்கிறேனே எஞ்சாமீ...."

அது ...அது... என் அம்மா.....!!!!

இன்னமும் என்னை மறக்காதா ஜீவனாய்...புலம்பி கொண்டிருந்த அவளின் குரல் என்னை இன்னமும் கிழித்துப் போட...காதுகளற்று உணர்வுகளால் இன்னும் அந்த தாய்மை என்னை அரவணைத்துப் போட....

அவளைச் சுற்றி சுற்றி வந்தேன்....ஆதரவாய் வாஞ்சையாய் அவளைப் படர்ந்தேன். நான் உயிராய் இருந்த போது அவளின் முந்தானை வாடையை முகர்ந்திருக்கிறேன்... இதோ மீண்டும் முகர்கிறேன்...அம்மா என்ற அன்பு......நான் இல்லாத பொதும் என்னை நினைக்கிறது...அம்மா என்ற உணர்வு உடல் இல்லாவிட்டால் கூட என்னை சமப்படுத்துகிறது....!

அம்மா என்ற உணர்வு உடலோடு மட்டும் சம்பந்ப்பட்டது அல்ல அது பிரபஞ்ச்ச மூலத்தின் சாயல் என்று ஒரு உணர்வு பளீச்சென்று பெரும் அதிர்வாய் என்னைத் தாக்கியது.

ஒரு ஜீவன் என்னை நினைக்கிறது என்றொரு சந்தோசம் போன்ற உணர்வு என்னை சூழ..........சரேலென்று ஒரு வெளிச்சக் காட்டுக்குள்......இழுத்துக் கொண்டு போனது ஏதோ ஒரு சக்தி....

நினைவுகள் மெல்ல மெல்ல என்னிடமிருந்து அறுபடத் தொடங்கின........நான் வேகமாய் வெளிச்சமும் இருளும் சூழ்ந்த எதற்குள்ளோ....பயணித்துக் கொண்டிருந்தேன்...!


தேவா. S

Comments

Ungalranga said…
இந்த பதிவை படித்துவிட்டு போன பதிவை மீண்டுமொருமுறை படித்தேன்..

எதோ ஒன்று தெள்ளத் தெளிவாய் என் காதில் ஒலித்தது..

பார்த்தா பசுமரம்,
படுத்துவிட்டா நெடுமரம்,
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே..
தீயில்லிட்டா கரியும் மிஞ்சுமா??

மிஞ்சுமா? மிஞ்சுவோமா?
Kousalya Raj said…
அற்புத படைப்பு ! இதை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோணல...படைப்புக்குள் மாட்டிக்கொண்ட மனது கருத்துரைக்க வார்த்தைக்கு எங்கே போகும் ?!!

நேற்றைய படைப்பை படித்தபோது மிகவும் ரிலாக்ஸாக எழுதியது போல் தோன்றியது...அதன் காரணம் இன்று புரிந்தது.

நீங்கள் தேட...நான் தெளிவடைகிறேன் !

நன்றிகள் + பாராட்டுகள்.
அன்பின் தேவா - மொத மறுமொழி ரங்கா போட்டத அப்படியே வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் தேவா - நட்புடன் சீனா
Arumai... padikkum pothu unarvugaali kattip podum ezhuththu...
arumai anna...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த